பா

1

அவன் சிறுவனாய் இருந்த போது அப்பா தன் பால்ய கதைகளைச் சொன்னதுண்டு. காலையில் எழுந்து, கடலூரில் போக்குவரத்து நிறைந்த பகுதியிலிருந்த ஒரு ஓட்டலில் அவர் வேலை செய்தது பற்றி. பத்து வயதில் அவரின் அப்பா தவறியவுடன், தன் அத்தையின் ஓட்டலில் காலை 4:30 மணிக்குச் சாம்பிராணி போட்டுக் கடை திறப்பது அவரின் வேலையானது. என்ன தான் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து வருகிற போகிறவர்களிடம் பில் காசை வாங்கி சில்லறை திருப்பிக் கொடுப்பது என்பது வேலையென்றாலும் அதை விட அந்தச் சிறுவனுக்குப் படிப்பதில் ஆர்வமிருந்தது. அவர் கூடவே படித்த அத்தையின் மகனை விட மார்க் அதிகமாக வாங்கியதால் புத்தகங்கள் கிழிக்கப்பட்டு, பள்ளிக்குப் போகவிடாமல் ஓட்டலில் கல்லா கட்டவேண்டியதாகியது. இதிலெல்லாம் ஒரே நல்ல விஷயம், காலையில் ஓட்டலில் போடப்படும் முதல் காபி கல்லாவில் இருப்பவருக்குத் தான். அதுவும் காலை டிகாஷனில், சற்றுமுன் கறந்த தண்ணி கலக்காத பாலில் போடப்பட்ட சுடச்சுட காபி. பதினோரு வயதிலிருந்து அப்பா எப்போதும் டபுள் ஸ்ட்ராங் காபி மட்டுமே குடிப்பவரானார்.

ஹேர்ஹோஸ்டஸ் துபாய் வரப்போகிறது என்று எழுப்பிய போது, ஸ்ட்ராங் காபி கிடைக்குமா என்று அவன் கேட்டான். சுடச்சுட காபச்சீனோ வந்தது. ப்ளைட்டின் பிசினஸ் க்ளாஸில் ஆளில்லை. சியாட்டலில் இருந்து கிளம்பிய பின், ஒரு ரொட்டியும் கொஞ்சம் சாதமும், ஆரஞ்சு நிறத்தில் பனீரோ என்னவோ கொண்டு வந்து கொடுத்தார்கள். விமான பயணமும் அதன் விஸ்தாரமான உணவு பண்டங்களும் அவனுக்கு என்றுமே பிடித்ததில்லை. அப்படியே பயணம் செய்யும் போதெல்லாம் மிளகாய்ப் பொடி தடவி நான்கைந்து இட்லிகளும் கொஞ்சம் புளியோதரையையும் கட்டிக் கொடுப்பாள் மனைவி. துபாய் வரை இட்லியையும் பின்பு புளியோதரையையும் சாப்பிட்டு விட்டு, விமான உணவிலிருந்து தப்பித்துக் கொள்வான். இம்முறை மனமும் உடலும் ஒத்துழைக்காமல், விமான விருந்தை சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆறு மாதங்களில் அவனுக்கு இது மூன்றாவது இந்தியப் பயணம்.

முதல் முறை, கரோனாவிற்கு பின் டிசம்பரில் குடும்பத்துடன் சென்னைக்குச் செல்ல முற்பட்ட போது, ஒமிக்ரான் வந்திருந்தது.

“பாத்துக்கோ, வரதும் வராததும் உன் இஷ்டம்”,என்று சொல்லிவிட்டார் அப்பா.

“முடிஞ்சா ஒரு நடை வந்துட்டுப் போடா” என்றாள் அம்மா.

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் டிசம்பரில் பார்த்த போது அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் இளைத்திருந்தார்கள். முடி கொட்டி நரை அதிகமாயிருந்தது. அவனுக்கும் அதே கதை தான்.

”என்னடா இப்படி முடி கொட்டிப் போச்சு”, அம்மா.

“ஆமாம்… பின்ன இரண்டு வருஷமா தினமும் ஒரு தொப்பிய போட்டுண்டு வாக்கிங் போனா… அந்த தொப்பி என்ன பண்றதுன்னு தான் புரியல” என்றாள் மனைவி.

அம்மா சொன்ன மாதிரி முன்னம் முடியெல்லாம் கொட்டித்தான் போயிருந்தது. என்ன ஆனாலும் டை அடிப்பதில்லை, வயதாவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று முடிவோடிருந்தான் அவன். gracious aging என்று தனக்குக் தானே சொல்லிக்கொண்டிருந்தான்.

முட்டு வலியால், இரண்டு முட்டுக்களையும் டைட்டேனியம் முட்டுக்களாக மாற்றி கொண்டு விட்டிருந்தாள் அம்மா. இம்முறை தான் முட்டு வலி என்று சொல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். கரோனா தொற்று குறைந்தவுடன், யார் உதவியும் இல்லாமல் அப்பாவே அவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் சென்று, அங்கேயே ஏழு நாட்கள் தங்கி முட்டு மாற்று அறுவை சிகிக்சை செய்து பார்த்துக் கொண்டார்.

இரண்டாம் முறையாக அவன் இந்தியா வந்தது கொஞ்சம் எதிர்பாராதது. ஏப்ரல் மாதத்தில் ஒரு உறவினர் நிகழ்ச்சிக்குச் சென்ற பொழுது அம்மா அங்குத் தடுக்கி விழுந்து காலில் அடிபட. மூன்று மாத பெட் ரெஸ்ட் என்று டாக்டர் சொல்லிவிட்டார். யார் உதவியும் இன்றி அப்பாவே அவளைப் பார்த்துக் கொள்ள, மே மாதத்தில் ஒரு நாள் அப்பாவிற்கு முடியாமல் போனது. டாக்டரிடம் சென்றவரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து விட்டார்கள். அம்மா வீட்டிலும் அப்பா ஆஸ்பத்திரியிலும் இருக்க வேண்டிய நிலைமை.

”குரு நீ உடனே கிளம்பி வா. வந்தா அம்மாவுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்று வாட்ஸ்ஸாப்பில் அனுப்பினார் அப்பா.

இந்த பதினேழு வருடத்தில், நீ வந்தே ஆகவேண்டும் என்று என்றுமே எதற்குமே சொன்னதில்லை. அதனால் செய்தி வந்தவுடன் எமிரேட்ஸில் கிளம்பினான்.

ஆஸ்பத்திரியில் நுழைந்து தேடிக் கொண்டு போய்ப் பார்த்தால், படுத்துக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்தார். சற்றே மெலிந்து நான்கு நாள் தாடி தெரிந்தது. ஆங்காங்கே வேட்டிகளும் ப்ளாஸ்டிக் டப்பாக்களும் சூழ இருந்தது அந்த அறை. ஆஸ்பத்திரி வாடை வீசியது.

“என்னப்பா ஆச்சு”

“ஒண்ணுமில்லடா, அம்மாவை பார்த்தியா? எப்படி இருக்கா? வீட்ல போய் எல்லாத்தையும் உட்கார்ந்து பேசலாம். டாக்டர் இன்னிக்கு டிஸ்சார்ஜ்னு சொல்லிட்டார். கீழ போய் ரிசப்ஷன்ல பணத்தை கட்டிவிட்டு வா” என்றார்.

“தாத்தா சூப் சொல்லட்டுமா” என்று நர்ஸ் பெண்மணி சொல்ல, தன் அப்பாவை யாரோ தாத்தா என்று அழைப்பதைக் குழப்பமாகப் பார்த்தான்.

அவனுடைய அப்பா எப்போதும் போல அப்பாவாகவே இருந்தார். என்ன… கொஞ்சம் வயதாகியிருந்தது, நரை அதிகமாயிருந்தது, உடல் தளர்ந்திருந்தது . தன் ஸ்போர்ட்ஸ் டேவில் வந்து ஓட்டப் பந்தயத்தில் ஓடியவர் தானே இவர். அதே மாதிரி தானே இருக்கிறார்? ஆனால் இவரை ஏன் தாத்தா என்கிறார்கள் என்று நினைத்தான்.

கீழே ரிசப்ஷனில் பணம் கட்ட போனவனை இன்ஷுரன்ஸ், டாக்டர் கையெழுத்திட்ட சர்டிபிகேட் என்று சகல உபாதைகளும் செய்து அனுப்பும் போது இரவாகியது. வீடு வந்து சேர்ந்த பிறகு தான் ஒரு வித இயல்புநிலைக்கு வந்தார் அப்பா. அம்மா எழுந்து உட்காரவும் வாக்கர் வைத்துக் கொண்டு நடக்கவும் ஆரம்பித்திருந்தாள்.

“நீ கிளம்பறத்துக்கு முன்ன ஒரு ஈசி சேரும் இரண்டு தலைகாணியும் வாங்கி கொடுத்துட்டுப் போ” என்றார்.

வாங்கிக் கொண்டு வந்து ஈசி சேரை அவரின் அறையில் திறந்து வைத்தான். அப்பா அதில் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தார். சுறுசுறுப்பாய் வளைய வருபவர், இப்படி பொய்ப் பல் சிரிப்பில் ஈசி சேரில் படுத்துக் கொண்டிருந்தது வித்தியாசமாய் இருந்தது.

கிளம்புவதற்கு முன், அழகாய் எளிமையாய் அடுக்கி வைத்திருந்த முக்கியமான டாக்குமெண்டுகளை காட்டினார்.

“இந்த பழ படமெல்லாம் நீ எடுத்துண்டு போ, போய் ஸ்கான் செஞ்சு அனுப்பு” என்று ஒரு ஐந்து கிலோவிற்கு பழைய புகைப்படங்களை கொடுத்து அனுப்பினார்.

“என்னப்பா.. உட்கார்ந்து பேசணும்ன்னு சொன்னியே என்ன விஷயம்.”

“ஒண்ணுமில்ல, இப்படி இரண்டு பேரும் உடம்புக்கு முடியாம இருக்கும் போது நீ வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். தோ பார்… ஏதோ பயந்து போய் உன்ன வரச்சொன்னேனு நினச்சுக்காத. எனக்கு பயமில்லை. என்னிக்கோ ஒரு நாள் எல்லாரும் போகதான் போறோம். எனக்கென்ன எல்லாம் பார்த்தாச்சு, அனுபவிச்சாச்சு, ஒண்ணும் குறையில்ல. ஒரு நாள் உடம்புக்கு வந்து படுத்தோமா, ஆஸ்பத்திரில இரண்டு நாள் இருந்தோமா, அதுக்குள்ள பசங்க எல்லாரும் வந்துட்டா அப்படியே போய்டணும். எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்தி நாமளும் கஷ்டபட்டு கிடந்து என்ன செய்யப் போறோம். ”

அப்பா எப்பவுமே இப்படி ஒரு stoic தான். அவன் சிறு வயதிலிருந்த போது உறவினர் ஒருவர் இறந்து போக, அப்பா அதைப் பற்றி இரண்டு வாரங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

“கடைசி காலம்னா அந்த மாதிரி இருக்கணும். ராமு தண்ணிய குடிச்சுண்டே இருந்த போது அப்படியே உசிர் போயிடுச்சு. கொடுத்து வைச்சவன். அதே மாதிரி தான் போகணும்னு ஆசை” என்றார்.

“ஆமா இந்த உலகத்தில நாம நினைக்கிறது எல்லாம் நடக்கற்தா என்ன. எல்லா நம்ம கர்மாவை பொறுத்து தான்” என்று அவரை குறுக்கிட்டு சொன்னாள் அம்மா.

சியாட்டிலுக்கு கிளம்பும் போது கண்ணாடி அணிந்து கட் பனியனுடன் ஈசி சேரில் படுத்திருந்தவர், ”சரி பார்த்துப் போ. ப்ளைட்ல உன் ஐபேடை மூடி வைச்சுட்டு தூங்கு” என்றார்.

2

பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விதமான முக்கல் தொனியில் ம்ம்ம்ம்ம்…. என்று ஒரு ஹம்மிங்குடன் ஆரம்பிப்பார் டி.எம்.சவுந்தரராஜன். பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற அந்தப் பாடலைத்தான் அப்பா தன் திருமணத்தன்று நலங்கு நிகழ்ச்சியில் அம்மாவிற்காகப் பாடியதாக அவனிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். என்றெல்லாம் அதைச் சொல்லுகிறாரோ உடனே சிவாஜி கணேசன் மாதிரியே உதட்டை அசைத்து அசைத்துப் பாடிக் காட்டுவார்.

”ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவி பாரடைஸ்ல ஏவி ரமணன் மியூசியானோ நடக்கும். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ப்ளீர்ன்னு இசையோடு ரமணனும் உமா ரமணனும் பாட ஆரம்பிப்பாங்க. பிரமாதமாக இருக்கும்” என்று 70களின் மெட்ராஸைப் பற்றிச் சொல்வார். அப்போது தான் அப்பாவுக்கு மைக் பிடித்துப் பாடும் பாடகனாக வேண்டும் என்று ஆசை இருந்ததே அவனுக்கு தெரிந்தது.

மே பிற்பகுதியில் அவன் அமெரிக்கா திரும்பியவுடன் அப்பாவும் சகஜ நிலைக்குத் திரும்பினார். இரண்டு வாரங்களுக்குப் பின் ஜூன் மாதத்தில் அப்பா உட்கொண்ட உணவின் அளவு குறைந்தது.

“நல்லா தக்காளி ரசமும் அவரைக்காய் கறியும் செய்யுன்னு சொன்னார். ஆனா சாப்பிட உக்கார்ந்தா பிடிக்கல பிடிக்கலன்னு சொல்றார்” என்று அவன் போன் செய்யும் போதெல்லாம் சொல்ல ஆரம்பித்தாள் அம்மா.

அவருடைய டாக்டரிடம் வாட்ஸ்ஸாப்பில் அவன் பேசினான்.

”ரொம்பவும் பயப்பட ஒண்ணுமில்லை. கார்டியாலஜிஸ்ட் சொன்ன மாதிரி தண்ணியை அளவா பார்த்துக் குடிக்க சொல்லுங்க. எலக்ட்ரோலைட்ஸ் பார்த்துக்கோங்க” என்றார் டாக்டர்.

அவனுக்குத் திரும்பவும் இந்தியா போக இருக்கும் வேண்டியிருக்கும் போலத் தோன்றியது. அடுத்த நாள் எடுத்த PCR டெஸ்டில் அவனுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இரண்டு நாட்களுக்குப் பின் கொஞ்சம் கரோனா ஜூரம் தலைவலியெல்லாம் தேவலையானவுடன், போக்குவரத்து கட்டுப்பாடுகள் என்ன என்று படித்துப் பார்த்தால் கரோனா முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே விமான பயணம் மேற்கொள்ளலாம் என்றது அரசு.

அப்பா உணவு வெறும் நீராகாரம் மட்டுமே என்றாகியது. அம்மா எல்லாவற்றையும் அரைத்துக் கொடுக்க ஆரம்பித்தாள். அப்பா அதையும் தவிர்க்கப் பார்த்த்தார். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வாசிகள் அவரை பார்க்க வந்த போது தள்ளாடிப் போய் கீழே உட்கார்ந்து விட்டார். அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்குப் போகமுடிவாகியது.

“நான் வேணும்ன்னா கிளம்பி போறேன். உனக்குக் கோவிட் சரியான உடனே நீ வா” என்றாள் தங்கை.

கலிபோர்னியாவிலிருந்து அவள் கிளம்ப, இன்னும் ஐந்து நாட்கள் தள்ள என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆஸ்பத்திரிக்குப் போன அப்பாவிற்கு கார்டியாக் அரெஸ்ட் வந்தது. அப்பாவின் தம்பி, அவனுக்கு போன் செய்தார்.

“கண்ணு, அப்பாவுக்கு மூச்சு விட முடியல. அவங்க ஆறு நிமிஷத்துக்கு CPR செஞ்சு காப்பாத்திட்டாங்க. நீ உடனடியா எப்ப கிளம்ப முடியும்” என்றார் அவன் சித்தப்பா.

அடுத்த நாள் அவன் தங்கை அப்பாவைப் போய் ஐசியூவில் பார்த்தாள்.

“ஏன்னால பாக்க முடியல டா அப்பாவை. டீயூப்பெல்லாம் இழுத்து போட்டுடறார்னு, கைய கட்டி வச்சிருக்காங்க. பாவம் டா அப்பா. சரியாயிடும்பா கவலை படதேன்னு சொன்னேன். இல்லன்னு அப்பா தலையை அசைக்கிறார்டா” என்று அழுதாள்.

அவனுக்கு இப்பொழுது தானா தனக்கு கரோனா வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் / கையினில் துல்லியம் காட்டும் உடலையும் / ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே” என்று திருமூலர் சொன்னது அவனுக்கு அன்று புரிந்தது.

அன்றிரவு அவன் தங்கையும் அங்கிருந்த ஒரு டாக்டரும் வாட்ஸாப்பில் அவனுக்கு போன் செய்தார்கள்.

மல்டிபல் ஆர்கன் டிஸ்பங்க்ஷன் என்றாகி அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு அப்பாவிற்கு மீண்டும் கார்டியாக் அரஸ்ட் வந்து காப்பாற்ற முடியாமல் இறந்து போனார்.

வீட்டிலிருந்த மற்றவர்க்கெல்லாம் கரோனா வந்து விடாமல் இருக்க தனி ரூமில் இருந்தவனுக்கு தங்கை அழுது கொண்டே போன் செய்த போது அவளைத் தேற்றுவதா தான் அழுவதா என்று புரியக் கொஞ்சம் நேரம் பிடித்தது. ஒரு வழியாகப் பேசி வைத்து விட்டு கண்ணீர் விட்டழுதான். இந்தியா போய் அப்பாவின் கடைசி கடமைகளைச் செய்து முடிக்க முடியுமா என்று கண்விழித்து யோசித்திருந்தான்.

“கண்ணு… நீ வராம ஒண்ணும் செய்ய முடியாது. நீ வந்து தான் எல்லா காரியமும் பண்ணனும். கரோனா எல்லாம் முடிஞ்ச அப்புறம் கிளம்பி எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வா. மூணு நாளோ முப்பது நாளோ நாங்க அப்பாவை பத்திரமா ராமசந்திராவில வச்சி இருக்கோம்” என்றார் சித்தப்பா.

அம்மா தவித்துப் போனாள்.

”சித்தப்பா என்ன சொல்றாரோ அதே அப்படியே செய்.” என்றால் அம்மா.

மூன்று நாட்களுக்குப் பின் வீட்டில் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு கிளம்புகிற மாதிரி எமிரேட்ஸில் டிக்கெட் புக் செய்தான்.

சென்னை வந்து சேர்ந்தவுடன், அவன் குவாரண்டைனில் தனியாக இருப்பதற்கு வீட்டில் இருந்த அப்பாவின் அறை ஒழித்துக் கொடுத்தார்கள். கரோனாவின் களைப்பு இன்னமும் போன மாதிரியில்லை. அப்பா இறந்து ஐந்து நாட்களாகியிருந்தது. அவனுக்கு கரோனா வந்து பத்து நாட்கள்.

அன்று பகலில் அப்பாவை ராமசந்திராவிலிருந்து எடுத்து வந்திருந்தார்கள். மார்சுவரியிலிருந்து வந்ததால் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழே இருந்த பெரிய கார் பார்கிங்கில், காரை எல்லாம் நகற்றி, S. Ramesh, Puthur என்று ஐஸ் பெட்டிக்கான விளம்பரம் எழுதப்பட்டிருந்த ஒரு ஐஸ் பெட்டியில் அப்பாவை வைத்திருந்தார்கள். அவன் வந்து அப்பாவைப் பார்த்த போது அவனையே எல்லோரும் பார்ப்பது போல தோன்றியது. கொஞ்சம் தள்ளிப் போய் அழுதான். மாஸ்க் நனைந்து போனது.

”அப்பாவுக்கு பக்கத்துல, பாலும் பழமும் பாட்டை போடச் சொல்லு” என்றான் தங்கையிடம்.

பாட்டு போடப்பட்டவுடன் அப்பா தலையாட்டிக் கொண்டே உதட்டைச் சுழற்றி சுழற்றி பாடுவது ஞாபகம் வந்து அழுகை சற்று அதிகமானது.

அவனுக்குப் பஞ்சகச்சம் கட்டி விட்டார்கள், தண்ணியைத் தலையில் விட்டுக் கொண்டு சொட்டச் சொட்ட வரச்சொன்னார்கள். வாத்தியார் மந்திரம் சொல்லி நெருப்பு உண்டாக்கினார். பின்பு அவனை அப்பாவின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அவர் வலது காதில் தர்ப்பையைப் படுமாறு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

அப்பாவின் தலையை மடியில் வைத்த நொடியில் அவனுக்கு ஒரு பெருவாழ்வே மின்னலாக ஒடியது. குடும்ப பாரத்தைச் சுமக்க அப்பா படித்து பம்பாய் போனது, மெட்ராஸுக்கு வந்து அம்பத்தூர் எஸ்டேட்டில் பதினேழு கம்பெனிகளில் வேலை செய்தது, தனக்கான வாழ்வை சிறுகச் சிறுக சேர்த்து அமைத்துக் கொண்டது, உறவினர் யார் வந்து திருமணத்திற்குப் பணம் என்று கேட்டாலும், அம்மாவை LTC போட வைத்தாவது பணம் குடுத்தது, பலப்பலப் பேருக்கு பலவகையில் உதவி செய்தது, குல தெய்வத்துடன் சேர்த்து நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணிக்கும் அவனைக் கூட்டிச் சென்றது, கடைசி வரையில் ஒரு என்ஜினியராக வாழ்ந்தது என்று அப்பாவின் எழுபத்து ஏழு வருடங்களும் பளீரென வந்து போனது.

நெருப்பை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய் வண்டியில் ஏறிக் கொள் என்றார்கள். வண்டியில் ஏறும் வரை தங்கையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பாவை வண்டியில் ஏற்றிப் போய் மின் மயானத்தில் 550 டிகிரியில் தகனம் செய்தார்கள்.

”தாடியை இங்கேயே நின்னு எடுத்துட்டு முழுசா தண்ணிய ஊத்திண்டு வா” என்றார்கள்.

அவன் குளித்து வருவதற்குள் எலும்புகளைச் சேகரித்து மயான ஊழியர் ஒருவர் எடுத்து வந்தார்.

“பீச்சுக்கு இந்த பானைய எடுத்துப் போய் நாராயணா நாராயணா சிவ சிவான்னு சொல்லி தண்ணில அமுக்கிட்டு வந்துடுங்கோ” என்றார் வாத்தியார்.

பெசண்ட் நகர் பீச்சுக்குப் போக முடியுமா என்று கேட்டான் அவன்.

“கண்டிப்பா அண்ணா. உங்களுக்கு எங்க வேணுமோ அங்க போகலாம்” என்றார்கள் சித்தப்பாவின் மகன்கள்.

கார்ல் ஸ்மித் மண்டபம், பெசண்ட் நகர்

அன்று குரு பவுர்ணமி, இரவு 8 மணி. இருள் கவிழ ஆரம்பித்திருந்தது. பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு அருகில் கார் வந்த போது மழைத் தூறல் ஆரம்பித்தது. பீச்சில் ஆள் அதிகமில்லை.

கார்ல் ஸ்மித் மண்பத்துக்கு எதிரில் காரைப் பார்க் செய்தவுடன் தன் கையில் வைத்திருந்த பானையுடன் தண்ணீரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மழைத் தூறல் அதிகமாக மக்கள் தண்ணீரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். வெற்று மார்போடு, பஞ்ச கச்சம் கட்டி பானை எடுத்துக் கொண்டு போனவனை சிலர் விசித்திரமாகப் பார்த்தார்கள்.

பவுர்ணமி என்பதால் கடல் பரபரப்பாய் இருந்தது. இடுப்பளவு தண்ணீர் வரும் வரை உள்ளே நடந்தான். அந்த முழு நிலவை ஒரு முறை தலை தூக்கிப் பார்த்தான்.

“பா…” என்று சத்தமாகச் சொல்லி ஒரு முறை அப்பாவின் சிரித்த முகத்தை நினைத்துக் கொண்டான். தன் கையிலிருந்த பானையைத் தண்ணீரில் வைத்து அழுத்தினான். பானை உடைந்து வங்காள விரிகுடாவில் விரிய ஆரம்பித்திருந்தார் அப்பா.

3

அப்பா பம்பாயில் வேலை செய்த கதைகளை சொல்லும்போது அவனுக்குச் சுவாரசியமாய் இருக்கும். அந்த மனிதர்களும் அந்த ஊரும் அவனுக்கு அன்னியமானதால் இருக்கலாம். இடுக்கமான வீடுகள், பொங்கி வழியும் ரயில் பெட்டிகள், தெருவில் விற்கும் பூரி தின்பண்டங்கள். பம்பாயினால் அப்பாவுக்கு இந்தி சினிமாவும் பிடித்துப் போனது. ஆராதனாவிலிருந்து Nazia Hassan பாடும் Aap jaisa koi meri zindagi mein aaye to baat ban jaaye வரை எல்லாம் கேட்பார், பார்ப்பார். ஆனால் பம்பாயில் இருந்த போது அவருக்குத் தெரிந்த இரண்டே வார்த்தைகள், அச்சா மற்றும் நஹி. இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து அவர் எப்படி நாட்களைக் கடத்தினார் என்பது தான் கதைகளே.

பம்பாயிலிருந்து  திரும்பியதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் அவருடைய அம்மா தமிழ் நாட்டில் இருந்ததாலும் அவரை விட்டு தள்ளி இருக்க மனமில்லாததாலும் தான். பம்பாயில் மேலும் தங்கியிருந்தால் தன் வாழ்வு எப்படி போயிருக்கலாம் என்பது பற்றி ஒரு alternative narrativeவை அப்பா சொல்லிக் கேட்டிருந்தான்.

”பம்பாயிலேயே இருந்திருந்தா இத்தனை வருஷத்துல ஒரு பெரிய பங்களா கட்டி..”

“ஏன் அங்கேயே நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே. நல்லா… கவர்மெண்ட்ல வேலை செய்ற பொண்ணா வேணும்னு தானே ஒத்த கால்ல நின்னீங்க. இத்தனை நேரம் பம்பாய்ல அந்த ஒடுக்கு வீட்ல மழை ஓழுகிண்டு இருக்கும்” என்று சொல்லி அப்பாவின் புஜத்தில் செல்லமாய் குத்துவாள் அம்மா.

விக்ரமில் கமல் சொல்லும் ”…ப்பாத்துக்கலாம்” போல அப்பா அக்கறையற்ற, “அதெல்லாம் சல்தா ஹை…” என்பார்.

பம்பாயில் இருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என அவன் நினைத்தது, சல்தா ஹை என்ற மனப்போக்குத் தான். தன் வாழ்வில் அத்தனை ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர், தன் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தைப் பற்றி ஒரு வித துறவியின் மனநிலையில் சல்தா ஹை என்று சொல்லிக் கடந்து சென்று விடக்கூடியதை அவன் கொஞ்சம் வியந்தான்.

அமெரிக்காவிலிருந்து வந்த அன்றே தகனம் முடிந்திருந்ததால், அடுத்தடுத்த காரியங்களை பற்றி வீடு யோசித்தபோது, அவனுடைய பயண களைப்பும், கரோனா களைப்பும் தீரட்டும் என்று எல்லா காரியங்களையும் ஒன்பதாம் நாளன்று தள்ளி வைத்து விட்டார்கள்.

அடுத்த மூன்று நாட்களுக்கும் அப்பாவின் அறையிலேயே தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். டீவி போர் அடித்தது, டுவிட்டர் கசந்தது, புத்தகங்களில் மன போக மறுத்தது. முதலில் அதை ஜெட்லாக் என்று நினைத்தவனுக்கு பிறகு தான் புரிந்தது, அது அப்பாவின் காரியங்களை முடிக்க வேண்டும் என்ற மன உணர்ச்சி உண்டாக்கும் தூக்கமின்மை என்று.

ஒன்பதாம் நாள் முதல் அத்தனை காரியங்களையும் ஸ்ரீ ராம தீர்த்தம் என்ற இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்குச் சென்றவுடன் அவன் கணினி தொழிலாளி மண்டைக்குள் தோன்றியது, “இது ஒரு FaaS” என்று. Funeral-as-a-service.

பத்தாயிரமோ பன்னிரெண்டோ கொடுத்து விட்டால், ஹோம சாமன்கள் முதற்கொண்டு , காரியம் செய்விக்க அறைகளும், குழி தர்ப்பணம் செய்ய குழிகளும், கோ பூஜை செய்ய மாடு கன்றுக்குட்டிகளும், அரிசி வாழைக்காய் தானம் வாங்கிக் கொள்ள அங்கேயே வேலை செய்யும் ஆட்களும் என்று எல்லா வசதிகளும் நிரம்பப் பெற்ற இடம். அடுக்குமாடி குடியிருப்புகள் நிரம்பி வழியும் சென்னை போன்ற பெருநகரங்களுக்குத் தேவையான all-in-one service.

”கர்தா பேர் சொல்லுங்கோ…”

“கீர்த்திக…”

“நீங்க தான கர்த்தா, உங்க பேர் சொல்லுங்கோ…”

சொன்னான்.

அப்போது தான் புரிந்தது அப்பாவின் காரியங்களில் கர்த்தா எனப்படுவன் அவன் தான் என்று. அடுத்தடுத்த நாட்களில் பஞ்சகச்சம் கட்டுவதற்கு கற்றுக் கொண்டு விட்டான். தலை குளியல், தர்ப்பணம் , அரிசி வாழைக்காய் என்று எல்லா நாட்களுக்கும் சேர்த்துக் குழி தர்ப்பணம் செய்யச் சொன்னார் வாத்தியார். கண்ணை மூடி கல் ஊன்றினான்.

“இன்னும் நல்லா நெறைய ஜலம் விடணும். இந்த பத்து நாளும், போன அப்பாவோட ஆத்மாவுக்குத் தெரிஞ்சது ஒண்ணு தான். பசி தாகம்… பசி தாகம்”

அந்த சிறிய ஸ்ரீ ராம தீர்த்த அறையில் தங்கை அடுப்பு பற்ற வைத்து சாதம் வடித்து பிண்டம் பல பிடித்து வைத்திருந்தாள்.

“மார்ஜயந்தா…”

“மார்ஜயந்தா…”

“மம-ன்னு சொல்லுங்கோ”

”மம” என்றான்.

“அப்படியே பித்ரு தீர்த்தம் போல கையில இருக்கிற எள்ளு கலந்த ஜலத்தை, கைய திருப்பி பிண்டத்தோட மேல விட்டுடுங்கோ”

விட்டான்.

“இப்ப பூணுல சரியாப் போட்டுக்கலாம்”

கலிபோர்னியா சென்றிருந்த மாமா அப்பாவின் செய்தி கேட்டு அவனுக்கு முன்னமே கிளம்பி வந்திருந்தார். பத்தன்று காலை அவனிடம் வந்து,” இன்னிக்கு காரியம் பண்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கும், கொஞ்சம் தைரியமா இரு” என்று எச்சரித்தார். பத்தாம் நாளன்று உறவினர்கள் வந்தார்கள், அழுதார்கள், பத்து கொட்டினார்கள்.

ஒத்தன் என்பவருக்கு உணவிடச் சொன்னார்கள். அவர் உண்டு முடிந்தவுடன் அவனை திரும்பி நிற்க சொன்னார்கள்.

“அப்பாவுக்காக கிளம்பி இவர் காசிக்கு போறார். அவரை பாக்காம திரும்பி நின்னுக்கோங்கோ”

அது ஒரு ஐதீகம் தான். காசிக்செல்லாம் பலரும் செல்லச் சொல்லவதில்லை. அதற்குச் செலவாகும் என்று பின்னர் புரிந்து கொண்டான்.

வாத்தியார்கள் கோஷ்டியாய் உட்கார்ந்து ஒரு சேர ருத்ரம், சமகம் சொன்னார்கள். அதுவரை செய்யப்பட்ட காரியங்கள் எல்லாம் புதிதாக இருந்தாலும், அவர்கள் சொன்ன ருத்ரத்துடன் சேர்ந்து அவனும் அரைகுறையாய் ருத்ரம் சொல்ல முற்பட்டான்.

சுபஸ்வீகாரத்துக்கு எல்லோரையும் வாட்ஸ்ஸாப்பில் அழைக்க அப்பாவின் படம் போட்டு அழைப்பு செய்து கொடுத்தான். அபார்மெண்டில் இருந்த எல்லோருக்கும் அழைப்பை அனுப்பினாள் அம்மா.

“அப்பாவுக்கு எல்லாரையும் கூப்பிட்டு சாப்பாடு போடணும்னா பிடிக்கும்”

வாத்தியார்கள் வந்தனர். நவக்கிரக ஹோமம் செய்தார்கள். புண்ய ஜலத்தினால் அவனை நனைத்தார்கள். சரம ஸ்லோகம் எழுதி வாசித்தார். அப்பாவின் திதி இத்தியாதி விஷயங்களை ஒரு அரை பேப்பரில் எழுதி கொடுத்தார்.

”இனிமே இதுதான் அப்பாவோட முக்கியமான சீட்டு. இதை நீங்க எங்க காமிச்சாலும், திதி பார்த்து மாசிகம் சோதமம் எல்லாம் பண்ணி வச்சிருவா. 27ம் நாள் , 45ம் நாள், ஆறாம் மாசத்தை மட்டும் விடாம பண்ணிடுங்க. அடுத்த வருஷம் வருஷாப்திகம் இங்கேயே ஜம்முன்னு பண்ணிடலாம். ஆக்சுவலா கர்த்தா ஒரு வருஷம் கோயில் போகப்பிடாது, மலை ஏறப்பிடாது, கடல் கடக்கபிடாது. ஆனா அமெரிக்கா போய் ஆகனுமே. ஒண்ணும் சிரமமில்ல, ஒரு ப்ரிதி பண்ணிக்கலாம்” என்று கொஞ்சம் சிரித்த படி சொன்னார்.

அப்பாவின் ஆஸ்தான அட்டோ ஓட்டுநர் முதற்கொண்டு மருந்து கடைக்காரர், ப்ளம்பிங் வேலை செய்பவர் என்று எல்லோரும் வந்தார்கள், அழுதார்கள். அப்பா அவர்களுக்குச் செய்திருந்த உதவிகளின் விவரங்களைச் சொன்னார்கள். சீனு ஒரு ஃபாண்டா பாட்டில் கொண்டு வந்து அப்பாவின் படத்தின் முன் வைத்தார்.

“அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சது இதுன்னு…”

அப்போது தான் அவனுக்குப் புரிந்தது. தான் சென்னையில் இல்லாத பதினேழு வருடங்களில் அப்பா பலருக்கும் பணத்தையும், மனத்தையும் கொடுத்து உதவியிருக்கிறார். அவர் சென்னை வரும்போது இவற்றைப் பற்றிக் கேட்டிருந்தாலும், அந்த எளிய மனிதர்களின் அக்கறையை அப்போது தான் புரிந்து கொண்டான்.

தங்கையுடன் சேர்ந்து வீட்டைக் கொஞ்சம் எளிதாக்கி அம்மாவிற்கு ஏற்றபடி மாற்றி அமைக்க நினைத்தான். அப்பா சேர்த்து வைத்திருந்த பலவித எலக்டிரிகல் கருவிகளை ஒன்றாக எடுத்து வைத்தார்கள். அவர்களின் ஆஸ்தான எலக்ட்ரீஷனை அழைத்து எடுத்துப் போகச் சொன்னார்கள்.

“என்னது சார் இறந்துட்டாரா” என்று அதிர்ந்து போனர் அந்த எலக்ட்ரீஷன்.

”இந்த ஸ்விட்ச் போர்டையெல்லாம் ரிமோட்டா மாத்தி அவர் செஞ்சிருந்க்கிற விஷயம் ஸ்டார் ஓட்டல கூட இல்லீங்க. அவர் சொல்லித் தான் இதயெல்லாம் நானே தெரிஞ்சுகிட்டேன்”

அப்பாவின் கனிணியை வீட்டு வேலை செய்பவரின் சிறுவனுக்கு உதவியாய் இருக்கும் என்று கழட்டிக் கொடுத்தான். ப்ரிண்டர் இன்னொருவருக்குச் சென்றது.

பாங்க் கணக்கு வழக்கைப் பார்த்த போது, அப்பா எல்லா கணக்குகளையும் எளிதாக்கி அத்தனை டாக்குமெண்டையும் சேர்த்து ஃபைல் செய்து தன் டைரியில் அழகான கையெழுத்தில் எழுதி வைத்திருந்தார். அம்மாவின் ஏர்டெல் ஃபோன் முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் ஒரு ஆண்டு சந்தா கட்டி வைத்திருந்தார். அவன் செய்ய வேண்டிய வேலை என்று ஒன்றுமே இல்லாமல் செய்து வைத்துப் போயிருந்தார். ஆஸ்பத்திரியில் அவர் இருந்த கடைசி நாட்களுகளுக்கான செலவு, பிடித்தம் போக அனைத்தும் ஏற்கனவே அவர் கட்டியிருந்த ஸ்டார் ஹெல்த் இன்ஷுரஸிலுருந்து ஒரே செக்காக வந்தது.

“அடுத்த ஒரு வருஷத்துக்கு என்னை எங்கேயும் கூப்பிடாதீங்க. அப்பா நினைவா நான் இங்க தான் இருக்க போறேன்” என்றாள் அம்மா. அவளைத் தனியாக எப்படி விடுவது என்று அவர்கள் வியந்த போது, அடுத்த இரண்டு மாதங்களாவது அங்கேயே தங்குகிறேன் என்றார் அவள் தம்பியான அவன் மாமா.

எமிரேட்ஸில் திரும்ப டிக்கெட் வாங்கினான்.

விமானத்தில் ஏறி, பறப்பதற்கு முன் உட்கார்ந்த அவன் ரெஸ்ட்ரூம் போக தன் இருக்கையை விட்டு எழுந்தான்.

“Sorry sir.. only one restroom in business class today. This one does not work. You can use the first class restroom if needed” என்றாள் அந்த விமானப் பணிப்பெண்.

எதோ சொல்ல எத்தனித்தவன், தன்னையும் அறியாமல், “fine.. சல்தா ஹை” என்றான்.

“What.. Waaz that” என்று வினவினாள்.

“Oh no, nothing… do you have cappuccino. I’ll take one.”

காப்பசீனோ வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பின் அன்று அவனுக்கு முதல் முறையாக நன்றாக உறக்கம் வந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com