kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • December 5, 2010

    புரட்சியாளன் கதை

    போன வாரம் நடந்த நிகழ்ச்சிகள் சில –

    1. இன்ன இன்ன மத்திய மந்திரி இன்ன இன்ன ஊழலில் லஞ்சம் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள்.
    2. இன்ன இன்ன எதிர்க்கட்சி போர்க்கொடி தூக்க, இன்ன இன்ன பிரதமர் பேசாமடந்தையாய் இருந்தார்.
    3. இரண்டொரு நாளில் தொல்லை தாங்க முடியாமல் இ.இ மந்திரி ராஜினாமா செய்தார்.
    4. இன்ன இன்ன எதிர்க்கட்சி இந்த நியாயம் கிடைத்ததற்கு தான் தான் காரணம் என்றது.
    5. இந்தக் கணத்தில் இதில் சம்பந்தபட்ட இன்ன இன்ன லாபியிஸ்ட் ஒருவருடன் பலர் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் இன்ன இன்ன பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.
    6. இந்த இ.இ உரையாடல்கள் இ.இ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
    7. வேலை நேரத்தில் தத்தம் திரைகளில் ஃபேஸ்புக்கில் வம்பிக் கொண்டிருந்த இ.இ குடிமகனுக்கு பல நண்பர்கள் இந்த உரையாடல் லிங்க்கை அனுப்பி வைத்தார்கள்.
    8. இந்த இ.இ. உரையாடலை கேட்டு கொதித்துப் போன அவன் தன் பல நண்பர்களுக்கும் அதை அனுப்பி வைத்தான்.
    9. அவர்களும் வேலையை விட்டுவிட்டு இதைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
    10. உரையாடலில் பேசியது இ.இ தொலைக்காட்சி நிரூபினியா இல்லையா என்று # போட்டு டுவிட்ட ஆரம்பித்தார்கள்.
    11. அது சம்பந்தமாக சில வலைபதிவுகள் உருவாக்கப்பட்டன. பல எதிர்வினைகள் எழுதப்பட்டு இணைய பாண்ட்வித்தை அடைத்துக் கொண்டன.

    இந்த வார நிகழ்ச்சி நிரல்-

    1. இ.இ குடிமகன் இ.இ தேதியில் வெளியாகப் போகும் இ.இ. ஸ்டாரோ, நாயகனோ நடித்த புதுப் படத்தின் ட்ரைலர் பார்க்க ஆரம்பிப்பான்.
    2. இ.இ நண்பர்களுக்கு அந்த லிங்கை அனுப்புவான்.
    3. இ.இ நண்பர்களும் அதைப் பற்றி டுவிட்ட ஆரம்பிக்க, இ.இ அரசியல்வாதி பழைய படி ஆரம்பித்துவிடுவார்.
    4. இ.இ நிரூபினி பிரபலமாகி இ.இ சபாவிற்கு பரிந்துரை செய்யப்படுவார்.
    5. இ.இ நண்பர்கள் குழாம் இந்தப் பரிந்துரையை ஆதரித்துக் கொண்டிருப்பார்கள்.
    6. இ.இ நாட்டில் எல்லாம் ஷேமமாயிருக்கும்.

    இன்ன இன்ன என்றிருக்கும் இடத்தில் பெயர் மாறிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் புதிதாய் நடப்பதில்லை. அஷ்டே!

    0000

    ஞான ராஜசேகரனின் பாரதி படத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப்படம் கண்டிப்பாக வியாபார நோக்கங்களை மீறியது. பிரமாதமாக எடுக்கப்பட்ட இந்தியப் படம். இதை இந்திய மொழிகளில் டப்…வேண்டாம் சப்-டைட்டிலாவது செய்து ஸ்டார், சோனி சானல்களில் ஒரு சனிக்கிழமை மதியம் ஒளிபரப்பலாம். நமக்கும் இம்மாதிரி ஆத்தெண்டிக்காக பீரியட் படமெடுக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    ஷாயாஜியில் ஆரம்பித்து தேவயானி, பாரதி மணி, நிழல்கள் ரவி என சின்ன சின்னச் ரோல்களில் கூட அழுத்தமான திறமை. இளையராஜாவின் மயக்கும் வயலின்கள், பி.கிருஷ்ணமூர்த்தியின் நேர்த்தியான கலை, வி.டி. விஜயனின் எடிட்டிங், ஞா.ரா.சேகரனின் இயக்கம் என பல நல்ல விஷயங்கள். இவையெல்லாம் தாண்டி பாரதி என்னும் புரட்சியாளனின் உண்மைக் கதை.

    பாரதியின் சம்பவங்கள் நிறைந்த பயோகிராபியில் ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகள். காதலை பற்றிக் பேசிக் கொண்டிருக்கும் கொஞ்சம் நெகிழ்வான காட்சியில் திடீரென பாரதி அதிர்ந்து சொல்லும், ஆதலினால் காதல் செய்வீர் போன்ற வரிகளில் தமிழ் விளையாடுகிறது.

    நான் பள்ளியில் படிக்கும் போது பிலிம் ஷோ என்று சிறந்த படங்களின் ரீல்களை வாங்கி வந்து லைப்ரரி தரையில் உட்கார வைத்து புரஜக்டரில் படம் காட்டுவார்கள். இப்பொழுதெல்லாம் இப்படி உண்டா என்று தெரியவில்லை. எல்லா பள்ளிகளிலும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த மாதிரிப் படங்களை வருடங்களுக்கு ஒரு முறையாவது பிலிம் ஷோ போல போட்டுக் காட்ட வேண்டும் என்று
    சட்டம் வர வேண்டும்.

    பாரதி இன்னும் பார்க்கவில்லையென்றால் பரவாயில்லை, இந்த வருட டிசம்பர் 11க்குள்ளாவது பார்த்துவிடுங்கள். அமேஸிங் அனுபவம்.

    – இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

  • November 25, 2010

    இயேசுநாதரும் பி.சி. ஸ்ரீராமும்

    இப்போதெல்லாம் டிசம்பர் சீசன் போய் நவம்பராகி விட்டது. பட்டாசு வாசனை போவதற்கு முன் கச்சேரி காண்டீன்களில் அடுப்பு பற்றவைத்தாகி விட்டது. வழக்கமாக நவம்பரில் ஷோபனா, அனிதா ரத்னம் போன்றவர்களின் alternative dance festival தான் நடைபெறும். ஸ்ரீநிதி கூட டிசம்பரில் தான் நிகழ்ச்சி செய்வார். ஓப்பனிங் வீக்கெண்டில் கல்லா ஃபுல்லாக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டிங் போல, கடந்த சில வருடங்களாக ஒரேடியாக நவம்பரிலேயே தம்புரா சகிதம் ஆஜராகிவிடுகிறார்கள்.

    சென்னையில் சீசன் ஆரம்பிக்கிற நேரமாகிவிட்டது என்று தெரிவதற்கு இந்து பேப்பர் படித்தல் முக்கியம். இந்துவும் சமீபமாக நவம்பர் பெஸ்ட் போன்ற விழாக்களை ஸ்பான்ஸர் செய்கிறார்கள். இந்தப் படங்களை பார்த்தால் கச்சேரிகளின் who’s who தெரியவரும். இதில் ப்ரம்ம கான சபா தலைவர் நல்லி செட்டியார் தான் மிஸ்ஸிங்.

    சென்னை வாழ் தமிழ் மகா குடிமகனுக்கு சாஸ்திரிய இசையில் ஆர்வமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. கண்கள் இரண்டால் பாட்டு வந்த பொழுது ரீதிகெளளை ராகத்தை பற்றி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லோரும் பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோம். வருடத்திற்கு சுமார் இரண்டு சதவிகித சென்னைவாசிகள் மட்டுமே ஒரு கச்சேரியாவது கேட்கிறார்கள் என்று பட்சி சொல்கிறது. மற்றவர்கள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இரண்டை நாலாக்க நாமெல்லோருக்கும் சில யோசனைகள் –
    நம்பர் ஒன் – சிந்து பைரவியிலிருந்து சொல்லி வரும் விஷயம், தமிழில் கொஞ்சமாவது பாடுங்கள். அட்லீஸ்ட் 33% ஆவது தமிழில் இருக்கவேண்டும் என்று சபா மேலாளர்கள் அட்வான்ஸ் கொடுக்கும்போது பேசிக் வைக்கலாம். முன்னமே சொன்ன அவாள் இசை அவங்க இவங்க இசை ஆவதற்கு இது ரொம்பவும் முக்கியம். மேலும் ப்ராக்டிகலாகப் பார்த்தால், தமிழில் பாடினால் புரிகிறது. புரியாத இசையை ரசிக்க அதை ரொம்ப நேரம் கேட்க வேண்டும். இந்த diminishing attention span கலாசாரத்தில் இது ரொம்பவும் கடினம்.

    டிசம்பரை ஹாலிடே சீசனாக பாவித்து குடும்பத்துடன் ஓரிரு நாட்கள் டிவி, சினிமா அல்லாத எதோ ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குச் சென்று வரலாம். இசைதான் என்றில்லை, கூத்துப் பட்டறை நாடகமோ, க்ரேஸியின் துணுக்குத் தோரணமோ, கதா காலட்சேபமோ, பல இருக்கின்றன. இரண்டொரு நாட்கள் சீரியல்களைத் தவற விட்டால் எந்தக் கதையும் ஓடிப்போய் விடாது.
    குழந்தைகளை பாட்டு க்ளாசில் சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களை சீசனுக்கு இரண்டு மூன்று கச்சேரிக்காவது அழைத்துப் போங்கள். குருசரண், சு.ரகுநாதன் கச்சேரி தான் என்றில்லை. அவற்றின் டிக்கெட் கட்டுப்படியாகாமல் போகலாம். மதியம் இரண்டிலிருந்து நான்குவரை நடக்கும் இலவச கச்சேரிகளுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். காண்டீன் மூக்கை தொலைக்காது, பட்டுப் புடைவை கண்ணை டாலடிக்காது, நடுநடுவே சீட்டனுப்பும் காமெடியெல்லாம் இல்லாது புதியவர்களின் இசையை சுகமாக ரசிக்கலாம்.

    கச்சேரி முடிந்தவுடன் பின்பக்கமாக எஸ்கேப் ஆகாமல், சபையிலிருந்து இறங்கி வந்து கொஞ்சம் ரசிகாஸுடன் கலந்து பேசிய பின் கலைஞர்கள் வீடு திரும்பலாம் அல்லது அடுத்த கச்சேரிக்குத் தொண்டையை ரெடி செய்யலாம். போன வருடம் மியூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி முடிந்தவுடன் அடித்து பிடித்துக்கொண்டு சஞ்சய் சுப்பிரமணியன் காரில் விரைந்ததைப் பார்க்க முடிந்தது. அவரின் பின்னே ஒரு பத்து பேராவது பேசலாம் என்று வந்து கொண்டிருந்தார்கள். இத்தனை ஓட்டமாய் வருபவர் கண்டிப்பாக தீவிர ரசிகராக இருந்தே ஆகவேண்டும். சில நிமிடங்கள் நின்று பேசிப் போயிருந்தால் அந்தப் பத்து இதயங்களை வென்றிருப்பார்.

    சின்னஞ்சிறு கிளியே என்று அதே கிளியை எல்லா சபாவிலும் கூப்பிடாமல் பல்வேறு பாட்டுகளையும் வோக்கலிஸ்ட் தேர்ந்தெடுக்கலாம். அதே மாதிரி தங்களுடைய முத்திரைகளைத் தாண்டி எல்லா இசை நுணுக்கங்களையும் அணுகிப் பார்க்கலாம். அருணா சாயிராமுக்கு எத்தனை சீட்டு வந்தாலும் ஒரு கச்சேரியிலாவது அபங் பாடாமல் இருக்கலாம்.

    மற்றபடி –

    டி.டி.கே ரோடு ஏவிஎம் சங்கரா ஹாலில் நடக்கும் இசை/புத்தக/வீடியோ கண்காட்சிக்கு சென்று வாருங்கள். தனியார் கண்காட்சிதான் என்றாலும் இது போல எல்லா இசை சிடிக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பது கடினம். அதே நேரத்தில், நானும் கர்னாடிக் கேட்கிறேன் பேர்வழி என்று இரண்டாயிரம் ரூபாய்க்கு சீடி வாங்கி எல்லாவற்றிலும் தூசி படிய வைப்பதிலும் உபயோகமில்லை.

    மக்மல் பூரி எந்த காண்டீனில் கிடைக்கிறது என்று தேடி சாப்பிடலாம். போன வருடம் நாரத கான சபாவில் கிடைத்தது.

    n.shree just started, seems like a bad throat day. still awaiting the abheri classic – murugan song. #kutcheri போன்ற டுவிட்களை கச்சேரியின் இடைவேளையில் செய்யலாம். இரண்டு சாதகங்கள் – பின் தொடரும் நண்பர்களிடம் கொஞ்சம் ஜெர்க் விடலாம். கச்சேரிக்கு செல்வது ‘the in-thing” என்ற ஒரு ஃபாஷனை உருவாக்கலாம்.

    0000

    தாங்ஸ் கிவ்விங் தினத்திற்கு அமெரிக்கா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் மதச் சடங்காக ஆரம்பித்தது பின்பு சமூக வழக்கமாக ஆனது. வான் கோழி பிரியாணி, மேஸீஸ் பரேட், அமெரிக்கன் கால்பந்து போட்டிகள், ப்ளாக் ப்ரைடே ஷாப்பிங் என்று இவைகளைத் தாண்டி தாங்க்ஸ் கிவ்விங்கிற்கு வேறுசில நல்ல காரணங்கள் உண்டு.

    அதாவது அது ஒரு குடும்பப் பண்டிகை. எங்கெங்கோ இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒரு நாளாவது ஒரே இடத்தில் கூடிப் பேசி கடவுளுக்கும் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு அமைதிப் பண்டிகை. இதனால் எல்லா ப்ளைட் டிக்கெட்களும் விற்று தீர்ந்தாகிவிட்டது. எல்லோரும் லீவில் போய் விடுவார்கள். இனி ஜனவரி வரை ஆபிஸ்களில் ஈ தான்.

    0000

    ”I know…its a management school and I must be talking to you about compromises and how to manage. You don’t have to. You don’t have to compromise, you still can make money. I’m a standing proof” சொன்னவர் கமலஹாசன். கேட்டவர்கள் மேனேஜ்மெண்ட் கல்லூரி மாணவர்கள்.

    இந்த youtube வீடியோ இன்னமும் ரொம்ப பிரபலமாகவில்லை. சீக்கிரம் ஆகிவிடும். பார்த்துவிடுங்கள்.

    0000

    2007ம் வருடம் மே மாதம் சியாட்டல்-கொரியா-பம்பாய் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னைக்கு அடுத்த விமானம் காலை 6:30க்குதான் என்பதால், ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். எதற்காகவோ தலை தூக்கி பார்த்தபோது, விமான நிலைய நுழைவாயிலில் ஒருவர் கைகளை அகல விரித்து சிலுவையில் அறையப்படும் இயேசு நாதரைப் போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். செக்யூரிடி செக் செய்யும்போது அவர் கைகளை அகல விரிக்க, ஒரு போலீஸ்காரர் அவரின் மேல் அந்த பாம் டிடக்டரை தேய்த்துக் சோதனை செய்து கொண்டிருந்தார்.

    பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கொஞ்சம் சிரிப்பாய் வந்தது. அவர் யார் என்று கொஞ்சம் யூகித்து விட்டேன். அவரும் செக் முடிந்து மிக மெதுவாக நடந்து எனக்கு ஒரு நான்கு ஸீட் தள்ளி அமர்ந்து எதோ படிக்கலானார். அடர்ந்த தாடி, ஜோல்னா போல ஒரு பை, கண்ணாடி, வெட்டாத சற்றே அழக்கடைந்த நகம், வாரப்படாத தலை, தூங்காத கண்கள் ரெண்டு. பி.சி.ஸ்ரீராம்.

    ரசிகனான நான் அந்த நான்கு சீட்டுகளை தாண்டி அவரின் அருகே சென்று அமர்ந்து அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் அவர் செக்யூரிடி செக்கின் போது யேசு கிரிஸ்துவாக தோற்றமளித்தை சொன்னவுடன், கையை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார். அடுத்த இரண்டு மணி நேரமும் தீர்க்கமாகக் கண்களை பார்த்து பேசினார். ரொம்பவே intensiveவாக கவனித்தார். ப்ளைட் கிளம்ப நேரமான போது, ‘டோண்ட் ஒர்ரி நானும் அதே ப்ளைட் தான்” என்றார். எல்லோரும் ப்ளைட் ஏறியவுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, எதோ மெட்ரோ பஸ் ஏறுகிற லாவகத்துடன், ப்ளைட் வாசலுக்கு போனார்.

    ப்ளைட்டில் அருகே உட்காரச் சொன்னார். நான் தான், “ சார் இடம் மாத்தி உட்காந்தா…அதோ அந்த ஏர் ஹோஸ்டஸ் கோவிச்சுப்பாங்க” என்று சொல்லி என் இடத்தில் அமர்ந்து விட்டேன். காரணம் அவர் தூங்கி இரண்டு நாட்களாகி விட்டது என்றதுதான். அதற்கு முன் அந்த ஏர் ஹோஸ்டஸை கூப்பிட்டு, பேனா வாங்கி, என் டிக்கெட்டின் பின் போன் நம்பரை எழுதித் தந்தார். ”போன் பண்ணுங்க கண்டிப்பா திரும்பவும் மீட் பண்ணலாம்” என்றார். ப்ளைட் இறங்கும் போதும் ஐபாட் கேட்டுக் கொண்டே கர்னாடக ராகம் எதையோ முணுமுணுத்துக் கொண்டு இறங்கினார்.

    அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டு மணி நேரமும் அவரின் தலையைத் தின்று விட்டேன். அக்னி நட்சத்திரம் படத்தை எடுக்கும் போது இருந்த அவரின் மற்றும் மணி ரத்னத்தின் மனநிலையும், நாயகன் பட கடினங்களையும் கேட்க கேட்க கிட்டத்தட்ட ஒரு டூ-வே பேட்டி போல இருந்தது. சீனி கம் திரைப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைக்காக பம்பாய் வந்ததாகச் சொன்னார். இணையம் பற்றி அதிகம் கேட்டார். அதில் ஈடுபட ஆர்வம் காட்டினார். என்னுடைய புகைப்பட ஆர்வத்தைப் பற்றி சொன்னேன். ப்ளிக்கரைப் பற்றியும், குறும்பட எண்ணங்களைப் பற்றியும் பேசினோம். சுவாரசியமாய் இருந்தது. அவருக்கும் இருந்தது என்றார். டிவியில் அவரின் பேட்டியை பார்க்கும் போது பொறுமை இல்லாது போனதுண்டு. நேரடியாகப் பேசியபோது அவர் பேசியபடியே நிறைய யோசிக்கிறார் என்பது புரிந்தது. சென்னைக்கு வந்தவுடன் குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை சொன்ன போது. ““சினிமா கினிமான்னு போய்ட போறான்” என்று குசேலர் கதை ருக்மணியாகத் தடுத்து விட்டார்கள். கோலிவுட் ஒரு அருமையான கேமராமேனை இழந்தது அன்று தான்.

    போன வாரம் அவர் மகள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்தியை பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன். அந்த நல்ல மனிதருக்கு இந்த தசரத சோகம் அநியாயம்.

    — இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

  • November 23, 2010

    சொர்க்கத்துக்குப் போவேனா மாட்டேனா?

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

    உலகத்தின் டாப் டென் கவலைகளில் முதலிரண்டைப் போன வாரம் நுனிப்புல் மேய்ந்தோம். டாப் டென் கவலைகளுக்கு எதோ ஒரு பிரகஸ்பதியின் வெப்சைட்டில் ஓட்டுப் பதிவு வைக்க, டாப் டென்னுக்கு பின் வந்த கவலைகளின் லிஸ்ட் கவலை கொள்ள வைக்கிறது. பதினேழாமிடம் – பீனட் பட்டர் மேல் வாயில் ஒட்டிக் கொள்வது, முப்பத்தி ஆறாமிடம் மலச்சிக்கல், பதினைந்தாமிடம் – பெண்கள் என்று காமெடி டைம். உலகின் மூன்றாம் கவலை என்று பலரும் வாக்களித்தது சொர்க்கத்துக்கு போவேனா மாட்டேனா என்பது தான். சுத்தம்!

    oo0000oo

    வாழ்வில் நடக்கக்கூடிய சோகங்களில் மிகப் பெரியது குற்றம் செய்வதோ ஆட்படுவதோ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இறப்பைப் போன்று நமது செல்களில் பதிவு செய்யப்படாதது குற்ற உணர்ச்சி தான். ஜெனட்டிக்காக குற்றம் செய்வது நம்முள் பதிவு செய்யப்படவில்லை. எல்லோருக்கும் வரும் ஜலதோஷம், ஜுரம் போல குற்றங்கள் எல்லோருக்கும் வருவதில்லை. எதோ ஒன்று இருப்பதாலேயே வருகிறது. அழகோ, ஆடி காரோ, அடையார் பங்களாவோ இப்படி ஏதோ இருப்பதால் தான் குற்றங்கள் அவர்களை நோக்கி வருகின்றன என்பது தான் சோகமே.
    ஆனால் குற்றங்கள் நடக்க ஆதாரக் காரணம் தான் என்ன. 2008 அமெரிக்காவில் மிகப்பெரிய ரிசஷன் வந்த எல்லோருக்கும் வேலை இழந்து, வீட்டை இழந்த போது சமூக வல்லுனர்கள் குற்றங்கள் அதிகமாகலாம் என்றார்கள். மோசமான ஒரு பொருளாதாரத்தினால் கடுங் குற்றங்கள் அதிகமாகலாம் என்று நம்புகிறோம். அது கிட்டத்தட்ட தப்பு. அமெரிக்காவில் 60-70களில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தபோது குற்றங்கள் அதிகரித்தன. 80களில் பொருளாதாரத்துடன் குற்றங்களும் குறைந்தன. அப்போது பொருளாதாரத்திற்கும் குற்றங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றால், பிறகு? தேவையில்லாமை தான்.

    குழந்தை தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் கிரிமினல்களாகின்றன என்கிறார்கள். கொஞ்சம் நெளிய வைத்தாலும் 1973ல் நிறைவேற்றப்பட்ட Abortion Actக்கு பிறகு பத்து வருடங்களுக்குப் பிறகு குற்றங்கள் குறைய ஆரம்பித்தது அமெரிக்காவில். தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோர்களின் சிசுக்கள் அபார்ஷனில் போய்விட்டதால், அந்தத் தலைமுறையின் நிறைய குற்றவாளிகள் பிறக்கவேயில்லை என்பது தான் Freakonomics எழுதிய லெவிட் மற்றும் டப்னரின் வாதம். இதனை data வைத்துக் கொண்டு நிருபித்தார்கள்.
    குற்றவாளிகள் நம்முடன் தான் இருக்கிறார்கள். நம்மைப் போலவே பிள்ளையாரை பார்த்தால் குட்டிக் கொள்கிறார்கள், அயர்ன் பண்ணி ட்ரஸ் போடுகிறார்கள், சேனல் தாவுகிறார்கள்.நம்மைப் போலவே ஊக்கம் இல்லாவிட்டால் ஒரு விஷயத்தைச் செய்யாதிருப்பார்கள். ஆக அவர்களுக்கு ஊக்கம் இல்லாது செய்துவிட்டால். அதாவது காசு வாங்காது கைது செய்து,நேரத்திற்கு கேஸ் ஃபைல்களை பிரித்து, தண்டனையளித்து, உள்ளே போட்டால் ஊக்கமிழந்து விடுவார்கள். இதை முடியாமல் செய்யும் உப-குற்றக்காரர்களைத் தான் முதலில் உள்ளே போடவேண்டும்.
    இதையெல்லாம் விட அமெரிக்காவில் டெலிவிஷனால் தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். டிவி பார்த்துக் கொண்டு பாப்கார்ன் கொறித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்கள் மற்றவர்களுடன் பழகுவதை விட்டுவிடுகிறார்கள். தனித்துப் போய் விடுகிறார்கள். அல்லது அவர்கள் பெற்றோர்கள் டிவி பார்த்துக் கொண்டே இருப்பதால் வெறுப்படைந்து போய் கதவை மூடிக் கொள்கிறார்கள்.

    “பேப்பர திறந்த கொலை கொள்ளை, நம்மூர் கெட்டுப் போச்சு” என்று சொல்லும் மாமாக்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான பதில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடித்த உண்மை எல்லோரையும் உறைய வைத்தது. இத்தனை ஜனநெரிசல் அதிகமான உலகத்தில் ஐநூறு வருடங்களாக கடுங்குற்றங்கள் குறைந்து வருகின்றன. 15ம் நூற்றாண்டில் லட்சத்தில்73 கொலைகாரர்கள் இருந்தார்கள், 20ம் நூற்றாண்டில் மூன்றே பேர் தான். இதே போல் வேறு பல நாடுகளிலும் இதே கதை தான். ஆக மக்கள் தொகை அதிகமாகும் இக்காலத்தில் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதா, குறைகின்றன என்பதா?

    இம்மாதிரி உலக மகா ரிசஷன்கள் வரும் போதும் கூட பொய் சொல்லாமல், பிக் பாட்கெட் அடிக்காமல், கொலை வழிப்பறி செய்யாமல் எத்தனையோ சான்ஸ்களை வேண்டாம் என்று விட்டுவிட்ட நமக்குள் இருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு கைக்குலுக்கல்-சல்யூட்.

    மற்றபடி குற்றத்திற்கு ஆதாரமான காரணம் கஞ்சத்தனம். யோசித்துப் பார்த்தால் புரியும்.

    பி.கு – சூர்யா-ராமுவின் ரத்த சரித்திரம் இன்னமும் பார்க்கவில்லை.

    oo00000oo

    நாத்திகத்தின் போஸ்டர் பாய் என்றழைக்கப்படும் சாம் ஹாரிஸ் எழுதிய The moral landscape என்ற புத்தகத்தினால் ஆத்திக-நாத்திக சண்டைகள் அதிகமாகியுள்ளன. சாம் சொல்ல வருவது இதைத்தான் – மதங்கள் ஒருவர் ஒழுங்காக இருப்பதற்கு மோசமான காரணங்களைக்க் கொடுக்கின்றன. ஆப்பிரிக்காவில் பசிக் கொடுமை இருக்கிறது. கிறிஸ்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆப்பிரிக்காவுக்கு எதாவது பண உதவி செய்தால் என்னை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்வார் என்பதனால் செய்கிறீர்களா? அல்லது மற்றவர்களின் மேலிருக்கும் தூய்மையான அன்பினாலா?
    அவரிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைக்கிறது – Why is science a better alternative? Science is the most durable and non divisive way of thinking about the human circumstance. It transcends cultural, national, and political boundaries. You don’t have American science versus Canadian science versus Japanese science.

    oo0000oo

    பாஸ் (எ) பாஸ்கரன் படம் கொஞ்சம் பிடித்திருந்ததுக்கு காரணம் சந்தானம். அவரின் விஜய் டிவி காலத்திலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். வத்திப் போன தமிழ்க் காமெடி உலகில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தவர், இப்போது தமிழ் சினிமாவுக்காக மாறிக் கொண்டு வருகிறார். எந்திரனில் எதோ மெக்கானிக்கிடம் வேலை பார்க்கும் ( “டேய் அந்த எட்டு ஸ்பானரை எடுத்துப் போடு”) சைட் கிக் போல வந்தவர், இந்தப் படத்தில் ஆர்யா விட்டுக் கொடுக்க, ஓரிரு தருணங்களில், விலா நோக வைக்கிறார். சித்ரா லட்சுமணனைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. மற்றபடி படத்தில், ஒரு பாடலில் பணக்காரனாகும் விக்கிரமன் படத்தைக் கிண்டல் செய்து கொண்டே ஒரே பாடலில் பணக்காரர்கள் ஆகிறார்கள். என்ன ஒரு cliché reversal.

  • November 18, 2010

    இன்ன பிற – நடு ராத்திரி டின்னர்

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

    சமீபமாக ஃபாரினில் எடுக்கப்படும் பாடல் காட்சியில் ஹீரோ ஹீரோயினுடன் ஆடுவது எப்போதும் போல அந்த இருபது இந்தியப் பெண்களல்ல. அந்நாட்டு டான்ஸர்கள். இதற்கெல்லாம் எப்படியும் ஏதாவது யூனியனில் ஸ்ட்ரைக் பண்ணிவிடுவார்களே, எங்கே அவர்கள்? யாராவது எதையாவது செய்து இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தலாம். காதல் பாடம், அன்பே உன் இடையோ, ராஜ வேர்வை, நெலாவே டல்லா இருக்கு, லவ் கன்பர்ம், கண்மணி ஓ, கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா போன்ற தமிழிசையின் பொன் வரிகளுக்கு க்யூட்டாகத் தோற்றமளிக்கும் ஐரோப்பிய இளைஞன் நம்மூர் ஹீரோவுடன் டப்பாங்கூத்து ஆடுவது தமாஷாக இருக்கிறது. அதுவும் வீட்டின் வாண்டுகள் ரிமோட்டை ஒளித்து வைத்து விட்டதாக நினைத்துக் கொண்டு வால்யூம் குறைத்துப் பார்த்தால் உங்கள் பி.பி குறைந்துவிடும்.

    எங்கிருந்து ஆரம்பித்தது இந்த சம்பிரதாயம்? சூர்யாவிலிருந்து ஆர்யா வரை எல்லோருடனும் அவர்கள் ஆடிவிட்டார்கள். குறிப்பாக விஜய். ஒரு வாரமாக ஒளிபரப்பாகும் எல்லா பாடல்களையும் கூர்ந்து பார்த்ததில், இது இந்தியனில் ஆரம்பித்தது தெரிந்தது. சாகிர் ஹுசைனின் எதுவோ என்று கமல் மனிஷாவைத் தட்டிவிடும்போது பிண்ணனியில் ஆஸ்திரேலியப் பெண்கள். அந்தப் படத்தின் முதல் பாடலில், கோடம்பாக்க டான்ஸர்களை விடுத்து மும்பை மாடல்களுக்கு மல்லிப்பூ கட்டி கூட்டி வந்த போதே எதிர்ப்பு தெரிவித்தார்கள். இன்று எங்கே போனார்கள்? உடனடித் தேவை – அந்த இருபது பின்னணிப் பெண்கள்.

    கும்பகோணம் வடக்கு மாட வீதியில் காதலைச் சொல்லப் பின்தொடரும் ஹீரோ, அடுத்த ஷாட்டில் கூலிங் க்ளாஸ் குளிர் கோட்டு எல்லாம் போட்டுக் கொண்டு பார்சிலோனாவில் ஹீரோயினின் இடுப்பைக் கிள்ளுகிறார். Offending. இந்த மாதிரி படத்தின் நடுவே பாடல்கள் நுழைவதைப் பெரும் புரட்சியாகக் கருதுவதை நம்மூர்க்காரர்கள் விட்டு விட்டு, கொஞ்சம் நேராக யோசிக்கலாம். கதை சொல்லல்(Narrative) என்ற ஒரு விஷயத்தைக் கிட்டத்தட்ட மறந்து விட்டோம். அந்தக் காலத்தில் பாடல்கள் இருந்ததற்கு நாடகக் காரணங்கள் இருந்தன. இப்போது இந்த ஹசிலி பிசிலி காரணங்கள் போதா. கெளதமின் விண்ணைத் தாண்டிய காதல் கதையில் தன் வீட்டு இரும்பு கேட்டைத் தாண்டிக் குதிக்கும் அந்த இருபத்தைந்து வயது இளைஞன் இறங்குவது ஏதோ ஒரு குறுகிய மொண்டே கார்லோவின் தெருவில். ராயப்பேட்டையில் நடக்கும் கதாநாயகி ரோட்டை திரும்பியவுடன் திடிரென்று சிகாகோ இளைஞர்கள் Grafitti அடித்த சுவர்களின் முன்னே நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா என்பது suspension of disbelief என்பார்கள். இது டூ மச் சஸ்பென்ஷன்.

    நமக்கு தேவை ஒரேயொரு நிகழ்வை ஒட்டிய கதைகளும் அவற்றுக்கான சிறுகதை முடிவுகளும். அதாவது incident based திரைக்கதைகள். தசாவதாரம் போல. உதாரணத்துக்கு ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் கதை என்று வைத்துக் கொள்ளுங்கள், ஹீரோவின் முன்- கதை சுருக்கத்தை ஒரு ப்ளாஷ்பேக்கில் சட்டென சொல்லிவிட வேண்டும் . அதை விடுத்து பாங்கினுள் நுழையும்போது நிதானமாக இரண்டாம் க்ளாஸ் படிப்பதில் இருந்து ப்ளாஷ்பேக் சொன்னால், குட் லக். அதே மாதிரி, ஹிரோயின் பாங்கினுள் மாட்டிக் கொள்கிறாள் என்றால், அவளை எதாவது ஒரு ரூமில் அடைத்து வைத்திருக்கும்போது, பப்பிள்ஸ் போட்டு ட்ரீம் ஸீக்குவன்ஸ் எப்படி வரும். இந்தக் கதையும் வங்கி கொள்ளையைப் போல பத்து மணிக்கு ஆரம்பித்து பனிரெண்டுக்கு முடிய வேண்டும். இம்மாதிரி கதைகளை பாட்டு இல்லாமல் தைரியமாக எடுக்கலாம். பாட்டுக்கள் இருந்தாலும் மகேந்திரன் – பாலு மகேந்திரா படங்கள் போல Montageகளாக இருக்கலாம். ஒரு பல்லவியும் ஒரு சரணமும் படத்தில் காட்டினால் போதும், மிச்சத்தை எம்பி3யில் கேட்டுக் கொள்ளலாம். இம்மாதிரி திரைப்படங்கள் எடுத்தால் தமிழ் நவ-சினிமாவின் உதயத்தை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு சுவிசர்லாண்டின் தெருக்கள்.

    OOO

    2050ல் 9 பில்லியன் மனிதர்கள் இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருப்பார்கள் என்கிறார்கள். இந்த 9 பில்லியன் நம்பரில் பல பில்லியன் கவலைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு கவலைகளை மேலோட்டமாக கண்டுக்கலாம்.

    ஜனத்தொகை. நமக்குத் தெரிந்து இவ்வுலகத்தில் இத்தனை பேர் இருந்ததேயில்லை. வெத்துப் பெட்டி அப்பார்ட்மெண்டுகளுக்கு சண்டை போடும் நாம், நிற்க நடக்க சண்டையிட வேண்டியதாகலாம் என்கிறார்கள். இதில் கொஞ்சமாவது உண்மையுள்ளது. இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டால் சீன அரசாங்கம் கன்னாபின்னாவென்று வரி போட, கடந்த முப்பது வருடங்களில் கிட்டத்தட்ட 300 மில்லியன் அதாவது முப்பது கோடி பிறப்புக்களைத் தடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி, இன்னும் கடினமான சட்டங்கள் வரலாம். Population pressure அதிகமாகி இயற்கை பேராபத்துகள் வரலாம். ஆட்டோ, கார்கள் அதிகமாகி ட்ராபிக் ஸ்தம்பிக்கலாம் எனச் சில டிஸ்டோபியன் சிந்தனைகள் நடமாடுகின்றன.

    உணவு மற்றும் உணவுப் பழக்கங்கள். தனியொருவனுக்கு இல்லாவிட்டால் பரவாயில்லை, இத்தனை ஜனத்துக்கும் எப்படி உணவளிக்கப் போகிறோம். ஏற்கெனவே சென்னையில் 300-400அடியாவது தோண்டினால்தான் குடிநீர் வருகிறது. எந்த மரத்தின் வேர்கள் 300 அடிக்குக் கீழே போய் தண்ணி உறியமுடியும். ஆகவே மரங்கள், செடி கொடிகள் மறித்துப் போன சென்னை ஜெய்ப்பூருடன் போட்டியிட்டு வெல்ல முடியும்.

    அமெரிக்காவில் 100 மைல் உணவு என்று ஒரு விஷயம் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது 100 மைல் சுற்றளவிற்குள் உருவாக்கப்படும் உணவுகளை உண்ணும் ஒரு வகை டயட். இப்படி செய்தால் சூப்பர் மார்க்கெட்டுகளை சார்ந்திருக்காமல் உழவர் சந்தையிலிருந்து வாங்கி சமைக்கலாம். இந்த வழிமுறை இன்னும் பிரபலமாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பெட்ரோல் கிணறுகள் காய்ந்து போனால் உணவுப் பொருட்களை நகர்த்துவது சிரமமாகும்.

    ஒரு முறை பூந்தமல்லியில் ஒரு லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு முட்டை கோஸ்களை ட்ரான்ஸ்பர் செய்து கொண்டிருந்தார்கள். முதல் லாரியிலிருக்கும் க்ளீனர்(!) ஒரு முட்டைகோஸை எடுத்து, நீல நிற திரவம் கொண்ட பக்கெட்டில் முக்கி தூக்கி வீசுகிறார். அடுத்த லாரிக்காரர் அதை காட்ச் பிடித்து அழுக்கே அழுக்கான அந்த லாரியின் பின்புறத்தில் போட்டுக் கொள்கிறார். கேட்டதுக்கு, ப்ரஷ்ஷாக இருக்க க்ளோரின் வாஷ் என்றார்கள். முட்டைக்கோஸை பூட்டகேஸ் என்று சாப்பிடுவதை விட்டுவிட்டேன். ஆகையால் லோக்கல் உழவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக்கிக் கொள்ளுதல் உத்தேசம்.

    இது மாதிரி எதுவுமே நடக்காமல் போனாலும் சரி, உங்களூர் சூப்பர் மார்க்கெட்டுகள்தான் நீங்கள் சாப்பிடுவதைத் தேர்ந்தெடுக்கின்றன. இதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது. ஒரு சூப்பர் மார்க்கெட்டின் அமைப்பிலிருந்து, உள்ளே நுழைந்தவுடன் உங்கள் கண்ணில் தெரியும் முதல் பொருளிலிருந்து இருந்து பில் போடும் போது பக்கத்தில் instinct buyக்காக வைக்கப்பட்டிருக்கும் சாக்லேட் சமாசாரங்கள் வரை எல்லாமே கன்ஸூமர் விஞ்ஞானப்படி அமைக்கப்பட்டது. சூப்பர் மார்கெட்டுகளைத் தவிர்த்தால் உங்களின் டின்னரை நீங்களே முடிவு செய்ய முடியும். இதே மாதிரி பாஸ்ட் புட் டிஷ்கள், கொறிக்கும் சிப்ஸ் என்று தவிர்க்க ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

    இப்பொழுதெல்லாம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவது ஒரு ஃபாஷானாகி விட்டது, கவனித்தீர்களா? பலர் ப்ரேக் பாஸ்டே சாப்பிடுவது இல்லை. நள்ளிரவுக்குப் பின் டின்னர் சாப்பிடுவது சாதாரணமாகி விட்டது. இருபது-முப்பது வருடங்களுக்கு முன்னால் சாப்பாடுகளின் நடுவே ஏதாவது சாப்பிட்டால் ஏளனமாய்ப் பார்ப்பார்கள். இது எப்போது மாறியது?
    இதற்கு நேரெதிராக உணவுப் பசியால் மாண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள், இதைத் தடுக்கலாம்.
    யோசித்துப் பார்த்தால் தீவிரவாதத்தை விட தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியது உணவுப் பசி தான். தீவிரவாதத்தினால் மாண்டவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். ஒரு நாள் மட்டுமாவது குறை சொல்லாது, பாலிடிக்ஸ் பண்ணாது, லஞ்சம் கொடுக்காது/வாங்காது, புறம் பேசாது, தூங்கி வழியாது சில பசித்தவர்களுக்கு புசிக்கக் கொடுத்தால் உலக அழிவை ஓரிரு தீபாவளியாவது தள்ளிப் போடலாம்

  • November 14, 2010

    இன்ன பிற – பன்றிகள், பறவைகள் மற்றும் புத்தகங்கள்

    போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

    முதலில் ஒரு அரேபிய சிறு-சிறுகதை, அதற்கு முன் ஒரு கேள்வி. ஒரே ஒரு நாவலில் உலகப்புகழ் பெற்ற Harper Lee என்னும் பெண் எழுத்தாளரைத் தெரிந்திருக்கலாம். அவரின் ஒரே நாவலான To Kill a Mocking Bird-ஐ நீங்கள் படித்திருக்கக்கூடும். அவருக்கு முன்னமே ஒரே-நாவல் பெண் பிரபலம் ஒருவர் இருந்தார். யார்?

    பாக்தாத் நகரில் வசித்துவந்த ஒரு சுல்தான் அவரது வேலைக்காரர்களில் ஒருவனை காய்கறிகள் வாங்கிவர மார்க்கெட்டுக்கு அனுப்பினார். போன சிறிது நேரத்தில் திரும்பிவந்த வேலையாள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான், “சுல்தான், மார்க்கெட் கூட்டத்தில் ஒரு பெண் என்னை நெருக்கித் தள்ளினாள். அவள் யார் என்று திரும்பிப் பார்த்தால் சாவு தேவதை. அவள் என்னைப் பயமுறுத்துகிறமாதிரி பார்த்தவுடன் ஓட்டமாக வந்துவிட்டேன். நீங்கள் தயவுசெய்து உங்களுடைய குதிரை ஒன்றைக் கொடுத்தால், என் விதியைத் தவிர்க்க, இந்நகரத்தை விட்டுப் போய்விடுகிறேன். சமாராவுக்குப் போய்விட்டால் சாவு தேவதை என்னைக் கண்டுபிடிக்க இயலாது.” சுல்தானும் அவனுக்கு மனமிரங்கி குதிரையைத் தர, முடிந்த அளவுக்கு வேகமாகக் குதிரையை முட்டித் தள்ளி ஓட்டிக்கொண்டு போய்விட்டான் வேலைக்காரன்.

    அவன் சென்றவுடன் சுல்தான் மார்கெட்டுக்கு வந்து சேர்ந்தபோதுதான், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். “காலையில் என் வேலையாளை எதற்காக பயமுறுத்தும் பார்வை பார்த்தாய்?”

    “ஐயோ அது பயமுறுத்தும் பார்வை இல்லையே, ஆச்சரியமான பார்வை. அவனை பாக்தாதில் பார்த்ததில் எனக்கோ வியப்பு. இன்றிரவு சமாராவில் அல்லவா அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு” என்றேன்.

    இந்தக் கதையை இயற்றியவர் பெயர் தெரியாது. ஆனால் இத்தனை குறைவான வாக்கியங்களில் என்ன ஒரு பிரமாதமான கதை. இந்தக் கதையை ஜெஃப்ரி ஆர்ச்சர் முதற்கொண்டு சிறு-சிறு கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் எடுத்துக் காட்டிவிட்டார்கள். தமிழில் இவ்வாறான, சுஜாதா சொன்னதுபோல, சி.சி கதைகள் வருவதே இல்லை. வாராந்திரிகளில் வரும் ஒரு பக்கக் கதையை எதிலுமே சேர்த்துக்கொள்ளக்கூடாது.

    சி.சி.கதைகளை Flash Fiction அல்லது Micro Fiction என்கிறார்கள். அவற்றை எழுத, சில எழுதப்படா விதிமுறைகள் உண்டு. கதையை கதை முடியும்போது ஆரம்பித்தல் அவசியம். அதாவது ‘கடைசியில் கதையில் நுழை, சீக்கிரமாக வெளியேறு’ என்னும் விதி. கடைசி வரி அதிர்ச்சி முக்கியம். கண்டிப்பாக ஒரே ஒரு நிகழ்வுத் தொடர்பாக இருத்தல் வேண்டும். சிறுவனாக இருப்பதில் ஆரம்பித்து ஹீரோயினை மணம் செய்யும் வரையில் 5 வரிகளில் சொன்னாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. சுவாரஸ்யமான கதைக்களன் ஒரு ப்ளஸ். ஒரு போர் நடக்கும் தெருவிலோ, அன்னிய உலகின் ஒரு சூரிய அஸ்தமனத்திலோ கதை நடக்கலாம். நல்ல சிறுகதைகள் என்றுமே மறக்கப்படுவதில்லை. இன்றைக்கு இருக்கும் கவனக் கலைப்புகளுக்கு நடுவே வாசகரைப் படிக்கவைக்க இம்மாதிரி சி.சி.கதைகள் தேவைப்படுகின்றன. Kurt Vonnegut சொன்னமாதிரி, “Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.”
    அன்பர்கள் பெஞ்சு நாற்காலிகளை விட்டெறியாத பட்சத்தில் குறிப்பெடுத்து வைத்திருக்கும் சி.சி.கதைகளை இங்கே எழுதுகிறேன்.

    oo0000oo

    இ-புத்தகங்களின் விற்பனை அதிகமாயிருப்பதாகப் படித்தேன். கொஞ்ச நாட்களுக்குமுன்புவரை, ‘படித்தால் மாண்ட மரத்தின் பேப்பரில் ப்ரிண்ட் செய்யப்பட்டதை அன்றி வேறொன்றையும் படிப்பதாயில்லை’ என்று இருந்தவர்களும் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள். கிண்டில் போன்ற இயந்திர புத்தகப் படிப்பான்களை யூஸ் செய்தவுடன் திடீரென்று புத்தக ஆர்வம் பிய்த்துக்கொள்வதாக வேறு சொல்கிறார்கள். எப்படியோ இணைய/டிவி மேய்வதைக் காட்டிலும் இது ஷேமம்.

    கிண்டிலின் விலை குறைந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் யூஸ் அண்ட் த்ரோ இ-புத்தகங்கள் வந்துவிடும். கடைக்கு போய் ராணி வாங்குவதற்கு பதிலாக ராணி என்ற அட்டை போட்ட வஸ்துவை வாங்கித் திறந்து பார்த்தால் எல்சிடி திரையில் குருவியார் கேள்வி பதில் ஓடும். மூடி வைக்கும் முன் அடுத்த வார பி.டி.சாமி ராணி முத்துவுக்கு இ-ஆர்டர் கொடுத்துவிடலாம். பேப்பர்காரர் இ-பேப்பர்காரர் என்று மலையாள வாசனையுடன் அழைக்கப்படுவார்.

    iPad போன்றவற்றுக்கும் Kindle வகையறாவுக்கும் ஆதாரமான வித்தியாசங்கள் இருக்கின்றன. iPad என்பது ஒரு கைக்கணினி. ஆகையால் இ-புத்தகத்தின் முன்னுரை படிக்குமுன் மெயில் செக் பண்ணப்போய் எதாவது facebook அக்கப்போரில் ஆஜராகி வெளிவரும் முன்னர் தூக்கம் வரலாம். கிண்டிலில் இவையெல்லாம் செய்ய முடியா. புத்தகம் அல்லது பேப்பர் மட்டுமே படிக்கமுடியும். ஆகையால் இணையத் தொல்லைகள் கம்மி.

    இவையிரண்டின் ஆடியன்ஸும் வெவ்வேறு ஆசாமிகள். iPad-ன் இணையக் கடையில் மக்கள் அதிகமாக வாங்குவது, Angry Birds என்னும் ஒரு விளையாட்டு. பன்றிகள் தங்களின் முட்டைகளை தூக்கிக்கொண்டு போய்விட்டதால் கோபப்படும் பறவைகள் தங்களை உண்டிக்கோலில் வைத்துக்கொண்டு எறியச் சொல்கின்றன. விளையாடுபவர் அதை இழுத்து அடித்தால் அவை சென்று பன்றிகளை தாக்குகின்றன. இதே கிண்டிலின் இணையக் கடையில் பெஸ்ட்செல்லராக இருப்பது, Steig Larsson எழுதிய The Girl with a Dragon Tatoo என்னும் புத்தகம். புரிகிறதா?

    oo0000oo

    கார்பரேட்டுகள் அறவழியில் நடக்கிறார்களா என்பது சம்பந்தமான ஒரு டிவி நிகழச்சியை ரசித்துப் பார்த்தேன். சாட்டிலைட் சானல் பட்டிமன்றம் போல் காச்மூச்சென்று கத்தாமல், மற்றவன் மனைவியைச் சண்டைக்கு இழுக்காமல் தலைப்புடன் ஒட்டிப் பேசினார்கள். என்னதான் கார்ப்பரேட் என்றாலும், லாபத்துக்கு மட்டுமே செயல்படும் ஸ்தாபனமாக இருந்தாலும், ethics என்பது அவர்களுக்கும் உண்டு. காரணம் தனி மனிதனைப்போல் இந்த சொசைட்டியில் அவர்களும் ஒர் அங்கம் என்பதால்.

    லாபத்துக்கு ஓடும்போதும் காம்படிஷனுக்கு ஆட்படும்போதும் ஆங்காங்கே நெறி தவறுவது இப்போதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் corporate ethics என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் Pixar Animation Studios. Wall-E என்னும் படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் ட்ரைலர் ரிலிஸ் செய்துவிட்டார்கள் ஆனால் படத்தின் கதை விவாதத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. படத்தில் வேலை செய்யும் அனிமேட்டர்களை எப்படி inspire செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள் Pixarகாரர்கள்.

    கிட்டத்தட்ட அதே சமயம் கோர்ட்னி என்னும் ஒரு பெண், தினமும் Wall-E ட்ரைலரைப் பார்ப்பதாகவும் அதில் வரும் அந்தக் குட்டி ரோபோ அழும்போது தினமும் அழுவதாகவும் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். தான் அழும் அந்த வீடியோவையும் யூ-ட்யூபில் போட்டிருந்தார். இதை எப்படியோ படித்த/பார்த்த Pixar டீம், தாங்கள் எடுக்கும் படங்கள் எப்படியெல்லாம் மனிதர்களைத் தொடுகின்றன என்று நினைத்தார்கள். தினமும் காலையில் அந்தப் பெண் அழும் வீடியோவைப் பார்த்தார்கள், இன்ஸ்பயர் ஆனார்கள். படம் வெளிவந்தது.

    இந்தப் படம் வர மிகவும் உதவிய அவளையும் அவள் பாய் ப்ரண்டையும் விமானத்தில் கூட்டிவந்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து, படத்தின் டீமுடன் ஒரு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் (http://blog.moviefone.com/2008/07/02/pixar-honors-the-girl-who-cried-at-the-wall-e-teaser/ ). இத்தனையும் எந்தவித விளம்பரமும் இல்லாமல். அதற்குப்பின் அந்தப் பெண் அதைப் பற்றி வலைப்பதிவில் எழுதியவுடன்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

    யாருக்கும் தெரியாதபோதும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எதையாவது செய்வீர்களா? உங்கள் மானேஜர் லீவில் இருந்த அன்றும் எப்போதும்போல் வேலை செய்வீர்களா? ரொம்ப சிம்பிளாக, அதுதான் ethics.

    oo0000oo

    விடை: Wuthering Heights எழுதிய ப்ராண்ட்டி சகோதிரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்ட்டி (Emily Bronte). ப்ளாஷ்பேக்களின் முலமாக முன்பும் பின்புமாகச் சொல்லப்பட்ட பிரபல நாவல்.

←Previous Page
1 … 24 25 26 27 28 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 25 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar