‘எழுத்தாளர்கள்’ பதிவுகள்

அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்ட்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள…

அப்போதுதான் அவள் பிறந்தாள். அவள் அவளான ஒரு பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கணம்.

மறுதினம் அம்மா காலை எழுந்து காப்பி போட்டு, மூத்தவனைப் படிக்க எழுப்பி, பாத்திரம் தேய்க்கப் போட்டு, வாசல் தெளிக்த்துக் கோலம் போட்டு, பாட்டிக்கு ஓட்ஸ் கஞ்சி வைத்து, வென்னீர் போட்டு, அப்பா பேப்பர் படித்து, ரேடியோவில் பக்தி கேட்டு, பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டு, குளித்து கந்தனை முணுமுணுத்து விட்டு…

அவர்கள் தினசரி அவசரங்களில் அதை முழுவதும் மறந்து விட்டார்கள்.

அந்த முட்டை பேராசை பிடித்தது போல் வளர ஆரம்பித்தது.

- எப்போதும் பெண், மங்கையர் மலர் – 1982.


பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லி வருகிறேன். விமானத்தில் உச்சந் தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல இருக்கும் ஹோஸ்டஸ்ஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கெட் அள்ளிக் கொள்கிறார்கள். ’லாக் அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. டாக்ஸிக்காரன் ‘ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான்(பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்).

உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரு. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள்.ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக்கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள்.

சிவப்பு விளக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான் கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசைகளின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை, மற்றொரு கையில் ஈவ்னிங் நியூஸ். வாங்குங்கள் வாங்குங்கள் என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி…

டில்லி மாறவில்லை.

- கணையாழியின் கடைசிப் பக்கம், பிப்ரவரி 1974


’இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு. அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ! ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.

- கணையாழியின் கடைசிப் பக்கம், டிசம்பர் 1969


December 26th, 2008

இன்ன பிற – 2

sujatha air traffic controller

“திரைப்படம் எடுப்பது எப்படி என்பதைப் பற்றி புத்தகம் எழுதும் அளவு `மீடியா டிரீம்ஸ்’ நிறுவனத்தில் எனக்கு அனுபவம், ஐந்து திரைப்படங்களில் ஏற்பட்டுவிட்டது. எந்த பட்ஜெட்டும் குறிப்பிட்ட தொகையை இரண்டு மடங்கு மீறும். இதற்கு மனசுக்குள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஒரு கோடிக்குள் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னால் இரண்டு கோடிக்குத் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு படத்தை மூன்று மாசத்தில் முடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ஆறு மாசத்துக்குத் தயாராக இருக்கவேண்டும். படத்தை பதினெட்டு நாளில் முடிப்பேன் என்று ஒருவர் சொன்னால் உடனே அவரை வழி அனுப்பவும். சம்மதத்துக்காக பொய் சொல்கிறார். படத்தில் ஏதாவது ஒரு ஸ்டார் இருந்தால் அதற்காக அரை மடங்கு கூடுதல் பணம், நேரம் இரண்டுக்குமே தயாராகவும், ஒரு நாளைக்கு ஷூட்டிங் செலவு முப்பதாயிரம் என்று சொன்னால் புளுகுகிறார் என்று அர்த்தம். தமிழ் சினிமாவின் ரேட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம். பெரிய டிபன் பாக்ஸில் குறைந்தபட்சம் இருநூறு பேர் தின்னே தீர்ப்பார்கள். இதை யாரும் எதுவும் செய்ய முடியாது. கலாசாரம் இப்படி.

இதையெல்லாம் படித்த பின்னும் உங்களில் சிலர் படம் எடுக்கும் தைரியம் பெற்றால் கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்!”

- `படமெடுத்துப் பாழாய்ப் போக’ கட்டுரையில் சுஜாதா, 2003

இருபத்தி நான்கு வாரங்களாக குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதாவின் கதைக்கு முற்றும் போட்டு விட்டார் ரஞ்சன். நாற்பது வருடங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருந்த ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளனின் கதையை எழுதுவது சுலப(ம்/மன்று).

சுஜாதா அவருடைய வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அவரின் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் திரட்டி, மேலும் சிலரை சந்தித்து ஒரு பயோகிராபி தொடரை எழுதி முடித்திருக்கும் ரஞ்சனுக்கு நன்றிகள் பல.

எனக்குத் தெரியாத பல விஷயங்கள் தொடரின் கடைசி சில வாரங்களில் வந்தது. சுஜாதா சினிமாவில் ஒரு காட்சியில் நடித்தது, சினிமா டைரக்‌ஷன் செய்ய பெல் நிறுவன வேலையை ராஜினாமா பண்ண நினத்தது, தன்னுடைய கையெழுத்தை வைத்து தனக்காக ஒரு கணிப்பொறி ஃபாண்ட் அமைத்துக் கொண்டது, ராஜீவ் மேனனின் நட்பு மற்றும் குமுதத்தில் ஆசிரியர் அனுபவங்கள்.

குமுதம்காரர்கள் இதை வருகிற புத்தக சீசனில் புத்தகமாக கொண்டு வந்தால் சில ஆயிரமாவது போகும். தேசிகனும் சுஜாதா பற்றி பயோகிராபிக்கு சில வருடங்களாக யோசித்து கொண்டிருக்கிறார். சுஜாதாவுடனும் இதை பற்றி பல மணி நேரங்கள் பேசியிருப்பதாய் சொன்னார். செய்வார் என நம்பலாம்.

————-

அமெரிக்க வரைபடத்தின் வட மேற்கு மலைபகுதியை சூம் செய்தால் தெரியும் சியாட்டலில் ஏகப்பட்ட பனியுடன் வொயிட் கிறிஸ்துமஸ் கொண்டாடினோம். அப்படி ஒரு வெள்ளை விரிப்பு. பச்சை மரங்களையும் கார்களையும் சேர்த்து பனி விழுங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை தன் இருப்பை காட்டிக் கொண்டது.

நான்கு நாட்களாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் போல, டிவியில் சொல்வதற்கு நேர்மாறாக, பனி என்றால் மழை. மழை என்றால் கடும் பனி. சாட்டிலைட் புருடாவுக்கெல்லாம் அசைவதாய் இல்லை இயற்கைத் தாய்.

————

க்ளிஷேவாக சொல்வதானால், மாறணும் ஆயிரம். தமிழ் சினிமாவில் மாறவேண்டியவை என்று லிஸ்ட் போட்டால், கதை, நடிப்பு என்பதற்குப் பின் மேக்கப் கலை. தசாவதாரத்தை விட நன்றாக இருந்தாலும், அறுபது வயது பெரியவருக்கு முப்பது வயது கையிருக்கிறது.

கெளதம் மேனன் தன் அப்பா பற்றி ஒரு மெமாயிர் எடுத்ததெல்லாம் அவருடைய கதாசிரிய உரிமை. அதற்கு சரியாக ஒரு திரைக்கதை அமைக்காததால், தியேட்டரில் எத்தனை விளக்குகள் விசிரிகள் இருக்கிறதென்று எண்ண ஆரம்பித்து விட்டேன்.

ஹாரிஸின் பாடல்களும் படத்தோடு பார்க்கும் போது ஒரிஜினாலிடி இல்லை. சூர்யாவோ அபூர்வ சகோதர்கள் கமல் போல ஒல்லி மீசையில் நடனமாடும் எண்பதுகளின் பாடலில் அனக்ரானிசமாக contemporary சிந்தஸைஸர் ஒலி. சகிக்கவில்லை.

க்ளைமாக்ஸில் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுக்காமல் அந்த பின்சீட்டுப் பெண் சிரித்ததில், கெளதம் மேனனுக்கு எதோ ஒரு செய்தி இருக்கிறது.


chokkan salman book

நேற்று இரண்டாம் முறை படித்து முடித்தேன்.

ஓரண்டுக்கு முன்பே, சொக்கன் எழுதியிருந்த சல்மான் ரஷ்டியின் கதையை[ஃபத்வா முதல் பத்மா வரை] படித்திருந்தாலும், மீண்டும் படிக்கத் தோன்றியதற்கு காரணங்கள் சில. ரொம்பவும் சில்லியானது, ரஷ்டியின் பிரிந்த தோழியான நம்மூர் பத்மாவின் Top Chef நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் Bravo சானலில் பார்க்க நேரிட்டது. தலையில் அடித்துக் கொள்ளாத குறை. அதைவிட முக்கியமான காரணம் சமீபத்தில் படித்த ரஷ்டியின் லேட்டஸ்ட் நாவலான The Enchantress of Florence. மீண்டும் தலையில் அடித்துக் கொள்ளாத குறை.

ரஷ்டியின் தி முர்’ஸ் லாஸ்ட் ஸையை படித்தவர்கள், அவரின் சமீபத்திய நாவலை படித்து என்ன சொல்கிறார்கள் என்று அறிய எண்ணம். அவர் எழுதிய குழந்தைகள் கதையான, Haroun and The sea of stories போல அவரின் கதைக் கடலும் காணாமல் போனதாக தெரிகிறது. கொஞ்ச நாட்களுக்கு கதை எழுதுவதை விடுத்து, Imaginary Homelands போல பத்தி எழுதலாம்.

சொக்கன் எழுதிய பயோகிராபிகளில் அவர் சிறந்ததாக கருதுவது, சாப்ளின் கதையைத் தான். என்னைக் கேட்டால் இந்த புத்தகம் தான் என்பேன்.

ரஷ்டியை பத்து வருடங்களாக தொடர்ந்த அந்த ஃபத்வா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டமும் நடையுமாக தொடங்கும் இந்த புத்தகம் செல்வது சீரான வேகத்தில். ரஷ்டி அவரின் வாழ்க்கையை பற்றி முன்பே எழுதியிருந்தாலும், சொக்கன் காட்டும் ரஷ்டி கொஞ்சம் புதிதானவர். பம்பாயை காதலிக்கும் சாதாரண மனிதராக, காதல் மன்னனாக, தாய்நாட்டை விட்டு தொலைந்து போனவராக, போராளியாக.

நம் வாழ்க்கை மொத்தமும் கதைகளின் தொகுப்பு தான் என்னும் ரஷ்டியின் நாவல்கள் பிறந்த கதையை விவரமாக விவரிக்கிறார் சொக்கன். ஃப்த்வா நாட்களை பற்றி, புலம் பெயர்ந்ததால் பட்ட அவஸ்தையைப் பற்றி நடுநிலையாக சொல்கிறார்.

இரண்டு மணி நேரத்தில் படிக்கக் கூடிய இந்த புத்தகத்தை படித்தவுடன் வரும், ‘இந்த மாதிரி புக்ஸ் எல்லாம் ஈஸியாக எழுதாலாம் போல இருக்கே’ என்ற எண்ணம் தான் சொக்கனின் வெற்றி.

பி.கு – நெப்போலியனை பற்றி சொக்கன் எழுதிய போர்க்களப் புயல் புத்தகத்தை படிக்க வேண்டும். நெப்போலியன் எனக்கு ரொம்பவும் பிடித்த காரெக்டர். செந்திலும் நானும் 1998ல் The Waterloo என்று ஒரு திரைக்கதை ஆகக்கூடிய கதை செய்தோம். ”ஃப்ர்ஸ்ட் ஷாட்ட ஓப்பன் பண்ணா”, என்று வுட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் பல பேருக்கு கதையை வாயால் டால்பி ஸ்டீரியொவில் திரைப்படம் போட்டு காண்பித்தோம். இன்னமும் தயாரிப்பாளர் கிடைத்தபாடில்லை. நாங்களும் விடுவதாயில்லை. நெப்போலியனைப் போல.


தமிழிலக்கியத்தில் முத்தெடுக்கும் மகானுபாவர்கள் சிலர், சுஜாதாவின் மறைவிற்கு பின், வெகுஜன வணிகத்தளத்தில் தனக்கும் இனி இடம் கிடைக்கலாம் என்று நினைத்தவர் பலர். அதற்கு முதல்படியாக, சுஜாதாவைப் பற்றி ஒரு நல்ல அஞ்சலி எழுதி, அவரை தனது ஆசானாக காட்டிக்கொண்டு, வெகுஜன ஊடகத்தில் ஆதாயம் தேட ஆரம்பித்தார்கள். சுஜாதா இருக்கும்வரை ஓரிரு வார்த்தைகள் கூட எழுதாதவர்கள், திடிரென்று, கையில் கிடைத்த கணையாழியின் கடைசி பக்கங்களை படித்து விட்டு, நான் அவருடைய வாரிசு தான். அவருடைய நடையும், கருத்தாக்கமும் அவருக்கு பிறகு எனக்குத் தான் உண்டு என்று எழுதிய அ.கைகள் பலர். சுஜாதா பாணியில், அவர்களை பசித்த புலி பதம் பார்க்கட்டும்.

இதற்கு நேர் எதிராக, சுஜாதாவின் மறைவிற்கு பின்னும் அவர் மேலுள்ள கோபங்களை கொட்டித் தீர்த்தனர் பலர். அப்படி ஒரு கோபக் கொட்டித்தீர்த்தலாகத் தான், காலச்சுவடு கண்ணணின், சுஜாதா ஒரு முரண்நோக்கு, என்று அஞ்சலியை பார்க்க முடிகிறது.

“சார்!! உங்களுக்கு தான் அப்படி தோணுது, ஏன்னா உங்களுக்கு சுஜாதாவை ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்பவர்கள், கண்ணனின் இந்த கட்டுரையை படித்துப் பார்க்கலாம். அவர் கூறும் முரண்நோக்குக்காண காரணங்கள் அக்கட்டுரையில் கிடைப்பதரிது. துணுக்குத் தோரணமாகவே எனக்குத் தோன்றுகிறது.

தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம். இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.

என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற ‘முழு உண்மை’மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் – சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது – உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடைசி இரண்டு பத்திகளில் கண்ணன் சொல்லும் விஷயம் புரிகிறது. மரண வியாபாரிகளின்[Merchants of Death] என்று யாரை சொல்கிறார் என்று தான் புரியவில்லை. புரிந்தால் சொல்லுங்கள்.

~

sujatha kamalhassan

தசாவதாரத்தில் சுஜாதாவின் பங்குப் பற்றி சில சமயங்களில், கற்றதும் பெற்றதும் கட்டுரையில் அவரே குறிப்பிட்டிருந்தார். சுஜாதா எழுதியதிலிருந்து பார்த்தால், படத்தின் கதை திரைக்கதையோடும் நெருக்கமாக இருந்தார் என்று தெரிகிறது.

படத்தின் பூஜை விளம்பரத்தில், சுஜாதாவும் கிரேஸி மோகனும் இருந்தார்கள். படத்தின் டைட்டிலில் இருவரும் இல்லை. படம் வரும் போது சுஜாதாவும் இல்லை. கமல் காரணம் சொல்வாரா என்று தெரியாது. வேண்டுமானால் தேசிகனை கேட்டுப் பார்க்கலாம். அல்லது பெருமாளைத் தான்.

~

சுஜாதாலஜி தளத்திற்கு உள்ளடக்கங்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன். பேசாமல் தளத்தை wiki ஆக்கி விட்டால், என்னுடைய நேரமின்மையால் இக்காரியம் பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு நேர்மையாக எழுதப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கும் இடம் கிடைக்கும்.


மேற்கில், அதாவது சியாட்டலில், இன்னும் மழை பெய்து கொண்டுதானிருக்கிறது. நாளை 80 டிகிரி என்று சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு ஃபிளீஸ் ஜாக்கெட்டாவது மாட்டிக் கொண்டு தான் போகப் போகிறேன். சியாட்டல் ஆகாயத்தை நம்புவதற்கில்லை.

ஆனால் மரங்கள் குளிர் கால சோம்பலை முறித்து/முடித்துக் கொண்டு பச்சையாய் குலுங்க ஆரம்பித்துவிட்டன. பார்க்க கண்கொள்ளாக் காட்சி(என்ன ஒரு cliched statement).

——-

போன வார அன்னையர் தினத்தன்று அதிகமாக கொடுக்கப்பட்ட கிஃப்ட், பத்து பவுண்ட் அரிசி மூட்டையாகத் தான் இருக்கும். அமெரிக்காவில் அரிசி கிடைப்பதில்லை என்ற செய்தியை கேள்விப்பட்டீர்களா ? அதெல்லாம் டுபாக்கூர்.

உண்மையில் பற்றாக்குறை சகாய விலை அரிசிக்குத் தான். ஏதோ உண்மையாக அரிசி பற்றாக்குறை வந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, ஆசியர்கள், முக்கியமாய் இந்தியர்கள் வீட்டில் மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி அடுக்க, எல்லா இந்திய ஸ்டோர்களும் இதுதான் சாக்கு என்று பத்து டாலர் அரிசியை இருபதாய் உயர்த்த, கடைசியாய் artificial demand.

ஆபிஸில் அரிசி அலோவன்ஸ் கேட்கலாம் என்று தோன்றும் அளவுக்கு, ஆளாளுக்கு அரிசிப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாமல் ஒரு பத்து நாளைக்காவது வாழ முடியாதென்பது மனதைச் சார்ந்த விஷயம் தான். அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் கார்போஹைட்ரேட்ஸை விட இத்தாலியன் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம்.

இதனால் சகாய விலையில் அரிசி போடும் காஸ்ட்கோ போன்ற அங்காடிகளில் கூட்டம் அம்முகிறது. காலையில் கடை திறந்தவுடன், எல்லோரும் அரிசி வாங்க முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஆளுக்கு இரண்டு மூட்டை என்று ரேஷன் கடையை போல அரிசி விற்கப்படுகிறது.

——-

போன வாரம், பெரிய திரையில் பார்த்த மிஷ்கினின் அஞ்சாதே படம் ரொம்பவும் பிடித்திருந்தது. மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு அதைப் பற்றி எழுத எண்ணம்.

தமிழ் சினிமாவுக்குத் தேவை, சில டஜன் மிஷ்கின்கள் தான்.

——-

பா. ராகவன் கிழக்கு ப்ளஸ் என்று கிழக்குப் பதிப்பகத்தின் கதையை விவரமாக எழுதுகிறார். பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விடி ஃபண்ட் என்னும் நிறுவனம், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனமான நியு ஹொரைசன் மிடியாவில் முதலிடு செய்திருக்கும் இந்நிலையில் கிழக்கின் கதையை எழுத இதுதான் நேரம் என்று நினைத்திருப்பார் போலும்.

இன்னும் விரிவாக கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்ப எண்ணங்களும் அதைச் சார்ந்த பிற விவாதங்களையும் பற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றினாலும், படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

‘என்னைப் பார் யோகம் வரும்’ என்று கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருந்த தமிழ் பதிப்பகத் தொழிலை கவனிப்பாரற்ற நிலையில், எதோ கிரிக்கெட் வெப்சைட் தொழிலில் இருந்த ஒரு இளைஞரும், வார பத்திரிகைத் தொழிலில் வாரா வாரம் உழன்று கொண்டிருந்த மற்றோரு இளைஞரும் இணைந்து கிழக்குப் பதிப்பகத்தை தொடங்க, பதிப்பகத் தொழில் செழிக்க ஆரம்பித்தது என்னவோ உண்மை தான்.

அதன் வளர்ச்சியை பார்த்து பல நிறுவனங்கள் தங்கள் பதிப்பகங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதும் உண்மை தான்.

——

சமீபத்தில் ஜெயமோகன் அவரது வலைப்பதிவில் எழுதிய ஆன்மீகம் ,தத்துவம், மதம் பற்றிய ஒரு கட்டுரை, தமிழில் மிக அரிது. மிகத் துல்லியமாக, தெளிவாக எழுத்ப்பட்ட ஒரு கட்டுரை. புரியவில்லை என்றால் மீண்டும் படிக்கலாம்.

——

போஸ்ட் கவரில் தலைகிழாய் அட்ரஸ் எழுதி வந்தடைந்த வார்த்தை மாத இதழ் கிடைக்கப் பெற்றேன். நன்றி.

செழியனின் முகங்களின் திரைப்படம் கட்டுரையும், கோபால் ராஜாராம் எழுதியிருந்த சுஜாதாவின் அஞ்சலிக் கட்டுரையும் பிடித்திருந்தது. இதழ் நிர்வாகம் செய்யும் ஹரன் பிரசன்னாவின் அன்பு என்னும் கவிதை அபாரம்.

வீடெங்கும் அன்பு சூழ
அன்பே பிரதானம்
அப்படியே ஆகுக
அன்பைப் பற்றியே
எழுதத் தொடங்கினேன்
அடித்தல் திருத்தல்களில்
கிழித்தெறியப்பட்ட
காகிதப் பந்தில்
பயந்து கலைகிறது
தடித்த பல்லி
வாயில் கெளவிய
ஒரு பூரானோடு

- ஹரன் பிரசன்னா

சல்மாவின் காத்திருப்பு கவிதை பிரமாதமாக தொடங்கினாலும், சற்றே எதிர்ப்பாத்த முடிவு. வழக்கம் போல எஸ் ராமகிருஷ்ணனின் திரும்பிச் செல்லும் மலைகள் என்னும் சிறுகதையின் முடிவு புரியவில்லை. அதற்காக வரையப்பட்ட ஓவியங்கள் அழகாய் மாடர்னாய் இருப்பினும் அவைகளும் புரியவில்லை. பாவண்ணனின் கூடு சிறுகதையை இன்னும் படித்து முடித்தபாடில்லை.

ஜெயகாந்தனின் பதில்களில் கேள்வி கேட்பவனை பார்த்து வேண்டுமென்றே மீண்டும் கேள்வி கேட்பது தோன்றுவது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.

வார்த்தை இதழ் 500 ருபாய்களுக்கு ஒரு வருட சந்தா[ஸ்பெஷல் ஆஃபர்). ஒரு இதழுக்கு நாற்பது ருபாய்களுக்கு ஸ்டாம்ப் ஒட்டுகிறார்கள். எப்படி கட்டுப்படி ஆகிறது என்று யாராவது விளக்கலாம்.