‘புத்தகம்’ பதிவுகள்

blurb

blurb (blûrb)
n.
A brief publicity notice, as on a book jacket.

blurb whore
n.
A writer who provides flattering comments about a book or movie in exchange for meals, travel, or some other perk.

போன மாதம் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எத்தனை பேர், “நல்லாருக்கு”, என்று யாரோ சொல்லியோ எங்கோ படித்தோ, புத்தகம் ஒன்றை வாங்கினீர்கள். அப்படியானால், நீங்களும் ஒரு ப்ளர்ப்வாசி தான். காது வழிச் செய்தியும் கிட்டத்தட்ட ப்ளர்ப்(blurb) தான். கிட்டத்தட்ட.

புத்தகங்களின் மேல் பின் அட்டையிலும், முதலிரண்டு பக்கங்களிலும் அடிக்கடி புள்ளிகள் வைத்து எழுதப்படும், அந்த புத்தகத்தை/ஆசிரியரைப் பற்றிய பில்டப் தான் ப்ளர்ப்.

blurb

நான் ஒரு ப்ளர்ப் ரசிகன். கையில் கிடைக்கிற எந்த புத்தகங்களானாலும் அதன் ப்ளர்புகளை முதலில் படித்துவிடுவேன். ஆனாலும் ப்ளர்புகளினால் இருக்கும் பயன்களை சந்தேகிக்கிற ஆசாமி. சிலவற்றில் கதையே தெரிந்துவிடும். சிலது எளிதில் பிடிபடாது. பலவற்றில் இது பில்டப் என்று தெரிந்துவிடும். பல ப்ளர்புகளின் உண்மையை அறிய அந்த புத்தகத்தை படிக்க வேண்டி வரும். இப்படி படித்து படித்து தான், யார் உண்மையான விமர்சனவாதி, யார் டகால்டி என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. முன்பெல்லாம், டூ தம்ஸ் அப் என்று யாராவது சொன்னால் போதும், படத்தைப் பார்த்து விடுவேன். இப்போதெல்லாம், டாப் 10, டாப் 12.26 என்றெல்லாம் போடுகிற கணக்குகளை மதிப்பதில்லை. அப்படி போடுபவர் கபடநாடக வேஷதாரி, நம்பாதீர்கள்.

ப்ளர்ப் என்ற வார்த்தையின் எட்டிமாலஜி ரொம்பவும் சுவாரசியம். ப்ளர்ப் உருவாகி நூறு வருடம்(1907) தான் ஆகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்துக்கும் சார்லஸ் டிக்கின்ஸின் புத்தகங்களுக்கும் யாரும் ப்ளர்ப் எழுதிய மாதிரி தெரியவில்லை. கெலெட் பர்ஜிஸ்(Gelett Burgess) என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர், Are you a bromide ? என்னும் தன்னுடைய பிரபல புத்தகத்தின், சிறப்பு பதிப்பின் போது, அதன் அட்டையில்(dust jacket) மிஸ் ப்லிண்டா ப்ளர்ப் என்னும் ஒரு கற்பனைப் பெண்ணின் படத்தை வரைந்து, அந்த புத்தகத்தை ஹைப் செய்து ஓரிரு வாக்கியங்கள் எழுதியிருந்தார்.

பிறகு புத்தகங்களில் இந்த மாதிரி வரும், ஓரிரு வரி விளம்பரங்களுக்கு, அந்த பெண்ணின் பெயரே, நிலைத்து விட்டது.

blurb

ஆங்கில மற்றும் உலக மொழிகளில் பிரபலமான அளவு தமிழில் ப்ளர்ப் பிரபலமாகவில்லை தான். அப்படி ஆகுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. பல தமிழ் எழுத்தாளர்கள் தான் எழுதியதையே மீண்டும் படித்து படித்து மீண்டும் அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால், அவர்களே அவர்களின் அடுத்த புத்தகத்தின் ப்ளர்ப்பை எழுதிக்கொள்ளலாம்.

இவை தவிர நம்மூர் பத்திரிக்கைகள் அப்படி ஒன்றும் ப்ளர்ப் போடுகிற அளவுக்கு புத்தக விமர்சனம் செய்வதில்லை. புத்தகத்தின் பின் அட்டையை படித்து விட்டு புத்தக விமர்சனம் எழுதுபவர்கள் தான் அதிகம். அப்படி ஒரு இரண்டு வரிகளை எழுதிவிட்டு, புத்தகம் கிடைக்குமிடம், புத்தக பதிப்பாளர், விலை பத்து ரூபாய் என்று எழுதி முடித்து விடுகிறார்கள். இதைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். தமிழ் புத்தகங்களில் போடுகிற அளவுக்கு juicyயாக விமர்சனங்களும் வருவதில்லை.

கடைசியாக தமிழில் நான் படித்த ப்ளர்ப், சுப்ரமண்யராஜுவின் கதைகள் என்ற கிழக்குப் பதிப்பக புத்தகத்தில் தான். அது கூட, சுஜாதா வேறோரு தருணத்தில், “சிறந்த பத்து சிறுகதைகளை தேடிக் கொண்டிருக்கின்றேன், அவைகளில் சுப்ரமண்யராஜுவின் கதையும் ஒன்று” என்ற வரி தான். இது தவிர அசோகமித்திரன் ராஜுவின் மரணத்திற்கு பிறகு எழுதிய கட்டுரையில் வந்த வரிகளும் ப்ளர்பாகின.

அமெரிக்க புத்தக பதிப்பக உலகமே இந்த ப்ளர்புகளை நம்பித்தான் இருக்கின்றது. ஒரு புத்தகம் எழுதப்பட்டவுடன், அதன் manuscriptஐ, அந்த புத்தகத்தின் துறையை சேர்ந்த பல பிரபலங்களுக்கும் அனுப்புகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படித்துவிட்டு எழுதியனுப்பும் சில பத்திகளிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தகளை புத்திசாலித்தனமாக கோர்த்து, ப்ளர்புகள் உருவாக்கப்படுகின்றன. இதற்காகவே பல ப்ளர்ப் எழுத்தாளர்களை, பதிப்பகங்கள் வைத்திருக்கின்றன.

அப்படி இல்லாமல் போனால், ஒரு அரை டஜன் ப்ளர்ப்புகளை எழுதி அனுப்பி, இவைகளில் ஏதாவதொன்றை செலக்ட் செய்ய சொல்லி மெயிலனுப்புகிறார்கள். ஒரு ப்ளர்ப் எழுதப்பட, அந்த பிரபலங்களுக்கு காபி/டிபன் என்று ஏராளமாய் செலவழிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல எகனாமிக்ஸ் புத்தக ஆசிரியருக்கு வந்த ஒரு ப்ளர்ப் வேண்டிக் கடிதம்,

If you find ________ and ________’s ideas as compelling and inspiring as we do, a quote from you that we could print on the jacket would make a world of difference. I would be happy to help craft a quote if you prefer. My contact info is below.

தற்போது படித்துக் கொண்டிருக்கும், Bill Brysonனின் The Life and Times of a Thunderbolt Kidல் எழுதப்பட்டிருக்கும் ப்ளர்பில் ஒன்று,

“The book, which is very funny…is an excercise in hyperbole, the ideal trope for the United States during this time of gragantuan confidence in progress.” – Katherine A. Powers, Boston Globe

இது மாதிரி எழுதப்படும் ப்ளர்ப்புகள் புத்தக அட்டையில், போஸ்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு, கடைகளில் விற்கப்படுகின்றன. ப்ளர்புகளை படித்து விட்டு பிடித்து விட்டால், ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் புத்தக அட்டையிலும் “No. 1 New York Best Selling Author” என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இதுவும் ஒரு வகையான ப்ளர்ப் தான்.

அது சரி, தமிழில் ப்ளர்புக்கு சரியான தமிழ் வார்த்தை இதுவரை இல்லை. அல்லது எனக்குத் தெரியவில்லை. வேண்டுமானால், இலக்கியம் + விளம்பரம் = இலம்பரம் எனலாம். பேஷனாய் இல்லை எனக் குறை கூறுபவர்கள், கெலெட் பர்ஜிஸ்ஸின் கல்லறைக் கதவைத் தட்டி, ப்ளர்ப்பிற்கு தமிழ் வார்த்தைக் கேட்கலாம்.

—————————

இயந்திராவிற்கும் புத்தக ப்ளர்ப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு – இயந்திர-விஞ்ஞான-வியாபார உலகத்தை பற்றி ஓரு தொடர் எழுத ஆரம்பித்த போது, கிடைத்த பெயர் தான் இயந்திரா.

அவ்வப்போது நமிதா பற்றியும் நாசா பற்றியும் கொஞ்சம் சுதந்திரமாக எழுதிப் பார்க்க நினைத்த பத்தி தான் இது.


October 11th, 2007

பாரன்ஹீட் 451

Fahrenheit 451 Ray Bradbury

“You don’t have to burn books to destroy a culture. Just get people to stop reading them”, என்று பேச ஆரம்பிக்கும் ரே ப்ராட்பரியின்(Ray Bradbury) ஒரு சயின்ஸ் பிக்-ஷன் க்ளாசிக் தான் Fahrenheit 451. 1953ல் இந்தப் புத்தகம் வந்த போது, சென்ஸார் பிரச்சனையிலிருந்து சின்னப் பையன் எதோ எழுதிட்டான் என்கிற வரையில் இந்த புத்தகம் அலைக்கழிக்கப்பட்டது துரதிஷ்டவசமே. பாரன்ஹீட் 451ஐ விஞ்ஞான கதை என்று அதை ஒரு சிறு பிரிவுக்குள் அடைக்கப்பார்த்தது தான் விமர்சகர்கள் செய்த மிகப் பெரிய தவறு. சில விமர்சகர்கள் இதை ஆர்பரித்தார்கள்.

கை மாண்டாக்(Guy Montag) என்னும் ஒரு தீயிடுவாளன்(தீயணைப்பாளன் அல்ல) பற்றி ஒரு டிஸ்டோப்பிய கதை. டிஸ்டோப்பியா(dystopia) என்பது யுதோப்பியாவின்(Utopia) எதிர்ப்பதம். யுதோப்பியாவில் நாடும் வீடும் மன்னனும் நல்லவனாக இருக்கக்கூடிய ஒரு மாய கனவு உலகம். டிஸ்டோப்பியாவில் எல்லாம் நேரெதிர். சமீபத்தில் வந்த V for Vendetta என்ற ஒரு சூப்பர் ஹீரோ படம், சிறந்த உதாரணம். அரசும் அரசியந்திரமும் மக்களுக்கு எதிரான நிலையில் இயங்கும், தற்காலத்திற்கு கொஞ்சமாய் பொருந்தும் ஒரு மாய உலகம். யுதோப்பிய இலக்கியத்தை விட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் அதிகமாகி வருவது வியப்பல்ல. ஆர்வெல்லின் 1984ம், வெல்ஸின் War of the Worldsம் கூட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் தான். மிகச் சிறந்த டிஸ்டோப்பிய படமென்று ஸ்டான்லி ஃகூப்ரிக்கின் A Clockwork Orangeஐ சொல்லலாம்.

ஃபாரன்ஹீட் 451 நடப்பது வருங்காலத்தில். டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு அமெரிக்க நகரத்தில். மக்கள் எல்லோரும் பாஸ்ட் புட் சாப்பிட்டு, தங்கள் சுவர் உயர டீவிக்களை சதா சர்வ காலமும் பார்க்கிறார்கள். காட்டுத்தனமான வேகத்தில் வாகனங்கள் ஓட்டுகிறார்கள். ஐபாட் போல சிப்பிகளில் ரேடியோ கேட்கிறார்கள். யாரும் படிப்பதில்லை. சுதந்திரமாக யோசிப்பதில்லை. அரசு மக்களை இவ்வாறு ஒரு மயக்க நிலையில் வைத்து, அவர் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. நாட்டில் உள்ள எல்லா நல்ல/கெட்ட புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.

கை மாண்டாக் இப்படி பட்ட ஒரு நகரத்தில், புத்தகங்களை கண்டால் எறிக்கும் பல தீ-வீரர்களில் ஒருவன். கதாநாயகன். தனது ஸ்டேஷனில் அலாரம் அடித்தால், யாரோ வீட்டில் புத்தகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அர்த்தம். கை தனது வாகனத்தில் சென்று அந்த வீட்டில் உள்ள புத்தகங்களை எரித்து விட்டு வரும் தீயிடுவாளன். இதை ஏன் செய்கிறோம் ஏன்று கூட அவன் கேள்வி கேட்பதில்லை. ஒரு நாள், இப்படி அலாரம் அடித்து செல்லும் அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி, தன் புத்தகங்களுடன் தன்னையும் எரித்து போடு என்னும் போது யோசிக்க ஆரம்பிக்கிறான்.

இவ்வாறு தீயிட செல்லும் வீடுகளில் உள்ள சில புத்தகங்களை திருடி படிக்க ஆரம்பிக்கிறான். அவனது மேலகதிகாரி இதை கண்டுபிடித்து, 24 மணி நேர, தேவையான புத்தகங்களை படித்து விட்டு வா என்று அவகாசம் தருகிறாள். இந்நேரத்தில் ஃபாபர்(Faber) என்னும் ஒரு மனிதரை சந்திக்க, அவரின் அறிவரைப்படி செயல்படுகிறான்.

கடைசியில், the book people என்னும் சில அறிவுஜீவிகளை சந்திக்கிறான். அப்பொழுது தான் அது வெளிவருகிறது. நாடெங்கிலும் உள்ள புத்தக பிரியர்கள், பேரிளக்கிய புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அழியாமலிருக்க, அரசுக்கு தெரியாமல், ஆளுக்கு கொஞ்சமாய் மனப்பாடம் செய்து வருவது புரிகிறது. ஆச்சரியமாகிறான். புத்தக பிரியர்களை ஒன்று சேர்த்து புத்தகங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். மீதியை பழுப்பு நிற பாரன்ஹீட் 451 புத்தகத்தில் படிக்கவும் !!

இங்கு சயின்ஸ் பிக்-ஷனுக்கு உண்டான விஷயம் எங்குள்ளது என்று கேட்டால், புத்தகத்தை படிக்கவும். பாண்டஸிக்கும் சயின்ஸ் பிக்-ஷனுக்கும் நூலிழை தான் இடைவெளி.

ரே ப்ராட்பரி, இதற்கு முன்னும் பின்னும் ஏராளமான நல்ல கதைகள் எழுதியிருந்தாலும், பாரன்ஹீட்451 போல மற்றது புகழடையவில்லை. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லர் நாஜிப் படைகளை வைத்து, பெர்லினில் தனக்கு பிடிக்காத புத்தகங்களை எரித்த நிகழ்ச்சி தான் ரேயை இந்த புத்தகம் எழுத தூண்டியது.

ரே சொல்வது போல், உலகத்தில் இப்படி புத்தகங்களை எரிப்பது என்பது ஒரு கலாசாரத்தை அழிக்க உதவும் விஷயம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அலெக்ஸாண்டிரியாவில் இப்படி புத்தகங்களை எரித்திருக்கிறார்கள். சமீபத்தில், இலங்கையிலும் பழம்பெரும் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டது. பார்வையற்றோரின் ப்ரைல் புத்தகத்திலிருந்து ஹாரி பாட்டர் வரை சென்ஸாரும் புத்தக எரிப்பும் ஓன்றோடிணைந்த ஒன்று. Books : Burn or Bury என்பது வரலாற்று பாடம்.

இன்றும் பலர் பாரன்ஹீட் 451, வருங்காலத்தில் நடக்கலாம் என்று நம்புகிறார்கள். அதி வேக டிரைவிங்கும், பாஸ்ட் புட்டும், 24 மணி நேர கேபிள் ஆக்கிரமிப்பும் உலகெங்கும் தற்போது நிஜம். அரசாங்கம் தடுப்பதே இல்லை. ஆனாலும் மக்களின் படிப்பு குறைந்து வருகிறது என்று கணிப்புகள் கணிக்கின்றன.

ரேயை சயின்ஸ் பிக்-ஷன் எழுத்தாளர் என்று வகைபடுத்தவும் முடியாது. கதை எழுதுவார், அவ்வப்போது கவிதை பேசுவார், திடீரென்று நான்கைந்து படங்களுக்கு திரைக்கதை அமைப்பார். பின்னொரு நாள் நாடகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும், நான் பிக்-ஷனும் வரும். ஒரு மாதிரி வகைப்படுத்த முடியாத ஜந்து.

மில்லினியத்தின் தொடக்கத்தில் எண்பது வயது நிரம்பிய போது எடுத்த பேட்டியில் ரே சொன்னது, “The great fun in my life has been getting up every morning and rushing to the typewriter because some new idea has hit me.The feeling I have every day is very much the same as it was when I was twelve.In any event, here I am, eighty years old, feeling no different, full of a great sense of joy, and glad for the long life that has been allowed me.I have good plans for the next ten or twenty years, and I hope you’ll come along.”


big_read.jpg

சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள்.

பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும் அதிகம் படிக்கப்பட்டன.

புத்தகம் படிக்கவில்லை என்ற சொன்னவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஓவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக படித்திருந்தது தலா ஏழு புத்தகங்கள். இந்த விகிதாசாரம் குறைந்து கொண்டு வருவது தான் கவலையளிக்கிறது என்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் National Endowment for Arts என்னும் கழகம் Reading at Risk என்னும் ஒரு ரிப்போர்ட்டை பதிப்பித்தது. 2002ல் 57% சதவிகிதம் அமெரிக்கர்கள தான் ஏதாவது ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள். இது பத்து வருடங்களில் 4% குறைந்திருந்தது. இதற்கு காரணமாக கூறப்பட்டது கேபிள் டீவி மற்றும் இண்டர்நெட்.

அமெரிக்கர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவே, The Big Read என்னும் புரோக்கிராமை இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் கண்டிப்பாய் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, மாதத்திற்கு ஒரு புத்தகம் என்று ஹைலைட் செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்திற்கான புத்தகத்தை பற்றி ஏராளமான் விவாதங்களும், விமர்சனங்களும் அவரவர் வீட்டருகில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெறுகின்றன.

கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த Big Read ஒரு வெற்றி என்றே தோன்றுகிறது. லைப்ரரிகள் களை கட்டுகின்றன. ஒரு நகரத்தில் உள்ள எல்லோரும் ஒரே புத்தகத்தை படிக்கிறார்கள், அதை பற்றி சனிக்கிழமைகளில் நூலகங்த்தில், பர்கர் சாப்பிட்டுக் கொண்டே கதைக்கிறார்கள். இனிமேல் படிப்பாரில்லை என்று பழுப்படைந்து, அடுக்குகளின் ஓரங்களில் இருந்த இந்த லைப்ரரி புத்தகங்களின் எல்லா பக்கங்களும் திருப்பப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட புனர்ஜென்மம் தான்.

இந்த பிக் ரீட் பரிந்துரைக்கும் புத்தகங்களில் எனக்கும் பிடித்தவை ஐந்து. ஏற்கனவே இவைகளை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் போகிறேன். பிடித்த ஆர்டரில், ரே ப்ராட்பரியின் டிஸ்டோபிய கதை, பாரன்ஹீட் 451. பிறகொரு நேரத்தில் ரேயின் இந்த சயின்ஸ் பிக்-ஷனைப் பற்றி எழுத எண்ணம். மற்றவை, ஸ்காட் பிட்ஸ்ஜிரல்டு எழுதிய The Great Gatsby, ஹெமிங்வேயின் Farewell to the Arms, ஹார்பர் லீயின் To Kill a Mockingbird மற்றும் அமெரிக்காவை புரட்டிப் போட்டு புலிட்சர் வாங்கிய ஸ்டெயின்பெக்கின் Grapes of Wrath.

மேலே சொன்ன – அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை என்ற கணக்கை கொஞ்சம் மாற்றிப் போடலாம். அமெரிக்கர்களில் நான்கில் மூவர் சென்ற வருடம் ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள்.

இதை வைத்து நமது தமிழ் கூறும் நல்லுலகத்தின் நிலைமையை கணக்கிடலாம். ஏனென்றால் இதற்கெல்லாம் நம்மூரில் கணக்கெடுப்பதே இல்லை. அப்படியே எடுத்தாலும், “சார் நீங்க கடேசியா இன்னா பொஸ்தகம் படிச்சீங்க ?” என்று சர்ச் பார்க் பஸ் ஸ்டாண்டில் யாரோ ஒரு நிருபர் காமிரா சகிதமாக கேள்வி கேட்க, நம் ஆசாமி வியர்வை வழிய பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டோ, அல்லது MU@3CB5:30(யோசியுங்கள். விடை கடைசியில்) என்று அப்ரிவேஷனில் SMS அனுப்பிக்கொண்டோ, “அது வந்து சார், I think I read the book last week with Asin hugging teddy bear in the cover” என்று ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்புவார்.

சீரியஸாக யோசித்தால் உண்மை புரியலாம். அதாவது தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் அளவு புத்தகங்கள் விற்பதில்லை. லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் ஆயிரம் காப்பி விற்றாலே, “My writing career has taken off” என்று காலரை தூக்கிவிடும் எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால் எழுத்தாளர்களும் AGS ஆபிஸிலோ, அறநிலையத் துறையிலோ மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டபடியே கம்யூட்டர் தட்டி கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம், சரியான புத்தகங்கள் வரவில்லை என்று பப்ளிக்கும்(so called public), மற்றொரு பக்கம், நான் புத்தகம் எழுதினால் வாங்க ஐநூறு பேராவது இருக்கிறார்கள் என்று ஜெயமோகன் போன்ற சீரியஸாக எழுதும் இலக்கியவாதிகளும் இயங்குகிற ஊர் தமிழ்நாடு தான்.

ஆறுகோடி பேர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் நம்மூரில், ஐநூறு பேர் தான் முதல் காப்பி வாங்க போகிறார்கள் என்றால், ஒரு எழுத்தாளன் எப்படி எழுதுவான் என்று தெரியவில்லை. அப்படியே எழுதினாலும், எழுத்தினால் கிடைக்கும் சம்பளம் கரண்ட் பில் கட்டகூட சரியாகவில்லை என்றால், working below your labor worth என்று யோசித்து அதிகமாய் பணம் தரும் தனது கம்புயூட்டர் புரோகிராமிங் செய்ய போவது ஒண்ணும் விந்தையல்ல. தமிழ் சினிமா போல கடைசியாய் வேற ஒண்ணும் தெரியாதவர்கள் வந்து சேரக்கூடிய நிலைமையில் உள்ளது தமிழ் புத்தக உலகம். “ஒண்ணு ராவூத்தர் ஹோட்டல்ல ரவுண்டா தோசை ஊத்து இல்லாக்கட்டி ராமர் பாலத்தை பத்தி ஒரு 200 பக்கம் எளுது” என்று அப்பாக்கள் சொல்லும் காலம் கண்ணுக்கு தெரிகிறது.

“இவ்ளோ நேரம் உன்னிய பேச வுட்டோமே, நீ இப்ப என்ன சொல்ல வர” என்று கேட்பவர்களுக்கு, படிக்கலாம். தமிழோ ஆங்கிலமோ, வெண்பாவோ How to win friendsஓ, ரமணி சந்திரனோ எண்டமூரியோ, சுஜாதாவோ சொக்கனோ, புத்தகம் படிக்கலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணிநேரம், மாகஸின்களை தவிர்த்து புத்தகம் என்று நாவலோ நான்-பி்க்-ஷனோ படியுங்கள். டாக்டருக்காவும் டாட்டருக்காகவும் வெயிட் செய்யும் போது கையில் கொண்டு போன புத்தகத்தை படியுங்கள். எழுதும் நேரத்தை தவிர, பா.ராகவன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிப்பதாய் சொன்னார். அவர் எழுத்தாளர். நம் போன்றவர்களுக்கு அரை மணியோ ஒரு மணியோ போதும்.

ஜோடி நம்பர் 1னை ஒரு முறை பார்த்தால் போதும். ரிபீட் டெலிகாஸ்ட் செய்கிறார்கள் என்று நாளொன்றுக்கு நாலுமுறை பார்த்தால் டி.டியையும் மோனிஷாவையும் பிடித்துப் போகும். அப்புறம் கொஞ்சம் பைத்தியமும் பிடிக்கும். அதை விடுத்து நிலா நிழல் படியுங்கள். சரியான ஆரம்பம். ஏற்கனவே இவையெல்லாம் படித்திருப்பவராயின், ஏசுவின் தோழர்களோ, பதினெட்டாவது அட்சக்கோடோ படிக்கலாம்.

எதைப் படிப்பது, எங்கே வாங்குவது என்று கேட்டால், இருக்கவே இருக்கிறது நமது நியூ புக்லேண்ட்ஸ் அல்லது எனி இந்தியன் அல்லது லாண்ட்மார்க்.

இதற்கெல்லாம் மேலே நீங்கள் போன வருடம் புத்தக சந்தையில் வாங்கிய எத்தனை புத்தகங்களை படிக்க எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொள்ளலாம். ஆசையாய் வாங்கிப் போட்ட பிரம்மோபதேசமும், விசாரணை கமிஷனும், நிலா பார்த்தலும், அம்மா வந்தாளும் எங்கே என்று அப்பார்ட்மெண்டை தூசு தட்டலாம். ராமர் பாலத்தின் காமெடி செய்திகளை பார்ப்பதை விடுத்து செய்யப்படும் இவை எல்லாமே ஒரு நல்ல த்ரில்லர் புத்தகத்தின் ஆரம்பம் போலத்தான். ஷோ சுவீட் !!

விடை : MU@C3B5:30 – Meet you at Chennai City Center by 5:30.


October 3rd, 2007

மற்றவை சில

சியாட்டலில் குளிர் ஆரம்பித்தாகிவிட்டது. பஸ்களில் எந்நேரமும் ஹீட்டர் போடுகிறார்கள். லைட் போடுகிறார்கள். ஆறேகாலுக்கு மேல் பசுமாடு தெரிவதில்லை. வீட்டில் தேங்காய் எண்ணெய் கட்டித்தட்டுகிறது.கார்பெட்டில் கால் பதிக்க முடிவதில்லை. ரோட்டில் எல்லோரும் குளுர் ஜாக்கெட் போட்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா குளிர்காலத்திற்கு தயாராக செய்யும் பிரயத்தனங்கள். இன்னமும் கொஞ்ச நாளில் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் போடுவார்கள். இரண்டடி எடுத்தால், ஐஸ் மூன்றடி வழுக்கும். நாலு மணிகெல்லாம் இருட்டிக் கொள்வதால், வேலை செய்ய போர் அடிக்கும். நம்மூரைப் போல எல்லோரும் எந்நேரமும் டீவி பார்ப்பார்கள். வீட்டிலேயே சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு, எக் நாக் குடித்துக் கொண்டிருப்பதால் இருப்பதால் சம்மரில் இழந்த தொப்பை மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும். சதா சர்வகாலமும் க்ரிஷ் ஸ்ரீகாந்த் போல மூக்கு சிந்த நேரிடும்.

இத்தனை காமெடிகளையும் தாண்டி அமெரிக்க குளிர் பிடித்திருக்க காரணம், சியாட்டல். சியாட்டல் ஒரு ஈர நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். இந்த சியாட்டிலையும், அதில் எப்போதும் பெய்யெனப் பெய்யும் மழையும் பற்றி, ஒரு நீண்ட பத்தி, எழுத எண்ணம்.

————————-

சென்னையிலிருந்து மற்றுமொரு செட் புத்தகங்கள் வந்து இறங்கி, வீட்டை அடைத்துக்கொண்டன. முக்கியமாய், உடையாரும், படிக்கத் தவறிய சில தி.ஜானகிராமன், ருத்ரன், சோ மற்றும் சில டஜன் கிழக்கு பதிப்பக அ-புனைவுகளும்.

புத்தகங்கள் என் அப்பார்ட்மெண்டின் ஆபீஸுக்கு போஸ்டில் வந்து இறங்கின. அதை வாங்க சென்ற என் மனைவி, தூக்க முடியாமல் தூக்கி வந்தாள். “புஸ்தகத்தை பார்த்தா எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படி ஒரு குறும்பு சிரிப்பு வருதோ ? வேற எப்போதும் இந்த மாதிரி சந்தோஷமாய் ஒரு சிரிப்பைக் காணோம்”, என்றாள் மனைவி.

தற்போது படித்துக் கொண்டிருப்பது, ஜெயமோகனின் எழாம் உலகம். ஒரு வாரத்தில் எழுதிய நாவலென படித்திருக்கிறேன், நம்ப முடியவில்லை.

————————-

இந்த கிறுக்கல்.com எழுத ஆரம்பித்து ஆகஸ்டிலேயே ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவே இப்பொழுது தான் ஞாபகம் வந்தது. இதுவரை உருப்படியாய் ஒன்றும் எழுதிதாக தெரியவில்லை.

அதற்காக எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லாததால், இங்கு எழுத பிடித்திருக்கிறது.காமெண்டுகள் இல்லாததும் மற்றுமொரு காரணமாய் இருக்கலாம்.

————————-

crater lake oregon

போன மாதம், ஆரெகன் என்னும் பக்கத்து மாநிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யூஜீன் என்னும் நகரத்தில் தங்கி, ஒரு நாள் முழுவது சுற்றிப் பார்த்த இடம், க்ரேட்டர் லேக்.

ஏழாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் வெடித்த எரிமலையால் அந்த மலையில் ஒரு பெரும் பள்ளம் எழ, அதில் தோன்றிய ஒரு ஏரி தான் க்ரேட்டர் லேக். இது உலகத்தில் ஒரு யுனீக் இடம் என்றெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். உண்மை என்றே தோன்றுகிறது.

உலகத்திலேயே மிக தெளிவான நீர்நிலை இது தான் என்கிறார்கள். ஒரு பெரும் பள்ளத்தில் இருக்கும் நீர், ஆதலால், மற்ற நீர்நிலைகளுடன் கலப்பதில்லை. அதனாலேயே இந்த தெளிவு. Refractionல் அங்கெங்கே மிக அடர்த்தியான நீலத்துடனும், சில இடங்களில் MS பட்டு போன்ற நீலத்திலும், அந்த தண்ணீர் ஒரு தனி அழகு.

போன நூற்றாண்டு வரை, அமெரிக்க பழங்குடி இந்தியர்கள் இதை கடவுளாக வணங்கி வந்தனர். மலை உச்சியிலிருந்து தண்ணீரை பார்ப்பதையே சாமி குத்தமாக் நினைத்திருந்தனர். அங்கிருந்த போர்டுகளில், இதை பற்றியெல்லாம் கதையை படித்த போது, சில நூற்றாண்டுகளுக்கு பின் சென்று அந்த பழங்குடியினத்தவரின் வாழ்கையை நினைத்துப் பார்க்க முடிந்தது.

நயாகராவுக்கு பின் நிறைய NRIs குடும்பத்துடன் வரும் இடம் இதுதான் போலும். கலிபோர்னியாவுக்கு அருகில் என்பதால், எல்லா முக்கிலும், எல்லா வியு பாயிண்ட்களிலும், ஹோண்டா டொயோட்டா கார்களும், லெதர் ஜாக்கெட் – பட்டும் புடவையும், மஃங்கி குல்லாவும், எலுமிச்சை சாதமும் புளியோதரையும் பார்க்க முடிந்தது.

ஸ்பீல்பெர்கின் Artificial Intelligence படத்தில் வரும் அந்த வளைந்து செல்லும், அடர்ந்த உயர்ந்த ஆரெகனின் பச்சை காடுகளினூடே, “யாருக்குள் இங்கு யாரோ ?” கேட்டு/பாடிக் கொண்டே, கார் ஓட்டிய அனுபவம், மறக்க முடியாதது. Classy !!


seth godin small is the new big

சமிபத்தில் ப்ளைட்டில் ஒரு படமும் பார்க்க பிடிக்காமல் படித்த புத்தகம், சேத் காடின் எழுதிய Small Is The New Big. பார்த்த Namesakeஇன் தொல்லை தாங்கவில்லை.

சேத்தின் வலைப்பதிவை படித்துக் கொண்டு வருபவர்களுக்கு இந்த் புத்தகம் புதிதல்ல. அவரின் வலைப்பதிவில் இருந்தும், அவரின் சில பல பேச்சுக்களிலிருந்தும் எடுத்து தொடுக்கப்பட்ட விஷயங்கள் தான் இந்த புத்தகம். எட்டு வருடங்களாக குருவி சேர்த்த எழுத்துகளாததால், ஹாரி பாட்டர் போல ஒரேடியாக உட்கார்ந்து படித்தால், மவனே சத்தியமாக தலை வலிக்கும் என்று முன்னுரையில் சொன்னாலும், கொரியாவிலிருந்து சீயாட்டல் வருவதற்கு முன்பு படித்துக் கிழித்தாயிற்று. வழக்கம் போல ப்ளைட் சாப்பாடு சாப்பிட பிடிக்காமலும், சேத்தின் எச்சரிக்கையும் சேர்ந்து செம தலைவலி.

சேத் ஒரு மார்க்கெட்டர். அதை தவிர அவருக்கு பல வேலைகள் உண்டு. ஆனால் மார்க்கெட்டிங்கில் புலி. இந்த புத்தகத்தில் மார்க்கெட்டிங் மாயாஜாலம் தவிர பல விடயங்களை பற்றி உரத்த சிந்தனை செய்கிறார். உதாரணத்திற்கு, 94′ல் தான் ஒரு இணையதளத்தை உருவாக்க நினைத்ததை பற்றி சொல்லும் போது, தான் நினைத்ததுடன் நிறுத்திக் கொண்டதாகவும், யாஹூ நிறுவனர்கள் அதை செய்து வெற்றியும் பெற்றார்கள் என்கிறார். இதற்கு அவர் விவரிக்கும் காரணங்கள், யாஹூ நிறுவனர்கள் இளங்கன்றுகள், பயம் அறியாமல் அவர்கள் ஆரம்பித்த இணையதளம் இணைய உலகத்தை மாற்றிற்று. தன் பல வருட அனுபவத்தினால் அந்த செயலில் உள்ள அபயாம் அறிந்து, அந்த எண்ணத்தை விடுத்து, இன்னும் புத்தகம் எழுதி சொல்பமாய் சம்பாதிக்கிறார்.

இணைய உலகத்தை பற்றியும், எப்படி ப்ளாக்குகள் பல கம்பெனிகளை, அதன் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்கின்றன என்பது பற்றியும் ஏராளமான கட்டுரைகள். இணையத்தில் புதிய சேவையையோ, புதிய மாறுதலையோ கொண்டு வரத் தேவையான அளவுக்கு புதிய ஐடியாக்கள் வேண்டுமாயின் பாத்ரூமில் வைத்து படிக்கலாம். அங்கு தான் பல பெரிய சிந்தனைகள் தோன்றுகின்றன. ஆனால் சேத் சொல்வது போல ஒரே சிட்டிங்கில் முடித்தால், தலை வலிக்கும்.

சேத் காடினின் இந்த வீடீயோவை பார்த்தால், தலை வலித்தாலும் அவரை படிப்பீர்கள் – Sliced bread and other marketing delights. ரிமார்கபிள்.


Harry Potter 7

கடைசி புத்தகம் வந்தாகிவிட்டது. இத்துடன் ஹாரி பாட்டர் ரசிகர்கள், என்னைப் போல் ஹாரி பாட்டர் படிக்காதவர்களை muggles, என்றழைக்க முடியாது. நாமும் குரு சிஷ்யன் ரஜினி/ பிரபு போல, “இப்போ என்ன செய்வீங்க” என்று அவர்களை இடுக்கலாம்.

நேற்றிரவு பார்னஸ் அண்டு நோபிளில், ஹாரி பாட்டர் பார்ட்டியை வேடிக்கை பார்க்க போயிருந்தேன்[படங்கள்]. ஜே கே ரவுளிங், தமிழ் நாட்டில் பிறந்திருக்கலாம் என்று எண்ணும்படி, காட்டுக் கூட்டம். யூடியூப்பில் இருக்கிறது, ஜே கேவின் பயோகிராபி. புத்தகம் படிக்காவிட்டாலும், கட்டாயம் பார்க்க வேண்டியவை.


capote_film.jpg

1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து ஜெயிலில் அடைக்கிறது. அடுத்த நாள், நியுயார்க் டைம்ஸில் இந்த செய்தியை படித்த ட்ருமேன் கப்போட்டி என்ற பிரபல எழுத்தாளர், இதை பற்றி எழுத கான்ஸாஸ் செல்கிறார். இரண்டு குற்றவாளிகளில் ஒருவனிடம் நட்பாகி, அவன் மனதை புரிந்து கொண்டு எழுத நினைக்கிறார், தன் வாழ்க்கை முற்றிலுமாய் மாறப்போவதை அறியாமல்.

இது கதையல்ல நிஜம். 50களில் வாழ்ந்த, Breakfast at Tiffany’s என்ற பிரபல நாவல் எழுதிய, தான் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை தன் நாவல் மூலமாக உணர்ந்த ஒரு பிரபல நாவலாசிரியர் ட்ருமேன் கப்போட்டியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இப்படம்.

கப்போட்டி ஒரு விளம்பர பிரியர். பார்ட்டியில் தண்ணி போடும் போது மற்ற எழுத்தாளர்களை கலாய்க்கிறார். தன்னைப் பற்றி தானே உயர்வாக பேசுகிறார், கோர்ட்டு வாசலில் ஆனா நிக்கோல் ஸ்மித் போல சிவப்புக் கம்பள போஸ் கொடுக்கிறார். மொத்தமாக ஐம்பதுகளின் ஒரு ஸ்காட் பிட்ஸ்கிரால்டு பர்சனாலிடி.

அந்த நள்ளிரவு கொலையை பற்றி படித்தவுடன் கான்ஸாஸ் நகரில் இறங்கி, போலீசிலிருந்து கைதி வரை தன்னுடைய பிரபல்யத்தை வைத்தே அரசு இயந்திரத்தை உடைத்து, செய்தி சேர்க்கிறார். அந்த கொலைகாரனை தன் நண்பனாக்கி, அந்த கொலை பற்றிய விஷயமறிகிறார். தன் இளமை பருவத்தை போலவே, அவனுடையதும் பழுதடைந்து இருப்பதால், ஒரு தருணத்தில் அவனை நேசிக்கவும் ஆரம்பிக்கிறார். இடையில் தன்னுடைய எழுத்தாள காதலனோடு ஸ்பெயின் சென்று கடலை பார்த்துக் கொண்டு குடைக்கு அடியில் பழரசம் குடிக்கிறார்.

ஸ்பெயினிலும் பின் அமெரிக்காவிலும் அடுத்த ஒரு வருடத்தில் அந்த புத்தகத்தை எழுதுகிறார். அப்போது தான் தனக்கு தூக்கு வந்திருப்பதாகவும் அது நிறைவேற்றப்படும் போது கூட இருக்குமாறு அந்த கைதி தபால் அனுப்புகிறான். கான்ஸாஸ் சென்று, ஒரு மாதிரி நெளிந்து கொண்டே தூக்கை சாட்சியாக பார்க்கும் கப்போட்டியை அந்த சம்பவம் உலுக்குகிறது. நம்மையும் தான். ஒருவனை தூக்கிலிடும் அந்த நொடியில் அந்த சமூகமே தூக்கில் தொங்குவதாக சொல்கிறார்கள். அதை உணர முடிகிறது.

அப்புத்தகம் In Cold Blood என்ற பெயரில் தொடராக 1965ல் வெளிவந்து சக்கை போடு போட்டது. ராண்டம் ஹவுஸ் 1966ல் அதை நாவலாக வெளியிட்டது. அ-புனைவு நாவல்(non-fiction novel) என்னும் புத்தக வகையில் வெளிவந்த முதல் புத்தகம் அது. அதற்கு முன் non-fiction novel என்றே ஒன்று கிடையாது. இந்நாவலில் ஒரு தேர்ந்த கதாசிரியரின் நுணுக்கமான விஷயங்களை சொல்லும் பாணியையும், புனைவுகளில் கிடைக்கக்கூடிய கதை சொல்லும் உத்தியையும் சேர்ந்து பயன் படுத்தியது தான் கப்போட்டியின் வெற்றியே.

இந்த படத்தில் கப்போட்டியின் நண்பியான ஹார்பர் லீயும் கூடவே வருகிறார். To Kill a Mocking Bird என்னும் ஓரே புத்தகத்தின் மூலமாக உலக புகழடைந்த எழுத்தாளர் அவர். அந்த புத்தகத்தையே கப்போட்டி தான் எழுதினார் என்றும் ரூமருகிறார்கள்.

பிலிப் சீமோர் ஹாப்மேன்(Philip Seymour Hoffman) என்னும் நடிகர் தான் கப்போட்டியாக நடித்தவர். மிஷன் இம்பாஸிபிள் 3யின் வில்லன். கப்போட்டியாக நடித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றார். உங்களுக்கு இந்த படம் பிடித்தால் அதற்கு காரணம் பிலிப். தனது மிகவும் subtle ஆக்டிங்கினால் கலங்க அடிக்கிறார். கப்போட்டி போலவே மெல்லிய பெண் குரலில் பேசுகிறார். சமிபத்தில் பார்த்த படங்களில் மிக சிறந்த ஆக்டிங் இவருடையது தான்.

In Cold Blood புத்தகம் கப்போட்டியின் வாழ்கையை மாற்றியது. புகழ் வந்தது. ஆனால் கைதிகளுடன் கழித்த அந்த ஒரு வருடம் அவரை கொஞ்சம் உலுக்கியது. அதற்கு பின் அவர் எந்த நாவலையும் எழுதவேயில்லை. பதினான்கு வருடங்கள் கழித்து, 80களில் Music for Chameleons என்று ஒரு கதை கட்டுரைப் புத்தகம் மட்டும் வெளிவந்தது. எழுதுவதில் நாட்டம் குறைந்தது கப்போட்டியின் விதியே. கப்போட்டியை கேட்டுப் பாருங்கள், “All literature is gossip” என்பார்.