kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • November 1, 2010

    இன்ன பிற – நாராயண் இருந்த வீடு

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

    சியாட்டல் ரொம்பவே பரந்த மனப்பான்மை கொண்ட நகரம். அதைப் போலவே Indie Films என்னும் தனியார் எடுக்கும் திரைப்படங்களுக்கு இங்கே ஏக ஆர்வம். சினிமா ஆர்வம் கொண்ட இந்திய இளைஞ-ஞிகளும் அதிகம். பார்க்கிற ஆர்வம் போக திரைப்படம் எடுப்பதற்கும். போன வருடம் இப்படி ஒரு இந்தியக் குழுவை என் நண்பர் எப்படியோ கண்டுபிடித்தார். இவர்கள் எல்லாம் வீக்கெண்ட் இரவுகளில் யாராவது ஒரு வீட்டில் தங்கி எதாவது ஒரு ‘நல்ல’ சினிமா பார்த்து, அதைப் பற்றி விவாதித்துகொண்டிருக்கிறார்கள் என்று என்னையும் வரச் சொன்னார்.

    ஓரிரு மாதங்கள் கழித்துப் போனேன். அன்றைக்குப் பார்த்து அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த ‘பனாரஸ்’ என்ற இந்திப் படம் படு போர். படம் முடிந்தவுடன் பயங்கரமாக இந்திய சினிமாவை திட்டும் விவாதம். விவாதத்தின் முடிவில், ‘இவங்கெல்லாம் படமெடுக்கறாங்க, நாமேகூட ஒரு குறும் படமெடுத்து பார்க்கலாம்’ என்ற ஒரு முடிவு. அங்கிருந்த மற்றொரு பெண், தான் கேள்விப்பட்ட ஒரு நிஜ வாழ்க்கைக் கதையை சொல்ல, எல்லோரும் தம் ஐடியாக்களை சேர்க்க, கதை கிட்டத்தட்ட ரெடி. சற்றே கடினமான கதை. படித்தால் அல்லது பார்த்தால் மட்டுமே புரியக்கூடிய கதை. மற்றவர்கள் சொன்னால் மொத்தக் கதையும் புரிவது கடினம். இருபது நிமிடப் படமாக எடுக்க முடிவு செய்தார்கள். விட்டால் ஆச்சு என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்.

    இரண்டு வாரங்களுக்குப் பின் திரைக்கதை ஆசாமி கேமராமேனாக மாறி ஜகா வாங்க, நான் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டேன். ஓரிரவு உட்கார்ந்து அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி திரைக்கதையாக்கி, முதல் பாதியை எழுதிவிட்டேன். மற்றொரு நாள் மறு பாதியும் எழுதிவிட, அந்தக் கடினக் கதை தன்னையே விடுவித்துக்கொண்டு சுலபமாகிப் போய்விட்டது. மொத்தம் 42 பக்கங்கள். திரைப்பட இலக்கணத்தில் ஸ்கிரிப்டின் ஒரு பக்கம் ஒரு நிமிடப் படமாகும் என்பது தியரி. இருபது நிமிடப் படம் என்று ஆரம்பித்து நாற்பது நிமிடத்தில் போய் நிற்பதால் இயக்குநரும், உப-இயக்குநரும், எடிட்டரும் சேர்ந்து அங்கே இங்கே கட் செய்து ஒரு முப்பது பக்கத்துக்குக் கொண்டுவந்தார்கள். ’கார்த்திக்கும் நானும்’ என்னும் அந்தக் குறும்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.

    அப்புறம் ஒரு முப்பது நாற்பது பேர்களைப் பேசவைத்து, அழவைத்து, கண்ணடிக்கவைத்து ரெக்கார்ட் செய்து, கேமரா டெஸ்ட் செய்து, கடைசியாக ஹிரோயின்களும் ஹீரோவும் ரெடி. ஆறு மாதங்களாக எல்லோருக்கும் ஒத்துப்போகும் நேரத்தில் ஷூட் செய்கிறார்கள். போன மாதம் கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் சந்திக்கும் ஒரு பார்க் சீனை ஷூட்டிங் பார்க்கப் போயிருந்தேன். நகரத்தின் நடுவே ஒரு கூட்டமான பார்க்கில் போவோர் வருவோர் பார்க்க ஷூட்டிங். முதலில் ஏகமாகக் காற்றடித்து ஒலிப்பதிவில் மக்கர். அதற்கப்புறம் சூரியன் மறைய ஆரம்பித்துவிட ஒளிப்பதிவில் மக்கர். நடுவே ஹீரோ ஸ்டார்பக்ஸ் காப்பி கேட்க, ஹீரோயினுக்குக் குளிர மட மடவென, ஷூட் செய்து தள்ளி பேக்-அப் சொன்னார்கள்.

    க்ளைமாக்ஸ் காட்சியும் ஒரு பார்ட்டி சீனும் மட்டுமே பாக்கி என்று போன வாரம் இயக்குனர் மெயில் அனுப்பியிருந்தார். நடுவே ஹீரோயினாக நடிக்கும் பெண் இந்தியா போய் வந்தார். ஹீரோ இளைஞன் ப்ளோரிடா போய்விட்டார். எடுத்த வரையில் இன்னும் ஃபர்ஸ்ட் கட் ரெடியாகவில்லை. இயக்குநருக்குக் கதை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. இப்படி, படமெடுக்கும் பிரசவ வலி புரிகிறது.
    எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். எதாவது விழாவுக்கு அனுப்பிவிடுவார்கள். காசு கேட்காமல் யூட்யூபில் போடுவார்கள். சொல்கிறேன்.

    oo0000oo

    சூர்யா அட்டைப்படம் போட்ட வருட விகடன் தீபாவளி மலர் 2010-த்துக்குப் பணம் செலுத்திவிட்டேன். ஏறுமயிலேறி ஏர்மெயிலில் வந்துகொண்டிருக்கும். நானூறு பக்கங்கள் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். நல்ல வேளை, அதில் எத்தனை கலர் பக்கங்கள் என்றெல்லாம் போடவில்லை.

    ரொம்ப வருடங்களுக்குப்பின் போன வருடத்தின் தீபாவளி மலர் பிடித்திருந்தது. எழுத்தாளர்களின் மனைவிகளைக் கதை எழுத வைத்திருந்தார்கள். அருளுரை, சினிமா பேட்டிகள் என்பதை எல்லாம் தாண்டி அதைப்போல ஏதாவது வித்தியாசமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    oo0000oo

    மார்கழி மாசம் இந்தியா வந்திருந்தபோது, கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் பிறந்து வளர்ந்த புரசைவாக்கத்தில் இருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். புரசையைத் தெருத் தெருவாகச் சுற்றித் திரிந்திருக்கிறேன். ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். இப்போது பம்பாயிலோ, மஸ்கட்டிலோ, வெஸ்ட்மின்ஸ்டரிலோ, மினியாபோலிஸிலோ இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் வெள்ளாளத் தெரு அப்படியே இருக்கிறது. சில வருடம் கழித்துச் செல்வதால், ரோடு ரொம்பவும் குறுகியதாகத் தோன்றியது. செல்வ வினாயகரும் கங்காதீஸ்வரரும் பிரசித்தமாகியிருக்கிறார்கள். குளங்களைக் காணவில்லை.

    மணிகண்டனும் நானும் பைக்கில் கிளம்பி நாங்கள் படித்த பள்ளிக்குப் போனோம். அங்கேயேதான் இருக்கிறானே தவிர அவனும் சில வருடங்கள் கழித்துத்தான் அந்தப் பக்கம் வருவதாகச் சொன்னான். ஸ்கூலின் முன்னாடி பெரிய சுவர் எழுப்பி, உள்ளே இருந்த தூங்குமூஞ்சி மரங்களை வெட்டி, இன்னுமொரு பெரிய கட்டடம் எழுப்பி விளையாட இடமில்லாமல் செய்திருக்கிறார்கள். ஒரு போட்டோ எடுக்கச் சொன்னபோது, “ஏதாவது புள்ள புடிக்கறவங்கன்னு நினைக்கப் போறாங்க” என்று கேமராவைக் கையால் மூடினான். சிரித்துக்கொண்டே Aunty shopபில் லெமன் ட்ராப் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.

    வெள்ளாளத் தெருவில் நானிருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்த வீடு பெயர் போனது. ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயண சாமியின் வீடு. ஆர்.கே. நாராயண் என்றால் ஊர் அறியும். ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தக் கதை எழுத்தாளர். சுவாமியும் நண்பர்களும் புத்தகத்தை இன்று படித்தாலும் அவருக்கு நோபல் கொடுக்கப்படாததன் அரசியல் புரியாது. அவரின் My Days புத்தகம் ஒரு ஆட்டோபயோகிரபிகல் மைல்கல். இணையத்தில் கொஞ்சம் தேடினால் சங்கர் நாக் இயக்கிய மால்குடி டேஸை பார்க்கலாம். ஜும்பா லஹரி எழுதிய நாரயணின் நாட்களும் படிக்கலாம்.
    அவர் வெள்ளாளத் தெருவின் முதல் வீட்டில்தான் வளர்ந்தார். பின்பு மைசூர் போய் எழுத்தாளர் ஆனார். அவரிருந்த வீட்டை சில வருடங்களூக்குமுன் இடித்துக் கட்டினார்கள். தற்போது சரவண பவன் இருக்கிறது. நான் மணிகண்டனைத் தள்ளிக்கொண்டுபோய் அங்கே காப்பி குடிக்கும்போது, RKN-னை ஒரு மடக்கில் நினைத்துக்கொண்டேன்.

    oo0000oo

    க்ரந்தா(Granta) என்னும் இலக்கிய காலாண்டிதழின் சென்ற பதிப்பு செக்ஸ் ஸ்பெஷல். அதனால் இந்த மாதிரி ஒரு பர்ஸின் போட்டோவைப் போட்டு (பர்ஸ் மட்டும் தெரிந்தால் இதற்குமேல் படிக்காதீர்கள்), பிரபல எழுத்தாளர்களை செக்ஸைச் சுற்றி நடக்கும் கதைகளை எழுதவைத்திருக்கிறார்கள். இதிலிருக்கும் மூன்று கதைகளை வைத்துக் குறும்படங்கள்கூட எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

    ராபர்ட் பொலானோ எழுதிய “The RedHead” என்னும் கதை பதினெட்டு வயதுப் பெண்ணுக்கும் ஒரு போதை மருந்து ஒழிப்பு போலீஸ் ஆபிசருக்கும் இடையே நடக்கும் ரொம்பவே தொந்தரவு செய்யக்கூடிய கதை. இதைப்போல தமிழில் கதைகள், எழுத்தாளரின் உயிருக்கு உத்தரவாதத்தோடு, காலச்சுவடிலோ, உயிர்மையிலோ வருவதெப்போது?

    oo0000oo

    சிகாகோ அட்டாமிக் விஞ்ஞானிகளின் குழு ஒன்று 1947-ல் The Doomsday Clock என்னும் ஒரு கடிகாரத்தை அமைத்தார்கள். அதாவது உலகம் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அழியப்போகிறது என்று வைத்துக் கொண்டால் இப்போது மணி என்ன என்று நியமிக்கும் குழு இவர்கள். கடிகாரம் ஒரு குறியீடுதான். உலகில் தற்போது நடக்கும் சாதக பாதக நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல இந்தக் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி வைக்கிறார்கள். உலக அமைதி, இயற்கை அழிவுகள் எனச் சில பிரபல நிகழ்ச்சிகள்தான் இதை தீர்மானிக்கின்றன.

    1947-ல் 11:53 pm என்று ஆரம்பித்தார்கள். அதற்குப் பின் இந்தக் கடிகாரம் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருக்கிறது. 1949-ல் ரஷ்யா அணுகுண்டு தயார் செய்தபோது மணி 11:57-க்கு நகர்த்திவைக்கப்பட்டது. 1953-ல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பகை உச்சியில் இருந்தபோது 11:58 க்கு போய்விட்டு 1991-ல் 11:43 என்று அமைதியாகியது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி இந்த வருடம் நடந்த அணுகுண்டு ஒப்பந்தத்தினால் 11:54 என்று இறங்கியிருக்கிறது. இதற்கு மற்றொரு காரணம் எந்திரன் ரிலீஸ் என்றும் சொல்கிறார்கள். நம்பலாம்.

    oo0000oo

  • October 24, 2010

    இன்ன பிற – இருபது கோடி விளையாட்டு

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

    தி அட்லாண்டிக்கின் ஆண்டுச் சிறப்பிதழான fiction 2010 படிக்கக் கிடைத்தது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இவ்வருடத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என இதில் இடம்பெற்றிருக்கும் Joyce Carol Oatesன்(JCP) உடையதைச் சொல்லலாம். ரொம்பவே காதலித்த கணவர் ரேமண்ட் ஸ்மித் இறந்த ஒரு வாரத்தில், அந்த சோகத்தை மறக்கத் தன் பேராசிரியர் வேலைக்குச் சென்ற முதல் நாளைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை.

    ஜாய்ஸ் குழந்தையிலிருந்தே எழுத்தாளர். நாற்பது வருடங்களாக எழுத்துப் பிரபலம். ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எழுத்து வாத்தியார் என எழுத்துக்கும் எழுத்துப் பிரபலங்களுக்கும் நெருக்கம். ஜாய்ஸின் எழுத்தை ரசித்துப் படித்திருக்கிறேன். அவரின் 1000ம் பக்க தின டைரியை வாயரிசத்தின் அருகே நின்று வாசித்திருக்கிறேன். எழுத்தாளரை எழுதச் செய்வது எது என்பதை பற்றி அதன் பல பக்கங்களில் இருந்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

    என்னதான் பிரபலமாக இருந்தாலும், தன் பர்சனல் விஷயங்களை வெளியே பேசாத ‘அந்தக் கால’ப் பெண்மணி. இதனால் கணவர் இறந்த விஷயம் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும்போலப் பாடமெடுக்கச் செல்கிறார். அன்றைய பாடம் – கதை எழுதும் கலை. வரி வரியாக எல்லோருடனும் கதையைப் படித்து முடித்து, பின்பு அதைப் பற்றி உரையாடுவதுதான் அன்றைய திட்டம். அன்றைய கதை – ஹெமிங்வேயின் முதல் கதைத் தொகுதியிலிருக்கும் நான்கே பக்க நீளமுள்ள Indian Camp. அந்த தினத்திற்கு ஏற்றாற்போல ஓர் இறப்பைப் பற்றிய சிறுகதை.

