kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • January 17, 2011

    மறந்து போனவை

    டிசம்பரின் கடையிறுதி வாரங்களில் ஆபிஸில் லீவு சொல்லி விட்டு, வீட்டில் இருந்தேன். சுவாரஸ்யமாக எதாவது தென்படுகிறதா என்று டிவியை மேய்ந்தேன். அமெரிக்கத் தாய்மார்கள் எப்படித்தான் மதிய நேர டெலிவிஷனைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லா முக்கிய சானல்களிலும் பொழுதெல்லாம் பேசித் தொலைக்கிறார்கள். பெண்களுக்கான டாக்-ஷோவாம். ராவிலும் இதே தொல்லை. லேட்-நைட் ஷோ. ஹூஹும் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, அவையும் டாக்-ஷோக்கள் தான். பேசுவது ஆண்கள்.

    எல்லா டாக்-ஷோக்களும் ப்ரைம் டைம் ஷோ மாதிரி மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, அதற்கேற்ற மாதிரி பேச்சுக்கள் திசை திருப்பப்பட்டு, டிவி சீரியல் மாதிரி கமெர்ஷியல் ப்ரேக்குகளுக்காக கரெக்டாக கொக்கிக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் ப்ரெக் கே பாஸ்.

    என்.பி.சியில் வரும் ஓப்ரா வின்ப்ரே ஷோவிற்கு இது கடைசி சீசன். மனுஷி ரிடையர்டாகி விடுவார் என்று பார்த்தால், பெப்பே. ஒரு மணிநேர ஷோவுக்கு OWN(Oprah Winfrey Network) என்று ஒரு சானலே ஆரம்பித்து விட்டார். ஆடின காலும் பேசின வாயும் என்று பழமொழியை மாற்றி விடலாம். தாய்க்குலங்களின் பேராதரவோடு 25 வருடமாக பேசிக் கொண்டிருக்கிறார் ஓப்ரா. ஆங்காங்கே நல்ல விஷயங்கள் செய்தாலும், பேசப்படும் விஷயங்களை விரல்களால் எண்ணிவிடலாம். கைவிட்ட கணவனும், கடன் தொல்லையில் மூழ்கியவர்களும் அவர்களை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், குண்டாவது மற்றும் ஒல்லியாவது மற்றும் ஒன்றும் ஆகாகது எப்படி எனப்படும் ஹவ்-டூ வகை விஷயங்கள்.

    நான் பார்த்த ஒரு மதிய ஷோவில், ஹாரி பாட்டர் கதாசிரியர் ஜெ.கே, ரவுலிங்கை ஸ்காட்லாண்டில் சந்தித்து உரையாடினார். ஓப்ரா வாய்க்கு அவல் கிடைக்குமா என முடிந்த மட்டும் தேட, ரவுலிங்கோ நேரெதிர். மொத்தத்தில் அந்த பேட்டி சுத்த வேஸ்ட். ரவுலிங் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை, பாவம் ஓப்ரா.

    ஓப்ரா ஒரு புக்-கிளப் வைத்திருக்கிறார், அவற்றில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள், ஜெயமோகனின் உலோக வேகத்தை தூசி ஆக்கி விடக்கூடியவை. சமீபத்திய பரிந்துரை, டிக்கின்ஸின் The Tale of Two Cities. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    நான்சி க்ரேஸ் என்று ‘ரொம்பப் பேசும்’ ஒரு வக்கீல் மாலை நேரங்களில் தொலைந்து போன சிறுவர்களின் கேஸ்களை சத்தமாக பேசியபடியே ஆராய்கிறார். மற்ற நேரங்களில் ப்ரைவேட் கோர்ட் நடத்துகிறார். அதை ஒளிபரப்பவும் செய்கிறார்கள். மற்ற குடும்பங்களின் சண்டையை நாமும் அந்த குடும்ப கோர்ட்டுகளில் பார்க்க நேர்கிறது. மெகா சிரியலாய் இருந்தால் என்ன கோர்ட்டாக இருந்தால் என்ன, நமக்கு தேவை அண்டை குடும்பங்களின் கண்ணீர் வம்புகள். ரொம்ப சந்தோஷம்.

    இதற்கு நடுவில் ஜெர்ரி ஸ்பிரிங்கர் எனும் ஒரு செக்ஸ் வம்பு டாக் ஷோவும் உண்டு. இந்த ஷோவில் சக்காளத்தி சண்டை நடக்கிறது. திடீரென்று இரண்டு பெண்மணிகளும் அல்லது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காகவோ/ஆணுக்காகவோ தலை மயிரை பிடித்துக் கொள்கிறார்கள். எனக்கு சென்னையின் மெட்ரோ பம்பு சண்டை ஞாபகம் வந்தது, குடம் தான் இல்லை, மற்றபடி அதே குழாயடி கூத்து. Pun Intended.

    இவைகளின் நடுவே எலன் டிசெனரஸ் எனும் ஒரு பெண்மணி செய்யும் டாக் ஷோ கொஞ்சம் ப்ராக்டிகலாக தெரிந்தது. ஷோவின் நடுவே எலன் தினம் ஒரு டான்ஸ் ஆடுகிறார், இதைத் தவிர அச்சு பிச்சு கேள்விகள் கேட்பதில்லை, வேண்டுமென்றே ட்ராமா செய்வதில்லை எனப் பட்டது. எதுவாக இருந்தாலும் பகலில் டிவி பார்ப்பது உங்கள் IQவிற்கு ஆபத்து.

    இரவுகளின் டாக் ஷோக்கள் 8 மணிக்கு ஜான் ஸ்டுவேர்டில் (Jon Stewart) ஆரம்பித்து Conan O’Brien, Jay Leno என எல்லோரும் ஜோக் அடிக்கிறார்கள். ஜோக் அடிக்கப்படுபவர்கள் அ.சியல்வாதிகள், ஹாலிவுட்காரர்கள் மற்றும் சாமானியர்கள். ஆக அமெரிக்காவில் யாரையும் விட்டு வைப்பதில்லை. இப்படி தன்னைப் பற்றியே ஜோக் அடித்துக் கொள்வது, அந்த சகிப்புத்தன்மை இந்த நாட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது. நக்கல் கொஞ்சம் அதிகமாகிப் போய் யாராவது கேஸ் போட்டால் அந்தந்த சானல்கள் பார்த்துக் கொள்கின்றன. இவர்கள் சிலரின் ஷோக்களை நான்கைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஜே லெனோ மாதிரி ஜோக்கை ரசித்துக் கொண்டே அடிப்பவர் யாரும் இலர். என்னுடைய பேவரைட். கொஞ்சம் பி.பி குறைந்த மாதிரி தெரிகிறது.

    000000

    இந்தப் பத்தியை பற்றி கொஞ்சம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது eclectic writing எனும் வகையை சேர்ந்தது. அதாவது கலவை எழுத்து என்று சுமாராய் தமிழில் சொல்லலாம். இதைப் பற்றித்தான் என்றில்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு ஆழமாகவோ மேலோட்டமாகவோ எழுதப்படும் ஒரு பத்தி. இதைத் தமிழில் சிலர் எழுதியிருந்தாலும் பிரபலமாக்கியது சுஜாதா தான். ஆங்கிலத்தில் மிகவும் ரசித்து படிக்கப்படும் ஒரு எழுத்து வகை. இவ்வகை பத்திகளை படிக்க ஒருவர் எந்த மனநிலையிலும் இருக்கலாம். பிசியான ஆபிஸ் லஞ்சுகளிலும், காபி ஷாப்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் பெண்கள் கல்லூரி பஸ் நிலையங்களிலும் படிக்கக் கூடிய அளவிற்கு லைட் ரீடிங் வகையை சார்ந்தது.

    அமெரிக்காவில் இவ்வகை eclectic எழுத்தாளர்கள் ஒரு வரியில் கூட சில செய்திகளை சொல்வார்கள், ஐம்பது வரிகளிலும் இழுத்து ஆடிப்பார்கள். அது சொல்லப்படும் விஷயத்தை ஒட்டியது. ஒரு முறை ஒரு எழுத்தாளர் பத்தியை ஆரம்பித்த ஐந்தாவது வரியில், இந்த வாரம் உங்களுக்கு விடுமுறை தருகிறேன், படித்தது போதும் என்று அந்த வாரப் பத்தியை அத்தோடு நிறுத்தி விட்டார். ஆக எடிட்டர் என்ற ஒரு நல்ல மனிதரைத் தாண்டி வாசகர்களுடன் நேரடியாக உறவாடும் வகையை சார்ந்தது. இந்த மாதிரி ஒரு பத்தியை அந்த காலத்தில் வாரப் பத்திரிகைகளில் அனுமதித்தார்கள் என்றால் அந்தந்த எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரம் புரிகிறதா? அவர்களும் சுதந்தரத்தை பயன்படுத்தி குப்பையாக்காதது தான் முக்கிய காரணம்.

    ஹிந்துவின் கடைசி பக்கத்தில் வரும் ஆர்ட் புக்வால்ட் ஞாபகம் இருக்கலாம். ஆர். கே.நாராயணை நினைவு படுத்தும் சாயல். இவரின் எழுத்தை எக்லெடிக் வகையில் சேர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும் மிகப் பிரபலமான eclectic columnist இவராகத் தான் இருக்க முடியும். இவர் எழுத்தின் உச்சத்தில் இருந்த போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 550 நாளிதழ்கள் இவரது வாரப் பத்தியை பிரசுரித்தன. சுத்தமான காமெடி ஜென்மம். இவரின் எழுத்து புரிய கொஞ்ச அமெரிக்க அரசியல் தெரிந்திருத்தல் அவசியம். தன் கடைசி நாள்வரை எழுதிக் கொண்டிருந்தார். வாஷிங்டன் போஸ்டில் Goodbye, My Friends என்று இவர் எழுதிய கடைசி பத்தி எதிர்ப்பார்த்தபடி மிக பிரசித்தம். கொஞ்சம் முயற்சித்தால், You Can Fool All of the People All the Time எனும் இவரின் புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். பேசப்படும் விஷயம் பழையதாய் இருந்தாலும் சுவாரசியம் கொஞ்ச நஞ்சமல்ல.

    00000

    அல்செய்மரின் வியாதி என்று அமெரிக்க மீடியா ரொம்பவே கூக்குரலிட்டாலும் நானும் எதோ பணக்காரர்களின் வியாதி போலும் என்று விட்டுவிட்டேன். 2006ல் நண்பர்(ரொம்பவே வயதான) ஒருவரின் மனைவி இறந்ததை பற்றி அவரிடம் உரையாடும் போது தான் இந்த வியாதியின் பயங்கரம் புரிந்தது. சமீபத்தில் படித்த Finding Life in the Land of Alzheimer’s எனும் புத்தகத்திலும் இப்படியே.

    அல்செய்மரின் வியாதி எனும் பெயர் புதிதாய் இருந்தாலும் இது இந்தியாவில் புதிதல்ல. நமக்கெல்லாம் தெரிந்த டிமென்ஷியா தான். அலோய்ஸ் அல்செய்மா எனும் ஜெர்மனிய நியூரோ டாக்டர் இதை அழுத்தமாக விளக்க அவரின் பெயரே நிலைத்து விட்டது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகமாய் வரும் இவ்வகை டிமென்ஷியாவில் ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுகின்றன. மறக்கிறார்கள். மறந்து மறந்து மரிக்கிறார்கள். இதற்கு முற்றிலுமாக குணப்படுவதற்கு மருந்தில்லை, தள்ளிப் போடவும் முடிவதில்லை, வந்து விட்டால் மறதி தான். எதோ ஒரு ஆராய்ச்சியில் அல்செய்மர் வந்த பிரபலங்களை அனலைஸ் செய்த போது மிக அதிகமாக இருந்தது எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள். பள்ளியில் இருந்த போது ரசித்துப் படித்த எனிட் ப்ளைடன் என்ற எழுத்தாளரும் அல்செய்மர் வந்து தான் காலமானார்.

    இதில் பயங்கரம் என்பது இவ்வகை நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் கணவனோ மனைவிக்கோ தான். இன்றைய நிலவரப்படி, நோயாளிகளை விட அவர்களை பார்த்துக் கொண்டு அவர்களின் மறதியுடன் போராடும் கடினத்தை தாங்கிக் கொண்டுள்ளவர் நோயாளிகளுக்கு முன் இறந்து விடுகிறார்கள் என்பது.

    இவ்வியாதியில் ஞாபகங்கள் விலகுவதும் பயங்கரம் தான். அதாவது, கணினித் துறையில் சொல்வது போல Last In First Out Stack. கடைசியாக நடந்த விஷயங்கள் முதலில் மறந்து விடும் என்கிறார்கள். கடைசியாய் பிறந்த குழந்தையை ஒரு பெண்மணி மறந்து விட்டார். தன் முதல் பையனை மட்டும் ஞாபகம் வைத்திருந்தார். மற்றோரு மனைவி தன் கண் முண் நடமாடும் கணவனை மறந்து விட்டார். ஆனால் ஸ்டீவ் எனும் பெயரில் இருந்த தனக்கு அன்பான கணவன் ஒருவர் இருந்தார் என்று தன் கணவரிடமே சொல்லிக் கொண்டிருந்தார். அல்செய்மர் நோயாளிகள் ஞாபகத்தில் இளைமையாகிக் கொண்டே போகிறார்கள் என்பதற்கு காரணம் இது தான். பலரின் ஞாபக செல்களில் இருந்து கடைசியாய் கரைவது அவர்களின் தாய். கவித்துவம் என்று சொல்லலாமா?

    00000

  • January 7, 2011

    கடிகாரத்தை காணவில்லை

    இந்த வருடம் டெக்னாலஜி பற்றி ஜல்லியடிக்க சில வார்த்தைகள்.

    Cloud Computing (க்ளவுட் கம்ப்யூட்டிங்) – மேகக் கணினிச் சேவை என்று கூட அழகாகச் சொல்லலாம். ஆனால் ஐ.டி ஆட்கள் பயந்து போய் விடுவார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ, இந்த கட்டுரையை இணையத்தில் படித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு முறையாவது டெக்னாலஜி மேகம் உங்கள் வாழ்வைத் தொட்டிருக்கிறது.

    இந்த வருடம் நம்மை தொடப் போவது பர்சனல் க்ளவுட் எனப்படும் உங்களுக்கே உங்களுக்கான ஒரு தனி மேகம். அதாவது உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கக்கூடிய பல வகையான புகைப்படங்கள், விடியோ மற்றும் அனைத்து பைல்களையும் இணையத்தில் சேமித்து வைக்கிற சேவை. இப்படி ஸ்டோர் செய்வதினால் வரும் வருடங்களில் நீங்கள் உங்கள் கணினியை பேக்-அப் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது முதல் நல்ல விஷயம். ஆக நீங்கள் எடுக்கிற ஆயிரமாயிரம் போட்டோக்களை உங்களுக்காக அவர்களின் டேட்டாசெண்டரில் சேமித்து வைக்கப் போகிறார்கள் க்ளவுட் கம்ப்யூட்டிங் கம்பெனிகள்.
    இதற்காக பிரத்யேகமான மென்பொருள்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வருகைக்குப் பிறகு, கணினிகள் டம்ப் டெர்மினல்களாகக்கூடும் (dumb terminal). அதாவது இணையத்துக்கு உங்களை கனெக்ட் செய்யும் உலாவி மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இயந்திரம். மற்றபடி நீங்கள் எக்ஸலில் வேலை செய்வதோ, படம் பார்ப்பதோ, பேக்-மேன் விளையாடுவதோ எல்லாமே இணையத்தில் தான். இதற்காக முப்பெரும் டெக்-தேவர்களான மைக்ரோசாஃப்ட், கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. உங்களை, கணினியை விட்டுவைக்க மாட்டார்கள். தயாராகுங்கள்.

    Augmented Reality (ஆக்மெண்டட் ரியாலிடி) – டெக்னாலஜியில் வேலை பார்க்கும் ஐந்து பேரை இப்படி என்றால் என்ன என்று கேட்டால் ஆறு விதமாய் பதில் சொல்வார்கள். ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், க்ராபிக்ஸை நம் வாழ்வில் கலக்கும் ஒரு பெருந்திட்டம் தான் ஆக்.ரியாலிடி. டெர்மினேட்டர். …ஏன் நம் எந்திரனில் கூட ரோபோவின் கண்கள் மூலம் பார்க்கும் போது அது பார்க்கும் ஆளின் எடை, பெயர் விலாச விவரங்கள் தெரிகிற ஸீன் ஞாபகம் இருக்கிறதா? அதே போல் உங்களாலும் செய்ய முடியும், கூடிய சீக்கிரம். அதாவது நம் நிஜ வாழ்வில் க்ராபிக்ஸையும், அதன் சத்தங்களையும் வாசனைகளையும் சூப்பர் இம்போஸ் செய்யப் போகிறார்கள்.

    2009 TED எனப்படும் விஞ்ஞானக் கருத்தரங்கில் ப்ரணவ் மிஸ்திரி செய்து காண்பித்த வித்தைதான் இந்த இயலைத் தொடங்கி வைத்தது. உங்களிடம் ஐ-போன் இருந்தால், அதிலுள்ள ஒரு அப்ளிகேஷனின் மூலம், நீங்களும் இந்த AR விளையாட்டை விளையாடலாம். அதாவது உங்களின் செல்போனை ஓப்பன் செய்து எதாவது ஒரு பில்டிங்கை நோக்கி காட்டினால், இந்த அப்ளிகேஷன், அந்த கட்டிடத்திலுள்ள கம்பெனிகள் எவை, எந்த மாடியில் மதிய உணவு கிடைக்கலாம், எந்த மாடியில் புகைக்கலாம் என்றெல்லாம் சொல்லிவிடும். அல்லது உங்கள் போனை ஒரு ரோடை நோக்கிக் காண்பித்தால், உங்கள் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று வரைபடத்தில் காண்பித்து விடும். இதெல்லாம் ஆரம்பம் தான், ப்ரணவ் காண்பித்த விஷயங்கள் வந்து விட்டால், கணினி என்பதே தேவைப்படாது போலிருக்கிறது. மைக்ரோசாப்டின் Aug. Reality விளம்பரம்.

    இவை தவிர HTML5, வெப்ஸ்டோர், Quora, கூகிளின் சோஷியல் நெட்வொர்க், விண்டோஸ் டேப்லட், இணையத்துக்கும் டிவிக்கும் திருமணம், Net Neutrality, 3டி டிவி, clean tech, மின் புத்தகங்கள் படிப்பான் போன்றவைகளை கேள்விப்பட்டிருந்தால் இணையத்தில் ஜல்லியடிக்கலாம். டுவிட்டர்-பேஸ்புக் தெரிந்திருந்தால் போதும். ஒரு பத்து பேராவது உங்களை தொடரவேண்டியது அவசியம். குட்லக்.

    0000

    நேரத்திற்கு நேரமாகிவிட்டது. இது புத்தகச் சந்தையில் வரப் போகும் புத்தகமல்ல, கைக்-கடிகாரத்தின் நேரம் முடிந்து விட்டது. அதாவது இந்தக் கால இளைஞர்களிடம் மணிக்கட்டை காட்டி என்ன என்று வினவினால் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கைக் கடிகாரங்கள் இல்லாத கரங்கள் அவை. இவர்கள் அலாரம் வைப்பதோ ஐ-போன் time app-ல் தான்.

    கடிகாரம் கட்டுவது என்பது இக்காலத்தில் அழகிற்காகத்தான். யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி கணினி, செல்போன் என்று நேரம் காட்டுகிற விஷயங்கள் பல வந்து விட்டன, ஆகையால் கைக்-கடிகாரம் கட்டுவது குறைந்து போய்விட்டது என்கிறார்கள். கடிகாரக் கடைகள் இனிமேல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.

    என் முதல் கைக்கடிகாரம், ஐந்தாம் வகுப்பின்போது அத்தைமார்கள் வாங்கிக் கொடுத்தது. அதைப் போட்டுக்கொண்டதாக ஞாபகம் இல்லை. எங்கே போயிற்று என்றும் தெரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பின்போதுதான், நானாக விரும்பி கடிகாரம் கட்டியது. Allwyn கம்பெனியின் Trendy ப்ராண்ட் கைக்கடிகாரங்கள். அவற்றின் டி.வி விளம்பரங்களில் மயங்கிப்போய் வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அந்த விளம்பரங்களின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று. அந்த நீல வாட்சுக்கு அ-மேச்சிங்காக வெள்ளை ஸ்ட்ராப் போட்டிருந்தேன். பிறகு சிவப்பிற்கு மாறி வீட்டினரைத் திகைக்க வைத்தேன். அது நின்று போனபின் ஒன்றிரண்டு டைட்டன் வாங்கியிருக்கிறேன். ஏழு வருடங்களுக்குமுன் கைக்கடிகாரத்தை கட்டுவதை நிறுத்தி விட்டேன். யாராவது ரொம்பவும் சொன்னால் ஒழிய அவற்றை தொடுவதில்லை. என் கைக்கடிகாரத் தேவை நின்று போய் நாளாகி விட்டது.

    டைட்டன் கடை ஃப்ரான்சைஸ் எடுக்க நினைத்திருந்தால் கொஞ்ச ’நேரம்’ யோசியுங்கள், உங்கள் செல்போனில் மணி பார்த்தபடி.

    0000

    இந்த வாரம் சென்னை புத்தகச் சந்தை ஆரம்பிக்கிறது. நண்பர் வெங்கட் இதன் பொருட்டு வரும் அத்தனை செய்திகளையும், வலைப்பதிவுகளையும், புத்தக விலைப்பட்டியல்களையும் இங்கே சேமித்துக் கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் ஒரு லுக் விடலாம்.

    கல்லூரி படிக்கும்போது, புத்தகச் சந்தைக்குச் சென்று பனியன் கழட்டாத குறையாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். கொஞ்ச வருடங்களுக்குப் பின் படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்கள் என்னிடம் அதிகமாகி விட்டன. அதன் பின் கண்டிப்பாய் படிக்க போகிறேன் என்று எண்ணும் புத்தகங்களை மட்டும்தான் வாங்குகிறேன். படித்ததும் சிலவற்றைக் கொடுத்து விடுகிறேன்.

    புத்தகச் சந்தையில் செய்யப்படும் impulse buy ரொம்பவும் அதிகம். சும்மா அட்டைப்படம் பார்த்தே மயங்கிப்போய் வாங்குபவர் என்றால், முதல் நாள் போய் அட்டைப் படங்களை பொம்மை பாருங்கள், அடுத்த நாள் செல்லும் போது நினைவிருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்குங்கள். அல்லது இணையத்தில் கொஞ்சம் உலாவி எந்தெந்த புத்தகங்கள் எப்படி என்று பார்த்து விட்டு பிறகு வாங்கிப் படியுங்கள். திடீரென்று எல்லா புத்தகங்களையும் வாங்குவது யாருக்கும் உதவாது. பதிப்பாளருக்கு இந்த வருடம் வருமானமாய் தோன்றலாம், ஆனால் அடுத்த வருடம் நீங்கள் சந்தைப் பக்கமே போக மாட்டீர்கள்.

    மற்றபடி முக்கியமாய் – வீட்டிலுள்ள குழந்தைகளை கண்டிப்பாய் கூட்டிச் செல்லுங்கள். அவர்களுக்கு இதைவிடப் பெரிய உபகாரம் வேறொன்றுமில்லை.

    – இன்னபிற பத்தி.

  • January 5, 2011

    குழப்படி கேஸ்

    மன்மதன் அம்பு பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் தோன்றிற்று, கமல் மணி ரத்னம் போன்ற திரைக்கதாசிரியர்கள், தமிழ் சினிமாவின் வழக்கமான அபத்தத் தொடக்கத்தினை சற்றே மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆற்றங்கரையில் பொழுது புலர்ந்து, சூரியன் உதித்து, பறவைகள் பறந்து, இலைகள் அசைந்து ஆரம்பிக்கும் படங்கள் வருவது நின்று சில காலம் ஆகிற்று. ஆனாலும் ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய எடுத்துக் கொள்ளப்படும் ஆயத்தங்கள் குறையவில்லை. ராவணனிலும் ம.அ.விலும் படமும் கதையும் சடுதியில் ஆரம்பிக்கின்றன. என்ன ஏது என புரிய சற்றே நேரமெடுத்தாலும் படத்துக்குள் போய்விடுகிறோம். கமலைத் தவிர மற்ற காரெக்டர்கள் டக்கென அறிமுகமாகி சட்டென மனதில் பதிந்து விடுகின்றன. நிற்க. இதற்கு மேல் ஏறக்குறைய, ஆமாம் ஏறக்குறைய, எல்லாமே குறைகளின் பட்டியல் தான். படிக்க விரும்பாதவர்கள், வலது மேல்புறம் இருக்கும் இண்டூ குறிக்கு குறி வைக்கலாம்.

    படத்தின் கதை தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பார்முலாக்களில் ஒன்று. கட்டிக்கப் போகும் பெண்ணைத் சந்தேகப்படும் டு-பி கணவனும், அவளை பல்வேறு காரணங்களுக்காக துரத்தி, சிரித்து, அழுது ஒருவழியாய் மணம் செய்யும் ஹீரோவும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள். ஆரம்பத்தைத் தவிர திரைக்கதையில் புதிதாக ஒன்றுமேயில்லை. இதையே முழுமையான காமெடியாக செய்திருக்கலாம் என்றாலும் கமல் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மாதிரியான ப்ளாக் காமெடி தான். கதையில் ஒரு எமோஷனல் உபகதையும், காமெடி கதையும் உடன் பயணிக்கின்றன. காமெடி சீன்களில் ஹீரோ காமெடியாய் நடித்தாலும் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சோகம் சிரிப்பை மட்டுப்படுத்துகிறது. இவ்வகை கதையைத் தான் எடுக்க வேண்டும் என நினைப்பது தப்பல்ல, ஆனாலும் விளம்பரமும் கதையும் வெவ்வேறு ஜான்ராவைக் குறிப்பதனால் குழப்படி கேஸ் என மக்கள் திண்டாடுவது தெரிகிறது. மும்பை எக்ஸ்ப்ரஸுக்கு பிறகு இது இரண்டாவது முறை.
    இருபதாவது முறை என்றும் படத்தில் ஒன்று இருக்கிறது. கதையில் இறந்து போன மனைவியோ காதலியோ, கமலுக்கு அமைவது. விக்ரமில் ஆரம்பித்து, வேட்டையாடு விளையாடு வரை என்று இணையத்தில் லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமலின் தனி வாழ்க்கைச் சோகம் அவரையும் தாண்டி அவர்தம் படத்தில் வழிகிறதோ என தோன்றுகிறது. அவ்வை சண்முகி, விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களின் பாடல்களில் கொஞ்சம் சோகச் சரித்திரம் எட்டிப் பார்த்தன.

    எதிர்பாராத விதமாய் வந்து விழும் கதாபாத்திரம் என்று எதுவுமே இல்லை. வாயாடி குழந்தை, கான்செர் நண்பன், குடிகார சந்தேகப் பிராணியான ஆண்டி-ஹீரோ என எல்லோரும் கார்ட்போர்ட் காரெக்டர்கள். எந்த கதாபாத்திரமும் முன்னுக்கு பின் முரணாக நடப்பதில்லை. ஹீரோ ஏமாற்றுவதற்கு ஒரு சரியான காரணம் இருக்கிறது, ஒரு சோக ப்ளாஷ்பேக் இருக்கிறது. இந்த ப்ளாஷ்பேக்கில் வரும் ஒரு ரிவர்ஸ் ஸ்லோமோஷன் பாடல் ஒன்று தான் நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. என்ன தான் இதற்கு பல ஹாலிவுட் மற்றும் அலைபாயுதே உதாரணங்களைக் காட்டினாலும், இத்தகைய கிளைக்கதைக்கு இவ்வகை தயாரிப்பு ஏக பொருத்தம்.
    பாரீஸ் விமான நிலையக் காட்சிகளில் மனுஷ் நந்தன் கலக்குகிறார். ஆனால் கடைசி வெனிஸ் காட்சிகளில், அவற்றில் நடிப்பவர்களின் சன் க்ளாஸ்களில் சினிமா ஷூட்டிங் ரிப்லெக்டர்களும், காமிராவும் அதன் அருகில் நிற்பவர்களும் தெரிவது துரதிஷ்டம்.
    இவை தவிர கமலுக்கு வயசாகி விட்டதும், குழந்தைகளுக்கு கமல் எடுக்கும் கோலோசியம் பாடமும், மாதவனின் காரியர் அசம்பாவிதமும், திரைக்கதை ஓட்டைகளும், கவிதா பிரதாபங்களும் இன்னபிற விஷயங்களும் ஏகமாய் இருந்தாலும், தமிழ்நாட்டில் எல்லோரும் கமல்/ரஜினி படங்களை ஒரு முறையேனும் பார்த்துவிடும் சங்கல்பம் செய்து கொண்டிருப்பதால், அதிகம் விவாதிக்காமல் இருந்து விடலாம்.

    000

    சமீபத்தில் பார்த்த மற்றொரு சுமார்ப் படம், டெவில். மனோஜ் நைட் ஷ்மாளன் தயாரிக்கும் முப்பெரும் படங்களில் முதல் படம். நகர வாழ்க்கையில் அமானுஷ்யத்தை கலக்கும் முயற்சி.

    நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தின் லிப்ட் நடுவழியில் நின்று விடுகிறது. காமிரா மூலம் செக்யூரிடியும் போலீஸும் உள்ளே நடப்பதைப் பார்த்தபடி இருக்கிறார்கள். உதவி செய்யப் போகிறவர்கள் சாகிறார்கள். லிப்டின் உள்ளே ஐந்து பேர். போலீஸ் அவர்களைப் பற்றி ஆராயும் போது தான் எல்லோரும் ஒருவிதத்தில் குற்றவாளிகள் எனத் தெரிகிறது. உள்ளே இருக்கும் பேய்(!) ஒவ்வொருவராய் கொல்கிறது. யாராவது தப்பித்தார்களா என்பது மிச்சக் கதை. இவ்வகைப் படங்களில் முதல் பாதி பயமுறுத்தினாலும் முடிவு சுமாராய்த்தான் இருந்தாக வேண்டும் என்பது இவ்வகைக் கதைகளின் கதி. படுபயங்கரமான முடிவுடைய பேய்ப் படங்கள் மிகக் குறைவு. க்யூப்ரிக்கின் The Shining கூட so so முடிவு தான்.

    – இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

  • December 31, 2010

    கிறுக்கல் அவார்ட்ஸ் 2010

    வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’ சேர்த்துக் கொள்ளவும்

    புத்தகம்

    ஆங்கிலப் புத்தகம் 1 – The Big Switch – Nicholas Carr

    ஆங்கிலப் புத்தகம் 2 – At Home: A Short History of Private Life – Bill Bryson

    சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

    நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

    தமிழ் சினிமா

    ட்ரைலர் – வா. கு. கட்டிங்

    படம் – ஆயிரத்தில் ஒருவன்

    நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

    சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

    காமெடிப் படம் – தமிழ்ப் படம்

    ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

    நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

    நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

    காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

    துணை நடிகர் – பார்த்திபன்

    பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

    படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

    குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

    இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்

    பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

    பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

    பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

    நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப், கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

    எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ, வா.கு.க)

    ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

    எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

    நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

    பாலிவுட் சினிமா

    படம் – Ishqiya

    சுமார்ப் படம் – Karthik calling Karthik

    நோட்டபிள் படம் – Peepli [Live]

    ஹாலிவுட் சினிமா

    படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

    காமெடிப் படம் – Date Night

    சுமார்ப் படம் – – Shutter Island

    மற்றவை

    டெக்னாலஜி – Augmented Reality

    மொக்கை விளையாட்டு – Farmville

    மறதி நியூஸ் – மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு

  • December 25, 2010

    சின்னத் தீர்மானங்கள்

    சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன். காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான். மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.

    கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும். இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால், அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.

    படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.

    நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான். அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.

    அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது. அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில் சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது. தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள். ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.

    அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.

    0000

    கதையைப் பற்றிப் பேசும்போது, தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான். என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.

    இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன. பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள், ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள். இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம். இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    0000

    இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.

    தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.

    இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன். இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை. காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.

    00000

    வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம். ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள். இது உண்மை தான்.

    ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன். இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.

    இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது, ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.

    இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.

    ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.

    இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்…

    – இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

←Previous Page
1 … 23 24 25 26 27 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar