kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • February 27, 2023

    பதினைந்து ஆண்டுகள்…

    வணக்கம் வாத்யாரே!

    எழுத்தாளர் சுஜாதா மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் இம்மாதிரி வசனமெழுத ஆளில்லாதது ஆச்சரியமளிப்பதாய் இல்லை.

    சிங்கமய்யங்கார் பேரன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி

    நரசிம்மாச்சாரி: நான் அப்படிச் சொல்லலை. ஒரே கம்யுனிட்டி. அதான் முக்கியம்.

    ராகவன்: வேற கம்யுனிட்டியில பண்றதில என்னப்பா தப்பு?

    நரசிம்மாச்சாரி: சொல்றேன். நீ காத்தால எழுந்திருந்தா. காப்பி கேப்பே. அவ டீ போட்டுக் கொடுப்பா. நீ மோர்க் குழம்பு கேப்பே, அவ மீன் குழம்பு குடுப்பா. நீ விகடன் படிக்கணும்பே, அவ ஜிலேபி ஜிலேபியா எழுதியிருக்கிற பாஷையில படிக்க புஸ்தகம் கேப்பா. உனக்கு மதுரை சோமு பாட்டு பிடிக்கும். அவளுக்கு குலாம் அலிகான் பிடிவாதமா கைக்குழந்தை அழறா மாதிரி பாடறான் பாரு அதுதான் புடிக்கும். நீ நல்லெண்ணை, அவ கடுகெண்ணை. நீ தமிழ். அவ பஞ்சாபி. உங்களுக்குக் குழந்தை பிறந்தா இதுவும் இல்லாம அதுவும் இல்லாம, ரெண்டுங்கெட்டானா ‘டாடி முஜே பிசுக்கொத்து வேணும்’ங்கும். காதல் எல்லாம் ஆவியானப்புறம் அதுதான் மிஞ்சியிருக்கும்.

    ராகவன்: அதெல்லாம் எங்க ப்ராப்ளம். நீங்க ஏன் கவலைப்படறீங்க?

    …

    நரசிம்மாச்சாரி: இதெல்லாம் ரிச்சுவல்ஸ்டா.

    ராகவன்: இந்த ரிச்சவல்லையா நான் கல்யாணம் பண்ணிக்கணும்?

    நரசிம்மாச்சாரி: இதுக்கு பின்னால இருக்கற அர்த்தங்களைப் புரிஞ்சுண்டு…

    ராகவன்: என்ன அர்த்தம்? நீங்கதான் சொல்லுங்களேன் அப்பா. நீங்க நிஜமாகவே ஒரு ஐயங்காரா இருந்தா, இந்த மாதிரி சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தியோகம் பாத்திருக்கக் கூடாது. இப்ப ரிட்டயர் ஆனப்புறம்தானே திருமண் சீசுரணம் இட்டுக்கறங்க? உத்தியோகத்தில் இருக்கற வரைக்கும் குடுமியை குல்லாய்ல ஒளிச்சு வெச்சுண்டு, எரால்ட் ராபின்ஸ் படிச்சுட்டு இப்ப பகவத் கதை படிச்சா மறுபடி ஐயங்கார் ஆய்ட்ரா மாதிரியா? உண்மையான ஐயங்காரா இருந்தா, நீங்க காவேரிக்கரையை விட்டுட்டு வந்திருக்கக் கூடாது. அங்க உக்கார்ந்துண்டு அமாவாசை தர்ப்பணம் பண்ணிவெச்சு பகவத் விஷயம் காலட்சேபம்னு மத்தவா கொடுக்கற உஞ்சவிருத்தில சம்சாரம் பண்ணணும்.

    நரசிம்மாச்சாரி: அது நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால காம்பரமைஸ் பண்ணிண்டாச்சு.

    ராகவன்: அதைத்தான் சொல்ல வரேன். நீங்க ஆரம்பிச்ச காம்ப்ரமைஸைத்தான் நான் தொடர்ந்து இந்த மாதிரி ஐயங்கார், பஞ்சாபி எல்லாம் முக்கியமில்லை. மனசுதான் முக்கியமுன்னு…

    நரசிம்மாச்சாரி: ரொம்ப கிளவரா பேசிட்டே இப்ப நான் கொஞ்சம் பேசலாமா?

    ராகவன்: சரி.

    நரசிம்மாச்சாரி: இது எல்லாம் தற்காலிகமான காம்ப்ரமைஸ். மிலிட்டரிகாரன் யூனிஃபார்ம் போல. ஆனா நீ பண்றது கல்யாணம். வாழ்க்கை பூரா கமிட் பண்ணிக்கிற சமாசாரம். கல்யாணம்ங்கறது வாழ்நாள் பூரா வியாபிக்கிற ஒருவிதமான டிஸ்கவரி. உங்கம்மா என்னோட முப்பத்திரண்டு வருஷம் வாழ்ந்தா. உயிர்போற இன்னி வரைக்கும்கூட அவளை நா முழுசா புரிஞ்சுக்க முடியலை. அதுவும் உறவில கல்யாணம் பண்ணிண்டேன். சொந்த அத்தை பொண்ணு. அப்படி அத்தனை க்ளோஸா ஒரே ஜாதி ஒரே குடும்பம்னு பண்ணிண்டாலே இத்தனை சண்டை போட்டோம். இது வேற்று பாஷை. மேரேஜ் ஸ்டேபிளா இருக்காது என்கிற கவலைனால்தானே.

    ராகவன்: தாங்க்யு.

    நரசிம்மாச்சாரி: என்ன மனசு மாறிட்டியா?

    ராகவன்: இல்லை நீங்க சொன்னது இன்னும் எனக்கு எங்க கல்யாணத்தை மணவாழ்க்கையை வெற்றிகரமாக்கணுங்கற சவால்தான் ஜாஸ்தியாறது.

  • February 14, 2023

    வெளிர் நீலப் புள்ளி

    வெளிர் நீலப் புள்ளி (Pale Blue Dot)

    செப்டம்பர் 1977ல் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்திலிருந்து வாயேஜர் என்ற விண்கலத்தை வானில் ஏவினார்கள் நாசா விஞ்ஞானிகள். வாயேஜரின் ஒரே குறிக்கோள் சூரியக் குடும்பத்தையும் அதைச் சுற்றியிருக்கும் விண்வெளியைப் பற்றியும் புரிந்து கொள்வது தான்.

    90களில் வாயேஜர் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 600 கோடி கிலோமீட்டர்கள் தள்ளிப்போய்விட, அது சூரியக்குடும்பத்தை தாண்டிப் போவதற்கு முன், திரும்பி நின்று ஒரு குடும்பப் படமெடுத்து அனுப்பிவிட்டு போகுமாறு கேட்டுக் கொண்டார் கார்ல் ஸாகன் என்ற விஞ்ஞானி. அப்படி எடுக்கப்பட்ட போது தெரிந்த பூமியின் படம் தான் மேலே இருக்கும் இருட்டுப் படம். படத்தில் ஒரு தூசியைப் போல ஒரு பிக்சலுக்கும் (படத்துணுக்கு) குறைவாகத் தெரியும் அந்த வெளிர் நீல புள்ளிதான் நாமிருக்கும் இந்த பூமி. சரியாகத் தெரியவில்லையென்றால் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் சாதனத்தின் திரையை துடைத்து விட்டு மீண்டும் பார்க்கவும்.

    கார்ல் ஸாகன் எழுதிய Pale Blue Dot புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார் –

    அந்த புள்ளியை மீண்டும் பாருங்கள். அது இங்கே தான். அதுதான் வீடு. அதில் இருப்பவர்கள் நாம் தான். நீங்கள் விரும்பும் அனைவரும், உங்களுக்குத் தெரிந்தவர்கள், நீங்கள் கேள்விப்பட்டவர்கள், கேள்விப்படாதவர்கள், வாழ்ந்து மறைந்த அத்தனை மனிதர்களும் தான்.

    அந்தப் புள்ளி தான் நமது இன்ப துன்பங்களின் தொகுப்பு, ஆயிரக்கணக்கான மத நம்பிக்கைகளும், சித்தாந்தங்களும், பொருளாதார கோட்பாடுகளும், ஒவ்வொரு வேட்டைக்காரனும் வேட்டையாடப்படுவனும், ஒவ்வொரு வீரனும் கோழையும், ஒவ்வொரு நாகரீகங்களை உருவாக்கியவனும் அழித்தவனும், ஒவ்வொரு நாடாண்ட ராஜாவும் ஆளப்பட்டவனும், ஒவ்வொரு இளம் ஜோடியும், ஒவ்வொரு தாயும் தந்தையும் குழந்தையும், ஒவ்வொரு விஞ்ஞானியும் முன்னோடியும், ஒவ்வொரு ஒழுக்க நெறி ஆசிரியனும் ஊழல் அரசியல்வாதியும், ஒவ்வொரு சூப்பர் ஸ்டாரும் உச்ச தலைவரும், ஒவ்வொரு துறவியும் பாவியும் என நம் இனத்தின் வரலாற்றில் வாழ்ந்த அத்தனை அத்தனை மனிதர்களும் வாழ்ந்தது இங்கு தான் – சூரிய ஒளியில் தொங்கவிடப்பட்ட அந்தச் சிறு தூசியின் மீது .

    ….

    நமக்கிருக்கும் தோரணைகள், கற்பனையான சுய-முக்கியத்துவங்கள், பிரபஞ்சத்தில் நமக்கு மட்டும் சில சலுகைகள் இருப்பது போன்ற மாயை என எல்லாவற்றையும் சேர்த்து சவால் விடுகிறது இந்த வெளிர் ஒளிப்புள்ளி.

    நமது பூமிக் கிரகம் அண்ட இருளில் இருக்கும் ஒரு தனிமையான புள்ளி. பரந்து விரிந்த அண்டத்தில் இருக்கும் ஒரு குட்டிப் புள்ளியில் வாழும் நம்மை நம்மிடமிருந்து காப்பாற்ற வேறு எங்கிருந்தோ உதவி வரும் என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை.

    A Pale Blue Dot, Carl Sagan

    ஆதலினால் காதல் செய்வீர்!

  • December 17, 2022

    சென்னையிலிருந்து புத்தகங்கள்

    ஜூலை மாதத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கிய புத்தகங்களை பிரித்து பார்க்க இப்போது தான் கை வந்தது. மே மாதம் சென்றிருந்த போதே அப்பா, “எதோ புக்கெல்லாம் வந்திருக்கு, போகும் போது எடுத்துண்டு போ” என்று அமேசான் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது மறந்து போய் வந்துவிட, ஜூலையில் கவர்ந்து கொண்டு வந்தேன்.

    அவுட் ஆஃப் பிரிண்ட் ஆகிவிடக்கூடிய சாத்தியம் உடைய புத்தகங்களை அவ்வப்போது பல்வேறு பிரசுரங்களிடமிருந்து ஆர்டர் செய்து வீட்டுக் அனுப்பி, முடிந்த போது ப்ளைட் கார்கோவில் எடுத்துக் கொண்டு வருவது பதினைந்து வருட பழக்கம். கொஞ்சம் கொஞ்சமாய் கிண்டிலில் படிக்க பழகிக் கொண்டாலும், பழைய நியுஸ்பிரிண்ட் வாசனை ஞாபகங்கள் அவ்வப்போது வாசகனை பற்றிக் கொள்ளத்தான் செய்கின்றன.

    அசோகமித்திரன் சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம்

    தற்போது படிக்க ஆரம்பித்திருப்பது, அதாவது மீண்டும் படித்துக் கொண்டிருப்பது அசோகமித்திரனின் இன்று நாவலிலிருந்து ஒரு பிரமாதமான புனர்ஜென்மம் என்னும் சிறுகதை அத்தியாயம். நாவலில் சிறுகதை அத்தியாயமா என்று குழம்பினால், இந்த புத்தகத்தை படிக்க தகுதியானவர் நீங்கள். அசோகமித்திரனை 2009ல் சந்தித்த போது, இந்தக் கதையை சிலாகித்து நான் பேச, மையமாய் தலையாட்டினார் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.

    சீதா கைப்பிடிச்சுவரைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தாள். அது கட்டிடத்தின் முன் பக்கம். முதல் மாடியில் நீட்டிக்கொண்டிருந்த விசாலமான ஸன்ஷேட் தரையை மறைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு உயரத்திலிருந்து பார்த்த போது கூட அந்த ஸன்ஷேட் மீது ஏகப்பட்ட குப்பை – பழத்தோல், காலி சிகரெட் பெட்டிகள், நெருப்புப் பெட்டிகள் கிடப்பது தெளிவாகத் தெரிந்தது. சீதா மொட்டை மாடியிலேயே இன்னொரு பக்கம் சென்று எட்டிப் பார்த்தாள் அந்த இடத்திலிருந்து நேரே கீழே தரையைப் பார்க்க முடிந்தது.

    சீதா கைப்பிடிச் சுவர் மீது ஏறி நின்றுகொண்டாள். அவ்வளவு உயரத்திலிருந்த அவளை உலகத்தில் அந்நேரத்தில் கவனிக்க யாரும் இல்லை. நிதானமாக ஒரு முறை மூச்சிழுத்து சுவாசம் விட்டாள். யாரிடமும் தனியாக இந்தக் காரியத்திற்கு விடை பெற்றுக்கொண்டு வரவில்லை. அம்மாவிடம் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பியிருக்கலாம். இந்த ‘இருக்கலாம்’ என்பதை எவ்வளவோ விஷயங்களோடு பொருத்திப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடலாம். அல்லது வருத்தப்படலாம். இந்த ‘இருக்கலாம்’ தத்துவத்துக்கு வருத்தப்படுகிறவர்கள் ஆயுள் காலம் முழுக்க வருத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இருப்பார்கள்.

    புனர்ஜென்மம், இன்று. அசோகமித்திரன்.
  • October 13, 2022

    மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 2

    2

    தளபதி படப்பிடிப்பில் மணி ரத்னம், ரஜினி மற்றும் ஷோபனா

    மணி ரத்னத்தின் எந்தப் படம் வெளி வருவதற்கு முன்னும் பின்னும் விமர்சனம் வந்தே தீரும் என்பதைக் கடந்த மூன்று பத்தாண்டுகளில் பார்த்திருக்கலாம். விமர்சகர்களும் அ-விமர்சகர்களுக்கும் ஒரு ஏற்ற இலக்காக அவர் படங்கள் இருப்பதே காரணம். ஆளாளுக்கு அல்வா கிடைத்த மாதிரி பந்தாடித் தீர்ப்பார்கள். அவரின் பிரபலம் அவருடைய எல்லா படத்துக்கும் ஒரு விதமான liability தான்.

    முதலில் மெளன ராகத்திற்கு பிறகு ”தமிழ் நாட்டில் விவாகரத்து கேஸ்கள் அதிகமாகிறது” என்றார்கள். பிறகு அஞ்சலியில் ”வயதுக்கு மீறி மைனர் சிறுவர்கள் செய்யும் வேலையா இது”, ரோஜாவில் ”அம்மாவின் எதிரில் ஆங்கிலம் பேசியபடி வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் ஆள் எங்கிருக்கிறான்”, பம்பாயில் ”இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டை மூட்டி விடப் பார்க்கிறார் மணிரத்னம்”, அலை பாயுதேவிற்குப் பின் ”வீட்டிற்கு தெரியாமல் திருட்டுத் திருமணங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்”, ஆய்த எழுத்தில், “பிராமண மாதவனைக் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் ரவுடியாகச் சித்தரிக்கும் நக்கல்”, ராவணன் வந்த போது, ”ராமாயணத்தை மாற்றி எழுதத் தமிழ்க் கழகங்களின் கடைசி முயற்சி” கடல் படம் படுத்துக் கொண்டாலும்,” மீனவக் கிராமத்தை இப்படியா சோத்துக்கு கஸ்டப்படறவங்களா சித்தரிப்பது”, ஓகே கண்மணியினால் “இதைப் பார்த்து தான் சென்னையிலேயே லிவ்-இன் செய்ய ஆரம்பிச்சுடுச்சுங்க இளசுங்க” என்று வகை வகையாகத் திட்டித் தீர்த்ததெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் வரலாறு. திருடா திருடா போல லைட்டாக ஒரு படமெடுத்தால் “கதை டுபாக்கூர்” என்பார்கள். இருவர் எடுத்தால் ”இது ஒரு ஆர்ட் பிலிம்” என்று ஜிப்பா போட்டுக் கொண்டு விழாவெடுத்து நகநுனியில் கைத் தட்டுவார்கள், இரண்டு மணி நேரம் ரேவையும் அடூரையும் பற்றி சிலாகித்து விட்டு போய் விடுவார்கள், படமெடுத்தவருக்கு சில்லரை புரளாது.

    இத்தனைக்கும் மணி ரத்னம் ஒரு மென்மையான இலக்கு. அவர் திரைப்படங்களுக்கு வரும் எந்த பாரட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளிப்பதே இல்லை. இவர்களும் விடுவதாயில்லை. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு நக்கீரர் பரம்பரையாக மாறி விடுகிறார்கள். பக்கம் பக்கமாய் எழுதி பேசித் தள்ளுகிறார்கள். இவையெல்லாம் அபத்தமாயிருந்தாலும் தப்பில்லை, அவரவர்கள் கருத்துச் சுதந்திரம்.

    ஓகே கண்மணி – மணி ரத்னம், துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பி.சி. ஸ்ரீராம்

    மணி செய்வதெல்லாம் தன் கண் முன்னே மாறிக் கொண்டு வரும் சமுதாயத்தைப் பற்றி படம் பிடித்துக் காட்டுவது தான். தன் சமகாலத்தில் நடந்த / நடக்கும் விஷயத்தைப் பற்றி ஒரு கதையாய் கடத்த முயல்பவருக்குத் தான் என்னவெல்லாம் சிக்கல். மணி ரத்னம் ஒரு அறிய வகை என்பது மட்டும் உறுதி. தான் எடுத்துக் கொண்ட கதைக்கு உண்மையாக எதைச் சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை தனக்கு உண்டான ஒரு ரசனையில் mainstream formatல் சொல்லும் கலைஞன். சிக்கனமாய்ச் செலவழித்து, சிறப்பாய் மார்க்கெட்டிங் செய்து பணம் செய்யும் பிரமாதமான வியாபாரி.

    நம்மூர் விமர்சகர்களுக்கு மணியை வகைப்படுத்த முடியாதது தான் காரணமே என்று சொல்லத் தோன்றுகிறது. சோஷலிஸ்டா, நாத்திகனா, கழக கண்மணியா, சமூக குழப்பவாதியா, வரலாற்றை வளைக்கும் குறும்புக்காரரா, பூர்ஷ்வா இலக்கியவாதியா என்று குழப்பங்கள்.

    பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க முயல்கிறார் மணி ரத்னம் என்பது பல வருடமாக ஊரறிந்த ரகசியம். அதைப் படமெடுத்து வெளியிட்டவுடன் வரப்போகும் விமர்சனங்கள் பற்றிப் பல ஹேஷ்யங்கள் இருந்தன. ஆனால் படம் வந்து பின் ஒரே நேரத்தில் எல்லா பக்கத்திலிருந்தும் எதிர்ப்புகள், விமர்சனங்கள். இப்படி ஒரு வரலாற்று புதினத்தை படமாக்கியதால் மணி ரத்னம் ஆனதென்னவோ ஒரு equal opportunity offenderஆக.

    “டிஜிட்டலில் கடைசியாகச் சேர்க்கப்பட்ட விபூதிப் பட்டைகள், ஒரு பிள்ளையார் கோயிலாவது எங்கேயாவது ஒரு தடவையாவது தெரியுதா? தெலுங்கில் நாராயணான்னு சொல்ற நம்பி தமிழ்ல ஏன் ஐய்யயோன்னு கத்துகிறார். உண்மையான ஆத்திகனான ராஜ ராஜ சோழனைப் பத்தி நாத்திகனான மணிரத்னத்திற்கு என்ன தெரியும். கர்ணன் கதைய உல்டா செஞ்சவர் தானே இவரு” என்கிறது வலது.

    ”சோழனைப் பத்தி மெட்ராஸிலேயே வளர்ந்தவனுக்கு என்ன தெரியும்…. சாமி படத்தை எடுக்க ராஜ ராஜ சோழனை இழுத்து வரார். பிராமண கல்கியின் பிராமண பிரசார படம்” என்று இடது. ஆனால் இவர் தான் கழகத்தைப் பத்தி இருவர் படம் எடுத்தவர் என்று எடுத்துச் சொன்னால், உஷ்… என்று விரல் வைத்து வாய் மூடுகிறார்கள்.

    “But Greta Gerwig’s best work in Little Women is also somehow one of her most personal as well. That’s what making her adaptation from Louisa May Alcott’s novel amazing. Mani Ratnam needs to learn adapting movies for the modern screen” என்று மாஸ் காட்டும் புருடா பேர்வழிகள்.

    “கல்கி புக் படிச்சா இருக்கிற த்ரில் இதில் இல்ல.. எதோ எல்லாம் அவசர அவசரமா இருக்கு” என்று எழுதிவிட்டு, இண்டர்வெலில் சமோசா ஆர்டர் செய்யும் மாமிகள்.

    “This movie is one helluva vagrant and mind numbingly boring ride by a confused and deviously motivated distortionist masquerading… ” என்னும் வாட்ஸ்ஸாப் விமர்சகர்கள்.

    மீண்டும் தமிழ் நாட்டில் சேரசோழபாண்டிய உலகப்போர் வருகிற மாதிரி பலரும் அவரவர் பிறந்த இடத்தை ஆண்ட மன்னனின் கொடியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அடுத்த படம் வருவதற்குள், சோழர் மன்னர்களின் மண்ணை தோண்டி எடுத்து, சோழர்கள் முற்பட்ட சாதியா பிற்படுத்தப்பட்டவர்களா, ஹிண்டூவா எக்ஸ்பிரஸ்ஸா, ஆரியர்களா திராவிடர்களா, காப்பி குடிப்பவர்களா ஜின்ஜர் சாயா பருகுபவர்களா, வேற்று நாட்டுக்காரர்களா அல்லது வேற்று கிரகவாசிகளா என்றெல்லாம் அக்கப் போர் செய்யப் போகிறார்கள். அவர்களைச் சோழ நாட்டுப் ப.பு.தி.

    (தொடரும்…)

    மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 1

  • October 12, 2022

    மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 1

    1

    நாயகன் படப்பிடிப்பில் மணி ரத்னம், கமல் மற்றும் பிரதீப் சக்தி

    ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, புரசைவாக்கத்திலிருந்த இந்தி டீச்சிங் சென்டரில் பிரவேஷிகாவோ என்னவோ படித்துக் கொண்டிருந்தேன். ரொம்பவும் போர் அடிக்க ஆரம்பித்ததால், க்ளாஸ் போவதை நிறுத்தி விட்டேன். அம்மாவோ இந்தி படித்திருந்தார். “விட்றாத படி படி” என்றபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

    கங்காதீஸ்வரர் கோயில் செல்லும் வழியில் ஏராளமான யுவ-யுவதிகள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருந்தேன். சைக்கிளில் ஒரு நாள் கோவிலுக்குச் செல்லும் போது அங்கே நின்று என்ன வகுப்புகள் நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயன்றேன். கோவில் அக்ரஹார தெருவிற்கு எதிரில் ஒரு சிறிய முட்டுச் சந்து. முதலில் இருந்தது ஒரு கார் மெக்கானிக் கடை. அதை தாண்டிச் சென்றால் ஒரு மாடி வீடு. வீட்டின் மொட்டை மாடியில் பெஞ்ச் போட்டு ஏராளமான இளம் வயதுக்காரர்கள் உட்கார்ந்து ஏதோ க்ளாஸ் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வாசலில், ஹிந்தி வித்யாலயா என்று போர்டு சொன்னது. அந்த மொட்டை மாடி க்ளாஸும், கலகலவென்று இருந்த அந்த இடமும் பிடித்துப் போனது.

    இரண்டு மாதங்கள் கழித்து, இந்தி வித்யாவில் சேர்ந்திருந்தேன். இந்தி க்ளாஸை விட்ட இடத்தில் மீண்டும் படிக்க ஆரம்பித்திருந்தேன். முகுந்தன் என்பவர் தான் க்ளாஸ் டீச்சர், அவர் தான் அந்த நிலையத்தை நடத்திக் கொண்டிருப்பவர். அவர் வீட்டின் மாடியில் தான் அந்த வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார்.

    மாலை ஐந்து மணிக்கு வகுப்பு ஆரம்பிக்கும். மொட்டை மாடி என்பதால் வெயில் இறங்கிப் போய் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து அவ்வப்போது கேட்கும் மணிச் சத்தம், கீச்கீச் எனப் பறவைகளின் சத்தம், பளிச்சென இருக்கும் சக வயது பெண்கள் என்று ஒரு டீனேஜருக்கு எற்ற ரம்மியமான சூழ்நிலை. இதையெல்லாம் மீறி சுவாரஸ்யமாய் இந்தி வகுப்பெடுக்கும் முகுந்தன் சார். வெகு சீக்கிரத்தில் முகுந்தன் ஆதர்சமாகிப் போயிருந்தார். அந்நாள் வரை.

    அஞ்சலி

    அவ்வருட ஜூலை மாதத்தில் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படம் வெளியானது. தனியாக சினிமாவுக்குப் போக ஆரம்பித்திருந்த நான், அம்மாவிடம் இருந்து ஐந்து ரூபாய் என வாங்கிப் போய் படத்தை இருமுறை பார்த்திருந்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தில் மாட்டிக்கொண்டு, நேந்துவிட்ட கிடா போல அஞ்சலி பைத்தியம் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

    ஒரு நாள் மாலை, இந்தி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் முகுந்தன் சார்.

    “சார் அஞ்சலி எப்படி?” என்று அவருக்கு நெருக்கமான ஒரு பையன் கேட்க

    “நேத்து நைட் ஷோ தான் போனோம். ராஸ்கல் என்ன படம் எடுத்திருக்கிறான் மணி ரத்னம். பசங்க எல்லாம் அதிகப் பிரசங்கித்தனமா பிஹேவ் பண்றாங்க. எதோ லவ்வர்ஸ சேர்த்து வைக்கிறாங்களாம். இதெல்லாம் எங்க நடக்கும். இப்படித் தான் ஹாலிவுட்டைப் பார்த்து படமெடுத்து நம்ப ஊரை இன்ஃபுலுயன்ஸ் பண்ண வேண்டியது. ராஸ்கல்கள்ஸ்” என்றார் முகுந்தன் சார்.

    அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்குச் சட்டென முகுந்தன் சார் மீது கோபம் வந்தது. பக்கத்திலிருந்த கார்த்தியைப் பார்த்தேன். என் கோபத்தில் அவனும் பங்கு கொண்டபடி தலையாட்டினான். அந்தப் படத்தில், அப்பார்ட்மெண்ட் சிறுவர்கள் செய்யும் காதல் தூது போன்ற எல்லா விஷயங்களும் சர்வ சாதரணமான விஷயங்கள். அந்த வயதில் டீனேஜராக எல்லோரும் செய்திருந்தார்கள் அல்லது யாரவது செய்தது பற்றி கேள்விப் பட்டிருந்தார்கள். யாரும் செய்யாத ஒரு விஷயத்தைக் கூட மணிரத்னம் படத்தில் காட்டவில்லை என்று தோன்றியது. படத்தில் அந்த சிறுவர்கள் செய்யும் சிறுச்சிறு விஷமங்கள், அப்போது மாறிக் கொண்டிருந்த சென்னையின் பிரதிபலிப்பு தான்.

    என்ன தான் முகுந்தன் சார் ஆதர்ச வாத்தியாராய் இருந்தாலும், மணி ரத்னத்தின் மேல் அபாண்டமாய் குற்றம் சாட்டிய போது நான் பேச முடியாமல் உட்கார்ந்து கொண்டிருந்ததால் என்மேலேயே கோபம் வந்தது. இந்தி படிக்காமல் இருக்க எனக்கு இன்னுமொரு காரணம் கிடைத்தது. அடுத்த நாள் சனிக்கிழமை. மீண்டும் ஒரு முறை அம்மாவிடம் மன்றாடி பணம் வாங்கிக் கொண்டு மூன்றாவது முறையாகச் சக்தி அபிராமியில் காலைக் காட்சி பார்த்தேன். பார்த்து விட்டு வெளியில் வரும் போது அன்னை அபிராமியில் உலகம் பிறந்தது எனக்காக என்ற சுமாரான சத்யராஜின் வெற்றிப் படத்தின் மேட்னி காட்சிக்குக் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது.

    ”இந்த படத்துக்கு எல்லாம் இப்படி ரசனை இல்லாம அடிச்சிக்கிறாங்க. நாம பார்த்த அஞ்சலியை புரிஞ்சுக்க முடியாதவங்க” என்று அவர்களின் மேல் ஒரு பரிதாபம் வந்தது. அந்தப் பரிதாபம் பொன்னியின் செல்வன் வரை தொடருகிறது.

    (தொடரும்…)

←Previous Page
1 … 8 9 10 11 12 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 25 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar