kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • March 27, 2007

    இது போர்க்களமா?

    ப்ளாக் ப்ளாக் என்று காமெடியாய் ஏதோ ஆரம்பித்து இன்று கொலை மிரட்டலில் வந்து நிற்கிறது. கேதி சியரா(Kathy Sierra) என்னும் ஒரு பிரபல ப்ளாகர் ஒருவரரின் வலைப்பதிவிற்கு வந்த ஏராளமான, பெயரில்லாத மிரட்டல் கமெண்டுகளால், அவர் பேசவேண்டிய ஒரு கான்பெரன்ஸிலிருந்து விலகிக் கொண்டார். கேதி ப்ளாக் தவிர சில ஜாவா சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியவர். இவர் வலைப்பதிவு எழுதுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்க போய், பூதம் கிளம்புகிறது.

    இவரின் Creating Passionate Users என்னும் பிரபல வலைப்பதிவில் இது சம்பந்தமான இந்த ப்ளாக் போஸ்டைக் கண்டு வலைப்பதிவுலகம் சற்றே சலசலத்துப் போயிருக்கிறது. பிரபல வலைப்பதிவாளர்கள் கொஞ்சம் அதிர்ந்து போய் விடுமுறையில் போய்விட்டார்கள். இதனால் நிறைய வளர்ச்சியடையாத வலைப்பதிவு சட்டங்கள், உடனடி இயக்கத்துக்கு வந்தால், முன்னேற்றம் தான். பிபிசி செய்தி.

    இந்திய வலைப்பதிவுலகிலும், இது போல நடந்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு வலைப்பதிவாளர், இது போல சில கமெண்டுகளாலும் அவர் பெயரில் யாரோ எழுதிய மற்றொரு வலைப்பதிவாலும், தன் ப்ளாகை மூடி ஜூட் ஆகியது சோகம் தான். அது யாருக்கும் தெரியாதது மற்றோர் சங்கடம்.

    வலைப்பதிவின் மூலம் இது போல, “மவனே நான் யார் தெரியுமா, என்னோட ஹிட் எவ்ளோ தெரியுமா ?” சங்கதிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ கிடக்கிறா பிட்ச், அந்த போஸ்ட் எழுதின அவள அப்படியே ரேப் பண்ணணும் என்றெல்லாம் கேட்க ஆளின்றி எழுதுகிறார்கள். கேட்டால் freedom to talk, first amendment என்று ஜல்லி.

    தன்னுடைய வலைப்பதிவில் கவிதை, கதை, நாடகம், ஊடகம் என்று நல்லவர்களாய் எழுதி, பெயரில்லாமல் மற்றவர் வலைப்பதிவில் யார் எப்படி உச்சா போகிறார்கள், எந்த பிரபல ப்ளாகர் எந்த ஆண் குறியை குறி வைக்கிறார் என்றும் சதா வாந்தி எடுக்கிறார்கள். இதைப் போல் எழுத ‘தில்’ இல்லாதவர்கள் இவர்களுக்கு ஜால்ராயிட்டு உசுப்புவது மற்றோரு விஷயம். ஒருவர் எழுதிய எழுத்தை எதிர்க்கப் போய், நிறையவே பர்சனலாகி, விஷயம் சீரியஸாகிவிட்டது.

    இவர்களையெல்லாம் வருகிற மே மாதத்தில் எந்த பேட்டையிலாவது இரண்டு குடம் தண்ணீருக்கு அலைய விடலாம் அல்லது 725ஆம் நாளன்று, சாந்தி தியேட்டரில் சந்திரமுகி பார்க்க வைக்கலாம்.

    எப்படி கடவுள் நம்பிக்கைகளும், கோயில்களும் அதிகமாக, அந்த செயல்பாடுகளில் கயமைத்தனங்கள் புகுந்து, அதை எதிர்க்க நாத்திகவாதம் உருவாகி கடவுளே இல்லை என்று அறைகூவும் நிலைமை உருவானதோ அதை போல தான் இதுவும். சில பிரபலர் செய்யும் கயமைத்தனங்களை எதிர்க்க உருவான கூட்டம் வேறோரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

    இவை எல்லாமும், 15 நிமிட பிரபலத்துக்குத் தான். யாரோ ஒருவர் ஸ்லாஷ் டாட்டில் சொன்னது போல, “The Internet used to be a university. Then it became a shopping mall. But now, it’s a war zone.”

  • March 25, 2007

    மெக்ஸிகோ சலவைக்காரி ?

    Sujatha Vasant Mexico Salavaikari

    குமுதம் 360 பார்வை தொடரில், இந்த வாரம் சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரியின் ஜோக்கை, குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பியிடம் சொன்னதை பற்றி சொல்கிறார். இப்போதும் எந்த ஒரு பெரிய பத்திரிக்கைகளிலும் அதை விலாவரியாக எழுத முடியாது என்கிறார். யாராவது புதிய தமிழ் வானம் அல்லது புதிய தமிழ் பூமி என்ற பத்திரிக்கைகளில் சுஜாதாவை எழுத அழைக்கலாம். ஜோக் வெளிவந்தால் சரி.

    கமலின் அப்பு குள்ளமான ட்ரிக்குக்கு அடுத்தபடியான ஒரு தமிழ் நாட்டு கேள்வி, மெக்ஸிகோ சலவைக்காரி தான். கமல் கூட, அப்புவைப் பற்றி ஏதோ டீவி தொடர் எடுக்கப்போவதாக சொல்கிறார். சுஜாதா…ம்ஹும். பிடி கொடுக்கிறபாடில்லை. தெரிந்தவர்கள் மெயில் எழுதி அனுப்பலாம். உண்மை என்றும் நிருபிக்க முடிந்தால், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் மூன்றாம் பாகம் பரிசு.

    பார்வை 360யிலிருந்து –

    மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் என்று நீங்கள் அடிக்கடி குறிப்பிடுகிறீர்களே அது என்ன ஜோக்?’ என்று திடீர் என்று கேட்டார்.

    நான் அதிர்ந்துபோய், ‘அது கொஞ்சம் ஒரு மாதிரியானது. உங்களிடம் போய் சொல்வதா என்று தயக்கமாக இருக்கிறது’ என்றேன்.

    ‘சொல்லுங்க.’

    ‘சொல்லிவிடுவேன்’ என்று பயமுறுத்தினேன்.

    ‘சொல்லிப் பாருங்க.’

    சொன்னேன்.

    சற்று நேரம் உறைந்துபோய் மௌனமாக இருந்தார். அதன் பின் கண்ணில் நீர் வரச் சிரித்தார். அடுத்த வாரம் அரசு பதில்களில் அதைக் குறிப்பிட்டு, அது தனக்குத் தெரிந்துவிட்டது என்று கோடி காட்டி எழுதியிருந்தார்.

    இப்போதுகூட எனக்கு அந்தச் சம்பவத்தை யோசித்தால், சங்கடமாக இருக்கிறது. அவ்வளவு நல்ல மனிதர், பக்திமான். அவரிடம் போய் அந்த கச்சடா ஜோக்கைச் சொன்னோமே என்று. ஆனால், அவர் அதற்காக என்னை எந்த விதத்திலும் மரியாதைக் குறைவாகக் கருதவில்லை. மெ.ச. ஜோக் முதலில் ப்ளேபாய் பத்திரிகையில் வந்தது. அதை ஒருமுறை வசந்த் சொல்ல ஆரம்பித்து, கணேஷ் தடுத்து செக்ஸ் அதிகம் இருப்பதால் அதை சொல்லாமலேயே விட்டுவிட்டான். அதன் பின் அதைப் பற்றிய உபகதைகள் பல தோன்றி தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அதைப் பாதுகாத்து வருகிறார்கள். இன்றும் அதை மரியாதைப்பட்ட பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாது.

  • March 24, 2007

    நாயக நினைவுகள்

    nayakan interview

    2005ல் கமலஹாசன் மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சிக்கு அளித்த சுவாரசிய பேட்டி, ஆறு பாகங்களாக.

    இந்த கிளிப்பிங்கில் மணிரத்னம், நாயகன், நாசர் மற்றும் பாரதி பற்றி பேசுகிறார். கமல் ஒரு intermediate சுயசரிதை எழுதலாம். பிய்த்துக் கொண்டு விற்கும்.

  • March 23, 2007

    பச்சைத் தமிழனின் கலைந்த தலை

    sivaji rajini

    எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு.

    வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு முன்பே இதைப் போல் இரண்டொரு ரஹ்மான் படப் பாடல்கள் வெளியாகி சர்சைக்குள்ளாயின.

    ரஹ்மானின் மீடியா ஸ்டுடியோவில் இருந்து ஷப்ஹீக் என்றோருவர் இதெல்லாம் ஸ்கிராட்சஸ் தான். இவை பாட்டு ஷூட்டிங்கிற்காக மிக்ஸ் செய்யப்பட்ட பாடல்களெனவும், இதன் final versionஐ கேட்டால் கலாசலாகிவிடுவீர்கள் என்றும் கொஞ்சம் damage control செய்திருப்பதால், கொஞ்ச நாள் பொறு தலைவா என்று கேட்காமல் காத்திருக்கிறேன். Daylight Dude என்றொரு ராப் தான் ரஜினியின் அறிமுக பாடலாம்.

    இந்த நேரத்தில், இதை இணையத்தில் அப்லோட் செய்த விஷயத்தை பற்றி சற்று யோசித்துப் பார்க்கலாம். இதை வெளியிட்ட யாருக்கும் ஒரு பைசா கூட கிடைத்திருக்காதது சர்வ நிச்சயம். இதே மூன்று பாடல்களை, ஒரு பாடல் 50 செண்ட் என்று அமெரிக்க பணத்தில் விற்க முயற்சித்திருந்தால் கூட வாங்க ரசிக கண்மணிகள் யோசிப்பார்கள். ஆளிருக்காது. இலவச டவுன்லோட் என்றவுடன் ஆளாளுக்கு மூன்று முறை டவுன்லோட் செய்வது வழக்கமாகியது துரதிஷ்டவசமே.

    இதை வெளியிட்ட பச்சைத் தமிழ் வலை தளங்களில் கூட ஒரிருநாள் தான் ரசிக மொய்த்த்ல் இருந்திருக்கும். அதற்கு பிறகு யாரும் சீண்டுவதில்லை. அந்த சில நாள் சீண்டலுக்காக இந்த தளங்கள், சில நூறு டாலர்களை கொடுத்து ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் இவற்றை வெளியிட நோக்கமென்ன ? அண்ட சராசரத்தில் எங்கும் பரவியிருக்கும் இணையமும் அதன் டிமாக்ரடிக் இயக்கமும் தான்.

    இவற்றால் சிவாஜி படத்திற்கும், பாடல்களுக்கும் பெருத்த நஷ்டம் என்பதெல்லாம் ஜல்லி. சென்னையில் ரோட்டில் இறங்கி, டிராபிக்கில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாமல் வீட்டிலேயே அடை அவியல் சாப்பிட்டு டிவிடீயில் படம் பார்க்கும் தமிழனையும், பத்து டாலர் கொடுத்து ஒரு டால்பி எஃபக்ட் இல்லாமல் படம் பார்ப்பதா என்று இந்தியன் ஸ்டோரில் டிவிடிக்கு காத்திருக்கும் என்ஆர்ஐ தமிழனையும் குறை கூறி தப்பில்லை.

    முதல் நாள் டிக்கெட் கட்டணம், பத்தாம் நாள் கட்டணம், தெலுங்கு காப்பி ரைட், சன் டீவி ரைட்ஸ் என்று எப்படியிருந்தாலும் ரஜினி படத்திற்கு போட்ட பணம் எடுக்கப்படும். என்ன நிறைய பணம் போட்டால், கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சற்று கடினம். சுஜாதாவும், ஷங்கரும், ஏ.ஆர் ரஹ்மானும், ஏ.வி.எம்மும் இருப்பதால் வெற்றி நிச்சயம்.

    ஆனால் இணையத்தினால் கொஞ்சம் நன்மையும் உண்டு. இன்னும் சில நாளில் சிவாஜி பட டிரைலர் வெளியாகும். அதில் இந்த மாதிரி பச்சைத் தமிழன், பேசுவது ஸ்டைல், சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சமாரசாரங்களையும், கொஞ்சம் ஸ்ரேயாவும் நிறைய ரஜினியையும் கலந்திருப்பார்கள். ஆளுக்கொரு முறை யூ டியூபில் அதை வெளியிடுவார்கள். போதும் போதும் என்று அலுக்கும் வரை ப்ளாக்குகளில் குறுக்குவாட்டில் dissect செய்யப்படும். படம் வரும் வரை ஹைபிற்கு உதவும்.

    இந்தியா உலகப் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து வெளியேரும் இந்நிலையில், மீடியாவின் அடுத்த உடனடி டார்கெட் சிவாஜி தான். பாஸ் வரப்போகிறார். களை கட்டப் போகிறது தமிழ் உலகம். கலைந்த தலையுடன் ரெடியாயிருங்கள்.

  • March 19, 2007

    முன் கதை சுருக்கம்

    balakumaran [pic:andhimazhai.com]

    “ஏய்…எழுந்திரு” யாரோ நெற்றியயை பின்னுக்குத் தள்ளி எழுப்பினார்கள். ஸ்டேஷனில் இப்போது கும்பல் அதிகமாக இருந்தது.

    “இனிமே பீச்சுப்பக்கம் வர மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டுப் போ.”

    “யார்ப்பா அது ?”

    “என்னமோ தியானம் பண்ண பீச்சுக்கு வந்தானாம். இட்டந்துட்டாங்க. தடி மாடு மாதிரி இருக்கே. என்னத்துக்கு இது உனக்கு… அதெல்லாம் கிழவனுங்க வேலை…ம்… எழுது இதுல.”

    “இங்கிலீஷிலயா, தமிழிலியா…” லொட்டென்று தலையில் தட்டினார்கள்.

    “பெரிய மயிறு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட நேரம் அது. தமிழுக்கு மரியாதை வரத்துவங்கிய காலம்.

    1988ல் ஒரு பத்திரிகையில், முன் கதை சுருக்கம் என்ற பெயரில் எழுதிய பாலகுமாரனின் சுயசரிதை தொடர். அவர் எழுத்தாளனாகிய கதை. அல்லது நிஜம். நான்கு வருட இடைவெளியில் இரண்டு முறை படித்ததால் இதை பற்றிய கருத்துக்கள் நிறைய.

    மனிதர் கசக்க கசக்க உண்மை பேசுகிறார். இல்லாவிட்டால் வெறும் பரபரப்புக்காக இந்த புத்தகத்தில் உள்ள சில உண்மைகளை சொல்ல வேண்டியதில்லை. கவிதை எழுதினால் கை தட்டுவார்கள் என்ற நினைப்பில் தான் ஆரம்பித்ததாகவும் அந்த ego சிறிது நாளில் அடங்கி உரைநடை பக்கம் வந்ததை மிக விளக்கமாக மிகைபடுத்தாமல் சொல்வது தான் பிடிக்கிறது.

    தெருவில் போகும்போது எல்லோரும் என்னை ‘கவிஞரே’ என்று கூப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வெறும் எஸ்.எஸ்.எல்.சி டைப்பிஸ்ட் என்பதற்கு மேல் ஒரு அடையாளம். பாலகுமாரன் பி.ஏ இல்லை. எம்.ஏ இல்லை. படிப்பு வரவில்லை. அதனாலென்ன…அவன் கவிஞன். மற்ற ஜனங்களை விட இரண்டங்குலம் உயரமாக நடப்பவன்.

    என் ஈகோ என்னை இழுத்துப் போயிற்று. பாராட்டுக்கும் புகழ் போதைக்கும் மனம் தவித்தது.

    மதம் தரும் பக்தி இலக்கியமே வாழ்க்கை வளப்படுத்தும் என்று தனக்கு சொல்லப்பட்டது முதலில் தெரியவில்லை என்றும் பின்னர் சென்னை திமுக நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தான், மணிப்பிரவாள கதா கலாட்சேபங்கள் தாண்டி பழந்தமிழ் இலக்கியம் புலப்பட்டது என்கிறார்.

    இந்தப் எழுத்தாளனாகிய கதையில் மிக முக்கியமாக எனக்கு பட்டவை இரண்டு. ஓன்று, பாலகுமாரனின் இலக்கிய வட்ட பரிச்சயம். இரண்டு, சுஜாதா-சாவியின் வாசக விழாவில், சுப்பிரமணிய ராஜு என்பவரை பார்த்து பின்பு அவர் உயிர்த் தோழனாக மாறியது.

    மிக முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தும், அவர்களிடம் இருந்து பல literary nuancesசை கற்றுக் கொண்டும், தனக்கென ஒரு பாணி அமைத்து, அதிலேயே எழுதுவது, பாலகுமாரனின் பலம். என்ன தான் இலக்கியவாதிகள், எழுத்தை விற்கிறார் என்றெல்லாம் கிண்டலடித்தாலும், பொதுஜன எழுத்து ஒரு போங்கு என்று எழுதினாலும், தனக்கு தெரிந்ததை எழுதுவதாக அவர்களிடமே சொல்லியதும் பலம்.

    சுப்பிரமணிய ராஜுவின் நட்பை பற்றி அவர் இறந்த பின் இந்த புத்தகத்தில் எழுதியதால் கொஞ்சம் எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. இரண்டு பேரும் சேர்ந்து நீலாயதாட்சி என்னும் பெண்ணுடன் ஊர் சுற்றியதாய் எழுதி இருந்ததால் இருக்கலாம்.

    ஆனால் பாலகுமாரனும், ராஜுவும் கதை பற்றி பால பாடம் படித்த கதை தான் மனங் கவர்கிறது. இப்படி போகிறது –

    ‘வாசகர் வட்டம்’ என்கிற அமைப்பு நல்ல புத்தகங்கள் வெளியிட்டது. அதில் சுஜாதாவின் நெடுங்கதை ஒன்று இருந்தது. படிக்கப் படிக்கப் பிரமிப்பு தட்டியது.

    ‘யம்மா… எப்படி எழுதறார் இந்த ஆள்… இப்படி எழுத எனக்கு என்று வரும், என்ற ஏக்கம் எனக்கு வந்தது.

    சுஜாதாவின் அடுத்த நெடுங்கதை….நான் நூறு முறையாவது அதை படித்திருப்பேன்….. அச்சில் வந்த அந்தக் கதையை நாள் வெள்ளைத்தாள் எடுத்து அப்படியே காப்பி செய்தேன். ‘இது நான் எழுதின கதை’ என்று பக்கத்து போர்ஷன் மாமியிடம் காப்பி செய்த பேப்பரை காட்டினேன். ” ஏ க்ளாஸ் கதைடா, உனக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது”.
    ….

    சிறுகதை பிடிபட்டது போலவும், பிடிபடாதது போலவும் இருந்தது.

    மறுபடி எழுத்தாளர் சுஜாதா சென்னை வந்திருக்கிறார் என்கிற செய்தி கிடைத்தது.
    …
    ஒன்பது மணிக்கு மறுபடி போய் வீட்டுக் கதவை தட்டினோம்.

    “வாங்கய்யா” உற்சாகமாய் ரங்கராஜன்(சுஜாதா) வெளியே வந்தார்.

    “சாப்பிட்டீங்களா?”

    “ஆச்சு சார்” பொய் சொன்னோம். உடனே இலக்கியம் பேசத் துவங்கினோம். பார் பார் பட்டணம் பார் என்று சுஜாதா தூக்கிப் போட, ஒவ்வொரு தகவலும், ஒவ்வொரு இலக்கிய செய்தியும் வியப்பாக இருந்தது.

    நான் கேட்டேன் : ” எத்தனை ட்ரை பண்ணாலும் சிறுகதை எழுத வரலை…சிக்கறது… ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?”

    எக்மோரில் டாக்டர் நாயர் பாலத்துக்கு அடிவாரம். நான்கு முனை சந்து. அப்போது ஒரு புல்வெளி ரவுண்டானா அங்கே இருந்தது. வாகன ஓட்டம் வெகுவாய் குறைந்திருந்த பத்துமணி இரவு.

    ரங்கராஜன் என்கிற சுஜாதா உற்று மெர்க்குரி விளக்கில் என் முகம் பார்த்துவிட்டு தொண்டையை செருமிக் கொண்டார்.

    “கதை எழுதறது கஷ்டம் இல்லையா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித் தரேன். புடிச்சிக்க !”
    ….
    ஆனால் ரங்கராஜன் பத்தாம் வகுப்பு பையனுக்கு பாடம் நடத்துவது போல் எழுதும் கலை இது என்று எளிமையாக சொல்லித் தந்தார்.

    ஒரு விழாவில் ” எனக்கு எழுதச் சொல்லித் தந்த சுஜாதா அவர்களே” என்று நான் குறிப்பிட… சுஜாதா பேசும் போது ” நான் நிறைய பேருக்கு சொல்லிக் கொடுத்தேன். அதுல பாலகுமாரனுக்கு மட்டும் உடனே புரிஞ்சுது. காரணம் ஆர்வம்.”

    மணிரத்ன பட க்ளைமாக்ஸ் போல பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலுக்கு ராஜா அண்ணாமலை செட்டியார் விருது கிடப்பதோடு புத்தகம் முடிகிறது. சில வருடங்கள் மற்றோரு முன் கதை சுருக்கம் வரும் என்கிறார். வருகிறது. குமுதம் பக்தியில் காதலாய் கனிந்து என்கிற தொடரில் தன் ஆன்மிக வாசத்தை பற்றியும், தன் உடல்நிலை கவலைக்கிடமான போது நிகழ்ந்தவை பற்றியும் எழுதுகிறார்.

    அவரே முயன்றாலும் மீண்டும் ஒரு புத்தகம் இத்தனை மணியாய் எழுத முடியாது. Aspiring Writers கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் எழுத்தாளர்களின் சுய சரிதைகளிலேயே உ.வே.சா வின் என் சரித்திரம் தான் பெஸ்ட் என்கிறார்கள். அதை படித்ததில்லை. ஆனால் மனம் திறந்து உண்மையாய் எழுதிய சுயசரிதைகளில், பாலகுமாரனுக்கு முக்கிய இடம் கட்டாயம்.

←Previous Page
1 … 82 83 84 85 86 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 26 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar