“எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம், நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, எப்படி? சொல்கிறேன்.
….
காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருடங்கள் ஆயின. கவனித்தது அத்தனையும் எழுத வேண்டும் என்பதில்லை; எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள், முக்கியமாக மானுடம் வேண்டும்.
என் கண்ணெதிரில் நடந்த ஒரு சாலை விபத்தில் முதலில் எனக்கு எழுத விஷயம் ஏதும் கிடைக்கவில்லை. எல்லா ஊரிலும்தான் போக்குவரத்து. எல்லா ஊரிலும்தான் கிழவர்கள் கிழட்டு சைக்கிள்களில் அடிபட்டுச் சாகிறார்கள். ஆனால், இறுதியில் விபத்து நடந்த இடத்தில் இறைந்திருந்த கால் கிலோ அரிசியை ஒரு சிறுவன் ரத்தம் படியாததாகப் பொறுக்கி டிராயர் பைக்குள் திணித்துக்கொண்டபோது எனக்கு அங்கே கதை கிடைத்துவிட்டது.
எனக்கு, சில வருடங்கள் எழுதிய பிறகு கவனிப்பதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், எழுதும்போது சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான் கஷ்டமாக இருந்தது. இருக்கிறது. ‘என்னே சமூகத்தின் கொடுமை’ என்று சுட்டிக்காட்டுவதைத் தவிர்ப்பது எத்தனை சிரமம் என்பது எழுதிப் பார்த்தால்தான் தெரியும். வாசகர்கள் புத்திசாலிகள்; அவர்களால் இடைவெளிகளை நிரப்ப முடியும். முகவாயைப் பிடித்து ஸ்பூன் வைத்துப் புகட்ட வேண்டாம்; எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைத்து எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது என்பதெல்லாம் இருபத்தோரு வருடங்களாகக் கற்ற பாடங்கள்.”
கனவென்றால் சும்மா காமா சோமா கனவல்ல. கிட்டத்தட்ட 40 வருடங்களாக வளர்த்திருந்த கனவு. நேற்று புத்தகத்தைப் புரட்டி விட்டு, இன்று காலை வரை மோவாயைத் தடவிக் கொண்டு மோட்டுவளையத்தை பார்த்த பின் எடுத்த முடிவல்ல. மணி ரத்னம் சொன்னது போல, கல்லூரி நாட்களில் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரியில் பொ.செ. புத்தகத்தை எடுத்துப் படித்த போது வந்த கனவு. “இதற்காகத் தான் சினிமா எடுக்கவே வந்தேன்” என்ற வாக்கியத்தைத் தவிர எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.
80களில் கமலஹாசனைக் சந்தித்தவுடன் அந்தக் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாக ஆரம்பித்துத் தள்ளிப் போனது. பிறகு 90களின் இறுதியில் தான் செய்து வைத்திருந்த திரைக்கதையை நகாசு வேலை செய்ய எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து படம் செய்யலாம் என்று நினைத்த போதும் தள்ளிப் போனது. சுஜாதாவின் மறைவிற்குப் பின், மீண்டும் திரைக்கதையை தூசு தட்ட எழுத்தாளர் ஜெயமோகனை நாட, அவர் எழுதிக் கொடுத்த திரைக்கதையையும் எடுக்க முடியாமல் போனது முன்கதைச் சுருக்கம்.
என்னதான் தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநராக இருந்தாலும், தனது கனவுப் படத்தை எடுக்க ஆனதென்னவோ 40 ஆண்டுகள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக யோசித்து எடுத்த படத்தை எப்படி எடுத்திருப்பார்?
”அதாவது பாகுபலி பத்மாவத் படத்தை எல்லாம் பார்த்தீங்கன்னா ஒரு பத்து இருபது நிமிஷத்துக்குள்ள இவர் தான் ஹீரோ இவர் தான் வில்லன் அப்படின்னு சொல்லிடுவாங்க. பொன்னியின் செல்வன்ல யாரு ஹீரோ யாரு வில்லன் ஒண்ணும் புரிய மாட்டேங்குது, ஒரே ஃபிளாட்டா எடுத்து வச்சிருக்காய்ங்க…”
தைலம் விற்கிற வியாபாரி மாதிரி யூடுப்பர்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படிக்கவும் படிக்காமல், டிஸ்னி படக்கதையில் குழந்தைகளுக்கு good guy bad guy என்று கதை சொல்வது போல் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் philistines ஒரு பக்கம்.
இப்படி பொன்னியின் செல்வன் புத்தகத்தை மனனம் செய்து அதிலேயே ஊறிப்போன வாசக வெறியர்கள் ஒரு பக்கம்.
மேலோட்டமாய் பார்த்தால் ராஜா ராணிக் கதை தான். உடம்பு சரியில்லாத ராஜா, இரண்டு வீரப் புதல்வர்கள், ஒரு புத்திசாலிப் பெண், ஒரு பேரழகி, குதிரை, போர், வெள்ளம், பாதாள சுரங்கம் இத்தியாதி இத்தியாதி.
ஆனால் மணிரத்னத்தை இத்தனை காலமாகத் துரத்தும், ”நீங்க… நல்லவராகெட்டவரா?” கேள்விக்கான விடையை இதிலும் தேடுவதைத் தான் விரும்பியிருக்கிறார். அடுத்த ராஜாவாகப் போகும் அண்ணன் தம்பி தங்கை கதை என்று மட்டுமே பார்க்காமல், அவர்களுக்கு இருக்கும் குணாதிசயங்கள் மூலம், நமது அரசியலையும், அக்காலத்தில் இருந்த சூழலையும் திரையில் கொண்டுவரும் சாகசம் தான் பொன்னியின் செல்வன். அது புத்தகத்திலில்லாத ஒரு புதுப் பரிமாணம்.
செபியாத்தனங்கள் இல்லாத திரைக்கதை. திணித்த மாதிரி இல்லாமல், ரொம்பவும் இயற்கையாக நடக்கும் உள்நாட்டு உறவு சண்டையின் நடுவே கொண்டு விடப்படுகிறோம். அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் என்று திருக்குறள் சொன்ன நான்கும் கருமேகமாகச் சூழ்ந்து கொண்டு புயலாய் வீச, கப்பலோடு கப்பலாய் அருண்மொழியும் வ.தேவனும் மூழ்க முடியும் முதல் பாகத்தின் திரைவடிவம் சினிமா எடுக்க நினைப்பவர்களுக்கு ஒரு பாலபாடம். கல்கி பார்த்திருந்தால் இதன் துள்ளலான திரைக்கதைக்காகவே ரசித்திருப்பார்.
யார் எதை ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும், இது நிஜம்: தமிழ் சினிமா வரலாற்றில் ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியமாக வரையப்பட்ட முதல் திரைப்படம் பொன்னியின் செல்வன். மணி ரத்னத்தின் எல்லாம் படமும் அழகாகத் தான் இருக்கும். குறிப்பாக இப்படத்தில் தீப்பந்தங்களினால் ஒளியேற்றப்பட்ட கோட்டைகள், கிரீடங்கள், சிம்மாசனங்கள், முத்து மாலைகள், மூக்குத்தி, தோடு, தொங்கட்டான், காப்பு, சிலம்பு என்று எங்கு நிறுத்தி எந்த ஃப்ரேமை பார்த்தாலும் அழகாய் ஓவியமாய் இருக்கிறது. தோட்டா தரணி, ரவி வர்மன், பிருந்தா, ஏகா லகானி என்று சகலரும் சேர்ந்ததினால் வந்த அழகு இது.
முதல் பாகத்தைப் பல முறை திரையிலும், அமேசான் ப்ரைமிலும் பார்த்திருந்தாலும், காட்சிகளைப் பார்க்காமல், வெறும் ஒலிச்சித்திரமாகக் கேட்ட போது, படத்தை புதிதாக ரசிக்க முடிந்தது. ஒரு சனிக்கிழமை காலை நடையின் போது, படத்தை ஃபோனில் ஓடவிட்டு, காட்சிகளைப் பார்க்காமல் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்டேன். குறைந்த நிறைவான வசனமும், குதிரையின் குளம்புச் சத்தமும், க்ளீங் என்று கத்தியின் ஒலியும், புயலில் சிக்கிக் கொண்ட கப்பலின் ambienceம் துல்லியமாகப் படத்தைப் புரிய வைத்தன. சவுண்ட் டிசைனர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியின் ஒலியமைப்பு ஒரு sublime experience.
இவர்களை மீறி ஏ.ஆர். ரஹ்மான் செய்திருப்பது ஒரு அமைதியான சாதனை. ஹீரோ கிழே விழுந்து எழும் போது டம் டம் டம் என்று தலைவலி இசை செய்யும் படங்களின் நடுவே, பின்னணி இசையின் மூலம் படம் பார்ப்பவர்களின் ரசனையை முன் தள்ள முற்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
புயலில் சிக்கிய கப்பலை அடையும் அருண்மொழி வர்மன் கயிற்றைப் பிடித்தபடி உயரே ஏறி வந்தியதேவனை விடுவிக்கும் போது நமக்கும் ஜிவ் என்கிறது. தேவநேயப் பாவாணர் நூலகத்திலிருந்து எடுத்து வந்த பொ.செ.வின் சுழல் காற்று படித்த போது, அந்த பதிமூன்று வயது டீனேஜருக்கு வந்த அட்ரினலின் ரஷ்ஷை 33 வருடங்கள் கழித்து மீண்டும் அனுபவிக்க வைத்ததற்கு நன்றிகள் பல, மணி ரத்னம்!
1950களில் கல்கி பத்திரிக்கை வெளியாகும் வியாழனன்று ரயில் நிலையங்களில் காத்திருந்து, ரயில் நின்றவுடன் அடித்துப் பிடித்து முதல் பிரதியை பிடுங்கி, அங்கேயே பெரிய தூண்களுக்கு அருகில் உட்கார்ந்து பொன்னியின் செல்வனின் அந்த வாரக் கதையை படித்து விட்டு, கை இடுக்கில் சொருகிக் கொண்டு வீட்டிற்கு சென்றவர்கள் ஏராளம். இது உலகமெங்கும் நடந்த விஷயம் தான், சார்லஸ் டிக்கின்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் அத்தியாயங்களாய் எழுதிய போதும், சர் ஆர்தர் கோனன் டாய்லின் ’எ ஸ்கேன்டல் இன் போஹேமியா’ வெளியான போதும், லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரேனினா’ தி ரஷியன் மெசஞ்சரில் வெளிவந்த போதும் நடந்த அதே தவிப்பு தான் பொன்னியின் செல்வனுக்கும் இருந்தது.
நள்ளிரவன்று வெளியாகும் ஹாரி பாட்டர் புத்தகத்தைப் படிக்க பார்னஸ் அன்டு நோபிள் கடைகளில் காத்துக் கிடந்த சிறுவர்களைப் போலத் தான். விஷுவல் மீடியாக்களின் காலமான இன்று திரைப்படத்தின் முதல் காட்சிக்கு க்யூவில் நிற்பது போலத் தான். இது தப்பென்றால் 50களில் ரயில் நிலையங்களில் நின்றதும் தப்புத்தான்.
ஆனால் தமிழ் நாட்டில் அது நடந்தது முதல் முறை. உரைநடை திரண்டு வந்து கொண்டிருக்கும் போது வந்த முதல் ப்ளாக்பஸ்டர் புத்தகம். என்ன தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி அதற்கு முன்னரே பார்த்திபன் கனவும், சிவகாமியின் சபதமும் எழுதி முடித்திருந்தாலும், பொன்னியின் செல்வன் வெளியான சில வாரங்களிலேயே அவற்றை மிஞ்சும் படைப்பாகி விட்டது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தமிழ் நாட்டில் பலருக்கும் புத்தக வாசிப்பை உண்டாக்கியதும் பொ.செ தான். பலரும் பொ.செ.யின் வழியாக இலக்கியத்திற்குள் வந்திருக்கிறார்கள். பலர் படித்த முதல் மற்றும் கடைசி புத்தகமும் இது தான். அல்லது கடல் புறா. “நிறைய புக் படிப்பேங்க, இந்த பொன்னியின் செல்வன், கடல் புறா, யவன ராணி மாதிரி.” பலர் இதைத் தான் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த இலக்கிய படைப்பு என்பது மாதிரியும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஜே.ஜேசிலகுறிப்புகள், கரைந்தநிழல்கள், கடலிலேஒருதோணி, என்பெயர்ராமசேஷன், ஹெலிகாப்டர்கள்கீழேஇறங்கிவிட்டன என்பவை எல்லாம் வெறும் தமிழ் வார்த்தைகளே. கேள்விப் படாத புத்தகங்கள். கேள்விப்படவும் தேவையுமில்லை. இரண்டாயிரம் பக்கங்களுக்கு கல்கி எழுதி வைத்துப் போனதை மீண்டும் மீண்டும் ரசித்து படிக்கவே நேரம் போதவில்லை.
வாரயிதழ்களில் வரும் தொடர்களின் பக்கங்களைப் பிரித்து எடுத்து பைண்ட் செய்து பின்பு படிப்பது என்பது பழக்கம். அப்படி அக்கம் பக்கத்து வீடுகளில் பைண்ட் செய்யப்பட்ட பொ.செ தொடரை வாங்கிப் படித்ததை பற்றி அம்மா சொன்னதுண்டு. அஞ்சலி திரைப்படம் வெளியான வருடம் தான் முதல் முறையாக பொ.செ.வை நான் படித்தேன். தேவநேயப் பாவாணர் நூலகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து இரண்டொரு வாரங்களில் படித்து முடிக்கப்பட்டது. அது வரை படித்துக் கொண்டிருந்த தமிழ்வாணன், சங்கர்லால், லயன் காமிக்ஸ் வகையறாவிலிருந்து விலகி எளிமையாக எழுதப்பட்ட கதை. படிக்கப் படிக்க இழுத்துக் கொண்டு சென்ற புத்தகம். முடித்தவுடன் மீண்டும் படிக்கத் தோன்றிய முதல் புத்தகம். ஒரே ஒரு குறை, புத்தகம் ஆரம்பிக்கும் போது உடைபடும் நான்காவது சுவர். கல்கி வாசகர்களுடன் அப்படி நேரடியாக உரையாடுவது சற்றே புதிதாக இருந்தது. ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று சொல்லாமல், வாருங்கள் நாம் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி செல்வோம் என்று எழுதியது கொஞ்சம் பிடிபடாமல் போனது. ஆனாலும் வந்தியத்தேவனும், நம்பியும், பூங்குழலியும் பிடித்துப் போனார்கள்.
இப்படி பலருக்கும் கனவாக இருந்த ஒரு புத்தகத்தை மணிரத்னம் படமாக எடுக்க எத்தனிக்கிறார் என்று கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார். பல வருடங்களுக்குப்பின் அப்போது பொ.செ.வை மீண்டும் படிக்க முற்பட்ட போது பாதிக்கு மேல் முடியாமல் போனது. அப்போது அசோகமித்ரனும், இந்திரா பார்த்தசாரதியும் ஆதர்சமாயிருந்தார்கள். பொ.செ ஒரு வெறும் சாகச கதையாகப் பட்டது.
பொ.செ.வின் முதல் பாகத்தை பார்த்த போது மணிரத்னம் இதை ஏன் தன் கனவுப் படமென்கிறார் என்பது புரிந்தது.
ராகவன்: என்ன அர்த்தம்? நீங்கதான் சொல்லுங்களேன் அப்பா. நீங்க நிஜமாகவே ஒரு ஐயங்காரா இருந்தா, இந்த மாதிரி சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தியோகம் பாத்திருக்கக் கூடாது. இப்ப ரிட்டயர் ஆனப்புறம்தானே திருமண் சீசுரணம் இட்டுக்கறங்க? உத்தியோகத்தில் இருக்கற வரைக்கும் குடுமியை குல்லாய்ல ஒளிச்சு வெச்சுண்டு, எரால்ட் ராபின்ஸ் படிச்சுட்டு இப்ப பகவத் கதை படிச்சா மறுபடி ஐயங்கார் ஆய்ட்ரா மாதிரியா? உண்மையான ஐயங்காரா இருந்தா, நீங்க காவேரிக்கரையை விட்டுட்டு வந்திருக்கக் கூடாது. அங்க உக்கார்ந்துண்டு அமாவாசை தர்ப்பணம் பண்ணிவெச்சு பகவத் விஷயம் காலட்சேபம்னு மத்தவா கொடுக்கற உஞ்சவிருத்தில சம்சாரம் பண்ணணும்.
நரசிம்மாச்சாரி: அது நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால காம்பரமைஸ் பண்ணிண்டாச்சு.
ராகவன்: அதைத்தான் சொல்ல வரேன். நீங்க ஆரம்பிச்ச காம்ப்ரமைஸைத்தான் நான் தொடர்ந்து இந்த மாதிரி ஐயங்கார், பஞ்சாபி எல்லாம் முக்கியமில்லை. மனசுதான் முக்கியமுன்னு…
நரசிம்மாச்சாரி: ரொம்ப கிளவரா பேசிட்டே இப்ப நான் கொஞ்சம் பேசலாமா?
ராகவன்: சரி.
நரசிம்மாச்சாரி: இது எல்லாம் தற்காலிகமான காம்ப்ரமைஸ். மிலிட்டரிகாரன் யூனிஃபார்ம் போல. ஆனா நீ பண்றது கல்யாணம். வாழ்க்கை பூரா கமிட் பண்ணிக்கிற சமாசாரம். கல்யாணம்ங்கறது வாழ்நாள் பூரா வியாபிக்கிற ஒருவிதமான டிஸ்கவரி. உங்கம்மா என்னோட முப்பத்திரண்டு வருஷம் வாழ்ந்தா. உயிர்போற இன்னி வரைக்கும்கூட அவளை நா முழுசா புரிஞ்சுக்க முடியலை. அதுவும் உறவில கல்யாணம் பண்ணிண்டேன். சொந்த அத்தை பொண்ணு. அப்படி அத்தனை க்ளோஸா ஒரே ஜாதி ஒரே குடும்பம்னு பண்ணிண்டாலே இத்தனை சண்டை போட்டோம். இது வேற்று பாஷை. மேரேஜ் ஸ்டேபிளா இருக்காது என்கிற கவலைனால்தானே.
ராகவன்: தாங்க்யு.
நரசிம்மாச்சாரி: என்ன மனசு மாறிட்டியா?
ராகவன்: இல்லை நீங்க சொன்னது இன்னும் எனக்கு எங்க கல்யாணத்தை மணவாழ்க்கையை வெற்றிகரமாக்கணுங்கற சவால்தான் ஜாஸ்தியாறது.
செப்டம்பர் 1977ல் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்திலிருந்து வாயேஜர் என்ற விண்கலத்தை வானில் ஏவினார்கள் நாசா விஞ்ஞானிகள். வாயேஜரின் ஒரே குறிக்கோள் சூரியக் குடும்பத்தையும் அதைச் சுற்றியிருக்கும் விண்வெளியைப் பற்றியும் புரிந்து கொள்வது தான்.
90களில் வாயேஜர் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 600 கோடி கிலோமீட்டர்கள் தள்ளிப்போய்விட, அது சூரியக்குடும்பத்தை தாண்டிப் போவதற்கு முன், திரும்பி நின்று ஒரு குடும்பப் படமெடுத்து அனுப்பிவிட்டு போகுமாறு கேட்டுக் கொண்டார் கார்ல் ஸாகன் என்ற விஞ்ஞானி. அப்படி எடுக்கப்பட்ட போது தெரிந்த பூமியின் படம் தான் மேலே இருக்கும் இருட்டுப் படம். படத்தில் ஒரு தூசியைப் போல ஒரு பிக்சலுக்கும் (படத்துணுக்கு) குறைவாகத் தெரியும் அந்த வெளிர் நீல புள்ளிதான் நாமிருக்கும் இந்த பூமி. சரியாகத் தெரியவில்லையென்றால் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் சாதனத்தின் திரையை துடைத்து விட்டு மீண்டும் பார்க்கவும்.
கார்ல் ஸாகன் எழுதிய Pale Blue Dot புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார் –
அந்த புள்ளியை மீண்டும் பாருங்கள். அது இங்கே தான். அதுதான் வீடு. அதில் இருப்பவர்கள் நாம் தான். நீங்கள் விரும்பும் அனைவரும், உங்களுக்குத் தெரிந்தவர்கள், நீங்கள் கேள்விப்பட்டவர்கள், கேள்விப்படாதவர்கள், வாழ்ந்து மறைந்த அத்தனை மனிதர்களும் தான்.
அந்தப் புள்ளி தான் நமது இன்ப துன்பங்களின் தொகுப்பு, ஆயிரக்கணக்கான மத நம்பிக்கைகளும், சித்தாந்தங்களும், பொருளாதார கோட்பாடுகளும், ஒவ்வொரு வேட்டைக்காரனும் வேட்டையாடப்படுவனும், ஒவ்வொரு வீரனும் கோழையும், ஒவ்வொரு நாகரீகங்களை உருவாக்கியவனும் அழித்தவனும், ஒவ்வொரு நாடாண்ட ராஜாவும் ஆளப்பட்டவனும், ஒவ்வொரு இளம் ஜோடியும், ஒவ்வொரு தாயும் தந்தையும் குழந்தையும், ஒவ்வொரு விஞ்ஞானியும் முன்னோடியும், ஒவ்வொரு ஒழுக்க நெறி ஆசிரியனும் ஊழல் அரசியல்வாதியும், ஒவ்வொரு சூப்பர் ஸ்டாரும் உச்ச தலைவரும், ஒவ்வொரு துறவியும் பாவியும் என நம் இனத்தின் வரலாற்றில் வாழ்ந்த அத்தனை அத்தனை மனிதர்களும் வாழ்ந்தது இங்கு தான் – சூரிய ஒளியில் தொங்கவிடப்பட்ட அந்தச் சிறு தூசியின் மீது .
….
நமக்கிருக்கும் தோரணைகள், கற்பனையான சுய-முக்கியத்துவங்கள், பிரபஞ்சத்தில் நமக்கு மட்டும் சில சலுகைகள் இருப்பது போன்ற மாயை என எல்லாவற்றையும் சேர்த்து சவால் விடுகிறது இந்த வெளிர் ஒளிப்புள்ளி.
நமது பூமிக் கிரகம் அண்ட இருளில் இருக்கும் ஒரு தனிமையான புள்ளி. பரந்து விரிந்த அண்டத்தில் இருக்கும் ஒரு குட்டிப் புள்ளியில் வாழும் நம்மை நம்மிடமிருந்து காப்பாற்ற வேறு எங்கிருந்தோ உதவி வரும் என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை.