‘மற்றவை’ பதிவுகள்

lazy lens

ஒரு பத்து வருடங்களுக்கு முன் நானும் எனது நண்பன் செந்திலும், வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் பேசிக் கொண்டிருந்த போது, “மச்சான் !! நான் படமெடுத்தன்னா நீ தாண்டா காமிராமேன்” என்றான்.

அதற்கு முன்னால் அவ்வப்போது மற்றொரு நண்பனின் போட்டோ ஸ்டூடியோவில், உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், டார்க் ரூம், 400 கவுண்ட், ப்ளாஷ் ஸின்க் என்று காதில் விழுந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு அண்ணா என்னை வைத்து ஒரு க்ளோஸ்-அப் எடுத்தார். அது கொஞ்சம் நன்றாக வந்து விட, ரெண்டு வாரம் கொஞ்சம் அதிகமாய் சோப்பு போட்டு, பேர் அண்டு லவ்லி அப்பி, தினமும் அயர்ன் பண்ணி ஜீன்ஸ் போட, பசங்களெல்லாம் மிரண்டு போனார்கள். அந்த அண்ணாவை வைத்து, இதெல்லாம் இந்த காமிராவால வந்தது, நீ சுமாராத் தான் இருக்க தம்பி என்று உண்மையை உணர வைத்தார்கள்.

அதற்கு பிறகு காமிரா கத்துக் கொடுத்தார்கள். அப்பாவியாய் வரும் கஸ்டமர்களுக்கு என்னை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வைத்தார்கள். டார்க் ரூமில நிற்க வைத்து டெவலப்மெண்ட் சொல்லிக் கொடுத்தார்கள். காமிராவிற்கு முன் போய், காமிராவிற்கு பின் என்றானது. Photography கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்போதெல்லாம் யாராவது என்னைக் கேட்டால், நானெல்லாம் அந்த காலத்து ஆசாமி, பிலிம் ரோல்ல படமெடுத்து கத்துக்கிட்டவன் என்று மார்தட்ட முடிகிறது.

அதற்கு பிறகு செந்திலுடன் பேசும் போது என் போட்டோகிராபி ஆசையை பார்த்து, அவனுக்கும் வேறு ஆள் கிடக்காததால், அவனின் கனவுப் படத்துக்கு காமிராமேனாக கால்ஷீட் போட்டான். அவனுடன் சேர்ந்து கதாசிரியனானேன் என்பது epilogue. அந்த காமெடி பற்றி மற்றோரு சமயம்.

2002ல் அமெரிக்கா வந்த போது, கொஞ்சம் டாலர் சேர்த்து, ஒரு கேனன்(canon) வாங்கினேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வேளாங்கன்னியிலிருந்து ரெயிலில் வந்து கொண்டிருந்த போது, உதயசூரியனை படமெடுக்கப் போய், CCD காலி. பிறகு ஒரு point and shootஆக சல்லிசாய் ஒரு சோனி வாங்கினேன். ரொம்பவும் பிடித்துப் போன காமிராவது. “எவன் லென்ஸை மாத்தி மாத்தி திருகிண்டிருப்பான்” என்று அந்த சோனியுடன் அக்கியமானேன்.

போன வருட கடைசியில் Nikon D40 என்றொரு காமிரா அறிமுகப்படுத்தியது. நல்ல டிஜிட்டல் எஸ்.எல்.ஆர்(single-lens reflex) காமிராவாதலால், மீண்டும் காமிராவிற்கு பின் என ஆசை துளிர் விட ஒரு ஆறு மாதம் கழித்து, இப்போது வாங்கி விட்டாயிற்று. சதக் சதக் என்று நொடிக்கு இரண்டரைப் படமெடுக்கலாம். டெலிபோட்டோ லென்ஸ் போட்டு பிசி.ஸ்ரீராம் மேட்டர்களை முயற்சிக்கலாம்.

அதெல்லாம் விடுத்து இப்போதைக்கு lazy lensசிலும் flickrயிலும் சுமாரான படங்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். நல்ல புகைப்படம் வரும் தருணங்கள் ரொம்பவும் அபூர்வம் தான். இந்த டெக்னாலஜியில் யார் வேண்டுமானாலும் நல்ல படமெடுக்கலாம். நல்ல எஸ்.எல்.ஆரும் மண்டை மண்டையாய் லென்ஸுகள் மட்டுமே முக்கியம். சென்னைக்கு செல்லும் போது ஒரு போட்டோ கட்டுரை செய்ய ஆசை. பார்க்கலாம்.


“தினமும் பீட்ஸா பாஸ்தான்னு சாப்டாம ஒழுங்கா பாக்கெட் சாப்பாடு சாப்டுங்க”, என்று மோவாக்கட்டையை அழுத்திப் பிடித்து சொல்லிவிட்டு சென்னைக்கு ப்ளைட் ஏறினாள் மனைவி. பாக்கெட் சாப்பாடா ? என்று கேட்பவர்களுக்கு ஒரு மங்கையர் மலர் குறிப்பெழுதலாம்.

ஊருக்கு கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன், அண்டாகள் நிறைய சாம்பாரும் ரசமும் அவியலும் மற்ற சில சுவை உணவுகளுமாய் தாயராகிக் கொண்டிருக்க, யாரோ கெஸ்ட் வருகிறார்கள் என்று நானும் நினைத்தேன். “தோ பாருங்க…இங்க இதை பிடிங்க” என்று கூப்பிட்ட போது மானிட்டரில் இருந்து என்னை பிய்த்துக் கொண்டு போனேன்.

என்ன தான் மனைவியின் கைப்பக்குவம் பிடித்திருந்தாலும், ஜனகராஜ் ஸ்டையிலில் தங்கமணி என்ஜாய் என்று இரண்டொரு மாதங்களுக்கு இஷ்டத்துக்கு சாப்பிடலாம் என்ற நினைப்புக்கு எள். பல டஜன் ஸிப்லாக் பைகளில், இரண்டு மூன்று கரண்டி சாம்பாரையும் ரசத்தையும் தனித்தனியாக் ஊற்றிக் கொண்டிருந்தாள். புரிந்தது சூழ்ச்சி. இதைப் போல சாம்பார், ரசம், மோர் குழம்பு, வத்தக் குழம்பு, அவியல் மற்றும் கூட்டு என்று விதவிதமாக மொத்தம் 60-70 தனிப் பாக்கெட்டுகளில் தயார்(சுத்தத் தமிழ் வார்த்தை ஒன்று இருக்கிறது. சொன்னால் பரிசு) செய்து, காட்டெருமை சைஸ் ப்ரீஸரில் அடைத்து விட்டாள். ஒரு நாளுக்கு தேவையான அளவு ஒரு பாக்கெட்டில் அடைக்கப்பட்டது. இரண்டு மாதத்திற்கு தேவையான சாப்பாடு ரெடி.

மனைவி ஊருக்கு போன ஒருவாரத்திற்கு பிறகு நாக்கு செத்துப்போய், ப்ரீசர் சாம்பாரையும் கூட்டையும் மைக்ரோவேவில் டீபராஸ்ட் செய்து சாப்பிட்டால் கலக்கலாய் இருக்கிறது. எக்கச்சக்கமாய் எக்ஸ்பாக்ஸ் விளையாடிவிட்டு சுண்டக்காய் வத்தக் குழம்பும் லேஸ் சிப்ஸும் சாப்பிட முடிகிறது. இந்த ப்ரீசர் மேட்டர் சென்னையில் வேலைக்காகாது. என்னதான் ப்ரீசராய் இருந்தாலும் வெளியிலுள்ள தட்ப வெட்பத்தால் ரொம்ப நாள் தாங்குவது கடினம்.

தேசித் தமிழர்கள் என்னப்போல் சமையல் சோம்பெறிகளாய் இருந்தால் சிப்லாக் சாப்பாடை செஞ்சு வச்சுட்டு கிளம்புமா தாயே என்று தத்தம் மனைவிகளிடம் பெட்டிஷன் போடலாம். கொஞ்சம் வித்தியாசமாய், சேமியா உப்புமா, அடை, ஆனியன் ரவா, பருப்பு பாயசம் இத்தியாதிகளையும் பிரீஸ் செய்யும் படி கேட்கலாம். எல்லாவற்றிக்கும் தனித்தனியாய் தங்க மாளிகை பில் வரும்.

நீங்களும் இதை முயன்று பார்க்கலாமே ? (இப்படித் தான் எல்லா மங்கையர் மலர் குறிப்புகளையும் முடிக்கிறார்கள்).


April 7th, 2007

சுளுக்கு !!

ankle sprain pic - mckinley.uiuc.edu

போன செவ்வாய்கிழமை, அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சாண்டி பாடிக்கொண்டே 2ண்ட் அவெண்யூவில் ஓட்டமும் நடையுமாக பஸ் பிடிக்க வரும் போது, மளுக் என்றது. ஒரு நொடிக்கு கண்களில் ஆயிரமாயிரம் ரத்ன ஊசிக்கள் தெரிந்தன. நின்றேன். அடுத்த அடி வைக்க முடியவில்லை. 212 பஸ் வேறு செனெகா ஸ்டிரீட்டை தாண்டி சென்று விட்டது. ஷூவில் ஒரு பக்கம் சற்று அதிகமாகவே தேய்ந்து இருந்ததால், கணுக்கால் சட்டென்று உட்புறமாக மடங்கி மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி விட்டது.

ஆனால் அது திரும்பிய அந்த நொடியில் உலகம் ஒருமுறை சர்ரென்று சுற்றி, பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் மறைந்து போய், ம்ம்மா…என்று ஒரு மெலிதான சவுண்ட் விட்டேன். அப்படியே அந்த சின்ன தெருவைத் தாண்டி அதே பஸ்சை பிடித்தால், இடது காலை வைக்க சிரமப்பட்டு ஏறினேன். காலை தடவிப் பார்த்தால், பஞ்சு மிட்டாய் போல உப்பி மெத்தென்று ஆகியிருந்தது.

இதை twisted ankle அல்லது ankle sprain என்கிறார்கள். தமிழில் சுளுவாக மக்களித்தல் அல்லது சுளுக்குதல் என்கிறார்கள். வெகு எளிதாக வரக்கூடிய சுளுக்கும் இந்த ankle சுளுக்குத் தான். ஆங்கிள் [Ankle] என்பதே angulus என்னும் லத்தின் மொழியில் இருந்து வந்தது. தடிமனான மாமாக்களின் ankleகளை fat + ankle சேர்த்து fankle என்று கிண்டலடிக்கிறார்கள். ஒரு protactorல் 90 டிகிரி ஆங்கிள் மாதிரியான தோற்றமுடைய காலும் பாதமும் சேரும் திரிவேணி சங்கமம். சில பல தசைநார்களும், fibula, tibia, talus என்னும் 3 எலும்பகளும் கூட்டணி இட்டு அசைவு தரும் ஒரு இணைப்பு. இங்கு வரும் சுளுக்குகளை musculoskeletal injury வகைகளில் சேர்க்கிறார்கள். உலகில் வரும் அனேக ankle sprain injuryக்கள் வருவது விளையாட்டு வீரர்களுக்குத் தான். அல்லது அதிரடிக்காரன் மச்சான் பாடுபவர்களுக்கு.

ரொம்பவும் வீங்கிப் போய், நாலு தப்படி கூட எடுத்து வைக்க முடியவில்லையென்றால், டாக்டருக்கு போன் செய்வது உசிதம். அவரும் எக்ஸ்ரே எடுத்து, காலை அப்படி இப்படி திருப்பி, இங்க வலிக்குதா….இப்ப..இப்ப என்று வலி உயிர் போக செய்து அதே புருஃபன் தருவார். இதுக்கு நாலு நாள் ரெஸ்ட் எடுக்கணும் என்பார். நாலு நாள் வீட்டிலிருந்து மெகா சீரியல் பார்த்தால் மறை கழன்று விடும் என்பதால், ஆபீஸுக்கு நொண்டி நொண்டி போவீர்கள். மறை கழன்றாலும் பரவாயில்லை என்று காலை மேலே தூக்கி வைத்து விகடன் ஒளித்திரையில், தேவயானி அழுவதை பார்ப்பது பெட்டர். சரியாக வீக்கம் அடங்காத நிலையில் தினசரி வேலைகளை செய்வது, மீண்டும் ஒரு முறை மளுக் என்று கால்களை மடங்க வைக்கும். அந்த நொடியை மீண்டும் நினைத்துப் பாருங்கள்.

இந்த ‘மளுக்’கை சரியாக்குவதற்கு RICE என்னும் வீட்டு வைத்தியம் சொல்கிறார்கள். அனேக சுளுக்கர்களுக்கு இந்த முறையே போதும். R என்பதற்கு ரெஸ்ட். I என்பதற்கு ஐஸ். ஐஸ் கட்டிகளையோ, ஐஸ் பாக்குகளையோ ஒரு மணி நேரத்திற்கு வைக்கலாம். நிறைய வைத்தால் ஜன்னி வரும். C என்பதற்கு compression. ஒரு பாண்டேஜ் வைத்து அந்த இடத்தை கட்டலாம். E என்பதற்கு elevation. பாண்டேஜ் வைத்து கட்டிய கால்களை உங்கள் இருதயத்தை விட உயரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உங்களில் பழைய எகனாமிக்ஸ் புத்தகத்தயோ, புளி மூட்டையோ, விஐபி சூட்கேஸையோ வைத்துக் கொள்ளலாம். புவியீர்ப்பை வைத்து அந்த வீக்கத்தை குறைக்கும் முயற்சி தான் இது.

நான்கு நாட்களாக இப்படி RICE வைத்தியம் செய்து ஒரு மாதிரி வீக்கம் வடிந்துள்ளது. இப்போது இதை டைப்புவதும் பெருமாள் போல ஒரு ஆதிசேஷ சயனத்தில் தான். வீக்கெண்ட் எங்கும் போக முடியாமல், படிக்க வேண்டும் என்று நினைத்து வாங்கிய தடிமனான அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்பை முடித்து விட்டேன். இப்போது படித்துக் கொண்டிருப்பது ஒல்லியான கிரேசி மோகனின் காமெடிப் புத்தகம், சிரித்து சிரித்து சுளுக்கு பிடிக்கும் அபாயத்தோடு.


நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும் !!


“சார், பார்த்திபனை பார்த்து தானே காப்பி அடிச்சீங்க”, என்று ஒருவருக்கு மேற்பட்டு கேட்டதனால், கொஞ்சம் பெயர்க்காரணம்.

பார்த்திபன் தான் காரணம். ஆனால் நேரடியாக அல்ல. சில வருடங்களுக்கு முன்பு, பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ நூல் வெளியிட்டு விழாவிற்கு சென்று வந்த சுஜாதா, அதை பற்றி சிலாகித்து எழுதினார். அந்த கட்டுரையில் இந்த தகவலும் இருந்தது –

கிறுக்கல் என்ற வார்த்தைக்கு எழுத்து என்று தான் அர்த்தம். அதற்கு ‘பிங்கள நிகண்டு’ என்னும் பழந்தமிழ் நூலில் குறிப்புள்ளது. எவ்வாறு scribe என்பது scribble ஆகியதோ, அதே போல் கிறுக்கல் என்பது பின்னர் தாறுமாறான எழுத்துக்கு குறிக்கப்பட்டது.

இங்கு எழுதுவது என்னவோ தாறுமாறான கிறுக்கல் தான், ஆனால் கிறுக்கல் என்பது எழுத்தாகும். நன்றி – பார்த்திபன், சுஜாதா மற்றும் பிங்கள நிகண்டு.


வழக்கம் போல இந்த ஞாயிறு பத்திரிக்கையையும் யாரோ சுட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இதுவரை நான் பேப்பர் போட மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன ஞாயிறன்று, பேப்பர் எடுக்காமல் வெளியே போய் திரும்பி வந்தால் பேப்பரை காணோம். எந்த பிரகஸ்பதியோ டிஸ்கவுண்ட் கூப்பனுக்காக எடுத்து கொண்டு போய் விட்டார்.

இந்த வாரமாவது, திருடனை பிடிக்க ஆறரைக்கு கண் விழித்த போது, ஸ்பார்கி குரைத்து கூச்சல் போட்டது. “ஆஹா ஸ்பார்கி !! திருடனை பிடித்ததற்கு உனக்கு பர்கர் கிங்கில் இருந்து ஒரு லார்ஜ் ஆனியன் ரிங்க்ஸ்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டே வெளியே போனேன். ஸ்பானிஷ் பாட்டி, ஸ்பார்கியை லீஷில் பிடித்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் கடிகாரத்தை பார்த்து ஸ்பார்கி எகிறி எகிறி குரைத்த போது உரைத்தது. இன்னிக்கு Daylight Saving Time முடிகிறது. Spring forward , Fall Back என்பார்கள். அப்படியானால் நேற்று இரவு 2 மணிக்கு, கடிகாரத்தை திருப்பி 1 மணிக்கு வைத்திருப்பார்கள். ஒரு மணி நேரம் மிச்சம். மாற்றாத என் கடிகாரத்தில் காட்டிய ஆறரை ஆக்சுவலாக இப்போது ஐந்தரை காட்ட வேண்டும். ஆக திருடனை பிடிக்க எழுந்ததில், வீக்கெண்ட் தூக்கம் பாழ்.


குளிர் வந்தாகிவிட்டது. நேற்றும் இன்றும் ஸீரோ டிகிரியில் வீசிய காற்று, மூடிய ஜன்னல்களில் நுழைந்து, இன்னும் இரண்டு போர்வை கேட்கிறது. மக்கள் நடமாட்டம் மால்களில் குறைகிறது. எல்லோரும் எதோ சிட்காம் பார்த்துக்கொண்டோ, இண்டர்நெட்டில் துணை தேடிக்கொண்டோ, பாப்கார்ன் கொறித்து, அமெரிக்க ஒபிஸிட்டியை ஆளுக்கு ஒரு calorieயாக கணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாத calorie consumptionக்காக சூப்பர் பவுலும், என்.பி.ஏவும் காத்துக் கொண்டிருக்கின்றன.

என்ன தான் மழை அடித்தாலும் ரோடில் தண்ணி பெருக்கெடுப்பதில்லை. குண்டும் குழியும் காணக் கிடைப்பதில்லை. எந்த கழக கண்மணி நாட்டை ஆண்டாலும், infra-structureஐ மட்டும் தப்பாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மூன்று மாதங்களில் நம்மூர் ஜெமினி பிரிட்ஜ் மாதிரி ரெண்டு மடங்கு பெரியதாக பிரிட்ஜ் கட்டி ஒரு வீக்கெண்டில், திறப்பு விழா நடத்தாமல், இங்கு வீற்றிருக்கும் நகராட்சி தலைவர் அவர்களே என்று சோடா உடைக்காமல், நடை திறக்கிறார்கள்.


போன வாரம், NPR என்னும் பொது மக்களின் நன்கொடைகளால் நடத்தப்படும் Public Radio கேட்டுக் கொண்டே கார் ஓட்டிய போது விவிதபாரதியின் நேயர் விருப்பத்தையும், கடயநல்லூர் ராமசாமியையும் மிஸ் பண்ணினேன். இது போல் தெரியாத ஊர்களிலிருந்து ராமசாமிகளும், புழுதிவாக்கம் மோகன்களும், கைக்காங்குப்பம் சரவணன்களும், குடவாசல் கோமதிகளும், கேட்கும் பாடலை ஒலிபரப்பும் விவிதபாரதியும், அதை சரளமாக படிக்கும் அந்த வெண்கல குரலையும், அதற்கு பின் வரும் அந்த not-so-popular பாடலையும், மறுபடி கேட்பதெப்போது. தொலைந்து போனது நானா, அவர்களா அல்லது நாங்களா ?