kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • November 23, 2010

    சொர்க்கத்துக்குப் போவேனா மாட்டேனா?

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

    உலகத்தின் டாப் டென் கவலைகளில் முதலிரண்டைப் போன வாரம் நுனிப்புல் மேய்ந்தோம். டாப் டென் கவலைகளுக்கு எதோ ஒரு பிரகஸ்பதியின் வெப்சைட்டில் ஓட்டுப் பதிவு வைக்க, டாப் டென்னுக்கு பின் வந்த கவலைகளின் லிஸ்ட் கவலை கொள்ள வைக்கிறது. பதினேழாமிடம் – பீனட் பட்டர் மேல் வாயில் ஒட்டிக் கொள்வது, முப்பத்தி ஆறாமிடம் மலச்சிக்கல், பதினைந்தாமிடம் – பெண்கள் என்று காமெடி டைம். உலகின் மூன்றாம் கவலை என்று பலரும் வாக்களித்தது சொர்க்கத்துக்கு போவேனா மாட்டேனா என்பது தான். சுத்தம்!

    oo0000oo

    வாழ்வில் நடக்கக்கூடிய சோகங்களில் மிகப் பெரியது குற்றம் செய்வதோ ஆட்படுவதோ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இறப்பைப் போன்று நமது செல்களில் பதிவு செய்யப்படாதது குற்ற உணர்ச்சி தான். ஜெனட்டிக்காக குற்றம் செய்வது நம்முள் பதிவு செய்யப்படவில்லை. எல்லோருக்கும் வரும் ஜலதோஷம், ஜுரம் போல குற்றங்கள் எல்லோருக்கும் வருவதில்லை. எதோ ஒன்று இருப்பதாலேயே வருகிறது. அழகோ, ஆடி காரோ, அடையார் பங்களாவோ இப்படி ஏதோ இருப்பதால் தான் குற்றங்கள் அவர்களை நோக்கி வருகின்றன என்பது தான் சோகமே.
    ஆனால் குற்றங்கள் நடக்க ஆதாரக் காரணம் தான் என்ன. 2008 அமெரிக்காவில் மிகப்பெரிய ரிசஷன் வந்த எல்லோருக்கும் வேலை இழந்து, வீட்டை இழந்த போது சமூக வல்லுனர்கள் குற்றங்கள் அதிகமாகலாம் என்றார்கள். மோசமான ஒரு பொருளாதாரத்தினால் கடுங் குற்றங்கள் அதிகமாகலாம் என்று நம்புகிறோம். அது கிட்டத்தட்ட தப்பு. அமெரிக்காவில் 60-70களில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தபோது குற்றங்கள் அதிகரித்தன. 80களில் பொருளாதாரத்துடன் குற்றங்களும் குறைந்தன. அப்போது பொருளாதாரத்திற்கும் குற்றங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றால், பிறகு? தேவையில்லாமை தான்.

    குழந்தை தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் கிரிமினல்களாகின்றன என்கிறார்கள். கொஞ்சம் நெளிய வைத்தாலும் 1973ல் நிறைவேற்றப்பட்ட Abortion Actக்கு பிறகு பத்து வருடங்களுக்குப் பிறகு குற்றங்கள் குறைய ஆரம்பித்தது அமெரிக்காவில். தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோர்களின் சிசுக்கள் அபார்ஷனில் போய்விட்டதால், அந்தத் தலைமுறையின் நிறைய குற்றவாளிகள் பிறக்கவேயில்லை என்பது தான் Freakonomics எழுதிய லெவிட் மற்றும் டப்னரின் வாதம். இதனை data வைத்துக் கொண்டு நிருபித்தார்கள்.
    குற்றவாளிகள் நம்முடன் தான் இருக்கிறார்கள். நம்மைப் போலவே பிள்ளையாரை பார்த்தால் குட்டிக் கொள்கிறார்கள், அயர்ன் பண்ணி ட்ரஸ் போடுகிறார்கள், சேனல் தாவுகிறார்கள்.நம்மைப் போலவே ஊக்கம் இல்லாவிட்டால் ஒரு விஷயத்தைச் செய்யாதிருப்பார்கள். ஆக அவர்களுக்கு ஊக்கம் இல்லாது செய்துவிட்டால். அதாவது காசு வாங்காது கைது செய்து,நேரத்திற்கு கேஸ் ஃபைல்களை பிரித்து, தண்டனையளித்து, உள்ளே போட்டால் ஊக்கமிழந்து விடுவார்கள். இதை முடியாமல் செய்யும் உப-குற்றக்காரர்களைத் தான் முதலில் உள்ளே போடவேண்டும்.
    இதையெல்லாம் விட அமெரிக்காவில் டெலிவிஷனால் தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். டிவி பார்த்துக் கொண்டு பாப்கார்ன் கொறித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்கள் மற்றவர்களுடன் பழகுவதை விட்டுவிடுகிறார்கள். தனித்துப் போய் விடுகிறார்கள். அல்லது அவர்கள் பெற்றோர்கள் டிவி பார்த்துக் கொண்டே இருப்பதால் வெறுப்படைந்து போய் கதவை மூடிக் கொள்கிறார்கள்.

    “பேப்பர திறந்த கொலை கொள்ளை, நம்மூர் கெட்டுப் போச்சு” என்று சொல்லும் மாமாக்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான பதில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடித்த உண்மை எல்லோரையும் உறைய வைத்தது. இத்தனை ஜனநெரிசல் அதிகமான உலகத்தில் ஐநூறு வருடங்களாக கடுங்குற்றங்கள் குறைந்து வருகின்றன. 15ம் நூற்றாண்டில் லட்சத்தில்73 கொலைகாரர்கள் இருந்தார்கள், 20ம் நூற்றாண்டில் மூன்றே பேர் தான். இதே போல் வேறு பல நாடுகளிலும் இதே கதை தான். ஆக மக்கள் தொகை அதிகமாகும் இக்காலத்தில் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதா, குறைகின்றன என்பதா?

    இம்மாதிரி உலக மகா ரிசஷன்கள் வரும் போதும் கூட பொய் சொல்லாமல், பிக் பாட்கெட் அடிக்காமல், கொலை வழிப்பறி செய்யாமல் எத்தனையோ சான்ஸ்களை வேண்டாம் என்று விட்டுவிட்ட நமக்குள் இருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு கைக்குலுக்கல்-சல்யூட்.

    மற்றபடி குற்றத்திற்கு ஆதாரமான காரணம் கஞ்சத்தனம். யோசித்துப் பார்த்தால் புரியும்.

    பி.கு – சூர்யா-ராமுவின் ரத்த சரித்திரம் இன்னமும் பார்க்கவில்லை.

    oo00000oo

    நாத்திகத்தின் போஸ்டர் பாய் என்றழைக்கப்படும் சாம் ஹாரிஸ் எழுதிய The moral landscape என்ற புத்தகத்தினால் ஆத்திக-நாத்திக சண்டைகள் அதிகமாகியுள்ளன. சாம் சொல்ல வருவது இதைத்தான் – மதங்கள் ஒருவர் ஒழுங்காக இருப்பதற்கு மோசமான காரணங்களைக்க் கொடுக்கின்றன. ஆப்பிரிக்காவில் பசிக் கொடுமை இருக்கிறது. கிறிஸ்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆப்பிரிக்காவுக்கு எதாவது பண உதவி செய்தால் என்னை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்வார் என்பதனால் செய்கிறீர்களா? அல்லது மற்றவர்களின் மேலிருக்கும் தூய்மையான அன்பினாலா?
    அவரிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைக்கிறது – Why is science a better alternative? Science is the most durable and non divisive way of thinking about the human circumstance. It transcends cultural, national, and political boundaries. You don’t have American science versus Canadian science versus Japanese science.

    oo0000oo

    பாஸ் (எ) பாஸ்கரன் படம் கொஞ்சம் பிடித்திருந்ததுக்கு காரணம் சந்தானம். அவரின் விஜய் டிவி காலத்திலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். வத்திப் போன தமிழ்க் காமெடி உலகில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தவர், இப்போது தமிழ் சினிமாவுக்காக மாறிக் கொண்டு வருகிறார். எந்திரனில் எதோ மெக்கானிக்கிடம் வேலை பார்க்கும் ( “டேய் அந்த எட்டு ஸ்பானரை எடுத்துப் போடு”) சைட் கிக் போல வந்தவர், இந்தப் படத்தில் ஆர்யா விட்டுக் கொடுக்க, ஓரிரு தருணங்களில், விலா நோக வைக்கிறார். சித்ரா லட்சுமணனைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. மற்றபடி படத்தில், ஒரு பாடலில் பணக்காரனாகும் விக்கிரமன் படத்தைக் கிண்டல் செய்து கொண்டே ஒரே பாடலில் பணக்காரர்கள் ஆகிறார்கள். என்ன ஒரு cliché reversal.

  • November 18, 2010

    இன்ன பிற – நடு ராத்திரி டின்னர்

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

    சமீபமாக ஃபாரினில் எடுக்கப்படும் பாடல் காட்சியில் ஹீரோ ஹீரோயினுடன் ஆடுவது எப்போதும் போல அந்த இருபது இந்தியப் பெண்களல்ல. அந்நாட்டு டான்ஸர்கள். இதற்கெல்லாம் எப்படியும் ஏதாவது யூனியனில் ஸ்ட்ரைக் பண்ணிவிடுவார்களே, எங்கே அவர்கள்? யாராவது எதையாவது செய்து இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தலாம். காதல் பாடம், அன்பே உன் இடையோ, ராஜ வேர்வை, நெலாவே டல்லா இருக்கு, லவ் கன்பர்ம், கண்மணி ஓ, கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா போன்ற தமிழிசையின் பொன் வரிகளுக்கு க்யூட்டாகத் தோற்றமளிக்கும் ஐரோப்பிய இளைஞன் நம்மூர் ஹீரோவுடன் டப்பாங்கூத்து ஆடுவது தமாஷாக இருக்கிறது. அதுவும் வீட்டின் வாண்டுகள் ரிமோட்டை ஒளித்து வைத்து விட்டதாக நினைத்துக் கொண்டு வால்யூம் குறைத்துப் பார்த்தால் உங்கள் பி.பி குறைந்துவிடும்.

    எங்கிருந்து ஆரம்பித்தது இந்த சம்பிரதாயம்? சூர்யாவிலிருந்து ஆர்யா வரை எல்லோருடனும் அவர்கள் ஆடிவிட்டார்கள். குறிப்பாக விஜய். ஒரு வாரமாக ஒளிபரப்பாகும் எல்லா பாடல்களையும் கூர்ந்து பார்த்ததில், இது இந்தியனில் ஆரம்பித்தது தெரிந்தது. சாகிர் ஹுசைனின் எதுவோ என்று கமல் மனிஷாவைத் தட்டிவிடும்போது பிண்ணனியில் ஆஸ்திரேலியப் பெண்கள். அந்தப் படத்தின் முதல் பாடலில், கோடம்பாக்க டான்ஸர்களை விடுத்து மும்பை மாடல்களுக்கு மல்லிப்பூ கட்டி கூட்டி வந்த போதே எதிர்ப்பு தெரிவித்தார்கள். இன்று எங்கே போனார்கள்? உடனடித் தேவை – அந்த இருபது பின்னணிப் பெண்கள்.

    கும்பகோணம் வடக்கு மாட வீதியில் காதலைச் சொல்லப் பின்தொடரும் ஹீரோ, அடுத்த ஷாட்டில் கூலிங் க்ளாஸ் குளிர் கோட்டு எல்லாம் போட்டுக் கொண்டு பார்சிலோனாவில் ஹீரோயினின் இடுப்பைக் கிள்ளுகிறார். Offending. இந்த மாதிரி படத்தின் நடுவே பாடல்கள் நுழைவதைப் பெரும் புரட்சியாகக் கருதுவதை நம்மூர்க்காரர்கள் விட்டு விட்டு, கொஞ்சம் நேராக யோசிக்கலாம். கதை சொல்லல்(Narrative) என்ற ஒரு விஷயத்தைக் கிட்டத்தட்ட மறந்து விட்டோம். அந்தக் காலத்தில் பாடல்கள் இருந்ததற்கு நாடகக் காரணங்கள் இருந்தன. இப்போது இந்த ஹசிலி பிசிலி காரணங்கள் போதா. கெளதமின் விண்ணைத் தாண்டிய காதல் கதையில் தன் வீட்டு இரும்பு கேட்டைத் தாண்டிக் குதிக்கும் அந்த இருபத்தைந்து வயது இளைஞன் இறங்குவது ஏதோ ஒரு குறுகிய மொண்டே கார்லோவின் தெருவில். ராயப்பேட்டையில் நடக்கும் கதாநாயகி ரோட்டை திரும்பியவுடன் திடிரென்று சிகாகோ இளைஞர்கள் Grafitti அடித்த சுவர்களின் முன்னே நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா என்பது suspension of disbelief என்பார்கள். இது டூ மச் சஸ்பென்ஷன்.

    நமக்கு தேவை ஒரேயொரு நிகழ்வை ஒட்டிய கதைகளும் அவற்றுக்கான சிறுகதை முடிவுகளும். அதாவது incident based திரைக்கதைகள். தசாவதாரம் போல. உதாரணத்துக்கு ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் கதை என்று வைத்துக் கொள்ளுங்கள், ஹீரோவின் முன்- கதை சுருக்கத்தை ஒரு ப்ளாஷ்பேக்கில் சட்டென சொல்லிவிட வேண்டும் . அதை விடுத்து பாங்கினுள் நுழையும்போது நிதானமாக இரண்டாம் க்ளாஸ் படிப்பதில் இருந்து ப்ளாஷ்பேக் சொன்னால், குட் லக். அதே மாதிரி, ஹிரோயின் பாங்கினுள் மாட்டிக் கொள்கிறாள் என்றால், அவளை எதாவது ஒரு ரூமில் அடைத்து வைத்திருக்கும்போது, பப்பிள்ஸ் போட்டு ட்ரீம் ஸீக்குவன்ஸ் எப்படி வரும். இந்தக் கதையும் வங்கி கொள்ளையைப் போல பத்து மணிக்கு ஆரம்பித்து பனிரெண்டுக்கு முடிய வேண்டும். இம்மாதிரி கதைகளை பாட்டு இல்லாமல் தைரியமாக எடுக்கலாம். பாட்டுக்கள் இருந்தாலும் மகேந்திரன் – பாலு மகேந்திரா படங்கள் போல Montageகளாக இருக்கலாம். ஒரு பல்லவியும் ஒரு சரணமும் படத்தில் காட்டினால் போதும், மிச்சத்தை எம்பி3யில் கேட்டுக் கொள்ளலாம். இம்மாதிரி திரைப்படங்கள் எடுத்தால் தமிழ் நவ-சினிமாவின் உதயத்தை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு சுவிசர்லாண்டின் தெருக்கள்.

    OOO

    2050ல் 9 பில்லியன் மனிதர்கள் இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருப்பார்கள் என்கிறார்கள். இந்த 9 பில்லியன் நம்பரில் பல பில்லியன் கவலைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு கவலைகளை மேலோட்டமாக கண்டுக்கலாம்.

    ஜனத்தொகை. நமக்குத் தெரிந்து இவ்வுலகத்தில் இத்தனை பேர் இருந்ததேயில்லை. வெத்துப் பெட்டி அப்பார்ட்மெண்டுகளுக்கு சண்டை போடும் நாம், நிற்க நடக்க சண்டையிட வேண்டியதாகலாம் என்கிறார்கள். இதில் கொஞ்சமாவது உண்மையுள்ளது. இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டால் சீன அரசாங்கம் கன்னாபின்னாவென்று வரி போட, கடந்த முப்பது வருடங்களில் கிட்டத்தட்ட 300 மில்லியன் அதாவது முப்பது கோடி பிறப்புக்களைத் தடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி, இன்னும் கடினமான சட்டங்கள் வரலாம். Population pressure அதிகமாகி இயற்கை பேராபத்துகள் வரலாம். ஆட்டோ, கார்கள் அதிகமாகி ட்ராபிக் ஸ்தம்பிக்கலாம் எனச் சில டிஸ்டோபியன் சிந்தனைகள் நடமாடுகின்றன.

    உணவு மற்றும் உணவுப் பழக்கங்கள். தனியொருவனுக்கு இல்லாவிட்டால் பரவாயில்லை, இத்தனை ஜனத்துக்கும் எப்படி உணவளிக்கப் போகிறோம். ஏற்கெனவே சென்னையில் 300-400அடியாவது தோண்டினால்தான் குடிநீர் வருகிறது. எந்த மரத்தின் வேர்கள் 300 அடிக்குக் கீழே போய் தண்ணி உறியமுடியும். ஆகவே மரங்கள், செடி கொடிகள் மறித்துப் போன சென்னை ஜெய்ப்பூருடன் போட்டியிட்டு வெல்ல முடியும்.

    அமெரிக்காவில் 100 மைல் உணவு என்று ஒரு விஷயம் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது 100 மைல் சுற்றளவிற்குள் உருவாக்கப்படும் உணவுகளை உண்ணும் ஒரு வகை டயட். இப்படி செய்தால் சூப்பர் மார்க்கெட்டுகளை சார்ந்திருக்காமல் உழவர் சந்தையிலிருந்து வாங்கி சமைக்கலாம். இந்த வழிமுறை இன்னும் பிரபலமாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பெட்ரோல் கிணறுகள் காய்ந்து போனால் உணவுப் பொருட்களை நகர்த்துவது சிரமமாகும்.

    ஒரு முறை பூந்தமல்லியில் ஒரு லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு முட்டை கோஸ்களை ட்ரான்ஸ்பர் செய்து கொண்டிருந்தார்கள். முதல் லாரியிலிருக்கும் க்ளீனர்(!) ஒரு முட்டைகோஸை எடுத்து, நீல நிற திரவம் கொண்ட பக்கெட்டில் முக்கி தூக்கி வீசுகிறார். அடுத்த லாரிக்காரர் அதை காட்ச் பிடித்து அழுக்கே அழுக்கான அந்த லாரியின் பின்புறத்தில் போட்டுக் கொள்கிறார். கேட்டதுக்கு, ப்ரஷ்ஷாக இருக்க க்ளோரின் வாஷ் என்றார்கள். முட்டைக்கோஸை பூட்டகேஸ் என்று சாப்பிடுவதை விட்டுவிட்டேன். ஆகையால் லோக்கல் உழவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக்கிக் கொள்ளுதல் உத்தேசம்.

    இது மாதிரி எதுவுமே நடக்காமல் போனாலும் சரி, உங்களூர் சூப்பர் மார்க்கெட்டுகள்தான் நீங்கள் சாப்பிடுவதைத் தேர்ந்தெடுக்கின்றன. இதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது. ஒரு சூப்பர் மார்க்கெட்டின் அமைப்பிலிருந்து, உள்ளே நுழைந்தவுடன் உங்கள் கண்ணில் தெரியும் முதல் பொருளிலிருந்து இருந்து பில் போடும் போது பக்கத்தில் instinct buyக்காக வைக்கப்பட்டிருக்கும் சாக்லேட் சமாசாரங்கள் வரை எல்லாமே கன்ஸூமர் விஞ்ஞானப்படி அமைக்கப்பட்டது. சூப்பர் மார்கெட்டுகளைத் தவிர்த்தால் உங்களின் டின்னரை நீங்களே முடிவு செய்ய முடியும். இதே மாதிரி பாஸ்ட் புட் டிஷ்கள், கொறிக்கும் சிப்ஸ் என்று தவிர்க்க ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

    இப்பொழுதெல்லாம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவது ஒரு ஃபாஷானாகி விட்டது, கவனித்தீர்களா? பலர் ப்ரேக் பாஸ்டே சாப்பிடுவது இல்லை. நள்ளிரவுக்குப் பின் டின்னர் சாப்பிடுவது சாதாரணமாகி விட்டது. இருபது-முப்பது வருடங்களுக்கு முன்னால் சாப்பாடுகளின் நடுவே ஏதாவது சாப்பிட்டால் ஏளனமாய்ப் பார்ப்பார்கள். இது எப்போது மாறியது?
    இதற்கு நேரெதிராக உணவுப் பசியால் மாண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள், இதைத் தடுக்கலாம்.
    யோசித்துப் பார்த்தால் தீவிரவாதத்தை விட தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியது உணவுப் பசி தான். தீவிரவாதத்தினால் மாண்டவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். ஒரு நாள் மட்டுமாவது குறை சொல்லாது, பாலிடிக்ஸ் பண்ணாது, லஞ்சம் கொடுக்காது/வாங்காது, புறம் பேசாது, தூங்கி வழியாது சில பசித்தவர்களுக்கு புசிக்கக் கொடுத்தால் உலக அழிவை ஓரிரு தீபாவளியாவது தள்ளிப் போடலாம்

  • November 14, 2010

    இன்ன பிற – பன்றிகள், பறவைகள் மற்றும் புத்தகங்கள்

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

    முதலில் ஒரு அரேபிய சிறு-சிறுகதை, அதற்கு முன் ஒரு கேள்வி. ஒரே ஒரு நாவலில் உலகப்புகழ் பெற்ற Harper Lee என்னும் பெண் எழுத்தாளரைத் தெரிந்திருக்கலாம். அவரின் ஒரே நாவலான To Kill a Mocking Bird-ஐ நீங்கள் படித்திருக்கக்கூடும். அவருக்கு முன்னமே ஒரே-நாவல் பெண் பிரபலம் ஒருவர் இருந்தார். யார்?

    பாக்தாத் நகரில் வசித்துவந்த ஒரு சுல்தான் அவரது வேலைக்காரர்களில் ஒருவனை காய்கறிகள் வாங்கிவர மார்க்கெட்டுக்கு அனுப்பினார். போன சிறிது நேரத்தில் திரும்பிவந்த வேலையாள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான், “சுல்தான், மார்க்கெட் கூட்டத்தில் ஒரு பெண் என்னை நெருக்கித் தள்ளினாள். அவள் யார் என்று திரும்பிப் பார்த்தால் சாவு தேவதை. அவள் என்னைப் பயமுறுத்துகிறமாதிரி பார்த்தவுடன் ஓட்டமாக வந்துவிட்டேன். நீங்கள் தயவுசெய்து உங்களுடைய குதிரை ஒன்றைக் கொடுத்தால், என் விதியைத் தவிர்க்க, இந்நகரத்தை விட்டுப் போய்விடுகிறேன். சமாராவுக்குப் போய்விட்டால் சாவு தேவதை என்னைக் கண்டுபிடிக்க இயலாது.” சுல்தானும் அவனுக்கு மனமிரங்கி குதிரையைத் தர, முடிந்த அளவுக்கு வேகமாகக் குதிரையை முட்டித் தள்ளி ஓட்டிக்கொண்டு போய்விட்டான் வேலைக்காரன்.

    அவன் சென்றவுடன் சுல்தான் மார்கெட்டுக்கு வந்து சேர்ந்தபோதுதான், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். “காலையில் என் வேலையாளை எதற்காக பயமுறுத்தும் பார்வை பார்த்தாய்?”

    “ஐயோ அது பயமுறுத்தும் பார்வை இல்லையே, ஆச்சரியமான பார்வை. அவனை பாக்தாதில் பார்த்ததில் எனக்கோ வியப்பு. இன்றிரவு சமாராவில் அல்லவா அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு” என்றேன்.

    இந்தக் கதையை இயற்றியவர் பெயர் தெரியாது. ஆனால் இத்தனை குறைவான வாக்கியங்களில் என்ன ஒரு பிரமாதமான கதை. இந்தக் கதையை ஜெஃப்ரி ஆர்ச்சர் முதற்கொண்டு சிறு-சிறு கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் எடுத்துக் காட்டிவிட்டார்கள். தமிழில் இவ்வாறான, சுஜாதா சொன்னதுபோல, சி.சி கதைகள் வருவதே இல்லை. வாராந்திரிகளில் வரும் ஒரு பக்கக் கதையை எதிலுமே சேர்த்துக்கொள்ளக்கூடாது.

    சி.சி.கதைகளை Flash Fiction அல்லது Micro Fiction என்கிறார்கள். அவற்றை எழுத, சில எழுதப்படா விதிமுறைகள் உண்டு. கதையை கதை முடியும்போது ஆரம்பித்தல் அவசியம். அதாவது ‘கடைசியில் கதையில் நுழை, சீக்கிரமாக வெளியேறு’ என்னும் விதி. கடைசி வரி அதிர்ச்சி முக்கியம். கண்டிப்பாக ஒரே ஒரு நிகழ்வுத் தொடர்பாக இருத்தல் வேண்டும். சிறுவனாக இருப்பதில் ஆரம்பித்து ஹீரோயினை மணம் செய்யும் வரையில் 5 வரிகளில் சொன்னாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. சுவாரஸ்யமான கதைக்களன் ஒரு ப்ளஸ். ஒரு போர் நடக்கும் தெருவிலோ, அன்னிய உலகின் ஒரு சூரிய அஸ்தமனத்திலோ கதை நடக்கலாம். நல்ல சிறுகதைகள் என்றுமே மறக்கப்படுவதில்லை. இன்றைக்கு இருக்கும் கவனக் கலைப்புகளுக்கு நடுவே வாசகரைப் படிக்கவைக்க இம்மாதிரி சி.சி.கதைகள் தேவைப்படுகின்றன. Kurt Vonnegut சொன்னமாதிரி, “Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.”
    அன்பர்கள் பெஞ்சு நாற்காலிகளை விட்டெறியாத பட்சத்தில் குறிப்பெடுத்து வைத்திருக்கும் சி.சி.கதைகளை இங்கே எழுதுகிறேன்.

    oo0000oo

    இ-புத்தகங்களின் விற்பனை அதிகமாயிருப்பதாகப் படித்தேன். கொஞ்ச நாட்களுக்குமுன்புவரை, ‘படித்தால் மாண்ட மரத்தின் பேப்பரில் ப்ரிண்ட் செய்யப்பட்டதை அன்றி வேறொன்றையும் படிப்பதாயில்லை’ என்று இருந்தவர்களும் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள். கிண்டில் போன்ற இயந்திர புத்தகப் படிப்பான்களை யூஸ் செய்தவுடன் திடீரென்று புத்தக ஆர்வம் பிய்த்துக்கொள்வதாக வேறு சொல்கிறார்கள். எப்படியோ இணைய/டிவி மேய்வதைக் காட்டிலும் இது ஷேமம்.

    கிண்டிலின் விலை குறைந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் யூஸ் அண்ட் த்ரோ இ-புத்தகங்கள் வந்துவிடும். கடைக்கு போய் ராணி வாங்குவதற்கு பதிலாக ராணி என்ற அட்டை போட்ட வஸ்துவை வாங்கித் திறந்து பார்த்தால் எல்சிடி திரையில் குருவியார் கேள்வி பதில் ஓடும். மூடி வைக்கும் முன் அடுத்த வார பி.டி.சாமி ராணி முத்துவுக்கு இ-ஆர்டர் கொடுத்துவிடலாம். பேப்பர்காரர் இ-பேப்பர்காரர் என்று மலையாள வாசனையுடன் அழைக்கப்படுவார்.

    iPad போன்றவற்றுக்கும் Kindle வகையறாவுக்கும் ஆதாரமான வித்தியாசங்கள் இருக்கின்றன. iPad என்பது ஒரு கைக்கணினி. ஆகையால் இ-புத்தகத்தின் முன்னுரை படிக்குமுன் மெயில் செக் பண்ணப்போய் எதாவது facebook அக்கப்போரில் ஆஜராகி வெளிவரும் முன்னர் தூக்கம் வரலாம். கிண்டிலில் இவையெல்லாம் செய்ய முடியா. புத்தகம் அல்லது பேப்பர் மட்டுமே படிக்கமுடியும். ஆகையால் இணையத் தொல்லைகள் கம்மி.

    இவையிரண்டின் ஆடியன்ஸும் வெவ்வேறு ஆசாமிகள். iPad-ன் இணையக் கடையில் மக்கள் அதிகமாக வாங்குவது, Angry Birds என்னும் ஒரு விளையாட்டு. பன்றிகள் தங்களின் முட்டைகளை தூக்கிக்கொண்டு போய்விட்டதால் கோபப்படும் பறவைகள் தங்களை உண்டிக்கோலில் வைத்துக்கொண்டு எறியச் சொல்கின்றன. விளையாடுபவர் அதை இழுத்து அடித்தால் அவை சென்று பன்றிகளை தாக்குகின்றன. இதே கிண்டிலின் இணையக் கடையில் பெஸ்ட்செல்லராக இருப்பது, Steig Larsson எழுதிய The Girl with a Dragon Tatoo என்னும் புத்தகம். புரிகிறதா?

    oo0000oo

    கார்பரேட்டுகள் அறவழியில் நடக்கிறார்களா என்பது சம்பந்தமான ஒரு டிவி நிகழச்சியை ரசித்துப் பார்த்தேன். சாட்டிலைட் சானல் பட்டிமன்றம் போல் காச்மூச்சென்று கத்தாமல், மற்றவன் மனைவியைச் சண்டைக்கு இழுக்காமல் தலைப்புடன் ஒட்டிப் பேசினார்கள். என்னதான் கார்ப்பரேட் என்றாலும், லாபத்துக்கு மட்டுமே செயல்படும் ஸ்தாபனமாக இருந்தாலும், ethics என்பது அவர்களுக்கும் உண்டு. காரணம் தனி மனிதனைப்போல் இந்த சொசைட்டியில் அவர்களும் ஒர் அங்கம் என்பதால்.

    லாபத்துக்கு ஓடும்போதும் காம்படிஷனுக்கு ஆட்படும்போதும் ஆங்காங்கே நெறி தவறுவது இப்போதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் corporate ethics என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் Pixar Animation Studios. Wall-E என்னும் படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் ட்ரைலர் ரிலிஸ் செய்துவிட்டார்கள் ஆனால் படத்தின் கதை விவாதத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. படத்தில் வேலை செய்யும் அனிமேட்டர்களை எப்படி inspire செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள் Pixarகாரர்கள்.

    கிட்டத்தட்ட அதே சமயம் கோர்ட்னி என்னும் ஒரு பெண், தினமும் Wall-E ட்ரைலரைப் பார்ப்பதாகவும் அதில் வரும் அந்தக் குட்டி ரோபோ அழும்போது தினமும் அழுவதாகவும் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். தான் அழும் அந்த வீடியோவையும் யூ-ட்யூபில் போட்டிருந்தார். இதை எப்படியோ படித்த/பார்த்த Pixar டீம், தாங்கள் எடுக்கும் படங்கள் எப்படியெல்லாம் மனிதர்களைத் தொடுகின்றன என்று நினைத்தார்கள். தினமும் காலையில் அந்தப் பெண் அழும் வீடியோவைப் பார்த்தார்கள், இன்ஸ்பயர் ஆனார்கள். படம் வெளிவந்தது.

    இந்தப் படம் வர மிகவும் உதவிய அவளையும் அவள் பாய் ப்ரண்டையும் விமானத்தில் கூட்டிவந்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து, படத்தின் டீமுடன் ஒரு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் (http://blog.moviefone.com/2008/07/02/pixar-honors-the-girl-who-cried-at-the-wall-e-teaser/ ). இத்தனையும் எந்தவித விளம்பரமும் இல்லாமல். அதற்குப்பின் அந்தப் பெண் அதைப் பற்றி வலைப்பதிவில் எழுதியவுடன்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

    யாருக்கும் தெரியாதபோதும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எதையாவது செய்வீர்களா? உங்கள் மானேஜர் லீவில் இருந்த அன்றும் எப்போதும்போல் வேலை செய்வீர்களா? ரொம்ப சிம்பிளாக, அதுதான் ethics.

    oo0000oo

    விடை: Wuthering Heights எழுதிய ப்ராண்ட்டி சகோதிரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்ட்டி (Emily Bronte). ப்ளாஷ்பேக்களின் முலமாக முன்பும் பின்புமாகச் சொல்லப்பட்ட பிரபல நாவல்.

  • November 1, 2010

    இன்ன பிற – நாராயண் இருந்த வீடு

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

    சியாட்டல் ரொம்பவே பரந்த மனப்பான்மை கொண்ட நகரம். அதைப் போலவே Indie Films என்னும் தனியார் எடுக்கும் திரைப்படங்களுக்கு இங்கே ஏக ஆர்வம். சினிமா ஆர்வம் கொண்ட இந்திய இளைஞ-ஞிகளும் அதிகம். பார்க்கிற ஆர்வம் போக திரைப்படம் எடுப்பதற்கும். போன வருடம் இப்படி ஒரு இந்தியக் குழுவை என் நண்பர் எப்படியோ கண்டுபிடித்தார். இவர்கள் எல்லாம் வீக்கெண்ட் இரவுகளில் யாராவது ஒரு வீட்டில் தங்கி எதாவது ஒரு ‘நல்ல’ சினிமா பார்த்து, அதைப் பற்றி விவாதித்துகொண்டிருக்கிறார்கள் என்று என்னையும் வரச் சொன்னார்.

    ஓரிரு மாதங்கள் கழித்துப் போனேன். அன்றைக்குப் பார்த்து அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த ‘பனாரஸ்’ என்ற இந்திப் படம் படு போர். படம் முடிந்தவுடன் பயங்கரமாக இந்திய சினிமாவை திட்டும் விவாதம். விவாதத்தின் முடிவில், ‘இவங்கெல்லாம் படமெடுக்கறாங்க, நாமேகூட ஒரு குறும் படமெடுத்து பார்க்கலாம்’ என்ற ஒரு முடிவு. அங்கிருந்த மற்றொரு பெண், தான் கேள்விப்பட்ட ஒரு நிஜ வாழ்க்கைக் கதையை சொல்ல, எல்லோரும் தம் ஐடியாக்களை சேர்க்க, கதை கிட்டத்தட்ட ரெடி. சற்றே கடினமான கதை. படித்தால் அல்லது பார்த்தால் மட்டுமே புரியக்கூடிய கதை. மற்றவர்கள் சொன்னால் மொத்தக் கதையும் புரிவது கடினம். இருபது நிமிடப் படமாக எடுக்க முடிவு செய்தார்கள். விட்டால் ஆச்சு என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்.

    இரண்டு வாரங்களுக்குப் பின் திரைக்கதை ஆசாமி கேமராமேனாக மாறி ஜகா வாங்க, நான் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டேன். ஓரிரவு உட்கார்ந்து அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி திரைக்கதையாக்கி, முதல் பாதியை எழுதிவிட்டேன். மற்றொரு நாள் மறு பாதியும் எழுதிவிட, அந்தக் கடினக் கதை தன்னையே விடுவித்துக்கொண்டு சுலபமாகிப் போய்விட்டது. மொத்தம் 42 பக்கங்கள். திரைப்பட இலக்கணத்தில் ஸ்கிரிப்டின் ஒரு பக்கம் ஒரு நிமிடப் படமாகும் என்பது தியரி. இருபது நிமிடப் படம் என்று ஆரம்பித்து நாற்பது நிமிடத்தில் போய் நிற்பதால் இயக்குநரும், உப-இயக்குநரும், எடிட்டரும் சேர்ந்து அங்கே இங்கே கட் செய்து ஒரு முப்பது பக்கத்துக்குக் கொண்டுவந்தார்கள். ’கார்த்திக்கும் நானும்’ என்னும் அந்தக் குறும்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.

    அப்புறம் ஒரு முப்பது நாற்பது பேர்களைப் பேசவைத்து, அழவைத்து, கண்ணடிக்கவைத்து ரெக்கார்ட் செய்து, கேமரா டெஸ்ட் செய்து, கடைசியாக ஹிரோயின்களும் ஹீரோவும் ரெடி. ஆறு மாதங்களாக எல்லோருக்கும் ஒத்துப்போகும் நேரத்தில் ஷூட் செய்கிறார்கள். போன மாதம் கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் சந்திக்கும் ஒரு பார்க் சீனை ஷூட்டிங் பார்க்கப் போயிருந்தேன். நகரத்தின் நடுவே ஒரு கூட்டமான பார்க்கில் போவோர் வருவோர் பார்க்க ஷூட்டிங். முதலில் ஏகமாகக் காற்றடித்து ஒலிப்பதிவில் மக்கர். அதற்கப்புறம் சூரியன் மறைய ஆரம்பித்துவிட ஒளிப்பதிவில் மக்கர். நடுவே ஹீரோ ஸ்டார்பக்ஸ் காப்பி கேட்க, ஹீரோயினுக்குக் குளிர மட மடவென, ஷூட் செய்து தள்ளி பேக்-அப் சொன்னார்கள்.

    க்ளைமாக்ஸ் காட்சியும் ஒரு பார்ட்டி சீனும் மட்டுமே பாக்கி என்று போன வாரம் இயக்குனர் மெயில் அனுப்பியிருந்தார். நடுவே ஹீரோயினாக நடிக்கும் பெண் இந்தியா போய் வந்தார். ஹீரோ இளைஞன் ப்ளோரிடா போய்விட்டார். எடுத்த வரையில் இன்னும் ஃபர்ஸ்ட் கட் ரெடியாகவில்லை. இயக்குநருக்குக் கதை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. இப்படி, படமெடுக்கும் பிரசவ வலி புரிகிறது.
    எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். எதாவது விழாவுக்கு அனுப்பிவிடுவார்கள். காசு கேட்காமல் யூட்யூபில் போடுவார்கள். சொல்கிறேன்.

    oo0000oo

    சூர்யா அட்டைப்படம் போட்ட வருட விகடன் தீபாவளி மலர் 2010-த்துக்குப் பணம் செலுத்திவிட்டேன். ஏறுமயிலேறி ஏர்மெயிலில் வந்துகொண்டிருக்கும். நானூறு பக்கங்கள் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். நல்ல வேளை, அதில் எத்தனை கலர் பக்கங்கள் என்றெல்லாம் போடவில்லை.

    ரொம்ப வருடங்களுக்குப்பின் போன வருடத்தின் தீபாவளி மலர் பிடித்திருந்தது. எழுத்தாளர்களின் மனைவிகளைக் கதை எழுத வைத்திருந்தார்கள். அருளுரை, சினிமா பேட்டிகள் என்பதை எல்லாம் தாண்டி அதைப்போல ஏதாவது வித்தியாசமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    oo0000oo

    மார்கழி மாசம் இந்தியா வந்திருந்தபோது, கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் பிறந்து வளர்ந்த புரசைவாக்கத்தில் இருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். புரசையைத் தெருத் தெருவாகச் சுற்றித் திரிந்திருக்கிறேன். ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். இப்போது பம்பாயிலோ, மஸ்கட்டிலோ, வெஸ்ட்மின்ஸ்டரிலோ, மினியாபோலிஸிலோ இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் வெள்ளாளத் தெரு அப்படியே இருக்கிறது. சில வருடம் கழித்துச் செல்வதால், ரோடு ரொம்பவும் குறுகியதாகத் தோன்றியது. செல்வ வினாயகரும் கங்காதீஸ்வரரும் பிரசித்தமாகியிருக்கிறார்கள். குளங்களைக் காணவில்லை.

    மணிகண்டனும் நானும் பைக்கில் கிளம்பி நாங்கள் படித்த பள்ளிக்குப் போனோம். அங்கேயேதான் இருக்கிறானே தவிர அவனும் சில வருடங்கள் கழித்துத்தான் அந்தப் பக்கம் வருவதாகச் சொன்னான். ஸ்கூலின் முன்னாடி பெரிய சுவர் எழுப்பி, உள்ளே இருந்த தூங்குமூஞ்சி மரங்களை வெட்டி, இன்னுமொரு பெரிய கட்டடம் எழுப்பி விளையாட இடமில்லாமல் செய்திருக்கிறார்கள். ஒரு போட்டோ எடுக்கச் சொன்னபோது, “ஏதாவது புள்ள புடிக்கறவங்கன்னு நினைக்கப் போறாங்க” என்று கேமராவைக் கையால் மூடினான். சிரித்துக்கொண்டே Aunty shopபில் லெமன் ட்ராப் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.

    வெள்ளாளத் தெருவில் நானிருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்த வீடு பெயர் போனது. ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயண சாமியின் வீடு. ஆர்.கே. நாராயண் என்றால் ஊர் அறியும். ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தக் கதை எழுத்தாளர். சுவாமியும் நண்பர்களும் புத்தகத்தை இன்று படித்தாலும் அவருக்கு நோபல் கொடுக்கப்படாததன் அரசியல் புரியாது. அவரின் My Days புத்தகம் ஒரு ஆட்டோபயோகிரபிகல் மைல்கல். இணையத்தில் கொஞ்சம் தேடினால் சங்கர் நாக் இயக்கிய மால்குடி டேஸை பார்க்கலாம். ஜும்பா லஹரி எழுதிய நாரயணின் நாட்களும் படிக்கலாம்.
    அவர் வெள்ளாளத் தெருவின் முதல் வீட்டில்தான் வளர்ந்தார். பின்பு மைசூர் போய் எழுத்தாளர் ஆனார். அவரிருந்த வீட்டை சில வருடங்களூக்குமுன் இடித்துக் கட்டினார்கள். தற்போது சரவண பவன் இருக்கிறது. நான் மணிகண்டனைத் தள்ளிக்கொண்டுபோய் அங்கே காப்பி குடிக்கும்போது, RKN-னை ஒரு மடக்கில் நினைத்துக்கொண்டேன்.

    oo0000oo

    க்ரந்தா(Granta) என்னும் இலக்கிய காலாண்டிதழின் சென்ற பதிப்பு செக்ஸ் ஸ்பெஷல். அதனால் இந்த மாதிரி ஒரு பர்ஸின் போட்டோவைப் போட்டு (பர்ஸ் மட்டும் தெரிந்தால் இதற்குமேல் படிக்காதீர்கள்), பிரபல எழுத்தாளர்களை செக்ஸைச் சுற்றி நடக்கும் கதைகளை எழுதவைத்திருக்கிறார்கள். இதிலிருக்கும் மூன்று கதைகளை வைத்துக் குறும்படங்கள்கூட எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

    ராபர்ட் பொலானோ எழுதிய “The RedHead” என்னும் கதை பதினெட்டு வயதுப் பெண்ணுக்கும் ஒரு போதை மருந்து ஒழிப்பு போலீஸ் ஆபிசருக்கும் இடையே நடக்கும் ரொம்பவே தொந்தரவு செய்யக்கூடிய கதை. இதைப்போல தமிழில் கதைகள், எழுத்தாளரின் உயிருக்கு உத்தரவாதத்தோடு, காலச்சுவடிலோ, உயிர்மையிலோ வருவதெப்போது?

    oo0000oo

    சிகாகோ அட்டாமிக் விஞ்ஞானிகளின் குழு ஒன்று 1947-ல் The Doomsday Clock என்னும் ஒரு கடிகாரத்தை அமைத்தார்கள். அதாவது உலகம் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அழியப்போகிறது என்று வைத்துக் கொண்டால் இப்போது மணி என்ன என்று நியமிக்கும் குழு இவர்கள். கடிகாரம் ஒரு குறியீடுதான். உலகில் தற்போது நடக்கும் சாதக பாதக நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல இந்தக் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி வைக்கிறார்கள். உலக அமைதி, இயற்கை அழிவுகள் எனச் சில பிரபல நிகழ்ச்சிகள்தான் இதை தீர்மானிக்கின்றன.

    1947-ல் 11:53 pm என்று ஆரம்பித்தார்கள். அதற்குப் பின் இந்தக் கடிகாரம் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருக்கிறது. 1949-ல் ரஷ்யா அணுகுண்டு தயார் செய்தபோது மணி 11:57-க்கு நகர்த்திவைக்கப்பட்டது. 1953-ல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பகை உச்சியில் இருந்தபோது 11:58 க்கு போய்விட்டு 1991-ல் 11:43 என்று அமைதியாகியது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி இந்த வருடம் நடந்த அணுகுண்டு ஒப்பந்தத்தினால் 11:54 என்று இறங்கியிருக்கிறது. இதற்கு மற்றொரு காரணம் எந்திரன் ரிலீஸ் என்றும் சொல்கிறார்கள். நம்பலாம்.

    oo0000oo

  • October 24, 2010

    இன்ன பிற – இருபது கோடி விளையாட்டு

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

    தி அட்லாண்டிக்கின் ஆண்டுச் சிறப்பிதழான fiction 2010 படிக்கக் கிடைத்தது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இவ்வருடத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என இதில் இடம்பெற்றிருக்கும் Joyce Carol Oatesன்(JCP) உடையதைச் சொல்லலாம். ரொம்பவே காதலித்த கணவர் ரேமண்ட் ஸ்மித் இறந்த ஒரு வாரத்தில், அந்த சோகத்தை மறக்கத் தன் பேராசிரியர் வேலைக்குச் சென்ற முதல் நாளைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை.

    ஜாய்ஸ் குழந்தையிலிருந்தே எழுத்தாளர். நாற்பது வருடங்களாக எழுத்துப் பிரபலம். ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எழுத்து வாத்தியார் என எழுத்துக்கும் எழுத்துப் பிரபலங்களுக்கும் நெருக்கம். ஜாய்ஸின் எழுத்தை ரசித்துப் படித்திருக்கிறேன். அவரின் 1000ம் பக்க தின டைரியை வாயரிசத்தின் அருகே நின்று வாசித்திருக்கிறேன். எழுத்தாளரை எழுதச் செய்வது எது என்பதை பற்றி அதன் பல பக்கங்களில் இருந்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

    என்னதான் பிரபலமாக இருந்தாலும், தன் பர்சனல் விஷயங்களை வெளியே பேசாத ‘அந்தக் கால’ப் பெண்மணி. இதனால் கணவர் இறந்த விஷயம் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும்போலப் பாடமெடுக்கச் செல்கிறார். அன்றைய பாடம் – கதை எழுதும் கலை. வரி வரியாக எல்லோருடனும் கதையைப் படித்து முடித்து, பின்பு அதைப் பற்றி உரையாடுவதுதான் அன்றைய திட்டம். அன்றைய கதை – ஹெமிங்வேயின் முதல் கதைத் தொகுதியிலிருக்கும் நான்கே பக்க நீளமுள்ள Indian Camp. அந்த தினத்திற்கு ஏற்றாற்போல ஓர் இறப்பைப் பற்றிய சிறுகதை.

    அந்தச் சில மணிநேரங்கள் என்றும்போல் கழிகின்றன. மாணவர்களுடன் உரையாடும்போது எந்த விதமான அநாவசிய ரியாக்‌ஷனும் காட்டாமல் இருக்கிறார் ஜாய்ஸ். அவர்கள் சந்தேகப்படும்படி ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பாடம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது வாசலில் இரு மாணவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். “Professor Oates, We heard about your husband and want to say how sorry we are…If there is anything we can do…” என்கிறவர்களுக்கு, நன்றி- எல்லாம் சுகம் என்றி மழுப்பிவிட்டு உள்ளே வந்துவிடுகிறார். When they leave, I shut my office door. I am shaking. I am so deeply moved. But mostly shocked. Thinking they must have known all along today. They must all know. இதில் ஒரு சிறுகதையிருக்கிறது.
    ஜாய்ஸும் அவரது கணவரும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நடத்திக் கொண்டிருந்த இலக்கிய சிறுபத்திரிகையான Ontario Reviewவை கணவர் மறைவிற்குப் பிறகு நிறுத்துகிறார். ஆனால் அதற்கு முன் பல கட்டுரைகளும் கதைகளும் வீட்டிற்கு வந்திருக்கின்றன. என்ன செய்வது? அவர்களுக்கெல்லாம், “எடிட்டர் ரேமண்ட் ஸ்மித்தின் எதிர்பாராத மரணத்தினால் இனிமேல் இந்தப் பத்திரிகை வராது. மன்னிக்கவும்” என்று லெட்டர் எழுதுகிறார். அனுப்புவதற்கு முன்னர், அதைத் திரும்பப் படிக்கும் போது ’எதிர்பாராத மரணம்’ என்று எழுதியிருப்பது கொஞ்சம் யோசிக்கச் செய்கிறது. இந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பினால் போடுவார்கள் என்று அனுப்பிய எழுத்தாள அன்னியர்களுக்கு ரேமண்டின் மரணம் எப்படி எதிர்பாராததாகும். மனைவியான தனக்குத்தானே இது எதிர்பாராதது என்று கொஞ்சம் கலங்கிவிட்டு, எதிர்பாராத மரணம் என்பதை மரணம் என்று மாற்றி அனுப்புகிறார். மீண்டும் ஒரு சிறுகதை.

    ooOOOOoo

    மேலே சொன்ன ஹெமிங்வேயின் இந்தியன் காம்ப் ஒரு சிறந்த கதை. அது வெளிவந்த 1925ல் ரொம்பப் பேசப்பட்டது. எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) அமெரிக்கர். 1920களில் ஐரோப்பாவுக்கு டிரைவராகச் சென்றவர் டொரண்டோ ஸ்டார் பத்திரிகைக்கு நிருபராகி, பின்பு பாரிஸில் செட்டில் ஆகி, எழுத்தாளராகி, பிரபலமாகி, நான்கு மங்கைகளை மணந்து, 1954ல் கிழவனும் கடலும் என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்றபின்தான் அடங்கினார். அமெரிக்கர்களின் எழுத்தாள ஹீரோ.

    இந்தியன் காம்ப் கதை மிஷிகன் மாகாணத்தில் நடக்கிறது. நிக் ஆடம்ஸ் என்ற சிறுவனின் டாக்டர் தந்தையை ஒரு கடினமான குழந்தை பிறப்பு கேஸுக்காகக் கூப்பிட்டு அனுப்புகிறார்கள். ஒரு பங்க் பெட்டின் கீழ்ப் பகுதியில் அந்த அமெரிக்க-இந்தியப் பெண் குழந்தை பெறத் தவித்துக் கொண்டிருக்கிறாள். அதன் மேல்புறத்தில் அவள் கணவன் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். நிக் இந்த பயங்கரத்தைப் பார்க்கிறான். அதன் பின் அவன் தந்தை அவனை வெளியே போகச் சொல்கிறார். அவன் தந்தை அந்த இந்தியனின் கழுத்தைத் தூக்கி வெட்டுக்காயத்தை ஆராய்வதையும் பார்க்கிறான். படகிற்குத் திரும்பிச் செல்லும்போது, நிக் அந்த இந்தியனின் தற்கொலைக்குக் காரணம் கேட்க, டாக்டர் சொல்கிறார், “I don’t know, Nick. He couldn’t stand things, I guess.”

    இத்தனை பட்டவர்த்தமான தற்கொலைக்கு எந்த விதக் காரணமும் சொல்லப்படவில்லை, தத்துவார்த்தமான உரையாடலும் இல்லை. இதுதான் ஹெமிங்வே. இதனை ஹெமிங்வே, ஐஸ்பெர்க் தியரி எனக் குறிப்பிட்டார். அதாவது உண்மைகள் மேலே மிதந்து கொண்டிருக்க, அதன் பின்புலமும் குறியீடுகளும் மறைமுகமாகத் தெரிவிக்கப்படும் எழுத்துக்கலை.
    இந்தக் கதையைப் போலவே ஜூலை 1961ல், தனக்குப் பிடித்தமான துப்பாக்கியைத் தன் தலைக்குக் கொடுத்தார். தற்கொலை. ஹெமிங்வேவின் A Moveable Feast பற்றித் தனியே சொல்லவேண்டும். அது அவருடைய கடைசிப் புத்தகம். பிறகு.

    ooOOOOoo

    தினமும் யாராவது ஒரு நண்பர் facebookல் மெயிலனுப்பி மாட்டையோ, முட்டைகளையோ, கோழிக் குஞ்சுகளையோ பரிசளித்திருப்பதாகக் கூறுகிறார். திறந்து பார்த்தால் Zyngaவின் Farmville எனும் விளையாட்டு அழைப்பு. அதாவது வர்ச்சுவல் உழவராகி உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலத்தை உழுது பயிரிட்டுக் காப்பாற்ற வேண்டும். ரொம்பவும் சுலபமான விளையாட்டு. மவுஸைத் தட்டிக்கொண்டே இருந்தால் போதும். நம்பர்கள் மாற நெல் சாகுபடி செய்துவிடலாம். இத்தனையும் facebookல். கிட்டத்தட்ட 7 கோடி பேர் விளையாடும் உழவர் சந்தை.

    இது கன்னாபின்னாவென்று பிரபலமாகி Zyngaவிற்கு கூகிள்காரர்கள் 20 கோடி டாலர்கள் அளித்திருக்கிறார்கள். மற்ற விளையாட்டு கம்பெனிக்காரர்கள் காதில் புகை. அவர்களின் குற்றச்சாட்டு, “வெறும் மவுஸைத் தட்டிக் கொண்டே, எந்த விதமான சுவாரசியமும் இல்லாத இந்த மாதிரி விளையாட்டுகள் அதிகமாகி, இந்தத் துறையிலுள்ள கற்பனைத் திறனை காணாமல் செய்து விடும்” என்பதுதான். இதே மாதிரி இன்னும் சில வருடங்களில் கோடம்பாக்கத் தெருக்களில் ரோபோக்கள் அலைக்கழிக்கப்பட்டு வேலைக்கு ஆளெடுக்கும் க்யூக்களில் நிற்கப் போகின்றன. ஜாக்கிரதை.

    ooOOOO00

    நான் மகான் அல்ல. நகநுனியில் எழுதிவிடக்கூடிய கதை. அதை இரண்டு மணி நேரப் படமாக எடுத்ததே பெரிய விஷயம். அதிலும் முதல் 90 நிமிடத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. கதை கால் இஞ்ச் நகரக் கூட அடம்பிடிக்கிறது. ஆனாலும் பொறுமையாக எந்தவித சினிமாத்தனமும் (கிளைக் காதல் கதையைத் தவிர) இல்லாமல், பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள். கடைசி அரை மணி நேரத்திற்கு வெறும் அட! மட்டுமே சொல்ல முடிந்தது. அதுவும் அந்த நாலு பேரும் சுற்றி வர, கார்த்தி ஏறெடுத்து பார்க்கும்போது யுவனின் எலக்ட்ரிக் கிட்டார் அதகளம் பண்ணுகிறது. யதார்த்தமான க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள்.

    கொஞ்சம் கூட ஹீரோத்தனம் இல்லாமல் திரைக்கதை அமைப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் தைரியம் வேண்டும். டைரக்டர் சுசீந்திரனுக்கு இந்த வருட ஸ்பெஷல் பாராட்டு.

    ooOOOOoo

    கொலுவுக்குக் கூப்பிட்டிருந்த நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தெருவடைச்சானாக கார்கள் நின்றுகொண்டிருக்க, திருவல்லிக்கேணி ஸ்பெஷல் ப்ளாஸ்டிக் தோரணங்களும் மாவிலைகளும் தொங்கவிடப்பட்டிருந்த அவர் வீட்டினுள் ஏகக் கூட்டம்.

    முன் அறையில் சரிகை வேட்டி போர்த்தப்பட்ட படிகள் வைத்து, அழகான பொம்மைகள் கூட்டம். உள்ளே போய் சுண்டலும், பைனாப்பிள் கேசரியும் எடுத்துக் கொண்டேன். அங்கே ஆண்கள் H1B, EAD கவலைகளை பேசிக்கொண்டிருக்க, “ஏய் படம் பார்த்தியாப்பா?”, “அத்து சொன்னோல்லியோ, don’t jump கண்ணா”, பெண்கள் சிலர் கேரம் போர்ட் ஆட, சிறுவர்கள் சிலந்தி ரோபோ பொம்மைகளை ரிமோட்டால் இயக்க, பட்டுப் பாவாடை குட்டிப் பெண்கள் தாவித் தாவி குதித்துக்கொண்டிருக்க, முன் அறையிலிருந்த கொலு வரிசை ரங்கநாதரும் கருமாரி அம்மனும் சீரான பளிச் கருப்பு கலரடிக்கப்பட்டு ஆதிசேஷனுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு, மூன்றாம் படியில் அமைதியாக உட்கார்ந்திருக்க, அது நடந்தது. இந்த குதூகலமான களேபரத்திலும் கிருஷ்ண பஜன் பாடி தம்புரா வாசித்துக்கொண்டிருந்த மீரா பொம்மை சட்டென தலை திருப்பிச் சிரித்தது. நிஜமா!

    ooOOOOoo

←Previous Page
1 … 25 26 27 28 29 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar