ஒரு பத்து வருடங்களுக்கு முன் நானும் எனது நண்பன் செந்திலும், வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் பேசிக் கொண்டிருந்த போது, “மச்சான் !! நான் படமெடுத்தன்னா நீ தாண்டா காமிராமேன்” என்றான்.
அதற்கு முன்னால் அவ்வப்போது மற்றொரு நண்பனின் போட்டோ ஸ்டூடியோவில், உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், டார்க் ரூம், 400 கவுண்ட், ப்ளாஷ் ஸின்க் என்று காதில் விழுந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு அண்ணா என்னை வைத்து ஒரு க்ளோஸ்-அப் எடுத்தார். அது கொஞ்சம் நன்றாக வந்து விட, ரெண்டு வாரம் கொஞ்சம் அதிகமாய் சோப்பு போட்டு, பேர் அண்டு லவ்லி அப்பி, தினமும் அயர்ன் பண்ணி ஜீன்ஸ் போட, பசங்களெல்லாம் மிரண்டு போனார்கள். அந்த அண்ணாவை வைத்து, இதெல்லாம் இந்த காமிராவால வந்தது, நீ சுமாராத் தான் இருக்க தம்பி என்று உண்மையை உணர வைத்தார்கள்.
அதற்கு பிறகு காமிரா கத்துக் கொடுத்தார்கள். அப்பாவியாய் வரும் கஸ்டமர்களுக்கு என்னை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வைத்தார்கள். டார்க் ரூமில நிற்க வைத்து டெவலப்மெண்ட் சொல்லிக் கொடுத்தார்கள். காமிராவிற்கு முன் போய், காமிராவிற்கு பின் என்றானது. Photography கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்போதெல்லாம் யாராவது என்னைக் கேட்டால், நானெல்லாம் அந்த காலத்து ஆசாமி, பிலிம் ரோல்ல படமெடுத்து கத்துக்கிட்டவன் என்று மார்தட்ட முடிகிறது.
அதற்கு பிறகு செந்திலுடன் பேசும் போது என் போட்டோகிராபி ஆசையை பார்த்து, அவனுக்கும் வேறு ஆள் கிடக்காததால், அவனின் கனவுப் படத்துக்கு காமிராமேனாக கால்ஷீட் போட்டான். அவனுடன் சேர்ந்து கதாசிரியனானேன் என்பது epilogue. அந்த காமெடி பற்றி மற்றோரு சமயம்.
2002ல் அமெரிக்கா வந்த போது, கொஞ்சம் டாலர் சேர்த்து, ஒரு கேனன்(canon) வாங்கினேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வேளாங்கன்னியிலிருந்து ரெயிலில் வந்து கொண்டிருந்த போது, உதயசூரியனை படமெடுக்கப் போய், CCD காலி. பிறகு ஒரு point and shootஆக சல்லிசாய் ஒரு சோனி வாங்கினேன். ரொம்பவும் பிடித்துப் போன காமிராவது. “எவன் லென்ஸை மாத்தி மாத்தி திருகிண்டிருப்பான்” என்று அந்த சோனியுடன் அக்கியமானேன்.
போன வருட கடைசியில் Nikon D40 என்றொரு காமிரா அறிமுகப்படுத்தியது. நல்ல டிஜிட்டல் எஸ்.எல்.ஆர்(single-lens reflex) காமிராவாதலால், மீண்டும் காமிராவிற்கு பின் என ஆசை துளிர் விட ஒரு ஆறு மாதம் கழித்து, இப்போது வாங்கி விட்டாயிற்று. சதக் சதக் என்று நொடிக்கு இரண்டரைப் படமெடுக்கலாம். டெலிபோட்டோ லென்ஸ் போட்டு பிசி.ஸ்ரீராம் மேட்டர்களை முயற்சிக்கலாம்.
அதெல்லாம் விடுத்து இப்போதைக்கு lazy lensசிலும் flickrயிலும் சுமாரான படங்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். நல்ல புகைப்படம் வரும் தருணங்கள் ரொம்பவும் அபூர்வம் தான். இந்த டெக்னாலஜியில் யார் வேண்டுமானாலும் நல்ல படமெடுக்கலாம். நல்ல எஸ்.எல்.ஆரும் மண்டை மண்டையாய் லென்ஸுகள் மட்டுமே முக்கியம். சென்னைக்கு செல்லும் போது ஒரு போட்டோ கட்டுரை செய்ய ஆசை. பார்க்கலாம்.