• Post By Post
  • கணம் – தொடர்
  • about

kirukkal.com

  • சென்னையிலிருந்து புத்தகங்கள்

    December 17th, 2022

    ஜூலை மாதத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கிய புத்தகங்களை பிரித்து பார்க்க இப்போது தான் கை வந்தது. மே மாதம் சென்றிருந்த போதே அப்பா, “எதோ புக்கெல்லாம் வந்திருக்கு, போகும் போது எடுத்துண்டு போ” என்று அமேசான் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது மறந்து போய் வந்துவிட, ஜூலையில் கவர்ந்து கொண்டு வந்தேன்.

    அவுட் ஆஃப் பிரிண்ட் ஆகிவிடக்கூடிய சாத்தியம் உடைய புத்தகங்களை அவ்வப்போது பல்வேறு பிரசுரங்களிடமிருந்து ஆர்டர் செய்து வீட்டுக் அனுப்பி, முடிந்த போது ப்ளைட் கார்கோவில் எடுத்துக் கொண்டு வருவது பதினைந்து வருட பழக்கம். கொஞ்சம் கொஞ்சமாய் கிண்டிலில் படிக்க பழகிக் கொண்டாலும், பழைய நியுஸ்பிரிண்ட் வாசனை ஞாபகங்கள் அவ்வப்போது வாசகனை பற்றிக் கொள்ளத்தான் செய்கின்றன.

    அசோகமித்திரன் சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம்

    தற்போது படிக்க ஆரம்பித்திருப்பது, அதாவது மீண்டும் படித்துக் கொண்டிருப்பது அசோகமித்திரனின் இன்று நாவலிலிருந்து ஒரு பிரமாதமான புனர்ஜென்மம் என்னும் சிறுகதை அத்தியாயம். நாவலில் சிறுகதை அத்தியாயமா என்று குழம்பினால், இந்த புத்தகத்தை படிக்க தகுதியானவர் நீங்கள். அசோகமித்திரனை 2009ல் சந்தித்த போது, இந்தக் கதையை சிலாகித்து நான் பேச, மையமாய் தலையாட்டினார் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.

    சீதா கைப்பிடிச்சுவரைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தாள். அது கட்டிடத்தின் முன் பக்கம். முதல் மாடியில் நீட்டிக்கொண்டிருந்த விசாலமான ஸன்ஷேட் தரையை மறைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு உயரத்திலிருந்து பார்த்த போது கூட அந்த ஸன்ஷேட் மீது ஏகப்பட்ட குப்பை – பழத்தோல், காலி சிகரெட் பெட்டிகள், நெருப்புப் பெட்டிகள் கிடப்பது தெளிவாகத் தெரிந்தது. சீதா மொட்டை மாடியிலேயே இன்னொரு பக்கம் சென்று எட்டிப் பார்த்தாள் அந்த இடத்திலிருந்து நேரே கீழே தரையைப் பார்க்க முடிந்தது.

    சீதா கைப்பிடிச் சுவர் மீது ஏறி நின்றுகொண்டாள். அவ்வளவு உயரத்திலிருந்த அவளை உலகத்தில் அந்நேரத்தில் கவனிக்க யாரும் இல்லை. நிதானமாக ஒரு முறை மூச்சிழுத்து சுவாசம் விட்டாள். யாரிடமும் தனியாக இந்தக் காரியத்திற்கு விடை பெற்றுக்கொண்டு வரவில்லை. அம்மாவிடம் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பியிருக்கலாம். இந்த ‘இருக்கலாம்’ என்பதை எவ்வளவோ விஷயங்களோடு பொருத்திப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடலாம். அல்லது வருத்தப்படலாம். இந்த ‘இருக்கலாம்’ தத்துவத்துக்கு வருத்தப்படுகிறவர்கள் ஆயுள் காலம் முழுக்க வருத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இருப்பார்கள்.

    புனர்ஜென்மம், இன்று. அசோகமித்திரன்.
1 2 3 … 1,526
Next Page→

Proudly powered by WordPress

 

Loading Comments...
 

    • Follow Following
      • kirukkal.com
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Edit Site
      • Follow Following
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar