[படம் – இந்து]
நிலஞ்சனா ராய் இந்துவில் எழுதியிருக்கும் The decline of the book review, ஒரு காலத்தின் கட்டாயம். புத்தகம் மற்றும் கலை சார்ந்த விமர்சனங்களை படிப்பாரில்லாமல், எல்லா பத்திரிக்கைகளும் ஏறக்குறைய நிறுத்தி விட்டன. மெட்டி ஓலியும், வால மீனும் மக்களை சதா சர்வ காலமும் ஏழரை சனி போல பிடித்துக் கொண்டிருப்பதால், குமுதத்திலும் விகடனிலும் இளமை காம்பெளண்ட் பக்கம் பக்கமாக தலை விரித்தாடுகிறது. அப்படியே தப்பி தவறி புத்தக விமர்சனம் போட்டு விட்டால், அதில் ஒரு controversy இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள்.
குமுதத்தில் பு(து)த்தகம் என்று அரை பக்கத்திற்கு ஏனோ தானோ என்று ஏதோ கிறுக்குகிறார்கள். விகடனில் இப்பொழுது புதிதாக புத்தக விமர்சனம் வருகிறது. கல்கியிலும் பு.வி படித்தாக ஞாபகம். இந்தியா டுடேயில் மட்டும் தான் ஒரு பக்க பு.வி போடுகிறார்கள். அதுவும் சாமானியனுக்கு புரியாத மாதிரி விஸ்தீரணம், கோட்பாடு, கொழுக்கட்டை என்று ஏதோ முத்தொள்ளாயிரம் எழுதுகிறார்கள்.
இந்த கதியில் கடந்த மூன்று வருடங்களாக, சென்னை புத்தக சந்தை, பங்குச் சந்தை போல் பணம் கொழிப்பதாக சொல்லும் BAPASIயை [Booksellers and Publishers Association of South India] நம்பலாமா வேண்டாமா என்று தோன்றுகிறது. எந்த ஒரு தொழிலும் அதற்கு தொடர்புடைய மற்ற தொழில்களை உருவாக்கிக் கொள்ளும் என்பது இந்திய, குறிப்பாக தமிழ் புத்தக தொழிலுக்கு இன்னும் உண்மையாகவில்லை.
விமர்சகர்களுக்கு கொடுக்கும் சல்லிக் காசில் பிடித்தம் பார்க்கும் mainstream பத்திரிக்கைகள், atleast, வாசகர்கள் எழுதிப் போடும் ஒரு பக்க புத்தக-கலை விமர்சனங்களையாவது கடைசி பக்கங்களில் போடுமேயானால், புண்ணியமாய் போகும்.
பி.கு – மேலே இருக்கும் இந்து கேஷவ் வரைந்த கார்டூனுக்கும், இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த டைம் பத்திரிக்கையின் அட்டை படத்திற்க்கும், ஒரு obvious ஒற்றுமை இருப்பதாக நான் சொன்னால் அடிக்க ஆட்டோ அனுப்புவார்கள். இந்த மாதிரி காரணங்களிற்க்காக மட்டுமே பல விமர்சனர்கள், தமிழ் சினிமா பாட்டெழுத போய் விட்டார்கள் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் !!