இந்தியிலிருந்து தமிழில் டப் செய்யப்படும் மணிரத்னத்தின் குரு டிரைலர், இந்தியா க்ளிட்ஸிளிருந்து.
-
கிறுக்கல் – பெயர்க்காரணம்
“சார், பார்த்திபனை பார்த்து தானே காப்பி அடிச்சீங்க”, என்று ஒருவருக்கு மேற்பட்டு கேட்டதனால், கொஞ்சம் பெயர்க்காரணம்.
பார்த்திபன் தான் காரணம். ஆனால் நேரடியாக அல்ல. சில வருடங்களுக்கு முன்பு, பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ நூல் வெளியிட்டு விழாவிற்கு சென்று வந்த சுஜாதா, அதை பற்றி சிலாகித்து எழுதினார். அந்த கட்டுரையில் இந்த தகவலும் இருந்தது –
கிறுக்கல் என்ற வார்த்தைக்கு எழுத்து என்று தான் அர்த்தம். அதற்கு ‘பிங்கள நிகண்டு’ என்னும் பழந்தமிழ் நூலில் குறிப்புள்ளது. எவ்வாறு scribe என்பது scribble ஆகியதோ, அதே போல் கிறுக்கல் என்பது பின்னர் தாறுமாறான எழுத்துக்கு குறிக்கப்பட்டது.
இங்கு எழுதுவது என்னவோ தாறுமாறான கிறுக்கல் தான், ஆனால் கிறுக்கல் என்பது எழுத்தாகும். நன்றி – பார்த்திபன், சுஜாதா மற்றும் பிங்கள நிகண்டு.
-
இரண்டு கட்டுரைகள்
சமீபத்தில் படித்த கட்டுரைகளில் இரண்டு பிடித்தன.
ஒன்று.
ரோபாடிக்ஸ் பற்றி சயண்டிபிக் அமெரிக்கனில், பில் கேட்ஸ் எழுதிய, A Robot in Every Home. இருக்கிற எல்லா டெக்னாலஜியும் ரொம்ப முன்னேற்றி ஓசைப்படாமல் ரோபாடிக்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் மைக்ரோசாப்ட்காரர்கள். கேட்ஸின் இந்த கட்டுரை, ரோபாடிக்ஸ் பற்றி சாமனியனுக்கு ஒரு curtain raiser.
கேட்ஸ் சொல்ல வருகிற விஷயம் சுவாரசியமானது தான். இதுதான். தற்போது உலகில் உள்ள அனைத்து ரோபோ தயாரிப்பாளர்களும், அவர்களுக்கு தேவையான மென்பொருளை அமைத்துக் கொள்கிறார்கள். இன்றுல்லபடி ஒரு இரண்டடி ரோபோ மூன்று இஞ்ச் கையசைக்க, சியிலோ, சி++யிலோ, மெஷின் லாங்வேஜிலோ லைப்ரரி பங்ஷன்களை எழுதி, டாட்டா பைபை சொல்லித் தருகிறார்கள். ஒரு ஜப்பான் கம்பெனி தயாரிக்கும் ரோபோ மென்பொருள் மற்றோர் கம்பெனியால் ரோபோவில் உபயோகிக்க inter-operableஆக இல்லை. இதனால், ஆளாளுக்கு தனி மென்பொருள் தயாரிக்க, ஒவ்வோர் ரோபோவும் மற்றோர் ரோபோவிலிருந்து ஏராளமாய் வேறுபடுகின்றன.
மைக்ரோசாப்ட், இந்த சைன்ஸ் பிக்க்ஷன் ரோபோ உலகில் ஏராளமாய் பணங்கொட்டி, Microsoft Robotics Studio மென்பொருளை எழுதியிருக்கிறார்கள். இப்போதைக்கு இது ஒரு இலவச சேவை தான். ஆனால் மைக்ரோசாப்டின் ஆர்வத்தை பார்த்தால், இன்னும் 5-6 ஆண்டுகளில், இந்த மார்க்கெட் பன்மடங்கு வளரலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த அறிமுகம், ரோபாடிக்ஸ் மார்க்கெட்டின் Tipping Point ஆகக்கூடும். அப்போது கேட்ஸின் இந்த கட்டுரை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.
அடுத்த பத்து வருடங்களில் உங்களுக்கு அமிர்தாஞ்சன் தேய்த்து விடவோ, பொன்னியின் செல்வன் படித்து நடித்துக் காட்டவோ, வேளாவேலைக்கு இன்சுலின் ஊசி போடவோ, கூட உட்கார்ந்து கண் கசக்கி ‘செல்வி’ பார்க்கவோ, ஒரு அசமஞ்ச ரோபோ வீட்டோடு வரக்கூடும். அதற்கு முன் ஷங்கரும் சுஜாதாவும், கமலை வைத்து ‘ரோபோ’ எடுப்பது நலம்.
இரண்டு.
இதிலும் கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்கிறார். பீட்டர் சிங்கரின், What Should a Billionaire Give – and What Should You?, என்னும் நியுயார்க் டைம்ஸ் கட்டுரை, சற்றே நீளமாயிருந்தாலும், சிந்திக்க தூண்டுகிறது. கிறித்துமஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த இக்கட்டுரையில், வாழ்வின் விலை பற்றி ஆரம்பித்தாலும், அதை தாண்டி நமது நம்பிக்கைகளை அசைத்து பார்க்க முயற்சி செய்கிறார், பீட்டர் சிங்கர் என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர்.
அமெரிக்காவின் நான்கு பெரிய கொடை கர்ணன்களாகிய ஆண்ட்ரியு கார்னகி, ஜெ டி ராக்ப்பி்ல்லர், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் ஆகியவர்களில் கார்னகி தவிர மற்ற மூவர் நாத்திகர்கள். இவர்களை கொடுக்க வைத்தது, வளர்ப்பு முறையா ? நம்பிக்கைகளா ? தன்னை இறந்த பின்னும், இவ்வுலகம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்று கோவில்கள் கட்டும் பேரரசர்கள் போன்ற எண்ணமா ? உலகை மாற்றும் முயற்சியா ? அல்லது வெறும் egoவா ?. எது ?
-
எம்.எஸ் – வாழ்வே சங்கீதம்

ஆனந்த விகடனில் மார்கழி சீசன் எழுதும் வீயெஸ்வியை பற்றியும் அவரின் இசை புலமையை பற்றியும், அவரின் சுவாரசியமான கட்டுரைகளை படித்தவர்களுக்கு தெரியும். எம்.எஸ்சை பற்றிய தமிழ் புத்தகம், அதுவும் வீயெஸ்வி எழுதியது என்றவுடன் படிக்கத் தோன்றியது.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற குஞ்சம்மா என்கிற எம்.எஸ்சின் இசை/இல்லற வாழ்வை பற்றிய ஒரு எளிய அறிமுகம் தான், கிழக்கு பதிப்பகத்தின் எம்.எஸ் – வாழ்வே சங்கீதம். எம்.எஸ் போன்ற ஒரு இசை அரசியின் வாழ்வை 141 பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியாது என்று நன்கு அறிந்து தான், அவர் வாழ்வின் மிக முக்கிய சம்பவங்களை இந்நூல் பட்டியலிடுகிறது.
எம்.எஸ் ஒரு child prodigyயாக அறியப்பட்டதிலிருந்து துவங்கி ‘ஹரி தும் ஹரோ’ பாடலை காந்தி நேயர் விருப்பமாய் கேட்டது, தன் பட்டமான Nightingale of Indiaவை சரோஜினி நாயுடு எம்.எஸ்சுக்கு கொடுத்தது, மீரா திரைப்படத்தை First Day First Show பார்க்க மனைவி எட்வினாவுடன் லார்ட் மவுண்ட் பாட்டன் வந்தது, ‘நான் இப்போ வீணை கத்துக்கிட்டேன். அடுத்த தடவை மெட்ராஸ் வரும் போது உங்க வீட்டுக்கு வந்து உங்களுக்கு எந்தரோ மகானுபாவுலு வாசித்து காட்ட ஆசை’ என்று அப்துல் கலாம் சொன்னது, ஜோதிகாவின் ஆர்.எம்.கே.வி புடவை போல ‘எம்.எஸ் புளு’ புடவை பிரபலமாகியது என்று ஏகப்பட்ட ‘அட’ சொல்ல வைக்கும் நிகழ்ச்சிகள்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக எம்.எஸ் வாங்கிய விருதுகள், தன் இசை வாழ்வின் நடுவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் கல்கி கார்டன்ஸ் பங்களாவை விற்று வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு சிறு வாடகை வீட்டுக்கு ஜாகை போக வேண்டிய கட்டாயம் என்று ஒரு roller coaster வாழ்கையின் sneak peak தான் இந்த புத்தகம். புத்தகத்தை சுவாரசியமாக்க ஆங்காங்கே சற்று அதிகமாகவே மிகைப்படுத்தப் பட்டதோ என்று நினைக்க வைத்தாலும், எம்.எஸ்சை பற்றி அதிகம் தெரியாமல் அதை சொல்ல முடியாதென்பதும் உண்மை. பின்னிணைப்பாக, இந்த புத்தகம் எழுத உதவிய நூல்களை பட்டியலிட்டிருப்பதற்கு வீயெஸ்வி மற்றும் கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி.
எம்.எஸ்சும் இசையும் ஒன்று தான் என்றாலும் தன் இசை மூலம் இதுவரை அவர் தர்மமாக வழங்கியது மூன்று கோடி என்று படித்தால் அசராமல் போவீர்களா ? அறுபது ரூபாயும், மூன்று மணி நேரமும் இருந்தால் கபி அல்வித நா கேஹனா பார்ப்பதை விடுத்து தமிழன் படிக்க வேண்டிய கட்டாய புத்தகம்.