
அருண் அப்பார்ட்மெண்டிற்கு லிப்டில் போகும் போது கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டான். நான்கு நாள் தாடியும், அடர்த்தியான கலைந்த தலைமுடியும் தெரிந்தது. ஃபோனை அப்பார்ட்மெண்டின் கதவருகே எடுத்துக் கொண்டு போன போது சரக் என்று பூட்டு திறந்து கொள்ளும் ஓசை கேட்டது.
கவிதா சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள். பாதி உடம்பை மைக்ரோ ப்ளஷ் போர்வை மூடிக்கொண்டிருந்தது. வாராத தலை, மூக்குக் கண்ணாடி, கையில் Catakism – Bow to the meow புத்தகம்.
போனை டேபிளில் வைத்து விட்டு ரெஃப்பிரிட்ஜ்ரேட்டரை திறந்து, “உனக்கு எதாவது வேணுமா, ஃப்ரூட், க்ரீக் யோகர்ட், சீஸ்?” என்றான்.
“நோ… செம போர், வாக் போலாமா” என்றாள்.
“ஸ்காட்ச்?”
“நாட் நவ்… மே பி வரும் போது பார் போலாம்”
கையில் எடுத்த மில்க் கார்ட்டனை திறந்து வாயில் வைத்து ஒரு மடக் செலுத்திக் கொண்டான். அவளருகில் வந்து உட்கார்ந்தான்.
அந்த அறையில் அவர்கள் இருந்த சோபாவைத் தவிர, பால்கனி ஓரமாய் ஒரு ஆப்பிள் கணினி, ஆங்காங்கே புத்தக அடுக்குகள், எல்பி ரெக்கார்டுகள், ஜாஸ் போஸ்டர்கள். ஒரு சாம்ஸங்க் டீவி. ஒரு பூந்தொட்டி, எரிந்து கொண்டிருக்கும் நைட்லாம்ப். அருகே ஒரு சின்ன கிச்சன் சுத்தமாய் வைக்கப்படாமல் இருந்தது.
பகலில் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரான அருண், இரவில் ஜாஸ் பிரியன். ஜாவா ஸ்கிரிப்டுக்கும் ஜான் கோல்ட்ரேனுக்கும் இடையே அவனது உலகம் ஊசலாடிக் கொண்டிருந்தது. கவிதா மான்ஹாட்டன் நூலகத்தில் புதிதாய் சேர்ந்திருந்த நூலகி மற்றபடி க்ரிஸ்டோஃபர் நோலனின் ரசிகை, அதாவது நோலகி. யதார்த்தத்தை மங்கலாக்கும் கதைகளில் தன்னை சதா நேரமும் மூழ்கடித்துக் கொண்டிருந்தாள்.
”இதென்ன பூனைய பத்தியெல்லாம் படிக்கற?”
“பேசற மாயாஜால பூனைய தவிர மிச்ச எல்லாத்தையும் படிச்சாச்சு” என்று புத்தகத்தை மூடி வைத்தாள். “வாக் போலாமா…”
இரண்டு மாதங்களாக ப்ராஜக்ட் பிசியில் இருந்த அருணுக்கு, திடீரென்று நடை பழக அழைத்த மனைவியின் பேச்சைத் தட்ட முடியாமல், “ஷ்யுர் டா” என்றான்.
“வாட்….. ஐ காண்ட் பிளீவ், வாட்…. என் புருஷன் நான் சொன்னதை உடனே கேட்டுட்டானா” என்று மேற்கூரையை நோக்கிக் கூவினாள்.
மான்ஹாட்டனின் மார்ச் மாத குளிரையும் பொருட்படுத்தாமல், இருவரும் போட்டிருந்த சற்றே மெலிதான உடையுடன் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பக்கமும் கடைகளில் இரவுணவு கூட்டம். சோஃபிஸ் க்யூபன் எக்ஸ்பிரஸும், டேவ்ஸ் ஹாட் சிக்கனும் மூட ஆரம்பித்திருந்தார்கள். தீப் இந்தியா இன்னமும் மும்மரமாய் இருந்தது. சிவிஎஸ் ஃபார்மஸியின் வாசலில் போலீஸ் வண்டியின் விளக்கெரிந்து கொண்டிருந்தது.
மேற்கு 53ம் தெருவில் நடக்கும் போது இருவரும் ஒரே நேரத்தில் அந்த பூனையைப் பார்த்தார்கள். ஒரு சந்தின் ஓரமாக, இருளை இருட்டடிக்கும் படியாகக் கறுப்பு கலரில் இருந்த அந்த பூனையின் கண்கள் மரகதப் பச்சையாய் இருந்தன. காணாமல் போன குழந்தைகள் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த ஒரு அஞ்சல் பெட்டியின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தது.
“அந்தப் பூனையைப் பாரு, அருண்! நம்மைக் கூப்பிடற மாதிரி இருக்கு” என்றாள் கவிதா, பூனையின் பார்வையில் தன் கண்களைப் பூட்டிக்கொண்டாள்.
அருண் சிரித்தான். “ட்ரூ நம்பள தான் பாக்குது, ஒரு வேள சாப்பாடு வாங்கிக் கொடுங்கன்னுதோ என்னவோ”
அதற்குள் பூனை லாவகமாகக் கீழே குதித்து நடக்க ஆரம்பித்தது, “என்னைப் பின்தொடருங்கள்…” என்று சொல்கிற மாதிரி அவர்களைத் திரும்பிப் பார்த்தது.
வசீகரிக்கப்பட்ட அவர்கள், குறுகிய தெருக்களில் அந்தப் பூனையைப் பின்தொடர்ந்தனர், நகரத்தின் சத்தம் மறைய ஆரம்பித்தது. பூனை, ‘ப்ளூ நோட்’ என்ற நியான் போர்டின் கீழே மங்கலாக விளக்குத் தெரிந்த ஒரு கதவுக்கு முன் நின்றது.
“இது ஜாஸ் பார் போல இருக்கு,” அருண் கதவைத் திறந்து பார்த்தான். மங்கலான விளக்குகளுடனும் பழைய ஜாஸ் சுவரொட்டிகளால் மூடப்பட்ட சுவர்களுடன் இருந்தது அந்த பார். வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போலிருந்தது. ஸ்காட்ச் வாசனை காற்றில் மிதந்தது.
“இதென்னது 60ஸ் ஜாஸ் பார் மாதிரி இருக்கு” என்று கிசுகிசுத்தாள் கவிதா.
அமைதியான ஒரு டேபிளை எடுத்துக் கொண்டார்கள். கருப்புப் பூனை அவர்களின் காலடியில் சுருண்டு உட்கார்ந்தது. சாக்ஸபோனின் சத்தம் அறையை நிரப்பியது, அதன் இசையில் ஆழ்ந்தார்கள். அருண் கவிதாவைப் பார்த்துச் சிரித்தான்.
“இந்த இடம்… மேஜிக்கல். ஏதோ கனவுல வர மாதிரி”
கவிதா தலையசைத்தாள், அவள் கண்களில் அம்பர் விளக்குகள் பிரதிபலித்தன.
“நாம எல்லாத்துலேந்தும் விலகி, நமக்கு சொந்தமான ஒரு சின்ன உலகம் போல இருக்கு. இதுக்கு முன்னாடி இந்த இடத்தை பத்தி கேள்விப்பட்டதே இல்லல”
ஸ்காட்சை அருந்தியபடி அருண், “உன் புக்ஸ்ல வர மாதிரி வாழ்க்கையில இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? பச்சை கண் மாஜிகல் பூனை, நேரத்தை மறக்கடிக்கும் ஜாஸ், இந்த ஸ்மூத் ஸ்காட்ச்” என்றான்.
கவிதா சிரித்துக்கொண்டே, “யாருக்குத் தெரியும், இப்போ கூட நாம அந்த மாதிரி ஏதாவது கதை ஒண்ணுக்குள்ள இருக்கலாம்.”
அடுத்த சில மணிநேரங்களில் அவர்களின் உரையாடல் கனவுகள், அச்சங்கள் என்று துள்ளலுடன் அலைந்து திரிந்தது. அந்த மாலை நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்கியது.
மீண்டும் தெருவில் இறங்கிய போது பூனை காணாமல் போனதைக் கண்டார்கள். வீட்டிற்கு நடந்து சென்றபோது அருண் கவிதாவை குளிரிலிருந்து காப்பாற்றுவது போல அணைத்துக் கொண்டான். கவிதா ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனின் இந்த புதிய கவனிப்பு அவளுக்குப் பிடித்திருந்தது.
திரும்பி வந்த போது அவர்களின் அப்பார்ட்மெண்ட் துடைத்து வைத்த மாதிரி சுத்தமாய் இருந்தது. நகர நியான் விளக்குகளின் மென்மையான பிரகாசத்தில் அந்த அறையே மின்னியது. அருண், கவிதாவை இழுத்து நடனமாட இழுத்தான். “நான் உன் கூட இருக்கும்போது யாருக்குத் தேவை இந்த படு போர் புக்ஸ்?” கண்ணடித்தான்.
கவிதா சிரித்தாள், “இந்த chapter எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு,” அவள் கைகளால் அவனைச் சுற்றிக் கொண்டாள். அவர்கள் மெதுவாக அசைந்தபோது அவ்விரவு ஒரு ஆத்மார்த்தமான ஜாஸ் மெல்லிசையாக அவர்களைப் படர்ந்தது.
Leave a comment