kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • October 3, 2007

    மற்றவை சில

    சியாட்டலில் குளிர் ஆரம்பித்தாகிவிட்டது. பஸ்களில் எந்நேரமும் ஹீட்டர் போடுகிறார்கள். லைட் போடுகிறார்கள். ஆறேகாலுக்கு மேல் பசுமாடு தெரிவதில்லை. வீட்டில் தேங்காய் எண்ணெய் கட்டித்தட்டுகிறது.கார்பெட்டில் கால் பதிக்க முடிவதில்லை. ரோட்டில் எல்லோரும் குளுர் ஜாக்கெட் போட்டிருக்கிறார்கள்.

    இதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா குளிர்காலத்திற்கு தயாராக செய்யும் பிரயத்தனங்கள். இன்னமும் கொஞ்ச நாளில் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் போடுவார்கள். இரண்டடி எடுத்தால், ஐஸ் மூன்றடி வழுக்கும். நாலு மணிகெல்லாம் இருட்டிக் கொள்வதால், வேலை செய்ய போர் அடிக்கும். நம்மூரைப் போல எல்லோரும் எந்நேரமும் டீவி பார்ப்பார்கள். வீட்டிலேயே சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு, எக் நாக் குடித்துக் கொண்டிருப்பதால் இருப்பதால் சம்மரில் இழந்த தொப்பை மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும். சதா சர்வகாலமும் க்ரிஷ் ஸ்ரீகாந்த் போல மூக்கு சிந்த நேரிடும்.

    இத்தனை காமெடிகளையும் தாண்டி அமெரிக்க குளிர் பிடித்திருக்க காரணம், சியாட்டல். சியாட்டல் ஒரு ஈர நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். இந்த சியாட்டிலையும், அதில் எப்போதும் பெய்யெனப் பெய்யும் மழையும் பற்றி, ஒரு நீண்ட பத்தி, எழுத எண்ணம்.

    ————————-

    சென்னையிலிருந்து மற்றுமொரு செட் புத்தகங்கள் வந்து இறங்கி, வீட்டை அடைத்துக்கொண்டன. முக்கியமாய், உடையாரும், படிக்கத் தவறிய சில தி.ஜானகிராமன், ருத்ரன், சோ மற்றும் சில டஜன் கிழக்கு பதிப்பக அ-புனைவுகளும்.

    புத்தகங்கள் என் அப்பார்ட்மெண்டின் ஆபீஸுக்கு போஸ்டில் வந்து இறங்கின. அதை வாங்க சென்ற என் மனைவி, தூக்க முடியாமல் தூக்கி வந்தாள். “புஸ்தகத்தை பார்த்தா எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படி ஒரு குறும்பு சிரிப்பு வருதோ ? வேற எப்போதும் இந்த மாதிரி சந்தோஷமாய் ஒரு சிரிப்பைக் காணோம்”, என்றாள் மனைவி.

    தற்போது படித்துக் கொண்டிருப்பது, ஜெயமோகனின் எழாம் உலகம். ஒரு வாரத்தில் எழுதிய நாவலென படித்திருக்கிறேன், நம்ப முடியவில்லை.

    ————————-

    இந்த கிறுக்கல்.com எழுத ஆரம்பித்து ஆகஸ்டிலேயே ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவே இப்பொழுது தான் ஞாபகம் வந்தது. இதுவரை உருப்படியாய் ஒன்றும் எழுதிதாக தெரியவில்லை.

    அதற்காக எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லாததால், இங்கு எழுத பிடித்திருக்கிறது.காமெண்டுகள் இல்லாததும் மற்றுமொரு காரணமாய் இருக்கலாம்.

    ————————-

    crater lake oregon

    போன மாதம், ஆரெகன் என்னும் பக்கத்து மாநிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யூஜீன் என்னும் நகரத்தில் தங்கி, ஒரு நாள் முழுவது சுற்றிப் பார்த்த இடம், க்ரேட்டர் லேக்.

    ஏழாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் வெடித்த எரிமலையால் அந்த மலையில் ஒரு பெரும் பள்ளம் எழ, அதில் தோன்றிய ஒரு ஏரி தான் க்ரேட்டர் லேக். இது உலகத்தில் ஒரு யுனீக் இடம் என்றெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். உண்மை என்றே தோன்றுகிறது.

    உலகத்திலேயே மிக தெளிவான நீர்நிலை இது தான் என்கிறார்கள். ஒரு பெரும் பள்ளத்தில் இருக்கும் நீர், ஆதலால், மற்ற நீர்நிலைகளுடன் கலப்பதில்லை. அதனாலேயே இந்த தெளிவு. Refractionல் அங்கெங்கே மிக அடர்த்தியான நீலத்துடனும், சில இடங்களில் MS பட்டு போன்ற நீலத்திலும், அந்த தண்ணீர் ஒரு தனி அழகு.

    போன நூற்றாண்டு வரை, அமெரிக்க பழங்குடி இந்தியர்கள் இதை கடவுளாக வணங்கி வந்தனர். மலை உச்சியிலிருந்து தண்ணீரை பார்ப்பதையே சாமி குத்தமாக் நினைத்திருந்தனர். அங்கிருந்த போர்டுகளில், இதை பற்றியெல்லாம் கதையை படித்த போது, சில நூற்றாண்டுகளுக்கு பின் சென்று அந்த பழங்குடியினத்தவரின் வாழ்கையை நினைத்துப் பார்க்க முடிந்தது.

    நயாகராவுக்கு பின் நிறைய NRIs குடும்பத்துடன் வரும் இடம் இதுதான் போலும். கலிபோர்னியாவுக்கு அருகில் என்பதால், எல்லா முக்கிலும், எல்லா வியு பாயிண்ட்களிலும், ஹோண்டா டொயோட்டா கார்களும், லெதர் ஜாக்கெட் – பட்டும் புடவையும், மஃங்கி குல்லாவும், எலுமிச்சை சாதமும் புளியோதரையும் பார்க்க முடிந்தது.

    ஸ்பீல்பெர்கின் Artificial Intelligence படத்தில் வரும் அந்த வளைந்து செல்லும், அடர்ந்த உயர்ந்த ஆரெகனின் பச்சை காடுகளினூடே, “யாருக்குள் இங்கு யாரோ ?” கேட்டு/பாடிக் கொண்டே, கார் ஓட்டிய அனுபவம், மறக்க முடியாதது. Classy !!

  • September 30, 2007

    Haiகூ !!

    புத்தக ஒட்டடை அடிக்கையில்
    இ.பாவின் ராமானுஜர் – அதற்கடியில்
    வீரப்பன் பயோகிராபி

  • September 28, 2007

    Currently

    playing level 2(yeah, still in level 2) of Halo 3. But enjoying the Bungie‘s latest offering.

  • September 26, 2007

    விகடனில் கிறுக்கல்.com

    kirukkal.com in ananda vikatan

    இந்த வார ஆனந்த விகடனின், விகடன் வரவேற்பறை பகுதியில், இந்த கிறுக்கல்.காம் தளத்தை பற்றி ஒரு பத்தி எழுதியிருக்கிறார்கள். இதை வெங்கடரமணன் சொல்லப்போய் தான் நானறிந்தேன்.

    படித்துப் பார்த்த போது, எல்லாவற்றையும் விட பிடித்திருந்தது, இந்த வரி.

    சுஜாதாவின் ‘கணையாழி கடைசி பக்கங்’களை ஞாபகப்படுத்தும் சரள-மான மொழி நடை.

    என்னாது சுஜாதாவா ?. இதை விட பெரிய பாராட்டு சுஜாதாவே,”நல்லா ஜல்லியடிக்கறீங்க சுப்புடு”ன்னு சொல்வதாகத்தான் இருக்க முடியும்.

    போன வியாழக்கிழமையிலிருந்து, கன்னா பின்னாவென்று தளத்தின் traffic கூடிப்போய் இருக்கிறது. யார் யாரோ, “கலக்கறீங்க சார்” என்று மெயில் அனுப்புகிறார்கள். விகடனின் ரீச் தெரிகிறது. எல்லோருக்கும் நன்றி !!

    “விகடன்ல எல்லாம் போட்ருக்காங்க, இன்னும் அதை update பண்ணாம இருக்கியே அசமஞ்சம்” என்று நினைப்பவர்களுக்கு, ஹிஹி !!. கூட்டம் வரும்போதே, இந்த வலைதளத்தில் எழுதித் தள்ளி, யாரையும் போரடிக்கிற எண்ணமில்லை. வழக்கம் போல எப்பொழுதெல்லாம் ஒரு நல்ல புத்தகமோ/படமோ/விஷயமோ பற்றி எழுத தோன்றி நேரமிருக்கும் போது, கண்டிப்பாய் கிறுக்கல்.

    பி.கு – இப்போதைக்கு படிக்க கிறுக்கலின் பழைய பத்திகள் அல்லது இருக்கவே இருக்கு கிறுக்கலின் ஆங்கில பதிப்பு.

  • September 20, 2007

    Didi Tera Dewar

    kandhasamy

    Who ? What ? When ?

    Congrats Susi !!

←Previous Page
1 … 72 73 74 75 76 … 315
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 26 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar