kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • March 24, 2007

    நாயக நினைவுகள்

    nayakan interview

    2005ல் கமலஹாசன் மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சிக்கு அளித்த சுவாரசிய பேட்டி, ஆறு பாகங்களாக.

    இந்த கிளிப்பிங்கில் மணிரத்னம், நாயகன், நாசர் மற்றும் பாரதி பற்றி பேசுகிறார். கமல் ஒரு intermediate சுயசரிதை எழுதலாம். பிய்த்துக் கொண்டு விற்கும்.

  • March 23, 2007

    பச்சைத் தமிழனின் கலைந்த தலை

    sivaji rajini

    எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு.

    வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு முன்பே இதைப் போல் இரண்டொரு ரஹ்மான் படப் பாடல்கள் வெளியாகி சர்சைக்குள்ளாயின.

    ரஹ்மானின் மீடியா ஸ்டுடியோவில் இருந்து ஷப்ஹீக் என்றோருவர் இதெல்லாம் ஸ்கிராட்சஸ் தான். இவை பாட்டு ஷூட்டிங்கிற்காக மிக்ஸ் செய்யப்பட்ட பாடல்களெனவும், இதன் final versionஐ கேட்டால் கலாசலாகிவிடுவீர்கள் என்றும் கொஞ்சம் damage control செய்திருப்பதால், கொஞ்ச நாள் பொறு தலைவா என்று கேட்காமல் காத்திருக்கிறேன். Daylight Dude என்றொரு ராப் தான் ரஜினியின் அறிமுக பாடலாம்.

    இந்த நேரத்தில், இதை இணையத்தில் அப்லோட் செய்த விஷயத்தை பற்றி சற்று யோசித்துப் பார்க்கலாம். இதை வெளியிட்ட யாருக்கும் ஒரு பைசா கூட கிடைத்திருக்காதது சர்வ நிச்சயம். இதே மூன்று பாடல்களை, ஒரு பாடல் 50 செண்ட் என்று அமெரிக்க பணத்தில் விற்க முயற்சித்திருந்தால் கூட வாங்க ரசிக கண்மணிகள் யோசிப்பார்கள். ஆளிருக்காது. இலவச டவுன்லோட் என்றவுடன் ஆளாளுக்கு மூன்று முறை டவுன்லோட் செய்வது வழக்கமாகியது துரதிஷ்டவசமே.

    இதை வெளியிட்ட பச்சைத் தமிழ் வலை தளங்களில் கூட ஒரிருநாள் தான் ரசிக மொய்த்த்ல் இருந்திருக்கும். அதற்கு பிறகு யாரும் சீண்டுவதில்லை. அந்த சில நாள் சீண்டலுக்காக இந்த தளங்கள், சில நூறு டாலர்களை கொடுத்து ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் இவற்றை வெளியிட நோக்கமென்ன ? அண்ட சராசரத்தில் எங்கும் பரவியிருக்கும் இணையமும் அதன் டிமாக்ரடிக் இயக்கமும் தான்.

    இவற்றால் சிவாஜி படத்திற்கும், பாடல்களுக்கும் பெருத்த நஷ்டம் என்பதெல்லாம் ஜல்லி. சென்னையில் ரோட்டில் இறங்கி, டிராபிக்கில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாமல் வீட்டிலேயே அடை அவியல் சாப்பிட்டு டிவிடீயில் படம் பார்க்கும் தமிழனையும், பத்து டாலர் கொடுத்து ஒரு டால்பி எஃபக்ட் இல்லாமல் படம் பார்ப்பதா என்று இந்தியன் ஸ்டோரில் டிவிடிக்கு காத்திருக்கும் என்ஆர்ஐ தமிழனையும் குறை கூறி தப்பில்லை.

    முதல் நாள் டிக்கெட் கட்டணம், பத்தாம் நாள் கட்டணம், தெலுங்கு காப்பி ரைட், சன் டீவி ரைட்ஸ் என்று எப்படியிருந்தாலும் ரஜினி படத்திற்கு போட்ட பணம் எடுக்கப்படும். என்ன நிறைய பணம் போட்டால், கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சற்று கடினம். சுஜாதாவும், ஷங்கரும், ஏ.ஆர் ரஹ்மானும், ஏ.வி.எம்மும் இருப்பதால் வெற்றி நிச்சயம்.

    ஆனால் இணையத்தினால் கொஞ்சம் நன்மையும் உண்டு. இன்னும் சில நாளில் சிவாஜி பட டிரைலர் வெளியாகும். அதில் இந்த மாதிரி பச்சைத் தமிழன், பேசுவது ஸ்டைல், சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சமாரசாரங்களையும், கொஞ்சம் ஸ்ரேயாவும் நிறைய ரஜினியையும் கலந்திருப்பார்கள். ஆளுக்கொரு முறை யூ டியூபில் அதை வெளியிடுவார்கள். போதும் போதும் என்று அலுக்கும் வரை ப்ளாக்குகளில் குறுக்குவாட்டில் dissect செய்யப்படும். படம் வரும் வரை ஹைபிற்கு உதவும்.

    இந்தியா உலகப் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து வெளியேரும் இந்நிலையில், மீடியாவின் அடுத்த உடனடி டார்கெட் சிவாஜி தான். பாஸ் வரப்போகிறார். களை கட்டப் போகிறது தமிழ் உலகம். கலைந்த தலையுடன் ரெடியாயிருங்கள்.

  • March 19, 2007

    முன் கதை சுருக்கம்

    balakumaran [pic:andhimazhai.com]

    “ஏய்…எழுந்திரு” யாரோ நெற்றியயை பின்னுக்குத் தள்ளி எழுப்பினார்கள். ஸ்டேஷனில் இப்போது கும்பல் அதிகமாக இருந்தது.

    “இனிமே பீச்சுப்பக்கம் வர மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டுப் போ.”

    “யார்ப்பா அது ?”

    “என்னமோ தியானம் பண்ண பீச்சுக்கு வந்தானாம். இட்டந்துட்டாங்க. தடி மாடு மாதிரி இருக்கே. என்னத்துக்கு இது உனக்கு… அதெல்லாம் கிழவனுங்க வேலை…ம்… எழுது இதுல.”

    “இங்கிலீஷிலயா, தமிழிலியா…” லொட்டென்று தலையில் தட்டினார்கள்.

    “பெரிய மயிறு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட நேரம் அது. தமிழுக்கு மரியாதை வரத்துவங்கிய காலம்.

    1988ல் ஒரு பத்திரிகையில், முன் கதை சுருக்கம் என்ற பெயரில் எழுதிய பாலகுமாரனின் சுயசரிதை தொடர். அவர் எழுத்தாளனாகிய கதை. அல்லது நிஜம். நான்கு வருட இடைவெளியில் இரண்டு முறை படித்ததால் இதை பற்றிய கருத்துக்கள் நிறைய.

    மனிதர் கசக்க கசக்க உண்மை பேசுகிறார். இல்லாவிட்டால் வெறும் பரபரப்புக்காக இந்த புத்தகத்தில் உள்ள சில உண்மைகளை சொல்ல வேண்டியதில்லை. கவிதை எழுதினால் கை தட்டுவார்கள் என்ற நினைப்பில் தான் ஆரம்பித்ததாகவும் அந்த ego சிறிது நாளில் அடங்கி உரைநடை பக்கம் வந்ததை மிக விளக்கமாக மிகைபடுத்தாமல் சொல்வது தான் பிடிக்கிறது.

    தெருவில் போகும்போது எல்லோரும் என்னை ‘கவிஞரே’ என்று கூப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வெறும் எஸ்.எஸ்.எல்.சி டைப்பிஸ்ட் என்பதற்கு மேல் ஒரு அடையாளம். பாலகுமாரன் பி.ஏ இல்லை. எம்.ஏ இல்லை. படிப்பு வரவில்லை. அதனாலென்ன…அவன் கவிஞன். மற்ற ஜனங்களை விட இரண்டங்குலம் உயரமாக நடப்பவன்.

    என் ஈகோ என்னை இழுத்துப் போயிற்று. பாராட்டுக்கும் புகழ் போதைக்கும் மனம் தவித்தது.

    மதம் தரும் பக்தி இலக்கியமே வாழ்க்கை வளப்படுத்தும் என்று தனக்கு சொல்லப்பட்டது முதலில் தெரியவில்லை என்றும் பின்னர் சென்னை திமுக நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தான், மணிப்பிரவாள கதா கலாட்சேபங்கள் தாண்டி பழந்தமிழ் இலக்கியம் புலப்பட்டது என்கிறார்.

    இந்தப் எழுத்தாளனாகிய கதையில் மிக முக்கியமாக எனக்கு பட்டவை இரண்டு. ஓன்று, பாலகுமாரனின் இலக்கிய வட்ட பரிச்சயம். இரண்டு, சுஜாதா-சாவியின் வாசக விழாவில், சுப்பிரமணிய ராஜு என்பவரை பார்த்து பின்பு அவர் உயிர்த் தோழனாக மாறியது.

    மிக முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தும், அவர்களிடம் இருந்து பல literary nuancesசை கற்றுக் கொண்டும், தனக்கென ஒரு பாணி அமைத்து, அதிலேயே எழுதுவது, பாலகுமாரனின் பலம். என்ன தான் இலக்கியவாதிகள், எழுத்தை விற்கிறார் என்றெல்லாம் கிண்டலடித்தாலும், பொதுஜன எழுத்து ஒரு போங்கு என்று எழுதினாலும், தனக்கு தெரிந்ததை எழுதுவதாக அவர்களிடமே சொல்லியதும் பலம்.

    சுப்பிரமணிய ராஜுவின் நட்பை பற்றி அவர் இறந்த பின் இந்த புத்தகத்தில் எழுதியதால் கொஞ்சம் எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. இரண்டு பேரும் சேர்ந்து நீலாயதாட்சி என்னும் பெண்ணுடன் ஊர் சுற்றியதாய் எழுதி இருந்ததால் இருக்கலாம்.

    ஆனால் பாலகுமாரனும், ராஜுவும் கதை பற்றி பால பாடம் படித்த கதை தான் மனங் கவர்கிறது. இப்படி போகிறது –

    ‘வாசகர் வட்டம்’ என்கிற அமைப்பு நல்ல புத்தகங்கள் வெளியிட்டது. அதில் சுஜாதாவின் நெடுங்கதை ஒன்று இருந்தது. படிக்கப் படிக்கப் பிரமிப்பு தட்டியது.

    ‘யம்மா… எப்படி எழுதறார் இந்த ஆள்… இப்படி எழுத எனக்கு என்று வரும், என்ற ஏக்கம் எனக்கு வந்தது.

    சுஜாதாவின் அடுத்த நெடுங்கதை….நான் நூறு முறையாவது அதை படித்திருப்பேன்….. அச்சில் வந்த அந்தக் கதையை நாள் வெள்ளைத்தாள் எடுத்து அப்படியே காப்பி செய்தேன். ‘இது நான் எழுதின கதை’ என்று பக்கத்து போர்ஷன் மாமியிடம் காப்பி செய்த பேப்பரை காட்டினேன். ” ஏ க்ளாஸ் கதைடா, உனக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது”.
    ….

    சிறுகதை பிடிபட்டது போலவும், பிடிபடாதது போலவும் இருந்தது.

    மறுபடி எழுத்தாளர் சுஜாதா சென்னை வந்திருக்கிறார் என்கிற செய்தி கிடைத்தது.
    …
    ஒன்பது மணிக்கு மறுபடி போய் வீட்டுக் கதவை தட்டினோம்.

    “வாங்கய்யா” உற்சாகமாய் ரங்கராஜன்(சுஜாதா) வெளியே வந்தார்.

    “சாப்பிட்டீங்களா?”

    “ஆச்சு சார்” பொய் சொன்னோம். உடனே இலக்கியம் பேசத் துவங்கினோம். பார் பார் பட்டணம் பார் என்று சுஜாதா தூக்கிப் போட, ஒவ்வொரு தகவலும், ஒவ்வொரு இலக்கிய செய்தியும் வியப்பாக இருந்தது.

    நான் கேட்டேன் : ” எத்தனை ட்ரை பண்ணாலும் சிறுகதை எழுத வரலை…சிக்கறது… ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?”

    எக்மோரில் டாக்டர் நாயர் பாலத்துக்கு அடிவாரம். நான்கு முனை சந்து. அப்போது ஒரு புல்வெளி ரவுண்டானா அங்கே இருந்தது. வாகன ஓட்டம் வெகுவாய் குறைந்திருந்த பத்துமணி இரவு.

    ரங்கராஜன் என்கிற சுஜாதா உற்று மெர்க்குரி விளக்கில் என் முகம் பார்த்துவிட்டு தொண்டையை செருமிக் கொண்டார்.

    “கதை எழுதறது கஷ்டம் இல்லையா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித் தரேன். புடிச்சிக்க !”
    ….
    ஆனால் ரங்கராஜன் பத்தாம் வகுப்பு பையனுக்கு பாடம் நடத்துவது போல் எழுதும் கலை இது என்று எளிமையாக சொல்லித் தந்தார்.

    ஒரு விழாவில் ” எனக்கு எழுதச் சொல்லித் தந்த சுஜாதா அவர்களே” என்று நான் குறிப்பிட… சுஜாதா பேசும் போது ” நான் நிறைய பேருக்கு சொல்லிக் கொடுத்தேன். அதுல பாலகுமாரனுக்கு மட்டும் உடனே புரிஞ்சுது. காரணம் ஆர்வம்.”

    மணிரத்ன பட க்ளைமாக்ஸ் போல பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலுக்கு ராஜா அண்ணாமலை செட்டியார் விருது கிடப்பதோடு புத்தகம் முடிகிறது. சில வருடங்கள் மற்றோரு முன் கதை சுருக்கம் வரும் என்கிறார். வருகிறது. குமுதம் பக்தியில் காதலாய் கனிந்து என்கிற தொடரில் தன் ஆன்மிக வாசத்தை பற்றியும், தன் உடல்நிலை கவலைக்கிடமான போது நிகழ்ந்தவை பற்றியும் எழுதுகிறார்.

    அவரே முயன்றாலும் மீண்டும் ஒரு புத்தகம் இத்தனை மணியாய் எழுத முடியாது. Aspiring Writers கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் எழுத்தாளர்களின் சுய சரிதைகளிலேயே உ.வே.சா வின் என் சரித்திரம் தான் பெஸ்ட் என்கிறார்கள். அதை படித்ததில்லை. ஆனால் மனம் திறந்து உண்மையாய் எழுதிய சுயசரிதைகளில், பாலகுமாரனுக்கு முக்கிய இடம் கட்டாயம்.

  • March 18, 2007

    காபி வித் அனு

    coffee with anu hassan

    அனுஹாசன் வாயாடும் celebrity chat ஷோ. இதை காபி வித் கரண் என்று கரண் ஜோஹர், ஸ்டார் டீவியில் செய்த போது படா பேஜாராக இருந்தது. விஜய் டீவியில் முதலில் காவி வித் சுச்சி என்ற விளம்பரம் பார்த்த போது, யூகிசேதுவின் நையாண்டி தர்பார் போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நன்றாகவும் இருந்தது. சுசித்ரா, கொஞ்சம் செயற்கையாக, தமிழை கொஞ்சி கொஞ்சி சரோஜா தேவி போல பேசினாலும், மிர்ச்சி ரேடியோ கேட்டதால் பழக்கமாகி பிடித்துப் போனது.

    மிர்ச்சி சுசித்ராவிற்க்கு பின், அனுஹாசன் ஷோவில் celebrityக்கலோடு பேச ஆரம்பித்தார். ஒரு quintessential வாயாடியாக இல்லாவிட்டால் இந்த ஷோ நடத்த முடியாது. அனு கலக்கலாய் செய்கிறார். ஆனாலும் சில எபிசோட்களில் சுவாரசியம் மிஸ்ஸிங். ஏனென்று தெரியவில்லை. கோலிவுட் நட்சத்திரங்களின் ஆக்கிரமிப்பு தெரிந்தாலும், அவ்வப்போது நிகழ்ச்சி சுவையாக இருப்பதால், வாரா வாரம் பார்ப்பதுண்டு. மாண்டலின் ஸ்ரீனிவாசும், ட்ரம்ஸ் சிவமணியும் சேர்ந்த நிகழ்ச்சியும், கங்கை அமரனும் அவரது மகன்களும் வந்திருந்த எபிசோடும் இயல்பானவை.

    prakashraj and prithivaraj

    ஒரு மாதத்திற்கு முன் பார்த்த ஷோவில், இரண்டு ராஜாக்கள். பிரகாஷ் ராஜ் மற்றும் பிரித்வி ராஜ். அவர்கள் நடித்து எக எதிர்பார்ப்போடு வெளியான மொழி படத்தை ஒட்டி வந்த நிகழ்ச்சியாதாலால் கலை கட்டும் என்று எதிர்ப்பார்த்தால், ஏமாற்றம். இயல்பாய் அவை அடக்கமாய் பேசுகிறேன் பேர்வழி என்று தனது aptitudeகளை பற்றி சிலாகித்து கொள்ளும் பிரகாஷ்ராஜும், சார் நீங்க இது… சார் நீங்க அது என்று ஓவராய் புகழுகிற அனுவும், பிரித்விராஜும் சேர்ந்து போரடித்தார்கள்.

    பிரகாஷ்ராஜ் நல்ல படங்கள் தயாரிக்கிறார், அதற்காக கொஞ்சம் இலக்கியத்தரமாக தமிழில் பேசவேண்டும் என்று நினத்து, நல்ல சினிமா, புரிதல், நடிப்புங்கிறது its another bus stop, நான் முக்கியம் என்னுடைய பயணம் முக்கியம் போன்ற சில பல கருத்துக்களையும் keywordsயும் அள்ளித் தெளித்தார். ரொம்பவும் அவை அடக்கமாக பதில் சொல்ல நினைத்து, அனு அவரை பற்றி சொன்ன சில நல்ல விஷயங்களை, இதெல்லாம் ஒரு மேட்டரா என்ற ரேஞ்சுக்கு போய் விட்டார்.

    விஜய் டீவி பார்ப்பவர்கள் சாமானிய தமிழர்கள் என்று தெரியாமல், ஒரு பழுத்த தமிழிலக்கியவாதி போல், என் அம்மா நல்லவ, தைரியசாலி, அழகி, அடுத்த ஜென்மத்தில் அவள் என் மனைவியாக வேண்டும் என்று பேசப் போக கொஞ்சம் நெளிந்தார் அனு. எனக்கு கமல் ஞாபகத்திற்கு வந்தார். ஆனாலும் நல்ல தமிழ் சினிமா எடுக்கும் பிரகாஷ்ராஜ் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஓவராய் பேசி செம கடியாய் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல மனிதர்.

    இந்த எபிசோட் கொஞ்சம் ஓவரானது என்னவோ உண்மைதான். வாராவாரம் சனியன்று காபி வித் அனு. இந்த எபிசோட் மட்டும் ஜால்ரா வித் அனு.

  • March 17, 2007

    பின் கதைச் சுருக்கம்

    தீவிரவாதம், முதலாளித்துவம், எல்லை, யுத்தம் என்றெல்லாம் பரபரப்பு கட்டுரைத் தொடர் எழுதும் பா. ராகவனின், எழுத்தாளர்கள் பற்றிய ஒரு அமைதிப் புத்தகம், பின் கதைச் சுருக்கம். கல்கியில் தொடராய் வந்து வரவேற்பு பெற்றதாக பின் கதைச் சுருக்கத்தின் முன்னுரை கூறுகிறது.

    17 நாவலாசிரியர்கள். 17 நாவல்கள். ஒரு இணைக்கும் பாலம். அனுபவங்கள். இதிலுள்ள 17 நாவலாசிரியர்களையும் அவர்களின் ஒரு நாவல் பற்றிய சிறு குறிப்பும், அந்த நாவலுக்கு பின்னுள்ள சில ஆழ்ந்த அனுபவங்களுமே இதன் களம். இதிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஒரு பர்சனல் பையஸுடன் தேர்ந்தேடுத்ததாக எழுதுகிறார் பா ரா.

    தனது சொந்த நாவலான, அலை உறங்கும் கடல், எழுதுவதற்கு உதவிய ராமேஸ்வர அனுபவங்களில் இருந்து ஆரம்பிக்கும் முதல் கட்டுரையும், பா ராவும் அவர் நண்பன் வெங்கடேஷும் ஒரு வாரம் ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டு கன்யாகுமரியில் ஒரு ideal placeல் நாவல் எழுத சென்ற கட்டுரையும் மிகப் பிடித்தமானவை. எழுதறதுனா இன்னா சார் ? என்று கேட்பவர்கள் இந்த கட்டுரைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.

    அசோகமித்திரனின் ஒற்றன் நான் மிக விரும்பி படித்த புத்தகம். அதை அலசி ஆராய்ந்த பத்தியை படித்தால், ராகவனுக்கு அந்த புத்தகம் ஏன் பிடித்தது என்று புரியும். ஜீன்ஸ் போட்ட அகத்தியர் என்று நாகூர் ரூமியை குறிப்பிடும் அத்தியாயத்தில் ரூமியின் குட்டியாப்பா நாவலுக்கான பிண்ணனியை சுவையாக விளக்குகிறார்.

    கொஞ்சமாய் மனங்கனக்க வைத்த அத்தியாயம் கேரள பஷிரை பற்றியது. தனது தியாக காதல்/காதலியை பற்றி எழுதிய சில டயரிக் குறிப்புகளிருந்து உருவான அனுராகத்தின் தினங்கள் நாவலின் பின்ணணி கதை. பஷிர் ஒரு sheer genius.

    இவை தவிர, இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள் எழுத வைத்த போலாந்து நாட்கள், கார்சியா மார்ககுவஸ் 100 years of solitude எழுத ஆரம்பித்த அந்த டிரைவிங் நொடி, மாலனை ஜனகணமண எழுத உந்திய ஒரு டைனிங் டேபிள் குடும்ப சண்டை, டால்ஸ்டாயின் resurrection நாவலின் அச்சுக் குழப்பம், சல்மான் ருஷ்டிக்கும் மிட்நைட்ஸ் சில்ட்ரன் நாவலின் சலிம் சின்னாய்க்கும் உண்டான தொடர்பு, ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் இலக்கிய வட்ட சர்ச்சை என்று சுவாரசியமான தேர்தெடுப்புகளின் இணைப்பு.

    கிழக்கு பதிப்பகத்தின் மிக சுமாரான மேல் அட்டை போடப்பட்ட புத்தகமும் இதுதான். எதோ விண்டோஸ் ஸ்கிரின்சேவர் போல ஒரு டிஸைன், பின் அட்டையில் படிக்க முடியாத சிறிய எழுத்தில், பாரா கையால் எழுதிய முன்னுரை. அடுத்த பதிப்பில் புத்தகத்தை ரீடிஸைன் செய்யலாம்.

    படித்து முடித்தவுடன், நாவல் வழியே வாழ்க்கை. வாழ்க்கை வழியே நாவல் என்ற இந்த புத்தகத்தின் tag-line புரிகிறது. மிகத் தெளிவாக.

←Previous Page
1 … 82 83 84 85 86 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar