kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • December 21, 2010

    இந்த வாரம் எப்படி?

    ரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள், கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.

    சுவாரசியமாய் ஒன்றுமேயில்லை. ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன். அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம். ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா?

    0000

    பாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது. சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும். கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.

    பத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒரு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.

    சட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.

    பள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும், ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள். திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன. இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.

    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
    அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
    எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
    எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
    எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

    0000

    வாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்‌ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

    1. இந்த வாரம் எப்படி?
    2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.
    3. கோலிவுட் ரவுண்ட்-அப்
    4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்
    5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை
    6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு

    இப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா? இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

    இவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.

    0000

    சமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது. ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம். அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.

    இந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத்து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம். இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.

    இம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும், பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.

    – இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

  • December 14, 2010

    ஒரு படமும் சில பழைய ரிக்கார்டுகளும்

    ‘இந்த வருடத்தின் சிறந்த’ லிஸ்ட்டில் அடுத்தது, சிறந்த தமிழ்ப் படம். என்ன தான் டப் செய்தாலும் தமிழ் நாடு தாண்டி இந்தக் கதை புரியாது என்று தெரிந்தும் மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட பெரிய ரிஸ்க். ஆயிரத்தில் ஒருவன். கடைசியில் காட்பாடி தாண்டி ஆந்திராவில் பிய்த்துக் கொண்டு ஓட, தமிழ் கூறும் நல்லுலகம் கதை புரியவில்லை என்ற பழைய ரிக்கார்ட்டை தேய்த்துக் கொண்டிருந்தது.

    இந்த மாதிரி 263 நாட்கள் படம் எடுத்தார்கள், 32 கோடி செலவு செய்தார்கள் என்ற நம்பர் சாதனைகளைத் தாண்டி, இந்தப் படம் பார்க்கும் போது என்னை ஆக்கிரமித்து கொண்டு விட்டது. அதாவது என்னையும் மறந்து முத்து, அனிதா மற்றும் லாவண்யாவுடன் நானும் கடல் மலைகளை தாண்டிச் சென்றேன், சோழ இளவரசனை(!) சந்தித்தேன், பைத்தியம் பிடிக்க ஓடினேன், சங்கம் வளர்த்த பாண்டியர்களை கடிந்து கொண்டேன், தஞ்சைக்காக ஏங்கினேன். நல்ல படம் என்பது பார்க்கும் உங்களை எதாவது வகையில் மூவ் செய்ய வேண்டும். தியேட்டரை விட்டு ஓட வைக்க வேண்டும் என்பதல்ல. எதாவது வகையில் பாதிக்க வேண்டும்.

    ஆயிரத்தில் ஓருவனின் எழுத்தும் ஆக்கமும் தமிழ் சினிமாவில் ஒரு அரிய சாதனை. தனக்கு முன் இருந்த அத்தனை தமிழ் ப்ளாக்பஸ்டர் இயக்குநர்களையும் ஒரேடியாக அசுரத்தனமாக தாண்டி சென்ற செல்வாவிற்கு இவ்வருட சிறந்த திரைக்கதையாசிரியர் விருது. இவ்விருது எல்லாம் கொடுத்து செல்வராகவனை ஏமாற்றி விடாமல், டிவிடி வாங்கி படத்தை ஒருமுறையோ மீண்டும் ஒருமுறையோ பார்த்து விட்டு டுவிட்டரில் வாழ்த்தினால் சந்தோஷப்படுவார். இதைத் தவிர செய்ய வேண்டியது, இந்த மாதிரி அபாரத் திறமைகளை இந்திப் பக்கம் போய்விடாமல் பார்த்து கொள்வது.

    0000

    இந்த வாரம் ஒரு சிறுகதை.

    “ஸ்ச்ச்….ஆஃப் பண்ணிட்டு வந்திருக்கணும், இத்தன்னேரம் வீடு எரிஞ்சுண்டு இருக்கும்”

    “ ஆமா…இதையே சொல்லிட்டு வா, நீ தானே போட்ட, அப்புறம் என்ன”

    “நான் தான் ரோட்ட விட்டு திரும்பும் போதே சொன்னேல்ல போய் ஆஃப் பண்ணிட்டு வரேன்னு, நீ தான் சகுனம் அது இதுன்னு. உனக்கு ஷாப்பிங் வரணும், எதையாவது தேவையில்லாதத வாங்கணும்” என்று சொல்லிக் கொண்டே ஷாப்பிங் கார்ட்டை வேகமாக தள்ளினான் கல்யாண்.

    ”டாட் ஸ்லோ டாட், பயமாயிருக்கு” என்று மிரண்டாள் விது. முன்னே முனகிக் கொண்டே போய்க் கொண்டிருந்த சுபா, விது சொன்னது கேட்டு திரும்பினாள்.

    “அப்பா சாமி, ஆள விடு…என் குழந்தைய ஒன்னும் பண்ணாத போ போய்டு வா” என்று சுபா கும்பிடு போட, மேஸீஸ் கடையில் கிறிஸ்துமஸ் துணி எடுக்க வந்தவர்கள் பாஷை புரியாமல் திரும்பிப் பார்த்தார்கள்.

    கல்யாண் பல்லைக் கடித்தான். “ நிக்காத போய்ண்டே இரு.. எல்லாரும் பாக்கறாங்க… எவனாவது 911ன்னு கூப்பிட்டுறப் போறான். அப்புறம் சிங்கி தான் அடிக்கணும்” என்று கார்ட்டை தள்ளிக் கொண்டு நடந்தான்.

    “கொஞ்சம் நிறுத்து. நானும் என் பொண்ணும் எப்படியாவது போய்க்கறோம். நீ போய் உன் எரிஞ்சுட்டு இருக்கிற வீட்டை பார்த்துக்கோ. முடிஞ்சா பாஸ்போர்ட்டை எடுத்து வை. இந்த மிஷிகன் விண்டர் தாங்க முடியல. நாங்க மெட்ராஸுக்கு போறோம். நீ வீட்ட கட்டிண்டு அழு” நடந்து கொண்டே சொன்ன சுபா, கல்யாணின் கையை தட்டி விட்டு, கார்ட்டை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். கார்ட்டில் உட்கார்ந்திருந்த விது இந்த களேபாரத்திலும் மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு நிமிடங்களுக்கு முன், வீட்டை விட்டு ஷாப்பிங்கிற்கு கிளம்புவதற்கு முன், ஜாக்கெட் க்ளவுஸ் எல்லாம் போட்டு கொண்டு, வெளியே வீட்டின் மேல் படரவைத்திருந்த ஹாலிடே லைட்ஸின் ப்ளக்கை போட்டான் கல்யாண். கொஞ்சம் தள்ளிப் போய் நின்று அந்த தொங்கும் சீரியல் விளக்குகளின் அழகை சுமார் 8 செகண்டுகளுக்கு பார்த்துக் கொண்டிருக்க, சுபாவும் விது ரெடியாகிவிட, ஓடிப் போய் காரை ஸ்டார்ட் செய்து ஹீட்டரை போட்டான். காரை எடுத்து கொண்டு ரோட்டை திரும்பும் போது அவனுக்கு உரைத்தது. அந்த லைட்டுகளை ஆஃப் செய்து விட்டு வந்திருக்கலாம்.

    “ஐ திங்க் லைட்ட ஆஃப் பண்ணிட்டு வந்திருக்கணும். மழை வரா மாதிரியிருக்கு, எதாவது வயர் கியர் ஷார்ட் ஆகி வீடு பத்திக்கும்” என்றவனை தலையில் அடித்துக் கொண்டு தள்ளிக் கொண்டு வந்தாள் சுபா. வரும் வழியிலெல்லாம் கரண்டைப் பற்றியும், அமெரிக்க மர வீடுகளை பற்றியும் லெக்ட்சர் அடித்துக் கொண்டு வந்தவனை செய்வதறியாது பார்த்துக் கொண்டு வந்தாள். விது வெளியே தெரியும் கார்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஐம்பதுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தாள்.

    ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக்கொண்டு போய் கண்ணை விட்டு மறைந்து போனாள் சுபா. ரொம்ப தூரமில்லை, ஒரு பதினேழு மைல்கள் தான், சீக்கிரம் போய்விட்டு லைட்டை அணைத்துவிட்டு வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே கல்யாண் கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

    மால் முழுவதும் ஏராளமான சீரியல் லைட் செட்டுகள் போட்டிருந்தார்கள். ”இதெல்லாம் ஷார்ட் ஆகாம நம்ம வீட்டு லைட் மட்டும் எப்படி ஷார்ட் ஆகும். ஒருவேளை சுபா சொல்ற மாதிரி எனக்கு OCD வியாதி தான் போல இருக்கு” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே நடந்தான்.

    காரை ஸ்டார்ட் செய்து ஹெட்லைட்டை ஆன் செய்தான். பளிச்சென்று எதிரில் இருந்த கண்ணாடியில் அதன் பிரகாசம் தெரித்து கல்யாணின் கண்ணில் அடித்தது. ரிவர்ஸ் எடுக்கும் போது செல்போன் வைப்ரேட் ஆனது. அப்படியே ரிவர்ஸை மாற்றி காரை மீண்டும் பார்க்கிங் செய்தான். ஃபோனை எடுத்து பார்த்த போது, சுபாவின் மிஸ்டு கால் என்று தெரிந்தது.

    ஃபோனைப் பார்த்தவுடன் தான் கல்யாணுக்கு அந்த ஐடியா தோன்றியது. “வீட்டுக்கு போன் பண்ணிப் பார்க்கலாம், லைட் ஷார்ட் ஆகி வீடு எரிஞ்சிண்டு இருந்தா, ஃபோனும் எரிஞ்சு போயிருக்கும், அதனால ரிங் போகாது. அப்படியே ரிங் போனா எவ்ரிதிங் ஈஸ் குட்”

    வீட்டு நம்பரை அழுத்தினான். வீட்டில் ரிங் அடித்து ஓய்ந்தது. ”வாவ், ஆஸ்ஸம்” என்று சற்று சத்தமாய் சொல்லிக் கொண்டான். காரை அப்படியே விட்டு விட்டு, மீண்டும் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

    சுபாவின் செல்லுக்கு ஒரு ஃபோன் போட்டான். “சுபா கண்ணு சாரிம்மா…. என்னது? நான் எங்கயும் போகல. நீ எங்க இருக்க சொல்லு, காபஷீனோ வாங்கிட்டு வரேன்” என்று துள்ளினான்.
    காபி கடையில் லைனில் நிற்கும் போது, மீண்டும் சந்தேகம் வர, மீண்டும் வீட்டிற்கு ஒரு போன் போட்டு பார்த்துடலாம் என்று எண்ணி தன் செல்போனின் வீட்டு நம்பரை அழுத்த, செல்போனின் இருந்து புறப்பட்ட ரேடியோ அலைவரிசைகள் அருகில் இருந்த செல்போன் டவரை சென்றடைய, அது சாட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ள, அங்கிருந்து புறப்பட்ட கதிர்கள் வீட்டு டெலிபோன் நிறுவனத்தை தொடர்பு கொள்ள, ரேடியோ அலைகள் மாறி ஆறு மெகா ஹெட்ர்ஸ் வீரியத்தில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த எலக்ட்ரான்ஸை தாக்கி அவைகள் சட்டென பயணிக்க, கல்யாணின் வீட்டில் இருந்த கேபிள் மோடத்துடன் இணைக்கப்பட்டிருந்த டெலிபோனை அடைந்தவுடன் அது ரிங் அடிக்க அரம்பிக்க, “ஸ்..யப்பா வேலை முடிந்தது” என்று மீண்டும் திரும்பிப் போய் கல்யாண் காதுகளை எப்படியோ அடைந்தன.

    பெருமூச்சுடன் போனை கட் செய்த கல்யாணுக்கு தெரியாத விஷயம் ஒன்று – புயலாய் விரைந்த எலக்ட்ரான்ஸ்களில் ஒன்றே ஒன்று வெகுவேகமாய் சென்று டெலிபோனைத் தாக்க, ஐந்து வருடங்களாக யூஸ் செய்யப்பட்ட அந்த டெலிபோன் ரிங் அடிக்க ஆரம்பித்தாலும், அந்த மெகா வேகத்தை தாங்க முடியாமல் சின்னதாய் தீப்பொறியாய் வெளியேறி வயரை காயப்படுத்த, தீ மெலிதாக ஆனால் சீராக பரவிக் கொண்டிருந்தது.

    – இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

  • December 11, 2010

    ஐயய்யோ ஒரு சாதனை!

    டான் கில்பர்ட் மற்றும் டான் எரய்லி போன்ற சோஷலாஜிஸ்ட்டுகள் மனித மனங்களை பற்றிச் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. மனிதன் நடுநிலையுடன் யோசிக்கிறான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தனக்கு தேவையான விஷயங்களில் கூட அசமஞ்சமாகத் தான் செயல்படுகிறான். இரண்டு பிரபல உதாரணங்கள்-

    உங்கள் பர்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் ஒரு ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சத்யம் தியேட்டரை சென்று அடையும் போது டிக்கெட் காணாமல் போய் விடுகிறது. கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்பீர்களா இல்லையா?

    இந்த முறை உங்களிடம் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. சத்யத்தை அடையும் போது, ஒரு ஐம்பது ரூபாய் காணாமல் போய் விடுகிறது. இப்போது என்ன செய்வீர்கள், கையில் இருக்கும் ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்குவீர்களா இல்லை வறுத்த வேர்க்கடலை கொறித்துக் கொண்டே திரும்பி வந்து விடுவீர்களா?

    இதைப் பலரிடம் கேட்டுப் பார்த்த டான் கண்டுபிடித்தது, முதல் உதாரணத்தில், பலர் சினிமா பார்க்காமல் திரும்பி வந்து விடுவேன் என்றார்கள். ஏன் என்று வினவிய போது, மீண்டும் ஒரு முறை ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டிற்குக் கொடுக்க விருப்பமில்லை என்றார்கள். அடுத்த உதாரணத்தில் கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவேன் என்றார்கள்.

    இரண்டு உதாரணங்களிலும் காணாமல் போனது இரண்டு பேப்பர்கள் தான். ஒன்றில் சத்யம் என்று போட்டிருக்கிற ஒரு ஐம்பது ரூபாய் டிக்கெட். அடுத்ததில் காந்தி படம் போட்ட ரூபாய். ஆனால் மனித மனமோ முதல் உதாரணத்தில் டிக்கெட் விலையை இரட்டடிப்பாக ஆக்கிக் கொள்கிறது, அடுத்த முறை தன் விதியை நொந்து கொள்கிறது.

    இதே போல் அடுத்த ஒரு சிச்சுவேஷன், நீங்கள் வாங்க நினைத்த கார் ஸ்டீரியோ உங்கள் வீட்டின் அருகே தி.நகரில் ஆயிரம் ரூபாய்க்கும் பாரீஸ் கார்னரில் தொள்ளாயிரத்திற்கு கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்? கொஞ்ச நாள் கழித்து நீங்கள் வாங்க நினைக்கும் கம்ப்யூட்டர், தி.நகரில் 50,000க்கும் பாரீஸ் கார்னரில் 49,900க்கும் கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்?

    மக்கள் சொன்ன பதிலும், நீங்கள் நினைத்த பதிலும் ஒன்றே தான். கார் ஸ்டீரியோவிற்கு பாரீஸ் கார்னருக்கும், கம்ப்யூட்டருக்கு தி.நகருக்கும் செல்வதாய்ச் சொன்னார்கள். இரண்டிலும் விலை வித்தியாசம் ஒன்றே தான், நூறு ரூபாய். அதே நூறு ரூபாய். இரண்டையும் முடிவு செய்வது உங்கள் மனம்.

    ஆக மனிதர்களும் அவர்கள் மனங்களும் கால்குலேட்டர்கள் அல்ல. இதில் நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்கிறது. என்ன தான் யோசித்து முடிவெடுக்கும் மனிதர் கூட கார் ஓட்டிக் கொண்டே டெக்ஸ் செய்கிறார், ரெட் லைட்டைச் சட்டென தாண்ட முயல்கிறார். மனிதர்கள் கால்குலேட்டர்களாய் இருந்தால், விபத்துகள் நடக்க வாய்ப்பேயில்லை. காரில் airbag இத்தியாதி எல்லாம் தேவையில்லை.

    0000

    காரைப் பத்தி பேசும்போது, கடந்த நூறு வருடங்களில் ஆட்டோமொபைல் டெக்னாலஜி கிட்டத்தட்ட வளரவேயில்லை. கிட்டத்தட்ட. ஆட்டோமொபைல் எனும் வார்த்தையில் மொபைல் உண்மையாகிவிட்டது. கார் போன்ற வாகனங்களால் நாம் இடம் பெயர்கிறோம். ஆனால் ஆட்டோவாக இல்லை. அதாவது இன்னமும் ஓர் ஆட்டோமொபைலை ஓட்ட ஆசாமி தேவைப்படுகிறார்.
    மக்கள் வாங்கக் கூடிய விலையில் முதல் காரை தயாரித்த ஹென்றி போர்ட்(Henry Ford) சொன்ன ஒரு விஷயம் – “If I asked my customers what they want, they simply would have said a faster horse.” எங்கள் கம்பெனி போய் மார்க்கெட் வாக்கெடுப்பு எடுத்திருந்தால் வேகமான குதிரைகளை தான் எங்கள் வாடிக்கையாளர்கள் கேட்டிருப்பார்கள். கார் வேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே தான் யாரையும் கேட்காமல் நாங்களாகவே மக்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்தோம் என்றார். ஆனால் அதற்குப் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளாக நான் அந்தக் காரை வேகமாக செலுத்துவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவை அடுத்த ஹென்றி போர்ட் மற்றும் உண்மையான ஆட்டோ மொபைல்.

    இந்தக் காரை கண்டுபிடிக்கும் முன் ஒரு நாள் தனது எஞ்சினியர்களை கூப்பிட்டு அனுப்பினார் போர்ட். அவர் சொன்னது -” I dream of a machine that runs on wheels and is driven by an engine. Go find it” இந்த மாதிரியான அடுத்த ஒரு visionary-க்காகத் தான் உலகம் இன்னமும் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது.

    0000

    சமீபத்தில் படித்த Program or be Programmed என்னும் புத்தகத்தில் இது சுவாரஸ்யமான விஷயமாகப்பட்டது. எல்லோரும் சாப்ட்வேர் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனை. இருக்கிற எஞ்ஜினியர்கெல்லாம் முதலில் வேலையிருக்கிறதா என்ற கேள்வியை தள்ளி வைத்துப் பார்த்தால், இதில் கொஞ்சம் நன்மையிருக்கிறது.

    எனக்கு ப்ரோக்கிராமிங் சொல்லிக் கொடுத்த வாத்தியார் முதலில் சொன்னது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்கிராமிங் கேள்வி ஒரு கண்ணாடி போல. முதலில் கீழே போட்டு உடைத்து விடுங்கள். உடைந்த சில்லுகளை ஆராய்ந்து பாருங்கள், ப்ரோகிராம் எழுத உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். எல்லா விஷயங்களும் இப்படித்தான். எல்லா கடினக்காரியங்களையும் சிறு சிறு கடினங்களாக ஆராய்ந்து முடிவெடுத்தால் அந்த பெரிய விஷயத்திற்கு முடிவு கிடைத்து விடும். இதே மாதிரி சிந்திப்பதற்குத் தான் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் டக்லஸ் ரஷ்ஆஃப்.
    இதையும் தாண்டி நம்மை சுற்றியுள்ள விஞ்ஞான உலகை அறிந்து கொள்ள ப்ரோக்கிராமிங் உதவும் என்று வாதிடுகிறார். புத்தகம் விற்று தீர்ந்தாகிவிட்டது.

    0000

    இந்த வருடத்தின் சிறந்த என்று போட்டு வரும் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் நேரமிது. முந்திக் கொள்கிறேன். இந்த வருடத்தின் சிறந்த தமிழிசை அமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்.
    போன வருடமே இசை வெளிவந்து விட்டது என்றாலும் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது இந்த வருடம் என்பதால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அதோ அந்தப் பறவை ரீமிக்ஸை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் பிரமாதமான காம்பொசிஷன்கள். ரொம்பவும் பிடித்தது, ஓ ஈசா பாடல்.

    வ.கு.கட்டிங் படத்தில் உன்னைக் கண் தேடுதே பாடல் ரொம்பவே கடினமான பாடல். கேட்டுப் பாருங்கள், ஆரம்ப கால ஏ.ஆர். ஆர் தெரிவார்.

    சமீபத்தில் வெளியான தனுஷ்-வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் அய்யய்யோ(பாட்டின் பெயர் தான்) பாடல் ஒரு சாதனை. ரொம்பவே சாதாரணமாகத் தோன்றினாலும் இரண்டுமுறை கேட்டால் எஸ்.பி.பியின் குரலுக்கு மீண்டும் ஆட்படுவீர்கள். மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். ஆங்காங்கே இஞ்சி இடுப்பழகு தெரியலாம். ஒத்த சொல்லால மற்றும் யாத்தே எனும் பாடல்களும் அட சொல்ல வைக்கின்றன.

    இந்த வருடம் பிடித்த வேறு சில பாடல்கள்: ஷ்ரேயா கோஷல் – ரஹ்மான் – மன்னிப்பாயா, ஆண்ட்ரியா-அஜீஷ் – இது வரை இல்லாத, கார்த்திக் – உசுரே போகுதே மற்றும் ஆண்ட்ரியா – Who’s the Hero?(மன்மதன் அம்பு). மற்றபடி அழகான ஹீரோயின்களும் வெகு அழகாக பாடுகிறார்கள் என்பது தான் இந்த வருடத்தின் வகைப்படுத்த முடியாத சாதனை.

    – இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

  • December 5, 2010

    புரட்சியாளன் கதை

    போன வாரம் நடந்த நிகழ்ச்சிகள் சில –

    1. இன்ன இன்ன மத்திய மந்திரி இன்ன இன்ன ஊழலில் லஞ்சம் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள்.
    2. இன்ன இன்ன எதிர்க்கட்சி போர்க்கொடி தூக்க, இன்ன இன்ன பிரதமர் பேசாமடந்தையாய் இருந்தார்.
    3. இரண்டொரு நாளில் தொல்லை தாங்க முடியாமல் இ.இ மந்திரி ராஜினாமா செய்தார்.
    4. இன்ன இன்ன எதிர்க்கட்சி இந்த நியாயம் கிடைத்ததற்கு தான் தான் காரணம் என்றது.
    5. இந்தக் கணத்தில் இதில் சம்பந்தபட்ட இன்ன இன்ன லாபியிஸ்ட் ஒருவருடன் பலர் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் இன்ன இன்ன பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.
    6. இந்த இ.இ உரையாடல்கள் இ.இ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
    7. வேலை நேரத்தில் தத்தம் திரைகளில் ஃபேஸ்புக்கில் வம்பிக் கொண்டிருந்த இ.இ குடிமகனுக்கு பல நண்பர்கள் இந்த உரையாடல் லிங்க்கை அனுப்பி வைத்தார்கள்.
    8. இந்த இ.இ. உரையாடலை கேட்டு கொதித்துப் போன அவன் தன் பல நண்பர்களுக்கும் அதை அனுப்பி வைத்தான்.
    9. அவர்களும் வேலையை விட்டுவிட்டு இதைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
    10. உரையாடலில் பேசியது இ.இ தொலைக்காட்சி நிரூபினியா இல்லையா என்று # போட்டு டுவிட்ட ஆரம்பித்தார்கள்.
    11. அது சம்பந்தமாக சில வலைபதிவுகள் உருவாக்கப்பட்டன. பல எதிர்வினைகள் எழுதப்பட்டு இணைய பாண்ட்வித்தை அடைத்துக் கொண்டன.

    இந்த வார நிகழ்ச்சி நிரல்-

    1. இ.இ குடிமகன் இ.இ தேதியில் வெளியாகப் போகும் இ.இ. ஸ்டாரோ, நாயகனோ நடித்த புதுப் படத்தின் ட்ரைலர் பார்க்க ஆரம்பிப்பான்.
    2. இ.இ நண்பர்களுக்கு அந்த லிங்கை அனுப்புவான்.
    3. இ.இ நண்பர்களும் அதைப் பற்றி டுவிட்ட ஆரம்பிக்க, இ.இ அரசியல்வாதி பழைய படி ஆரம்பித்துவிடுவார்.
    4. இ.இ நிரூபினி பிரபலமாகி இ.இ சபாவிற்கு பரிந்துரை செய்யப்படுவார்.
    5. இ.இ நண்பர்கள் குழாம் இந்தப் பரிந்துரையை ஆதரித்துக் கொண்டிருப்பார்கள்.
    6. இ.இ நாட்டில் எல்லாம் ஷேமமாயிருக்கும்.

    இன்ன இன்ன என்றிருக்கும் இடத்தில் பெயர் மாறிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் புதிதாய் நடப்பதில்லை. அஷ்டே!

    0000

    ஞான ராஜசேகரனின் பாரதி படத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப்படம் கண்டிப்பாக வியாபார நோக்கங்களை மீறியது. பிரமாதமாக எடுக்கப்பட்ட இந்தியப் படம். இதை இந்திய மொழிகளில் டப்…வேண்டாம் சப்-டைட்டிலாவது செய்து ஸ்டார், சோனி சானல்களில் ஒரு சனிக்கிழமை மதியம் ஒளிபரப்பலாம். நமக்கும் இம்மாதிரி ஆத்தெண்டிக்காக பீரியட் படமெடுக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    ஷாயாஜியில் ஆரம்பித்து தேவயானி, பாரதி மணி, நிழல்கள் ரவி என சின்ன சின்னச் ரோல்களில் கூட அழுத்தமான திறமை. இளையராஜாவின் மயக்கும் வயலின்கள், பி.கிருஷ்ணமூர்த்தியின் நேர்த்தியான கலை, வி.டி. விஜயனின் எடிட்டிங், ஞா.ரா.சேகரனின் இயக்கம் என பல நல்ல விஷயங்கள். இவையெல்லாம் தாண்டி பாரதி என்னும் புரட்சியாளனின் உண்மைக் கதை.

    பாரதியின் சம்பவங்கள் நிறைந்த பயோகிராபியில் ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகள். காதலை பற்றிக் பேசிக் கொண்டிருக்கும் கொஞ்சம் நெகிழ்வான காட்சியில் திடீரென பாரதி அதிர்ந்து சொல்லும், ஆதலினால் காதல் செய்வீர் போன்ற வரிகளில் தமிழ் விளையாடுகிறது.

    நான் பள்ளியில் படிக்கும் போது பிலிம் ஷோ என்று சிறந்த படங்களின் ரீல்களை வாங்கி வந்து லைப்ரரி தரையில் உட்கார வைத்து புரஜக்டரில் படம் காட்டுவார்கள். இப்பொழுதெல்லாம் இப்படி உண்டா என்று தெரியவில்லை. எல்லா பள்ளிகளிலும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த மாதிரிப் படங்களை வருடங்களுக்கு ஒரு முறையாவது பிலிம் ஷோ போல போட்டுக் காட்ட வேண்டும் என்று
    சட்டம் வர வேண்டும்.

    பாரதி இன்னும் பார்க்கவில்லையென்றால் பரவாயில்லை, இந்த வருட டிசம்பர் 11க்குள்ளாவது பார்த்துவிடுங்கள். அமேஸிங் அனுபவம்.

    – இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

  • November 25, 2010

    இயேசுநாதரும் பி.சி. ஸ்ரீராமும்

    இப்போதெல்லாம் டிசம்பர் சீசன் போய் நவம்பராகி விட்டது. பட்டாசு வாசனை போவதற்கு முன் கச்சேரி காண்டீன்களில் அடுப்பு பற்றவைத்தாகி விட்டது. வழக்கமாக நவம்பரில் ஷோபனா, அனிதா ரத்னம் போன்றவர்களின் alternative dance festival தான் நடைபெறும். ஸ்ரீநிதி கூட டிசம்பரில் தான் நிகழ்ச்சி செய்வார். ஓப்பனிங் வீக்கெண்டில் கல்லா ஃபுல்லாக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டிங் போல, கடந்த சில வருடங்களாக ஒரேடியாக நவம்பரிலேயே தம்புரா சகிதம் ஆஜராகிவிடுகிறார்கள்.

    சென்னையில் சீசன் ஆரம்பிக்கிற நேரமாகிவிட்டது என்று தெரிவதற்கு இந்து பேப்பர் படித்தல் முக்கியம். இந்துவும் சமீபமாக நவம்பர் பெஸ்ட் போன்ற விழாக்களை ஸ்பான்ஸர் செய்கிறார்கள். இந்தப் படங்களை பார்த்தால் கச்சேரிகளின் who’s who தெரியவரும். இதில் ப்ரம்ம கான சபா தலைவர் நல்லி செட்டியார் தான் மிஸ்ஸிங்.

    சென்னை வாழ் தமிழ் மகா குடிமகனுக்கு சாஸ்திரிய இசையில் ஆர்வமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. கண்கள் இரண்டால் பாட்டு வந்த பொழுது ரீதிகெளளை ராகத்தை பற்றி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லோரும் பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோம். வருடத்திற்கு சுமார் இரண்டு சதவிகித சென்னைவாசிகள் மட்டுமே ஒரு கச்சேரியாவது கேட்கிறார்கள் என்று பட்சி சொல்கிறது. மற்றவர்கள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இரண்டை நாலாக்க நாமெல்லோருக்கும் சில யோசனைகள் –
    நம்பர் ஒன் – சிந்து பைரவியிலிருந்து சொல்லி வரும் விஷயம், தமிழில் கொஞ்சமாவது பாடுங்கள். அட்லீஸ்ட் 33% ஆவது தமிழில் இருக்கவேண்டும் என்று சபா மேலாளர்கள் அட்வான்ஸ் கொடுக்கும்போது பேசிக் வைக்கலாம். முன்னமே சொன்ன அவாள் இசை அவங்க இவங்க இசை ஆவதற்கு இது ரொம்பவும் முக்கியம். மேலும் ப்ராக்டிகலாகப் பார்த்தால், தமிழில் பாடினால் புரிகிறது. புரியாத இசையை ரசிக்க அதை ரொம்ப நேரம் கேட்க வேண்டும். இந்த diminishing attention span கலாசாரத்தில் இது ரொம்பவும் கடினம்.

    டிசம்பரை ஹாலிடே சீசனாக பாவித்து குடும்பத்துடன் ஓரிரு நாட்கள் டிவி, சினிமா அல்லாத எதோ ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குச் சென்று வரலாம். இசைதான் என்றில்லை, கூத்துப் பட்டறை நாடகமோ, க்ரேஸியின் துணுக்குத் தோரணமோ, கதா காலட்சேபமோ, பல இருக்கின்றன. இரண்டொரு நாட்கள் சீரியல்களைத் தவற விட்டால் எந்தக் கதையும் ஓடிப்போய் விடாது.
    குழந்தைகளை பாட்டு க்ளாசில் சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களை சீசனுக்கு இரண்டு மூன்று கச்சேரிக்காவது அழைத்துப் போங்கள். குருசரண், சு.ரகுநாதன் கச்சேரி தான் என்றில்லை. அவற்றின் டிக்கெட் கட்டுப்படியாகாமல் போகலாம். மதியம் இரண்டிலிருந்து நான்குவரை நடக்கும் இலவச கச்சேரிகளுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். காண்டீன் மூக்கை தொலைக்காது, பட்டுப் புடைவை கண்ணை டாலடிக்காது, நடுநடுவே சீட்டனுப்பும் காமெடியெல்லாம் இல்லாது புதியவர்களின் இசையை சுகமாக ரசிக்கலாம்.

    கச்சேரி முடிந்தவுடன் பின்பக்கமாக எஸ்கேப் ஆகாமல், சபையிலிருந்து இறங்கி வந்து கொஞ்சம் ரசிகாஸுடன் கலந்து பேசிய பின் கலைஞர்கள் வீடு திரும்பலாம் அல்லது அடுத்த கச்சேரிக்குத் தொண்டையை ரெடி செய்யலாம். போன வருடம் மியூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி முடிந்தவுடன் அடித்து பிடித்துக்கொண்டு சஞ்சய் சுப்பிரமணியன் காரில் விரைந்ததைப் பார்க்க முடிந்தது. அவரின் பின்னே ஒரு பத்து பேராவது பேசலாம் என்று வந்து கொண்டிருந்தார்கள். இத்தனை ஓட்டமாய் வருபவர் கண்டிப்பாக தீவிர ரசிகராக இருந்தே ஆகவேண்டும். சில நிமிடங்கள் நின்று பேசிப் போயிருந்தால் அந்தப் பத்து இதயங்களை வென்றிருப்பார்.

    சின்னஞ்சிறு கிளியே என்று அதே கிளியை எல்லா சபாவிலும் கூப்பிடாமல் பல்வேறு பாட்டுகளையும் வோக்கலிஸ்ட் தேர்ந்தெடுக்கலாம். அதே மாதிரி தங்களுடைய முத்திரைகளைத் தாண்டி எல்லா இசை நுணுக்கங்களையும் அணுகிப் பார்க்கலாம். அருணா சாயிராமுக்கு எத்தனை சீட்டு வந்தாலும் ஒரு கச்சேரியிலாவது அபங் பாடாமல் இருக்கலாம்.

    மற்றபடி –

    டி.டி.கே ரோடு ஏவிஎம் சங்கரா ஹாலில் நடக்கும் இசை/புத்தக/வீடியோ கண்காட்சிக்கு சென்று வாருங்கள். தனியார் கண்காட்சிதான் என்றாலும் இது போல எல்லா இசை சிடிக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பது கடினம். அதே நேரத்தில், நானும் கர்னாடிக் கேட்கிறேன் பேர்வழி என்று இரண்டாயிரம் ரூபாய்க்கு சீடி வாங்கி எல்லாவற்றிலும் தூசி படிய வைப்பதிலும் உபயோகமில்லை.

    மக்மல் பூரி எந்த காண்டீனில் கிடைக்கிறது என்று தேடி சாப்பிடலாம். போன வருடம் நாரத கான சபாவில் கிடைத்தது.

    n.shree just started, seems like a bad throat day. still awaiting the abheri classic – murugan song. #kutcheri போன்ற டுவிட்களை கச்சேரியின் இடைவேளையில் செய்யலாம். இரண்டு சாதகங்கள் – பின் தொடரும் நண்பர்களிடம் கொஞ்சம் ஜெர்க் விடலாம். கச்சேரிக்கு செல்வது ‘the in-thing” என்ற ஒரு ஃபாஷனை உருவாக்கலாம்.

    0000

    தாங்ஸ் கிவ்விங் தினத்திற்கு அமெரிக்கா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் மதச் சடங்காக ஆரம்பித்தது பின்பு சமூக வழக்கமாக ஆனது. வான் கோழி பிரியாணி, மேஸீஸ் பரேட், அமெரிக்கன் கால்பந்து போட்டிகள், ப்ளாக் ப்ரைடே ஷாப்பிங் என்று இவைகளைத் தாண்டி தாங்க்ஸ் கிவ்விங்கிற்கு வேறுசில நல்ல காரணங்கள் உண்டு.

    அதாவது அது ஒரு குடும்பப் பண்டிகை. எங்கெங்கோ இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒரு நாளாவது ஒரே இடத்தில் கூடிப் பேசி கடவுளுக்கும் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு அமைதிப் பண்டிகை. இதனால் எல்லா ப்ளைட் டிக்கெட்களும் விற்று தீர்ந்தாகிவிட்டது. எல்லோரும் லீவில் போய் விடுவார்கள். இனி ஜனவரி வரை ஆபிஸ்களில் ஈ தான்.

    0000

    ”I know…its a management school and I must be talking to you about compromises and how to manage. You don’t have to. You don’t have to compromise, you still can make money. I’m a standing proof” சொன்னவர் கமலஹாசன். கேட்டவர்கள் மேனேஜ்மெண்ட் கல்லூரி மாணவர்கள்.

    இந்த youtube வீடியோ இன்னமும் ரொம்ப பிரபலமாகவில்லை. சீக்கிரம் ஆகிவிடும். பார்த்துவிடுங்கள்.

    0000

    2007ம் வருடம் மே மாதம் சியாட்டல்-கொரியா-பம்பாய் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னைக்கு அடுத்த விமானம் காலை 6:30க்குதான் என்பதால், ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். எதற்காகவோ தலை தூக்கி பார்த்தபோது, விமான நிலைய நுழைவாயிலில் ஒருவர் கைகளை அகல விரித்து சிலுவையில் அறையப்படும் இயேசு நாதரைப் போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். செக்யூரிடி செக் செய்யும்போது அவர் கைகளை அகல விரிக்க, ஒரு போலீஸ்காரர் அவரின் மேல் அந்த பாம் டிடக்டரை தேய்த்துக் சோதனை செய்து கொண்டிருந்தார்.

    பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கொஞ்சம் சிரிப்பாய் வந்தது. அவர் யார் என்று கொஞ்சம் யூகித்து விட்டேன். அவரும் செக் முடிந்து மிக மெதுவாக நடந்து எனக்கு ஒரு நான்கு ஸீட் தள்ளி அமர்ந்து எதோ படிக்கலானார். அடர்ந்த தாடி, ஜோல்னா போல ஒரு பை, கண்ணாடி, வெட்டாத சற்றே அழக்கடைந்த நகம், வாரப்படாத தலை, தூங்காத கண்கள் ரெண்டு. பி.சி.ஸ்ரீராம்.

    ரசிகனான நான் அந்த நான்கு சீட்டுகளை தாண்டி அவரின் அருகே சென்று அமர்ந்து அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் அவர் செக்யூரிடி செக்கின் போது யேசு கிரிஸ்துவாக தோற்றமளித்தை சொன்னவுடன், கையை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார். அடுத்த இரண்டு மணி நேரமும் தீர்க்கமாகக் கண்களை பார்த்து பேசினார். ரொம்பவே intensiveவாக கவனித்தார். ப்ளைட் கிளம்ப நேரமான போது, ‘டோண்ட் ஒர்ரி நானும் அதே ப்ளைட் தான்” என்றார். எல்லோரும் ப்ளைட் ஏறியவுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, எதோ மெட்ரோ பஸ் ஏறுகிற லாவகத்துடன், ப்ளைட் வாசலுக்கு போனார்.

    ப்ளைட்டில் அருகே உட்காரச் சொன்னார். நான் தான், “ சார் இடம் மாத்தி உட்காந்தா…அதோ அந்த ஏர் ஹோஸ்டஸ் கோவிச்சுப்பாங்க” என்று சொல்லி என் இடத்தில் அமர்ந்து விட்டேன். காரணம் அவர் தூங்கி இரண்டு நாட்களாகி விட்டது என்றதுதான். அதற்கு முன் அந்த ஏர் ஹோஸ்டஸை கூப்பிட்டு, பேனா வாங்கி, என் டிக்கெட்டின் பின் போன் நம்பரை எழுதித் தந்தார். ”போன் பண்ணுங்க கண்டிப்பா திரும்பவும் மீட் பண்ணலாம்” என்றார். ப்ளைட் இறங்கும் போதும் ஐபாட் கேட்டுக் கொண்டே கர்னாடக ராகம் எதையோ முணுமுணுத்துக் கொண்டு இறங்கினார்.

    அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டு மணி நேரமும் அவரின் தலையைத் தின்று விட்டேன். அக்னி நட்சத்திரம் படத்தை எடுக்கும் போது இருந்த அவரின் மற்றும் மணி ரத்னத்தின் மனநிலையும், நாயகன் பட கடினங்களையும் கேட்க கேட்க கிட்டத்தட்ட ஒரு டூ-வே பேட்டி போல இருந்தது. சீனி கம் திரைப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைக்காக பம்பாய் வந்ததாகச் சொன்னார். இணையம் பற்றி அதிகம் கேட்டார். அதில் ஈடுபட ஆர்வம் காட்டினார். என்னுடைய புகைப்பட ஆர்வத்தைப் பற்றி சொன்னேன். ப்ளிக்கரைப் பற்றியும், குறும்பட எண்ணங்களைப் பற்றியும் பேசினோம். சுவாரசியமாய் இருந்தது. அவருக்கும் இருந்தது என்றார். டிவியில் அவரின் பேட்டியை பார்க்கும் போது பொறுமை இல்லாது போனதுண்டு. நேரடியாகப் பேசியபோது அவர் பேசியபடியே நிறைய யோசிக்கிறார் என்பது புரிந்தது. சென்னைக்கு வந்தவுடன் குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை சொன்ன போது. ““சினிமா கினிமான்னு போய்ட போறான்” என்று குசேலர் கதை ருக்மணியாகத் தடுத்து விட்டார்கள். கோலிவுட் ஒரு அருமையான கேமராமேனை இழந்தது அன்று தான்.

    போன வாரம் அவர் மகள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்தியை பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன். அந்த நல்ல மனிதருக்கு இந்த தசரத சோகம் அநியாயம்.

    — இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

←Previous Page
1 … 24 25 26 27 28 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar