சுஜாதாவை எடுத்துக் கொள்வோம். தமிழகமே கொண்டாடிய – ஆனால் இலக்கியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட – எழுத்தாளர். அவர் தன்னைப் பற்றிய ஒரு விபரத்தைக் கூட எழுதியதில்லை. சுயசரிதைத் தன்மையான எதையுமே அவருடைய எழுத்தில் பார்க்க முடியாது. ஆறே மாதங்களாக நான் வளர்த்து வரும் பப்பு, ஸோரோ பற்றி இதுவரை எத்தனையோ பக்கங்கள் எழுதிவிட்டேன். விவேக் கூட பேச்சை ஆரம்பித்த போது “பப்புவும் ஸோரோவும் எப்படி இருக்காங்க?”: என்று கேட்டு, தன் தந்தை வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி எவ்வளவோ சொன்னார். அவருடைய அப்பாவும் என்னை மாதிரியே, அவருடைய நாயை நாய் என்று விவேக் எகுறிப்பிட்டால் “நீதான்டா நாய்; இவனை ஏன்டா நாய் என்று சொல்லுகிறாய்?” என்பாராம்.
இதேபோல் அவர் தனது சொந்தப் பிரச்சினைகளையும் எழுதியதே இல்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய ஜீவனோபாயத்துக்காக வெவ்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்து வந்தார். கடைசிக் கட்டத்தில் ஒரு அலுவலகம். ஒரு சிறிய அறை. சுஜாதாவோ ஆறு அடிக்கு மேல் உயரம். ஆறேகால் கூட இருக்கலாம். காலை நீட்டினால் எதிர் சுவர் இடிக்கும். எழுந்து நின்றால் மேலே தலை இடிக்கும். யாராவது விசிட்டர் வந்தால் சுஜாதா அவரை வெளியே வந்துதான் சந்திக்க வேண்டும். உள்ளே அவர் அறையில் இடம் இருக்காது. இப்படி ஒரு கல்லறை மாதிரியான ஒரு அறையில் தனது கடைசி காலத்தில் அவர் ஏன் வேலை செய்ய வேண்டும்? வேலை செய்யாவிட்டால் அவருடைய அன்றாட வாழ்க்கையே பிரச்சினையாகி இருக்கும். எழுத்தின் மூலம் வரும் பணம் அவருக்கு ஒருநாளைக்குக் காணும். மீதி 29 நாட்களுக்கு எங்கே போவார்? இதைப் பற்றியெல்லாம் அவர் எங்கேயாவது எழுதியிருக்கிறாரா? எழுத மாட்டார்.
இந்த இரு பாராக்களை எழுதியவர் ஒரு ‘fantasy writer’. எந்த ஒரு எழுத்தாளைனையும் படிக்காமல், சூழ்நிலைக்கேற்ப தான் எழுதியதையே மாற்றி மாற்றி எழுதும் கலகக்கார so-called-எழுத்தாளர்கள் இருக்கும் வரை மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் கேனக்கிறுக்கர்கள் தான்.
மேலே உள்ள இரண்டு பாராக்களை பிரித்து மேய்ந்து எழுத முடியும். எழுதினால் எனக்கும் இதை எழுதியவருக்கும் வித்தியாசம் இருக்காது. முக்கியமான விஷயங்கள் – சுஜாதா தன்னுடைய கடைசி பத்து வருடங்களாக எழுதியவை சுயசரிதை தன்மையுடைய கட்டுரைகளே. அவரே கற்றதும் பெற்றதுமில், விகடன் பாலசுப்பிரமணியன் சுயசரிதை எழுத சொன்னதாகவும். சுயசரிதை எழுதினால் வம்பு வரும் என்பதால், கற்றதும் பெற்றதும் போல எல்லாம் கலந்த பத்தி எழுதலாம் என தீர்மானித்தார் என்கிறார். கற்றதும் பெற்றதுமின் முதல் வருடத்தில் அவர் எழுதிய சுயசரிதை சம்பவங்கள் பல. இதையெல்லாம் தவிர தன் அப்பா மறைந்தவுடன் எழுதிய அப்பா அன்புள்ள அப்பா முதல் முதல் ப்ளைட் ஓட்டிய அனுபவம், வீடு மாறிய அனுபவம், பெண் பார்த்த அனுபவம், குடும்பத்துடன் எல்டிசியில் தமிழ்நாடு டூர் போன அனுபவம் என அவர் தன்னுடைய சுயசரிதையை பிரித்து பிரித்து பல இடங்களில் எழுதியிருக்கிறார்.
இந்த பாராக்களில் குறிப்பிடப்பட்டுள்ள, ஜீவனோபாயத்துக்காக என்கிற வார்த்தையை கவனிக்கவும். இந்தப் பாரா முழுவதும் பொய் என சுஜாதாவே எழுதியதை வைத்தே சொல்ல முடியும். பணத்தை பற்றி தனது கவலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னே போய்விட்டதாகவும், தான் தற்போது எழுதுவது எல்லாம் ஒரு ஆர்வத்தினால் மட்டுமே என்று பலப்பல முறை கூறியிருக்கிறார். கடைசி வரை பணத்துக்காக அன்றி நண்பர்களுக்காக மட்டும் சினிமா வசனம் எழுதியவரை பற்றி அவரது இறப்புக்கு பிறகு திரித்து எழுதுவது இங்கே மட்டுமே சாத்தியம்.
ஒரு அரை மணி நேரம் வேஸ்ட் செய்து இவரின் வலைதளத்தை மேய்ந்ததால் கிடைத்த பிற விடயங்கள், இந்த எழுத்தாளருக்கு சமீபத்தில் வாசகர் வட்டம் அதிகரித்து இருக்கிறதாம். அமெரிக்க பல்கலைகழகத்தில் படிக்கிறார்களாம். சினிமா விமர்சனம் என்னும் பேரில் கதாகாலட்சேபம். ஹிட் ரேட் கூடியிருக்கிறதாம். கமல் படிக்கிறாராம். கொண்டாடுகிறார்களாம். கொஞ்சம் காமெடி டைம் நிறைய Hallucination.
சுப்புடு | # | 7:53 pm

13பியில் யாவரும் நலம் என்கிற யாவரும் நலம் மிகவும் ’வித்தியாசமான’ தமிழ்ப் படம். வித்தியாசமான என்றவுடன் காசியில் எடுத்ததா, ஹீரோவுக்கு பேச முடியாதா, க்ளைமாக்ஸில் பிழிய பிழிய சோகமா என்கிற மாதிரி எல்லாம் வித்தியாசமில்லை. அதற்கெல்லாம் ஒரே படத்தை நான்கைந்து வருடங்கள் எடுக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல், சாதா கதையை ஸ்பெஷல் சாதாவாக மாற்றிய கதாசிரியருக்கும்/இயக்குனருக்கும்(விக்ரம் குமார்) ஒரு ஷொட்டு(குமுதம் வாசனை!).
யாவரும் நலம் சரியாக எடுக்கப்பட்ட ‘பேய்ப் படம்’. அதைப் பேய்ப் படமாவே முடித்தது தான் ரொம்பவும் பிடித்திருந்தது. சுவாரசியமாய் இருந்தது. திகில் படங்களை எப்பவும் கொஞ்சம் ரசித்துப் பார்ப்பேன். காரணம் அனாவசியமாக லவ் டூயட் இல்லாமல், ஹீரோயினுக்கு பதில் பேயை வைத்து பயமுறுத்துவார்கள். ஹாலிவுட்டின் ஹாரர் ஜானரில் வந்த அனேக முக்கிய படங்களை பார்த்திருக்கிறேன். திகில் படத்தில் பேய் ஆவி ஆகியன இருப்பது முக்கியமில்லை. ஸ்டான்லி க்யூப்ரிக்கின் The Shining போல, பார்வையாளன் மேல் பச்சாதாபமே இல்லாத ஒரு திகில் படம் வேறில்லை. இதே மாதிரி The blair witch projectஐ சொல்லலாம்.
ஒரு மெகா சிரியலுடன் கதை கலக்கும் இடத்தில் சற்றே காதில் பூவாக தெரிந்தாலும் அதை கடைசிவரையில் நம்பும் படியாக செய்த திரைக்கதையும், திகிலூட்டக்கூடிய பிசி ஸ்ரீராமின் காமிரா கோணங்களும் தான். மாதவன் ரொம்ப நாளைக்கு பிறகு மனிதர் நடித்திருக்கிறார். திகில் படங்களுக்கு முக்கியமானது படத்தில் வரும் கதாபாத்திரங்களை தவிர அதில் வரக்கூடிய செட்டுகள் தான். எக்மோரில் போடப்பட்டதாக சொல்லப்படும் அந்த ப்ளாட் செட்டும் கலக்கல்.
கடைசியில் வரும் சில காட்சிகள், அந்த ப்ளாஷ் பேக் காட்சிகள் ஆகியவைகளில் ஹாலிவுட் வாடை. எழுபதிகளில் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளில், அலட்சியம் தெரிகிறது. சட்டென செத்துப் போகும் அந்த அப்பாவி தம்பியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தற்போதைய க்ராப் வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் டிசைன் சட்டை போட்டிருக்கிறார்கள்.
மற்றபடி படத்தில் ஆவி உட்பட யாவரும் நலம்.
சுப்புடு | # | 9:42 pm

மேலே இருக்கும் சார்ட் எதைப்பற்றி என்று சட்டென கண்டுபிடிப்பவற்கு பிங்க் ஸ்லிப் கிடைக்காமலிருக்க லஸ் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறேன். கடந்த ஒருவருடமாக, மக்கள் தொகையையும் மசாலா படங்களையும் தவிர ஏறிக் கொண்டே இருக்கும் ஒரே விஷயம் வேலையின்மை. போன வருடத்தில் இருந்து போன வெள்ளிக்கிழமை வரை இழந்த வேலைகள் 5 மில்லியன். 1949க்கு பிறகு ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் வேலைகள் பறிபோயினதும் இந்த வருடத்தில் தான். தினத்தந்தி செய்தி மாதிரி கடன் துரத்தல் தாங்க முடியாமல் இந்தியர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலை போனவர்கள் மற்றவர்களை சுடுகிறார்கள், நெவாடா விபச்சாரம் ஆளில்லாமல் அவுட்-ஆப்-பிசினஸாகிறது என்று இருக்கிறது நிலவரம். கிட்டத்தட்ட யாருமே எதிர்பார்க்காத நிலையில் உலகம். நம் வாழ்வின் நாட்கள்.
சந்தை முன்னேறி விட்டது என்கிறார்கள் எகானமிஸ்டுகள். இதற்கு பதில் எதாவது ஆந்தையார், பருந்தார், குருவியார் செய்திகளை நம்பலாம்.
——–
இந்தியாவில் இருந்து வாங்கி வந்திருந்த ஜூனியர் விகடனயும் குமுதம் ரிபோர்ட்டரையும் படித்துக் கொண்டிருக்கும் போது உரைத்தது. மூன்று பக்கங்களுக்கு ஒரு பக்க விளம்பரமாக லேகிய வைத்தியர்கள் வைத்திருக்கும் வைத்தியசாலைகள். இந்த புத்தகங்களை படிக்கும் டெமோகிராபிக் இருபத்தி ஐந்திலிருந்து முப்பது வரை உள்ள இளைஞர்களாய் தான் இருக்க வேண்டும். இவர்களை மங்கிய வெளிச்ச லாட்ஜ்களை நோக்கி வரவழைத்து கொண்டிருக்கும் இந்த லேகிய திலகங்கள் பிசினஸில் இன்னமும் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.
உதயம் தியேட்டர் வாசலில் இரவு 8 மணிக்கு கடை விரித்து, ’நிற்பதற்கு’ மாத்திரை விற்கும் ஆசாமியை சுற்றி நிற்கும், கொஞ்சமும் கையாலாகாத இளைஞர் கூட்டத்தின் கையில் தென்படுவது மடித்து வைக்கப்பட்ட இம்மாதிரியான அரசியல் பத்திரிக்கைகள் தான்.
——–

கடந்த ஆறு மாதமாக முன்பு போல எழுத முடியாவிட்டாலும், படித்து விடுகிறேன். சமீபத்தில் படித்து ரசித்தது, போன வருடம் புலிட்சர் வாங்கிய, ஜூனோ டயஸ் எழுதிய The Brief Wondrous Life of Oscar Wao.
டாமினிகன் ரிபப்ளிக்கில் பிறந்த ஜூனோ போல இந்த புத்தகத்தின் கதாநாயகன் ஆஸ்கர் டாமினிகனில் பிறந்து நியு ஜெர்சியில் வாழும், 300 பவுண்ட் எடையுள்ள ஆசாமி தான். ஆஸ்கருக்கு பிடித்தமான காமிக்ஸ், விஞ்ஞான சிறுகதைகள், விடியோ கேம்கள் என்று சாதரணமாக ஆரம்பித்து ஒரு க்ளாசிக் காதல் கதையாக மாறி டாமினிகன் ரிபப்ளிக் பற்றியும் அடிமைத்தனத்தை பற்றியும் விரிவாக சொல்லும் நாவலாக உருவெடுக்கும் போது சுவாரசியமாகிறது. ஆங்காங்கே பல பத்திகள் வியக்க வைக்கின்றன. Rafael Trujillo என்னும் சர்வாதிகாரி அதிபரைப் பற்றியும் அறிமுகம் கிடைக்கிறது.
ஜூனோ போல் தமிழில் ஒரு எழுத்தாளர் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் நம்மூரில் இருக்கும் ஒருவிதமான போராட்டமில்லாத எதையும் ஒத்துக்கொள்ளும் மனோபாவம். அமெரிக்காவில் செட்டிலான எதாவது ஒரு தமிழ் குடும்பத்தை வைத்து இப்படி ஒரு நாவலை பின்னி எடுக்கலாம். அது தமிழ் படமாகாத பட்சத்தில்.
சுப்புடு | # | 9:00 pm