    அந்தச் சில மணிநேரங்கள் என்றும்போல் கழிகின்றன. மாணவர்களுடன் உரையாடும்போது எந்த விதமான அநாவசிய ரியாக்‌ஷனும் காட்டாமல் இருக்கிறார் ஜாய்ஸ். அவர்கள் சந்தேகப்படும்படி ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பாடம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது வாசலில் இரு மாணவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். “Professor Oates, We heard about your husband and want to say how sorry we are…If there is anything we can do…” என்கிறவர்களுக்கு, நன்றி- எல்லாம் சுகம் என்றி மழுப்பிவிட்டு உள்ளே வந்துவிடுகிறார். When they leave, I shut my office door. I am shaking. I am so deeply moved. But mostly shocked. Thinking they must have known all along today. They must all know. இதில் ஒரு சிறுகதையிருக்கிறது.
    ஜாய்ஸும் அவரது கணவரும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நடத்திக் கொண்டிருந்த இலக்கிய சிறுபத்திரிகையான Ontario Reviewவை கணவர் மறைவிற்குப் பிறகு நிறுத்துகிறார். ஆனால் அதற்கு முன் பல கட்டுரைகளும் கதைகளும் வீட்டிற்கு வந்திருக்கின்றன. என்ன செய்வது? அவர்களுக்கெல்லாம், “எடிட்டர் ரேமண்ட் ஸ்மித்தின் எதிர்பாராத மரணத்தினால் இனிமேல் இந்தப் பத்திரிகை வராது. மன்னிக்கவும்” என்று லெட்டர் எழுதுகிறார். அனுப்புவதற்கு முன்னர், அதைத் திரும்பப் படிக்கும் போது ’எதிர்பாராத மரணம்’ என்று எழுதியிருப்பது கொஞ்சம் யோசிக்கச் செய்கிறது. இந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பினால் போடுவார்கள் என்று அனுப்பிய எழுத்தாள அன்னியர்களுக்கு ரேமண்டின் மரணம் எப்படி எதிர்பாராததாகும். மனைவியான தனக்குத்தானே இது எதிர்பாராதது என்று கொஞ்சம் கலங்கிவிட்டு, எதிர்பாராத மரணம் என்பதை மரணம் என்று மாற்றி அனுப்புகிறார். மீண்டும் ஒரு சிறுகதை.

    ooOOOOoo

    மேலே சொன்ன ஹெமிங்வேயின் இந்தியன் காம்ப் ஒரு சிறந்த கதை. அது வெளிவந்த 1925ல் ரொம்பப் பேசப்பட்டது. எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) அமெரிக்கர். 1920களில் ஐரோப்பாவுக்கு டிரைவராகச் சென்றவர் டொரண்டோ ஸ்டார் பத்திரிகைக்கு நிருபராகி, பின்பு பாரிஸில் செட்டில் ஆகி, எழுத்தாளராகி, பிரபலமாகி, நான்கு மங்கைகளை மணந்து, 1954ல் கிழவனும் கடலும் என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்றபின்தான் அடங்கினார். அமெரிக்கர்களின் எழுத்தாள ஹீரோ.

    இந்தியன் காம்ப் கதை மிஷிகன் மாகாணத்தில் நடக்கிறது. நிக் ஆடம்ஸ் என்ற சிறுவனின் டாக்டர் தந்தையை ஒரு கடினமான குழந்தை பிறப்பு கேஸுக்காகக் கூப்பிட்டு அனுப்புகிறார்கள். ஒரு பங்க் பெட்டின் கீழ்ப் பகுதியில் அந்த அமெரிக்க-இந்தியப் பெண் குழந்தை பெறத் தவித்துக் கொண்டிருக்கிறாள். அதன் மேல்புறத்தில் அவள் கணவன் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். நிக் இந்த பயங்கரத்தைப் பார்க்கிறான். அதன் பின் அவன் தந்தை அவனை வெளியே போகச் சொல்கிறார். அவன் தந்தை அந்த இந்தியனின் கழுத்தைத் தூக்கி வெட்டுக்காயத்தை ஆராய்வதையும் பார்க்கிறான். படகிற்குத் திரும்பிச் செல்லும்போது, நிக் அந்த இந்தியனின் தற்கொலைக்குக் காரணம் கேட்க, டாக்டர் சொல்கிறார், “I don’t know, Nick. He couldn’t stand things, I guess.”

    இத்தனை பட்டவர்த்தமான தற்கொலைக்கு எந்த விதக் காரணமும் சொல்லப்படவில்லை, தத்துவார்த்தமான உரையாடலும் இல்லை. இதுதான் ஹெமிங்வே. இதனை ஹெமிங்வே, ஐஸ்பெர்க் தியரி எனக் குறிப்பிட்டார். அதாவது உண்மைகள் மேலே மிதந்து கொண்டிருக்க, அதன் பின்புலமும் குறியீடுகளும் மறைமுகமாகத் தெரிவிக்கப்படும் எழுத்துக்கலை.
    இந்தக் கதையைப் போலவே ஜூலை 1961ல், தனக்குப் பிடித்தமான துப்பாக்கியைத் தன் தலைக்குக் கொடுத்தார். தற்கொலை. ஹெமிங்வேவின் A Moveable Feast பற்றித் தனியே சொல்லவேண்டும். அது அவருடைய கடைசிப் புத்தகம். பிறகு.

    ooOOOOoo

    தினமும் யாராவது ஒரு நண்பர் facebookல் மெயிலனுப்பி மாட்டையோ, முட்டைகளையோ, கோழிக் குஞ்சுகளையோ பரிசளித்திருப்பதாகக் கூறுகிறார். திறந்து பார்த்தால் Zyngaவின் Farmville எனும் விளையாட்டு அழைப்பு. அதாவது வர்ச்சுவல் உழவராகி உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலத்தை உழுது பயிரிட்டுக் காப்பாற்ற வேண்டும். ரொம்பவும் சுலபமான விளையாட்டு. மவுஸைத் தட்டிக்கொண்டே இருந்தால் போதும். நம்பர்கள் மாற நெல் சாகுபடி செய்துவிடலாம். இத்தனையும் facebookல். கிட்டத்தட்ட 7 கோடி பேர் விளையாடும் உழவர் சந்தை.

    இது கன்னாபின்னாவென்று பிரபலமாகி Zyngaவிற்கு கூகிள்காரர்கள் 20 கோடி டாலர்கள் அளித்திருக்கிறார்கள். மற்ற விளையாட்டு கம்பெனிக்காரர்கள் காதில் புகை. அவர்களின் குற்றச்சாட்டு, “வெறும் மவுஸைத் தட்டிக் கொண்டே, எந்த விதமான சுவாரசியமும் இல்லாத இந்த மாதிரி விளையாட்டுகள் அதிகமாகி, இந்தத் துறையிலுள்ள கற்பனைத் திறனை காணாமல் செய்து விடும்” என்பதுதான். இதே மாதிரி இன்னும் சில வருடங்களில் கோடம்பாக்கத் தெருக்களில் ரோபோக்கள் அலைக்கழிக்கப்பட்டு வேலைக்கு ஆளெடுக்கும் க்யூக்களில் நிற்கப் போகின்றன. ஜாக்கிரதை.

    ooOOOO00

    நான் மகான் அல்ல. நகநுனியில் எழுதிவிடக்கூடிய கதை. அதை இரண்டு மணி நேரப் படமாக எடுத்ததே பெரிய விஷயம். அதிலும் முதல் 90 நிமிடத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. கதை கால் இஞ்ச் நகரக் கூட அடம்பிடிக்கிறது. ஆனாலும் பொறுமையாக எந்தவித சினிமாத்தனமும் (கிளைக் காதல் கதையைத் தவிர) இல்லாமல், பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள். கடைசி அரை மணி நேரத்திற்கு வெறும் அட! மட்டுமே சொல்ல முடிந்தது. அதுவும் அந்த நாலு பேரும் சுற்றி வர, கார்த்தி ஏறெடுத்து பார்க்கும்போது யுவனின் எலக்ட்ரிக் கிட்டார் அதகளம் பண்ணுகிறது. யதார்த்தமான க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள்.

    கொஞ்சம் கூட ஹீரோத்தனம் இல்லாமல் திரைக்கதை அமைப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் தைரியம் வேண்டும். டைரக்டர் சுசீந்திரனுக்கு இந்த வருட ஸ்பெஷல் பாராட்டு.

    ooOOOOoo

    கொலுவுக்குக் கூப்பிட்டிருந்த நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தெருவடைச்சானாக கார்கள் நின்றுகொண்டிருக்க, திருவல்லிக்கேணி ஸ்பெஷல் ப்ளாஸ்டிக் தோரணங்களும் மாவிலைகளும் தொங்கவிடப்பட்டிருந்த அவர் வீட்டினுள் ஏகக் கூட்டம்.

    முன் அறையில் சரிகை வேட்டி போர்த்தப்பட்ட படிகள் வைத்து, அழகான பொம்மைகள் கூட்டம். உள்ளே போய் சுண்டலும், பைனாப்பிள் கேசரியும் எடுத்துக் கொண்டேன். அங்கே ஆண்கள் H1B, EAD கவலைகளை பேசிக்கொண்டிருக்க, “ஏய் படம் பார்த்தியாப்பா?”, “அத்து சொன்னோல்லியோ, don’t jump கண்ணா”, பெண்கள் சிலர் கேரம் போர்ட் ஆட, சிறுவர்கள் சிலந்தி ரோபோ பொம்மைகளை ரிமோட்டால் இயக்க, பட்டுப் பாவாடை குட்டிப் பெண்கள் தாவித் தாவி குதித்துக்கொண்டிருக்க, முன் அறையிலிருந்த கொலு வரிசை ரங்கநாதரும் கருமாரி அம்மனும் சீரான பளிச் கருப்பு கலரடிக்கப்பட்டு ஆதிசேஷனுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு, மூன்றாம் படியில் அமைதியாக உட்கார்ந்திருக்க, அது நடந்தது. இந்த குதூகலமான களேபரத்திலும் கிருஷ்ண பஜன் பாடி தம்புரா வாசித்துக்கொண்டிருந்த மீரா பொம்மை சட்டென தலை திருப்பிச் சிரித்தது. நிஜமா!

    ooOOOOoo

  • October 10, 2010

    இன்ன பிற – ஆயிரம் முகம் கொண்ட நாயகன்

    போன வாரம் தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற தொடர்.

    Heroes journey

    கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்னால் ஜோசப் காம்ப்பெல் எழுதிய ‘A hero with thousand faces’ என்னும் புத்தகத்தில் நாமறிந்த நாயகனைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். பல கலாசாரங்களையும் மதங்களையும், அவை சொல்லும் ஆயிரமாயிரம் மரபுக்கதைகளையும் படித்து எல்லா நாயகர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதைக் கண்டார். அதை வைத்து ஒரு ஹீரோவின் இலக்கணத்தை எழுதி விட்டார். அதாவது எல்லா நாயகர்களுக்கும் if-else கண்டிஷன், for loop உட்பட ஓர் அல்காரிதம் இருக்கிறது. இந்திரன் சந்திரனிலிருந்து எந்திரன் வரை இதே இலக்கணம்தான், ஆங்காங்கே சில இடைவெளியும் சில தாவல்களும் மட்டும்தான் வித்தியாசம். இந்த இலக்கணத்தை ஒற்றைப் புராணம் (mono myth) என்றழைத்தார்.

    அதாவது ஒரு நாயகனின் பயணத்தில் சில மைல்கல்கள் உள்ளன. டுவிட்டர் வேகத்தில் சொன்னால் – ஒரு நாயகன் சாமானிய உலகத்திலிருந்து இயல்பை கடந்த ஆச்சரியங்கள் நிறைந்த உலகத்தில் நுழைகிறான். அங்கே அற்புத ஆற்றல்கள் வெளிப்பட்டு ஒரு முடிவான வெற்றி வெல்லப்படுகிறது. நாயகன் அந்த மாய உலகத்திலிருந்து மீண்டு தன் சகமனிதனுக்கு வரமளிக்கும் சக்தி கொண்டவனாகிறான். கிருஷ்ணர், புத்தர், கிறிஸ்து என்று எல்லாருடைய கதைகளும் இதில் அடக்கம். இந்த ஒற்றைப்புராணத் தியரியை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்களும் படங்களும் வெளிவந்தன, வந்துக்கொண்டிருக்கின்றன. ஸ்டார்வார்ஸ் ஜார்ஜ் லூகாஸிலிருந்து ஹாரி பாட்டர் ஜேகே ரவுலிங் வரை இதுதான் இன்ஸ்பிரேஷன்.

    காம்ப்பெல் ஒரு கப்பல் பயணத்தில் நம் அடையாறு கிருஷ்ணமூர்த்தியை (ஜேகே) சந்தித்தார். ஜேகே அவருக்கு இந்திய கலாசாரத்தையும் அதன் தத்துவ ஞான மரபையும் விவரிக்க அதில் ரொம்பவே சொக்கிப்போய் கத்தோலிக்கராய் இருப்பதைத் துறந்தார். அவர் இறக்கும் வரை ஹிந்து மற்றும் இந்தியத் தத்துவத்தின் மேலும் ரொம்பவும் ஆர்வமாயிருந்தார். காம்பெல்லின் இந்த நாயக ஆராய்ச்சிக்கு ஜேகே மிக முக்கியக் காரணம்.
    இந்தப் புத்தகத்தில் காம்ப்பெல் சொல்ல வருவது எப்பொழுது புராணத்தில் இருக்கும் கவித்தன்மையை கேள்வி கேட்க ஆரம்பிகிறோமோ அப்போது அந்த புராணம் மறித்துப் போகிறது. கிருஷ்ணன் ‘அஸ்வத்தாமா அத குஞ்சரஹ’ சொல்லச் சொன்னது சரியா, கிறிஸ்து தண்ணீரில் நடந்தாரா என்று கேட்கும்போதே அவர் மூழ்கிவிடுகிறார். ரஜினிவிஜயஷாருக்கமிதாப ஹீரோக்களும் அவர்கள் செய்யும் வீரதீர செயல்களையும் கேள்வி கேட்பதாகாதென இதனால் அறிக.

    OOO

    சொக்கன் எழுதிய ரஹ்மான் – ஜெய்ஹோ புத்தகத்தை வீட்டின் எல்லா அறைகளிலும் கொஞ்சமாக படித்து முடித்தேன். முடித்த இடம் குளியலறை. 90களில் ரஹ்மான் இசை வர ஆரம்பித்ததிலிருந்து அவரைப் பற்றி நிறைய அறிந்திருந்ததால், இந்தப் புத்தகம் ஒரு வாக் டவுன் த மெமரி லேன் போலத் தோன்றியதில் ஆச்சரியமில்லை. திலீப் என்ற அந்தச் சிறுவன் ரஹ்மானாகிய புராணம்தான் புதிதாயிருந்தது. இத்தனை தகவல்கள் இருக்கும் புத்தகத்தில் ஒரே ஒரு தகவல் பிழையைத்தான் தேற்ற முடிந்தது, அதுவும் இப்போது மறந்து விட்டது. இதற்காக சொக்கனுக்கு ஷொட்டு.

    இம்மாதிரி வேகமாய் நகரும் பயோகிராபிகள் அ-புனைவுகள் எழுதுவது ஒரு கலை. அதுவும் பயோகிராபிகளுக்கு மெனக்கெடல்கள் பல. மனைவி வீட்டில் இல்லாத ஒரு நாளில், சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பை எழுதுகிறேன் பேர்வழி என்று வீடெல்லாம் அவர் புத்தகங்களைப் புரட்டிப் போட்டு, அது ஒரு பக்கம், ஃபாஸ்ட் ஃபுட் டப்பாக்கள் ஒரு பக்கம் என அந்த புத்தகங்களிலிருந்து ஒரு இரண்டு பக்க குறிப்பெழுதுவதற்குள் முழி பிதுங்கி விட்டது. அதை சுஜாதா படித்து விட்டு, “ஓகே… அங்கங்க கொஞ்சம் தப்பு இருக்கு” என்று சொன்னதாக ஒரு சமயம் தேசிகன் சொன்னார்.

    OOO

    டால்பின் தண்ணீரில் குதிப்பதைக் கவனித்ததுண்டா? முதல் முறை மேலெழுந்து குதித்து தண்ணீருக்குள் மூழ்கி ஓரிரு வினாடிகள் கழித்து சற்றே மேலே தலைகாட்டி மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கும். இதற்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம். அதுவும் டால்பினைப்போல மேலெழுந்து ரிசஷனாகி திரும்பவும் மேலே வருகிற போது ரிசஷனாவதுதான். இதைத்தான் டபுள் டிப் என்று கடந்த இரு மாதங்களாக இடஞ்சுட்டிப் பொருள் விளக்கமளிக்கிறார்கள்.

    ரிசஷன் போனாலும் வந்தாலும் கவலைப்படாமல் சூரியன் போய் குளிர் வர ஆரம்பித்தாயிற்று. இனி மூன்று மாதங்களுக்கு வீடு வாங்குவோர் யாரும் இலர். மால்களில் கைப்பிடித்து கோக் குடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது 60 இஞ்ச் பிரகாசத்தில் தன்னை மறத்தல் மட்டுமே. எல்லா சீரியல்களும் இலையுதிர்காலத்திற்கு ரெடி. ஆறு ஆண்டுகளாக வெளிவந்து சக்கைபோடு (தமிழ்-தினசரித் தமிழ்) போட்டுக்கொண்டிருக்கும் டெஸ்பரேட் அவுஸ்வொய்ப்ஸ் என்னும் சீரியலை கொண்டு செய்வதரியாது டைரக்டர் முழிப்பது தெரிகிறது. ஒரு காலனியில் இருக்கும் 5-6 பெண்மணிகளின் சுவாரசிய வாழ்க்கைதான் கதை. இப்படிப் போய்க் கொண்டிருந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு டைரக்டர் ஆர்வமிழந்து, அடுத்த வீட்டுக் கணவனையும் பையனையும் பெண்ணையும் மற்ற வீட்டுக்காரர்கள் துரத்துவதும், ஆபிஸ் போகிறேன் பேர்வழி என்று பக்கத்து வீடுகளில் கெட்ட காரியம் பண்ணவைத்து மீதிக் கதையை பூசி மொழுகிறார். இதைப் போல நம்மூர் மெகாசீரியல் வகையறாக்கள் ‘சுவாரசியமாய்’ போய்விடும் அபாயமுண்டு.

    OOO

    “We were discussing string theory and its infinite possibilities on human existence till 3 am while listening to Miles Davis but now it’s time for Rajini” என்று சிலர் ஜெர்க் விடுவதை காது கொடுத்து கேட்டீர்களா?

    சமீபமாக ரஜினி பற்றிய ஒரு செயற்கைக் கவர்ச்சி பரவி வருவதைப் பார்க்க முடிகிறது. அதாவது என்னதான் தான் இண்டலெக்சுவலாக இருந்தாலும் என்னுடைய ரிலாக்சேஷன் ரஜினிதான் என்கிறார்கள். ஒரு காலத்தில் ரஜினியின் படங்களை விழுந்தடித்துக் கொண்டு பார்த்தவன் என்ற முறையில் இதிலுள்ள மயக்கம் புரிகிறது. ஓப்பன் மேகஸினில் மனு ஜோசப் எழுதியுள்ள The Revenge of Rajinikanth கட்டுரையில் சில விஷயங்களில் உண்மையிருக்கின்றன.

    இத்தனை சொல்லிவிட்டு அந்த ஹூமனாய்டைப் பற்றிச் சொல்ல விட்டுவிட்டால் எப்படி. இன்றைக்கு எந்திரன் பார்க்கப் போயிருந்த போது, ரஜினியின் எட்டடி கட்-அவுட்டும், மாலையும், activation date: 10:01:10 என்று ப்ரிண்ட் செய்யப்பட்ட எந்திரன் டீஷர்ட்டையும் பார்க்க முடிந்தது. கட்-அவுட்டின் கீழ் உபயதாரரின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது என்பது உப தகவல். அதன் அருகில் நின்று கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்ட அனைவரும் உடனடியாக ஃபேஸ்புக்கிற்கு அப்லோட் செய்தது வம்புத் தகவல்.

    கதையில் ஆங்காங்குதான் சுஜாதா தெரிகிறார் என்று எழுதியவர்களுக்கு – எனக்குத் தெரிந்து படம் முழுக்க வியாபித்திருக்கிறார். தலை நிறைய சடாமுடியுடன் முடிவெட்ட வரும் ரஜினியிடம், “என்ன சார் ஐயப்பாவா?” என்று கேட்கும் நாவிதனிடம், “வேலைப்பா” என்பதும், ராகம் திருத்தும் ரோபோவும், கொசு ரங்குஸ்கியிலும், “என்னங்க இது போரிட வாங்கன்னா பொயட்டரி சொல்லுது இந்த ரோபோ” என்று சொல்லும் ஆர்மி ஆபிஸர் வரை சுஜாதாலஜி. இந்த சமுதாயத்தில் ஒரு மனித ரோபோ இருந்தால் எப்படி என்ற கேள்விக்கு முதல் பாதியில் க்ரியேடிவாக பதில் சொல்லுகிறார் ஷங்கர். அவ்வை சண்முகியில் கமல்-ரவிகுமார் செய்யாமல் விட்ட க்ரியேடிவ் விஷயங்களைப் போல், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாத ஷங்கர் கெட்டிக்காரர். இதே போல் தியேட்டருக்கு பணம் கொடுத்து வந்து என்னை சுவாரசியப்படுத்து, அழவை, சிரிக்கவை, பிரமிக்கவை என்று சொல்லும் பார்வையாளனை ஏமாற்றாமல் யதார்த்தம், அ-யதார்த்தம், காதல், ரசனை என்று சரியான கலவைச் சமன்பாட்டைத் தன்வசப்படுத்தி விட்டார். ஆனால் இரண்டாம் பாதி ரொம்பவே இரைச்சல். குழந்தைகளெல்லாம் அழ ஆரம்பித்து வெளியே போன தந்தையர்கள் வரும் முன் முடிந்து போனது அரிமா அரிமா.
    மக்களுக்கு பிடித்துப்போன ஒரு கதாபாத்திரம் பின்பாதியில் மாறிப்போய், கிட்டத்தட்ட காணாமல் போய் கடைசியில் மீண்டும் வருவதும், அதன்பின் வரும் க்ளைமாக்ஸில் அதை எமோஷனலாகப் பயன்படுத்த முயல்வதும் திரைக்கதை கவனக்குறை. டாட்.

  • September 29, 2010

    the city

    35 days or so in chennai during the midst of a music season was so liberating. Not because I’m some NRI running around in kakkhi shorts and a sporty sandal. Its ironically true and I will explain why.

    I was somewhat faceless, like a nomadic traveller. There was no friend who spotted me when walking in Pondy Bazaar, no mael veettu aathi pinnal ponnu who chuckled at me atleast once a day, no paalakaran who asked when I dropped by, no librarian welcoming me like a bakra to his shop. Ok, a distant distant related maama actually found me in some kutcheri and asked me, ” ambi eppidida padippu poguthu?”. Something he should have asked me 10-12 years ago. That apart, I was a literally anonymous in my own city. And I’m grumpy about it but not then.

    While I was enjoying the new found anonymity that I never had in Chennai, I’m irritated that Chennai has lost its small cityness. You know what I mean, more places, more automobiles, more people, more everything. This again sounds like a desi rant or cheran’s nostalgic movie episode but its very true.

    Anyway, I find travelling so invigorating and its because of this anonymity but not in my own city. No.

  • September 29, 2010

    alarms!

    I’m losing the sense of time as I enter the shower. So planning to hang a small tiny clock just to remind that its already time…for whatever that’s next.

    On the other hand(pun intended) alarm clocks have never won a battle with me. Including the ‘smart’ phone’s snooze clock that just stops vibrating after some time. Don’t mistake, I’m not a crazy 10 hour sleeper. I totally control how much I sleep or vice versa but never a clock decides its time for me to wake up. Occasionally banging doors and cooing sounds from a family member have worked but they have given it up too.

    Today(30 mins past m.night now), I need to wake up by 6 and I have it all tuned in the alarm clock. Will let you know if it worked…for some reason, miraculously.

←Previous Page
1 … 25 26 27 28 29 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 25 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar