Skip to content

kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • October 21, 2009

    Your City

    I always believed it was the things you don’t choose that makes you who you are. Your city, your neighborhood, your family. People here take pride in these things, like it was something they’d accomplished. The bodies around their souls, the cities wrapped around those.

    I wanted to quote this from Gone Baby Gone, when I read this post from Krish. BTW, GBG was a well written directorial debut from Ben Affleck. Yes, Ben Affleck as in Bennifer(Ben+Jennifer Lopez).

  • October 14, 2009

    அலைபாயுதே!

    google wave alai paayuthey

    நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த வரவேற்பை வைத்து கூகிள் வேவ்வை கொஞ்சம் வேவு பார்க்க முடிந்தது. முதலில், நண்பர்கள் இல்லாமல் வேவ் வீண். நண்பர்களுடன் கூடிப் பேசுவதற்கும், விவாதம் செய்வதற்கும், எதையாவது டிசைன் செய்வதற்கும் கூகிளின் அடுத்த தலைமுறை தகவல் பரிமாற்ற இஞ்சின். இதைத் தவிர ரியல் டைம் டாகுமெண்டேஷன் போன்ற விஷயங்கள்.

    இதெல்லாம் இமெயிலிலும், இன்ஸ்டண்ட் மெஸஞ்சரிலும்(ஐஎம்) சாத்தியமே. சாட்டில் இல்லாத எதை இதில் கண்டீர் ஐயா என்று கேட்கலாம். சாட்டில் உங்களுடன் பேசும் நண்பர் டைப் செய்யும் போது, அவர் இப்போது டைப் செய்கிறார் என்று ஒரு செய்தி உங்களுடைய சாட் விண்டோவில் தெரியும். வேவ்வில் அவர் என்ன டைப்பிக் கொண்டு இருக்கிறார் என்று கூட தெரியும்.

    யோசித்துப் பாருங்கள், கேர்ள் ப்ரண்டுடன் வேவிக்(தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மற்றுமொரு அகராதி வார்த்தை) கொண்டிருக்கும் போது, “தீபாவளிக்கு எங்க கூட்டிக்கிட்டு போகப்போறடா?” என்று கேட்க, ஆதவனுக்கு பர்ஸ்ட் ஷோ போக நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், “சத்தியமா எங்கேயும் இல்ல” என்று டைப் அடிக்கும் போது தான் உரைக்கும் நீங்கள் டைப் அடிப்பது அப்படியே அங்கே தெரியும் என்று. என்னதான் அதை மாற்றி, “சத்தியமா எங்கே வேணும்னாலும்” என்று அடித்தாலும், உங்களுடைய உயிருக்கு பாதுகாப்பில்லை.இந்த மாதிரி இன்னொரு முனையில் எழுதிக் கொண்டிருப்பவரை second guess பண்ண வைக்கும் ஒரு வஸ்துவை கண்டுபிடித்த ப்ரகஸ்பதியை என்ன செய்யலாம்.

    யோசித்துப் பார்த்தால், கூகிளுக்குத் தான் இது ரொம்பவும் முக்கியம். யார் எந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார், பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் தங்களுடைய விளம்பரங்களை இன்னமும் சரியாக குறி பார்த்து வழங்க முடியும். கார் பற்றி வேவும் நண்பர்களுக்கு, பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவரவரின் வீட்டின் அருகே இருக்கக் கூடிய கார் விற்பனையாளர்களின் சலுகை விளம்பரத்தை அளிக்க முடியும். கூகிளின் பற்பல இணைய சர்வீஸ்களுக்கும் காரணம், வரி விளம்பரங்கள்.

    போகப் போக வேவ் போன்ற விஷயங்கள் வாழ்க்கை முறையாகிப் போகலாம். ஆனால் அவசர உலகத்தை, டைப் செய்யக் கூட விடாமல் மேலும் அவரசமாக்கிய கூகில் வேவிற்க்கு ஒரு தற்காலிக அபவுட்டேர்ன்.

  • October 3, 2009

    சென்னையில் ஒரு இசைக் காலம்

    சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது.

    ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை அறிமுகித்து, கொஞ்சம் ஆராய்ந்து, அந்த ராகத்தில் இருக்கும் கர்நாடக பாடல்களையும், சினிமா பாடல்களையும் வரிசைப்படுத்தி கடைசியாய் கச்சேரி வடிவில் ஆலாபனையில் ஆரம்பித்து ஒரு பாட்டு பாடுகிறார். இதைப் போன்ற முயற்சிகள் கர்நாடக இசையை அவாளிடம் இருந்து இவங்களிடம் எடுத்துச் செல்லக்கூடியவை. சாருலதா சுத்தமான அமெரிக்க ஆங்கிலத்தில் பேசாமல் நிறையவே தமிழில் பேசினால் நல்லது. ஆங்கிலத்தில் பேசுவது கண்டிப்பாய் தப்பல்ல. ”Vasantha raagam goes like this, ராம ராம ராம ராம… just straight notes, there’s nothing curvy about it” என்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல், அவ்வப்போது தமிழிலும் கொஞ்சம் பேசினால் செம்மொழிக்கு நல்லது.

    இதைத் தவிர சாருலதா சினிமாப் பாடலை பற்றி அறிமுகம் செய்யும் போது கிண்டல் லேசாய் எட்டிப் பார்க்கிறது. “இப்போதெல்லாம் குத்துப் பாட்டுன்னு எதோ போடறா…too noisy. ராகத்தை பேஸ் பண்ணி வர சாங் தான் என்னென்னிக்கும் நிலைச்சு நிக்கும்”. அறிவரைக்கு நன்றி.

    இன்னும் இரண்டொரு மாதங்களில் சென்னை களை கட்டப் போகிறது. நவம்பர் 15ந்தில் ஆரம்பித்து ஜனவரி வரை இயல் இசை நாடக விழா. அதுவும் டிசம்பர் சீசனுக்காக பட்டுப் புடவையில் ஆரம்பித்து, சபா தாவல், அடை அவியல், தொடை தட்டல் என்று மயிலாப்பூர் ஏரியாவே பிசியாகப்போகிறது. எதோ சபாவில் ஒரு கச்சேரியோ சில கச்சேரிகளோ செய்ய அமெரிக்காவில் இருந்து வயலினிஸ்ட், வோகலிஸ்ட், தம்புராயிஸ்ட் என்று கொன்னக்கோல் சொல்பவர் வரை சென்னையை நோக்கி குடும்பம் சகிதமாக படை எடுக்கப் போகிறார்கள். கச்சேரி கேட்பதற்காகவும் அமெரிக்காவில் இருந்து பலர் வருவதாக கேள்வி. இதில் அடியேனும் உண்டு.

    இந்த வருடமாவது சுதா ரகுநாதனோ சஞ்சய் சுப்பிரமணியனோ கடம் கார்த்திக்கோ சிக்கல் குருசரனோ கார்ப்பரேஷன் பள்ளிச் சிறார்களுக்காக ம்யூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி செய்ய மந்தவெளி அனுமாரை வேண்டிக் கொள்ளலாம். ஆலாபனை ஆரம்பித்த உடன் யாரும் எழுந்து செல்லாமல், உள்ளே நுழையாமல் ப்ராட்வே ஒப்பரா மாதிரி சட்டம் போடலாம். அழும் குழந்தைகளைக்கு மட்டும் விலக்கு. அப்படியாவது பிள்ளைகளை கச்சேரி கேட்க அழைத்து வந்தால் சரி. இல்லையென்றால் வீட்டில் இன்னும் இரண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு பாஃப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

    சபா வாசலில் உள்ளே நுழைபவர்களை ப்ரிஸ்க் செய்து, மூக்குப் பொடி, வெத்தலை சீவல் சுண்ணாம்பு இதர சாமான்களை பிடித்து வைத்துக் கொண்டு வெளியே போகும் போது கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பட்டுப் புடவைக்கு ராம்ப் வாக் வைக்கலாம். டிபன் வாசனை உள்ளே நுழைந்து மக்களை வெளியே இழுக்காமல் இருக்க கதவை அழுத்தி மூடலாம். பாடகர் பாட ஆரம்பிக்கும் பொழுது, அந்தந்த ராகத்தைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் பேசினால் என்னைப் போல் அசமஞ்சங்களுக்கு கொஞ்சம் ரசிக்க வசதியாய் இருக்கும். மற்றபடி ரசிகாஸ் பிட்டுப் பேப்பரில் பாடல் சஜஸ்ட் செய்யாமல், உட்கார்ந்து கொண்டு சத்தமாய் ப்ரதிமத்யம இடங்களில் கமெண்ட் அடிக்காமல், தப்புத் தப்பாய் தாளம் போடாமல் இருக்கக் கடவுக.

    பி.கு – சமீபத்தில் வெளியான வேட்டைக்காரன் பட இசை ஆல்பத்தில் வரும், என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது என்ற குத்துப் பாடலை பாடியிருப்பவர் சாருலதா மணி.

  • September 28, 2009

    ஓடவைக்கும் பாடல்

    டண்டடன் டட டடைன் கேட்டீர்களா ? ராஸ்கல்கள் அதாவது கமினே படத்தில் வரும் பஞ்சாபி க்ளப் இசைப் பாடல். சங்கர் மகாதேவன் கண்டுகோண்டேன்*2 படத்தில் என்ன சொல்லப் போகிறாய் பாடியபோது இருந்த ஒருவித ஜுர வேகம், சுக்வீந்தர் சிங் பாடியுள்ள இந்தப் பாடலிலும் இருக்கிறது. நம்பாவிட்டால் ஐபாடிலோ அல்லது எதையாவதையோ காதில் மாட்டிக் கொண்டு கொஞ்சம் நேரம் ஓடுங்கள்/நடங்கள். பாட்டு முடிந்தவுடன்,ரீவண்ட் செய்து மீண்டும் ஓடுங்கள். மீண்டும்.

    கமலின் சீமந்தபுத்ரி ஸ்ருதியின் உன்னைப்போல் ஒருவன் இசை சுமாராயிருக்கிறது. கேட்கலாம். இந்த மாதிரி சீரியஸ் படத்துக்கு இசை அமைப்பது கொஞ்சம் கடினமும் கூட. காலேஜ்வாசிகளை கவர, கொஞ்சம் லைட்டாய் இனிய வரிகளை வைத்து டூயட் கூட போட முடியாது. ஸ்ருதிக்கு எல்.ஏயில் இசை படித்ததாலோ என்னவோ சாஸ்திரிய சங்கீதத்தை விட ராக் இசையின் ரிதம் சுலபமாக வருகிறது. மெலடிக்களில் கூட தன்னையறிமால் வந்து விழுகிறது எலக்ட்ரிக் கிடார்.

    கமல் கொஞ்சம் ஆர்பாட்டமில்லாமல் அல்லா ஜானே பாடலை பாடியிருக்கலாம். நிலை வருமா பாடலில் எஸ்பிபி சிரிப்புகள் செய்யாமல் இருந்திருக்கலாம்.

    ஆல்பத்திலேயே பிடித்தது, கீதையின் வரிகளை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடல். அதிலும் இந்த இடத்திலிருந்து(2:09 முதல்) பிரமாதம். மற்றபடி பாடல் வரிகள் ரொம்ப எளிமையாக எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த வரிகளை வைத்து எழுதியிருப்பதை கவனித்தீர்களா ?

  • September 28, 2009

    போன வார சினிமா

    a wednesday

    எ வெட்னஸ்டே – புதிய கதைக் களன் என்றெல்லாம் கதை விடாமல் உண்மையை சொல்வதானால், கதாநாயகியின் இன்னபிற சமாசாரங்களை நம்பி எடுக்கப்பட்ட படத்தைப் போல , நடுவில் வரும் அந்த ஒரு திருப்பத்தை நம்பியே எடுக்கப்பட்ட சுமார்ப் படம். சிறுகதைகளில் வரும் கடைசி வரி ஓஹென்றி திருப்பங்களை வாசகர் கண்டுபிடித்து விடுவாரேயானால், மற்ற திரில்ல்ர் எல்லாம் வீண். அந்த மாதிரி படம் ஆரம்பித்த ஒரு அரை மணியிலேயே நஸ்ருதீன் ஷாவை பற்றி கண்டுபிடித்து விட்டதனால், இயக்குனரின் வித்தியாச திரைக்கதை மனசில் ஒட்டவில்லை.

    மற்றபடி இந்த மாதிரி சினிமா வந்தா தான் இந்திய சினிமாவுக்கு நல்லது என்ற ____வுட் ’டாக்’ எல்லாம் கேட்டு அலுத்து விட்டாயிற்று. இதை பார்த்த பின் கமல் எடுத்த இதன் தமிழ்ப் பதிப்பை பார்க்க ரொம்பவும் எதிர்பார்ப்பில்லை. தலைவன் இருக்கிறான் என்ற டைட்டிலே கதையை சொல்லாமல் இருக்கிறது. உன்னைப்போல் ஒருவன் என்றெல்லாம் சொல்லியும் தமிழர்களுக்கு ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை என்றால், அவர்களை ப..பு..தி.

    delhi 6

    தில்லி 6 – அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து, மக்களை விரும்பி, பெண்ணை சைட் அடித்து, லோக்கல்வாசிகளிடமிருந்து உதை வாங்கி/கொடுத்து, அமெரிக்கா திரும்பிச் செல்ல மறுக்கும் சுவதேஸ கதை. இதைத் தவிர ஹேராம் பிரச்சனைகள். மனதில் தங்கிப்போனதற்கு காரணம் இரண்டு விஷயங்கள். எதோ காமெடிக் கிளைக் கதையாக ஆரம்பித்த கருப்பு குரங்கு விஷயம் அனுமார் வாலாக நீண்டு திரைக்கதையின் திருப்பத்திற்கு உபயோகப்பட்டிருப்பதும், பிரபல கவிஞரை ஞாபகப்படுத்தும் முகத்துடன் வரும் அந்த மனநிலை சரியில்லாதவரின் உனக்குள் கடவுள் தத்துவமும்.

    வழக்கம் போல பின்னியிருக்கும் ரஹ்மானின் பாடல்களை சரியாக உபயோகிக்காததால் தில் கிரா தஃப்பதனை தவிர மற்றதெல்லாம் சுமார். காலா பந்தரில் ராப் ஆட்டம் ஆடும் ஜுனியர் பச்சன் எம் டிவி பார்த்ததில்லை போலும்.

    nadodigal

    நாடோடிகள் – கலக்கலாயிருக்கிறது என்று சிலர் சொன்னதால் பார்த்தால், செம கடி. உப்புமா கதை/தி.கதை. சுப்பிரமணியபுரம் தந்த தைரியத்தில் எடுத்த படம் போல தெரிகிறது. சசிகுமார் ஒரே மாதிரி தாடி வைத்து, மையமாக சிரித்து, இறுக்கமாகவே இருக்கிறார். யதார்த்த தமிழ் சினிமா போலவே ஆரம்பித்தாலும், க்ளைமாக்ஸ் திருப்பத்தில், நண்பர்கள் மூவரும் ஸ்லோமோஷனில் பழி வாங்க நடக்கும் போது கோலிவுட் தெரிகிறது. படத்தில் ரொம்பவே ஸ்லாப்ஸ்டிக் காமெடி.

←Previous Page
1 … 36 37 38 39 40 … 321
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
Loading Comments...
    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar